கர்நாடக இசை கச்சேரியில் தாளம் போடுவது எப்படி? !!!

ருமை நண்பர்களே!!!
இந்த வாரம் ஆனந்தவிகடனில் சாருவின் மனம்கொத்திப்பறவை-13 ஆவது அத்தியாயமாக முழுக்க கர்நாடக இசைக்காக அற்பணிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதில் நான் மிகவும் ரசித்த பத்தி |கர்நாடக இசைக் கச்சேரியில் தொடையில் தாளம் போடுவது எப்படி ?| என்பது தான் , சாரு அதை மிக அழகாக எளிமையாக விளக்கியுள்ளார். இதை உங்களுக்கும் பகிரத்தோன்றியதால் பகிர்ந்தேன்.[நன்றி ஆனந்த விகடன்+கருந்தேள்]

சினிமா இசை தவிர்த்து, நல்ல உயர்தரமான கிளாஸிக்கல் இசையைக் கேட்டு ரசிப்பதற்கு நான் ஜெயகாந்தனுக்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் அப்போது எழுதிக்கொண்டு இருந்த உரத்த சிந்தனை பத்தியில்தான் கல்விச் சாலைகள் நமக்குக் கற்பிக்க மறந்துவிட்ட வாழ்வின் அற்புதங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தார். 'கறுப்பு சிவப்பு' குடும்பமான என் வீட்டினர், சினிமா பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தபோது, நான் சனிக்கிழமை இரவுகளில் ஒலிபரப்பாகும் ஆகாஷ்வாணியின் சங்கீத் சம்மேளனைக் கேட்டுக்கொண்டு இருப்பேன்.
ஆனால், ஆர்வக் கோளாறினால் சில அசம்பாவிதங்களும் நடந்தது உண்டு. 70-களின் பிற்பகுதி. சென்னை நகரம் எனக்குப் புதிது. அதுவரை வானொலியில் கேட்டு ரசித்த இசை மேதைகளை நேரில் கேட்கலாம் என்று டிசம்பர் சீஸனில் மியூஸிக் அகாடமி சென்றேன். ரசிகர்கள் எல்லோரும் தொடையில் தட்டித் தட்டிக் கேட்பதைப் பார்த்துவிட்டு, நானும் தட்ட, எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்ததும் லஜ்ஜையாகிவிட்டது. அப்புறம்தான் அதில் உள்ள தாள கதியைப்பற்றிப் படித்து அறிந்துகொண்டேன்.

தாளம் என்றால் வெறுமனே நான் தட்டியது போல் இஷ்டத்துக்குத் தட்டுவது அல்ல; முதலில் தொடையில் உள்ளங்கையால் ஒரு தட்டு. பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும். அடுத்து, தொடையில் உள்ளங்கையால் தட்டி, பிறகு கையைப் புரட்டிப் போட்டுத் தட்ட வேண்டும். இதையே இரண்டு முறை செய்தால், ஒரு சுற்று முடிந்தது. 1+3+2+2 ஆக, இந்த ஒரு சுற்று எட்டு நிலை களைக்கொண்டது. இது ஆதி தாளம். ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று தாளங்களில் ஏழு வகை உள்ளன. ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பார்கள். ஜாதி என்றால், வகை. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து ஜாதி. இதற்கு அடுத்து ஐந்து நடைகள். ஆக, 7X5X5 = 175 வகைகளில் தாளம் செய்ய முடியும். இது தெரிந்த பிறகுதான் முடிவு செய்தேன். கர்னாடக, இந்துஸ்தானி சங்கீதத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வோம், எழுதக் கூடாது என்று!