தூங்கா நகரம் மதுரை!!!

ருமை நண்பர்களே!!!
என்னும் தினமலரில் வெளியான கட்டுரை படித்தேன், என்ன ஒரு தீர்க்கமான அலசல் அது ?!!!, ஒரு மதுரைடவுன்காரனான எனக்கு உண்மையின் நிதர்சனம் சுட்டது, உரைத்தது. மிக நல்ல கட்டுரை, கட்டுரையையும் அதன் கீழே உள்ள மதுரைக்காரர்களின் கருத்துக்களையும் அவசியம் படிக்கவும். மதுரை ஒரு போட்டி நிறைந்த ஊர், எந்த தரமில்லாத பொருளையும் அங்கே சென்னை போன்ற பெருநகரங்களில் விற்பதைப்போல விற்றுவிடமுடியாது.மருந்து கடைக்கு கூட பெரிய விளம்பர போர்டு வைப்பார்கள், நீங்கள் ஜீவண்டோன் என்னும் புஷ்டிலேகிய விளம்பர ஆளுயர கட்வுட் பார்த்திருக்கிறீர்களா?!!! அது இல்லாத மருந்து கடையே மதுரையில் இருக்காது.

ரே தெருவில் 50 முதல் 100 வரை தையல் கடைகள் உண்டு, ஒரே தெருவில் எதிரெதிரே லாட்ஜுகள்,நகைக்கடை,துணிக்கடை, அடகுகடை,அச்சகங்கள், காபி பார்கள், கண்ணாடி வளையல் கடைகள், அலங்கார நகை கடைகள், மொத்த விலை துணிக்கடைகள், கண் கண்ணாடி கடைகள், ஃபேன்சி ஐடம் கடைகள், ஜூஸ்பார்கள்,பேக்,சூட்கேஸ் கடைகள், பட விநியோகஸ்தர் அலுவலகங்கள்.  பட ஃப்ரேம்  போடும் கடைகள் என ஏகம் உண்டு,   தரம் நன்றாயிருந்தால் தான் கூட்டம் முண்டியடிக்கும்.

சென்னையில் நான் குடித்தது போல வெந்நீர் போன்ற டீ,காபியை நான் மதுரையில் குடித்ததில்லை.  அவ்வளவு ஏன்?!!!  ஒரு ஐம்பது பைசா கோக்கோ மிட்டாய் கூட தரமாகவே இருந்து வந்திருக்கிறது. சென்னை மளிகை கடைகள் போல சர்கரையில் ரவையும்,டீத்தூளில் புளியங்கொட்டைத்தூளும்,மிளகில் பப்பாளி விதையும்,  தேங்காய் எண்ணெயில் சிக்குபிடித்த பழைய காலாவதியான எண்ணெயையும் கலக்கவே மாட்டார்கள். கொழும்புத் தேங்காய் எண்ணெய் என்றால் அது கொழும்புவில் இருந்து வரும். சென்னையில்,  மாட்டுத்தீவனமான தவிட்டில் கூட தேங்காய் சிரட்டையை உடைத்து அரைத்து கலப்பதுபோல சாமர்த்தியம் இவர்களுக்கு வரவே வராது. ஒரு வரட்டி வாங்கினாலும் அதில் நயம் இருக்கும். 100 போஸ்டர் ஒட்ட காசு வாங்கினால் 100 போஸ்டர் ஒட்டுவார்கள், சென்னையைப்போல 50ஐ எடைக்கு போட்டுவிட மாட்டார்கள்.

விர மதுரை மக்கள் தெய்வநம்பிக்கை கொண்டவர்கள்,ஸ்கூட்டர் நடுத்தெருவில் நிறுத்திவிட்டு சாமி கும்பிட்டு தான் பலர் நாளையே துவக்குவர். கடை மூடும் போது சூறை போட்டுவிட்டு தான் பலர் மூடுவார்கள்.  நிறைய பேர் மண்ணுக்கும் மனிதனுக்கும் நெருக்கம் விட்டுப்போகக்கூடாது என்பதால் செருப்பே போடமாட்டார்கள், நானும் சிறுவயதில் பள்ளிக்கு செருப்பே போட்டுச்சென்றதில்லை. ஏகம் பேர், ரகசியமாகவே பேசத்தெரியாமல் சத்தமாக மட்டுமே பேசும் மனிதர்கள்,  முன் பின் தெரியா வெளியாட்களுக்கும்  அப்படி  நின்று  உதவுவார்கள்.

துரை மக்கள் கடுமையான உழைப்பாளிகள், காலை 8-30 மணிக்கு கடை திறக்க 8-00 மணிக்கே வந்துவிடுவர். இரவு 8-30 வரை கூட சுணங்காமல் வேலை செய்வார்கள். அப்படி ஒரு உழைப்பை எல்லாம் சென்னையில் எதிர்பார்க்கவே முடியாது. தலைக்கு எண்ணெய் தடவி திருநீர் இடாமல் சிறார்களை பார்க்கவே முடியாது, சிறுமிகள் என்றால் எண்ணெய் தடவி படிய வகிடெடுத்து வாரி இருப்பார்கள்.

நான் மதுரை டவுன்ஹால் ரோட்டின் அருகே இருக்கும் ரோசரி சர்ச் துவக்கப்பள்ளியில் தான் 1முதல் 3 வரை படித்தேன்.  இங்கிருந்து  சென்னைக்கு போகும் போது வெள்ளந்தியாக போய் அண்ணே, அங்கிட்டு போங்க, இங்கிட்டு வாங்க, களவாணிங்க,  ஆட்டைய போட்டுடுவாய்ங்க, பைக்கட்டு,  டாவு அடிக்கிறான்[பொய் சொல்றான்] என்றிருக்கிறேன். இங்கு சென்னையில் அதே டாவு என்பதற்கு சைட் அடிக்கிறான் என்றனர்.

