மகிழ்ச்சி [Magizhchi][2010]


ண்பர்களே!!!,
நேற்று தான் மகிழ்ச்சி திரைப்படம் காண வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த நிறைவை அது அளித்தது, இதை ஏன் சினிமா ஆர்வலர்கள் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டார்கள்? என்னும் கேள்வியும் தொக்கி நின்றது.
எழுத்தாளர் நீல.பத்மநாபனின் தலைமுறைகள் என்னும்  நாவலை நண்பர் செ.சரவணகுமாரின் அறிமுகம் மூலமே நான் அறிவேன், அதன் கதையையும் அவரின் இந்த பதிவின் மூலமே அறிந்திருந்த எனக்கு அதை உடனே பார்க்க ஆவல் எழுந்தது.

சென்னையில் எங்கு தேடியும் இந்த படத்தை பற்றிய தகவலே இல்லை.நிறைய பேர் இந்த படத்தை பார்க்க விரும்பியதையும் நான் அறிவேன்.யாரும் இவ்வளவு நல்ல திரைப்படத்தை வாங்கி திரையிடுவதில் ஆர்வம் காட்டாதது வியப்பையும் வேதனையையுமே தந்தது. மக்களின் ஆர்வம் டிவி சீரியல்கள் மீது அதீதமாக படிந்துவிட்டதால் இன்றைய இயக்குனர்கள் யாரும் ஒரு சமூகத்தாரை மையமாக வைத்து பின்னப்படும் குடும்பக்கதைகளை எடுக்க துணிவதேயில்லை, மாயாண்டி குடும்பத்தார், வம்சம் போல விதிவிலக்குகள் இருந்தாலும் அவை சாதிச்சண்டை, பங்காளிகளுக்குள் அடிதடி போன்றவையையே முன்னிறுத்தி பயணிக்கும்,

து போல அதிகம் கொண்டாடப்பட்ட  படைப்பிலக்கியத்தை திரையில் வடிக்கும் போது கூட எழுத்தாளரின் அசலான படைப்பை திருத்தியோ மாற்றியோ செய்யத்துடிக்கும் இயக்குனரின் அதிமேதாவித்தனமே தெரியும், இதில் அதிர்ஷ்டவசமாக தலைமுறைகள் நாவலே தெரிகிறது, இது எழுத்தாளர் நீல.பத்மனாபனுக்கு கிடைத்த மரியாதையாகவே கண்டேன். அவருக்கு முழுமையாக க்ரெடிட்டும் கொடுத்திருப்பது,இயக்குனர் வி.ஏ கௌதமனின் நேர்மையை பறை சாற்றுகிறது.  மேலும் இவர் தமிழில் பேசப்பட்ட இது போன்ற படைப்புகளை  திரையில் வடிக்கவேண்டும், இவரின் ப்ரொடக்‌ஷனுக்கு பெயரே அதிர்வு திரைப்பட்டரையாம், இயக்குனர் எல்லாவற்றையுமே சிறந்த கலை நுணுக்கத்துடன் அணுகியிருக்கிறார் என்பது படம் பார்த்தால் ஒருவருக்கு புரியும்.

டம் உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ,என்ற குறிப்புக்கு பிறகு வண்ண ஓவியங்களை வைத்துச் சொல்லப்படும் பலநூற்றாண்டு வருடத்துக்கு முன் வாழ்ந்த தங்கம்மை, தாயம்மை என்னும் நாட்டார் தெய்வங்கள் பற்றிய நேரேஷன் ஃப்ளாஷ்பேக்கை நாம் பார்க்கிறோம், இது மிக எளிமையும் அருமையாகவும் எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம்  அரசனுக்கே குலஅபிமானத்தால் பெண் தரமறுத்து  தங்கம்மை, தாயம்மை  இருவரையும் உயிருடன் புதைத்த நகரத்தார் வம்சம் பற்றியும் அவர்களுக்கு தங்கள் சாதி எவ்வளவு உயரியது? என்றும் அறிகிறோம்.அதன் பின்னர் சமகாலத்தில் காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து இரணியல் என்னும் சிற்றூரில் வந்து குடியேறிய ஏழூர்ச்செட்டி வம்சத்தின் மூன்றாம் தலைமுறையில் உண்ணாமலை ஆச்சியின் [சுகுமாரி] குடும்பத்திற்குள் நாம் நுழைகிறோம்.