நான் பாட்டுக்கு இங்கே எழுதிக்கொண்டே போவேன். என்ன தான் சென்னையில் 25வருடமாக இருக்கும் போதும், அந்த மதுரை சித்திரைதிருவிழா கொண்டாட்டம், நவராத்திரி, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் என்று எல்லா லீவிலும் அங்கே போய் பழைய நண்பர்களை கண்டு களித்தது.  செண்ட்ரல் ,நியூசினிமாவில் ஓடும் மொக்கை படங்களைக்கூட மூன்று காட்சியும் பாஸ் வாங்கி பார்த்தது,

பால சண்முகானந்தாவில் ஃப்ரூட்மிக்சர் குடித்தது, ஒய் எம் சி யே வில் போய் புளியங்காய் அடித்தது. ஒரு கோவில் விடாமல் சூடம் அட்டை ,தெருவில் தீப்பெட்டி படம், ஃப்லிம், பொறுக்கியது, விதவிதமாக தின்பண்டம் வாங்கி தின்றது என்னால் மறக்கவே முடியாதது, மாடர்ன் ரெஸ்டாரண்ட்டில் 2 இட்லி வாங்கினால் ஒரு சொம்பு நிறைய சாம்பார் கொடுப்பார்கள், அதையே சாப்பாட்டில் கலந்து  சாப்பிடும் டெக்னிக்கும் எனக்கு நன்கு தெரியும்,
 
ப்படியே ஆர்யபவன் பின்னே உள்ள காய்கறி மார்கெட்டுக்குள் போனால் 50பைசாவுக்கு வெண்ணை தளதளக்க ஒரு பாட்டி சொம்பு நிறைய மோர் கொடுப்பார்.1ரூபாய்க்கு டம்ளர் நிறைய கட்டி எருமை தயிர் கிடைக்கும்.காலையில் கீரைக்காரி வந்துவிடுவார்,

ல்லா குடும்பத்திற்கும் சிறு கோர்ட் சிவில் வழக்காவது இருக்கும், எதாவது குடும்பத்தில் சொத்து தராமல் ஏமாற்றப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டு வாசலில் வந்து நின்று தின்ன எதாவது கேட்பார்,எனக்கு ராஜப்பா என்னும் ஒரு மனநோயாளியை தெரியும்,அவரை வைத்தே எங்கள் காம்பவுண்டு குழ்ந்தைகளுக்கு சோறு ஊட்டியுள்ளனர்.

ங்கள் பாட்டி வீட்டுக்கு எதிரே இருந்த கோமதி காஃபி ஓட்டலில்,கோதுமை அல்வாவும், ஓலையில் பொட்டலம் கட்டிய சேவும், பக்கோடாவும் இருக்கும்.பெட்டிக்கடையில் சணலில் நெருப்பு புகைந்துகொண்டே இருக்கும்,அதை கொண்டே சிகரெட் பீடி பற்றவைப்பார்கள்.இரவு மொட்டைமாடியில் தியேட்டர் சப்தம் தாலாட்டி தாமதமாக தூங்கவைக்கும்,விடியற்காலையில் அடிபம்பு சத்தமும், வெங்கல குடம் உருளும் சப்தமும் உங்களை எழுப்பி விட்டு விடும். மொட்டை மாடியில் நின்று பார்த்தால் மீனாட்சிஅம்மன் கோவில் கோபுர தரிசனம் அருமையாக இருக்கும்,சூரிய உதயமும் அஸ்தமனமும் அமர்க்களமாயிருக்கும்.

ராஜாபார்லி சூஸ்பரி, கேக் தூள், டொரினோ போன்றவை ஆயுளுக்கும்  மறக்க முடியாதவை. மதுரையில் மழை என்றாலும் வெயில் என்றாலும் உக்கிரம் தான். செம ஊர் அது. எங்கே மதுரையை பற்றி எழுதியிருந்தாலும், நின்று படித்துவிட்டு தான் வரவைக்கும், மந்திர சொல் அது. சொக்கா!!!, சொக்கா!!!.

ருந்தும் மக்கள் அங்கிருந்துந்து இடம் பெயர்ந்து கொண்டே தான் இருகின்றனர். அது ஒரு மென்சோகம், அதை அந்தக் கட்டுரை அழகாக விளக்கியது.  சொல்லவந்ததை யாரோ சட்டென சொன்னாற்போல இருந்தது. யாராவது மதுரைக்காரர்கள், அதுவும் சென்ட்ரல் சினிமா பக்கம் இருப்பவர்கள் இருந்தால் அவசியம் பின்னூட்டவும் .

நீங்கள் எந்த ஊர் சென்றாலும் மிக வசதியாக வாழ்ந்தாலும் மதுரை மண்ணுக்கு என்று மாற்று குறையாத பெருமை உண்டு, அது மனதை விட்டு நீங்காத வண்ணம் எப்போதுமே இருக்கும்.
======0000======
இது மதுரை குறித்த தமிழில் வெளியான முக்கியமான விக்கிபீடியா கட்டுரை

மதுரையை    ஐரோப்பிய புகைப்படக்கலை வல்லுனர் ஊச்சப்பன் என்பவர் கடந்த 20 வருடங்களாக சுற்றி உலகத்தரத்தில் புகைப்படங்கள் எடுத்து,கண்காட்சிகள் நடத்தி வருகிறார்,இந்த சுட்டியில் அவரின் புகைப்படத்தொகுப்பை ஒருவர் பார்க்கலாம்.


இது ஊச்சப்பனின் மதுரை குறித்த காணொளி வடிவம்:-