ண்ணாமலை ஆச்சியின் பேரனாக திரவி என்னும் பாத்திரம்,டீச்சர் ட்ரெயினிங் முடித்துவிட்டு வேலைக்கு காத்திருக்கிறார்.,அவரைவிட ஒன்றரை வயது மூத்த அன்பு சகோதரி நாகு என்ற நாகம்மை  எனும் மற்றொரு பாத்திரம். திரவிக்கு தங்கையாக விசாலம் என்னும் இன்னொரு பாத்திரம். இயக்குனர் கௌதமனே திரவி என்னும் பிரதான பாத்திரத்தில் நடித்ததும் அழகு. ஏனைய நகரத்தார் இன ஆண்கள் ஆடை அலங்காரங்களில் ஆர்வமின்றி எளிமையாகவே இருப்பர். அவர்களுக்கு முக்கியம் குடும்பம், தொழில், இறைவழிபாடு. அதற்கு எளிய தோற்றமுள்ள இவர் பாந்தமாய் பொருந்தினார். 

குழலி என்னும் பாத்திரத்தில் நடிகை அஞ்சலி திரவிக்கு முறைப்பெண்ணாக வந்தார் நல்ல அழகும் குறும்புத்தனமான நடிப்பையும் இவர் கண்ஜாடைகளாலேயே வெளிக்காட்டியிருந்தும், அவருடன் நீரில் நனைந்து இயக்குனர் இரண்டு பாடல்களை செய்தும் தானே கதாநாயகன் எனும் ஆசையில், கதாநாயகியை நனையவிட்டு தோலுரித்து காட்டியும், தொன்று தொட்டு இயக்குனர்கள் செய்யும் தவறையே செய்துள்ளார்.இடுப்பு தொப்புள் காட்டினால் தான் விரசம் கிடையாது, கதைக்கு அவசியமில்லாத, அஞ்சலி  முதல் மரியாதை ராதா போல சீலை அணிந்து  ஆற்றில் அருவியில் நனைந்து புரண்டு பாடி ஆடும், இரண்டு பாடல்களுமே எனக்கு அநாவசியமாய் பட்டது, வினியோகஸ்தர்களுக்காக கூட வைத்திருக்கலாம், அதற்கு பதில் நாவலில் வரும்  சின்ன  சின்ன டீடெய்ல்களை படமாக்கியிருக்கலாம் என்பதே என் ஆதங்கம். விட்டுவிடுவோம். 

முக்கியமாக சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரம் கூணாங்கனிப்பாட்டா [வி.எஸ்.ராகவன்] இவரை எல்லோரும் பாட்டா என்கிறனர்,அப்படி ஒரு அன்பான யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் மனிதர், இவரை பாலச்சந்தர் தயாரித்த டீவி சீரியல்களில் பார்த்து எனக்கு  மிகவும் பிடிக்கும் ,மூத்த தலைமுறை மனிதராக இருந்தாலும் இளையதலை முறையின் கருத்துக்களுக்கு மிகவும் மதிப்பளிக்கிறார். இவரின் தங்கை தான் உண்ணாமுலை ஆச்சி. புதிய தலைமுறையின் முற்போக்கு கருத்துக்களே சற்றும் ஒவ்வாத ஆச்சிக்கு மெதுவாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் மைய பாத்திரம் பாட்டாவுக்கு. பாட்டாவிற்கு பொணமு ஆச்சி, அணஞ்சிப்பிள்ளை ஆச்சி என இரு மனைவிகளும், ஊருக்கு வெளியே அம்முக்குட்டி எனும் மலையாளிப் பெண்மணியின் தொடர்பும் உண்டு. அம்முக்குட்டியின் மூலம் ஒரு அழகியபேத்தியும் உண்டு. அந்தப்பெண் திரவியை ஒருதலையாகக் காதல் செய்கிறாள். திரவி தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என்றிருக்கிறாள். தாத்தா பாட்டா தன் இளமைக்காலங்களில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு, தன் சொத்துக்க்களை பெண்சுகத்திலேயே அழித்திருக்கிறார். இப்போது மத்தளம் போல இரண்டு மனைவிகளிடமும் ஏச்சுபேச்சுடன் அடிவாங்குகிறார்.

யக்குனர் சீமானுக்கு நடிப்பு மிக இயல்பாய் வருகிறது, அவர் இனிமுழுநேர குணச்சித்திர நடிகராகவே ஆகலாம். இதில் திரவியின் தாழ்த்தப்பட்ட சமூக நண்பன் குற்றாலமாக வருகிறார். ஒரு காட்சியில் இன்று மொச்சை மூட்டை சகாயவிலைக்கு கிடைத்தது அதுதான் வாங்கிவந்து தெருத்தெருவாய் போய் கூவி விற்றேன், என்று திரவியிடம்  சொல்லியபடி மொச்சை மூட்டை கட்டப்பட்ட சைக்கிளை தள்ளிக்கொண்டே சட்டையை அணிவார். நாவலை முழுக்க ஒன்றி படித்திருந்தால் ஒழிய , இப்படி கதாபாத்திரமாக  மாறமுடியாது. தன் ஆடி அடங்கிய பக்கவாதம் தாக்கிய அப்பாவை தனிஆளாக பார்த்துக்கொள்கிறார். சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுயமரியாதையுடனான முற்போக்கு சிந்தனைகளுடன்  வாழும் பாத்திரம் இவருக்கு மிகவும் பொருந்தி வந்துள்ளது.கஞ்சா கருப்பும் உண்டு, இரண்டு மூன்று காட்சிகளில் வருகிறார்.அவ்வளவுதான்.

டத்தில் வரும் கொடியபாத்திரம் என்றால் அது புத்தன் தெருவைச் சேர்ந்த செவந்த பெருமாள் [சம்பத்] பாத்திரமே, இவன் திரவியின் சகோதரி நாகுவை  ஆறு மாதத்திற்கு முன்பு  தான் விமரிசையாக,சீர் செனத்தி வலியக்கேட்டு வாங்கி திருமணம் முடித்தான். மளிகைக்கடை நடத்தும் இவன் மைனர் போல உடுத்திக்கொள்கிறான், புல்லட்டிலும் வலம் வருகிறான். ஒரு நடிகன் வரைந்து கொள்வது போன்ற மீசையுடன்  இருக்கும் ஒரு தடிப்பயல், ஆண்மைக் குறைபாடுமுள்ளவன்.  ஊரார் முன்னர் தன் குறை எடுபடக்கூடாது என்று, நாகம்மையை வெறும் எட்டே மாதத்தில் வாழாவெட்டியாக திருப்பி அனுப்பிவிடுகிறான்.  நகரத்தார் சமூகத்தில் ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதொ அதே போன்றே பெண்ணுக்கும் சம உரிமை உண்டு.ஆண் தொழிலை கவனித்தால்,பெண் வீட்டு நிர்வாகத்தை கவனிப்பாள்,விவாகரத்து என்பதே கேட்க முடியாத சமூகம்.அப்படி ஒரு சமூகத்தில் கட்டிய மனைவிக்கு செவந்த பெருமாள் கூசாமல் வன்கொடுமை செய்கின்றான்.

திரவியின் தந்தை நாகரு பிள்ளை எவ்வளவோ கெஞ்சியும் ஊரைக்கூட்டி பேசியும் நாகுவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறான் இந்த கிராதகன். அவன் அம்மாவோ படு கிராதகி, கொலைபாதகி,அரிசியில் கற்களை பொறுக்காமல்  தான் சோறு வடித்துவிட்டு, பழியை மருமகள் மேல் கூசாமல் சுமத்தி அடியும் சித்திரவதையும் மகனிடமிருந்து வாங்கித்தரும் இழிபிறவி. நாகம்மை பிள்ளை பெறவே தகுதியில்லாதவள் என்றும்,அவள் ஒரு பெண்ணே அல்ல,  என்றும் அவளை புண்படுத்தி நடைபிணமாக்கும் இவனின் பாத்திரம் , காணும் யாருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும். திரவிக்கு அவன் படித்த அரசுப்பள்ளியிலேயே ஆசிரியர் வேலை கிடைக்கிறது, அதுவும் அவனுக்கு பாடம் நடத்திய   மோசஸ் வாத்தியார்[பிரகாஷ்ராஜ்] தலைமையிலேயே கிடைக்கிறது, அவருக்கும் பெருமையோ பெருமை. அது முதலே திரவிக்கு மிகுந்த பக்கபலமாய் ஆகிறார் மோசஸ் வாத்தியார்.

ரு நாள் மோஸஸ் வாத்தியாரும் திரவியும்  நாகுவை  ஊரின் பெண் மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துப்போகிறார்கள். மருத்துவர் சகோதரி நாகுவை நன்கு பரிசோதித்த பின்னர்  நாகுவிடம் எந்த குறையும் இல்லை, செவந்தபெருமாள் தான் ஆண்மையற்றவன். என்னும் சுடும் உண்மையை இருவக்கும் உரைக்க கொதிக்கின்றனர். அதன் பின்னர் அக்காவின் கணவன் செவந்த பெருமாளிடம் வீறுகொண்டு எகிறும் திரவியின் கோபம் மிக மிக யதார்த்தம். பெண்களின் மீது படத்தில் பிரயோகிக்கப்படும் காலால் நெஞ்சில் மிதிப்பது, சோற்றில் கண்டெடுத்த கல்லைக்கொண்டே நாகுவின் கையை கீறி ரத்தம் வர காயப்படுத்துவது, உயிரோடு மண்ணை தள்ளிமூடுவது, போன்ற வன்முறை மிகுந்த ஆயாசத்தை தருகிறது, இருந்தாலும் நாவலில் இருக்கும் டீடெய்லை அவர் பின்பற்றியிருக்கக்கூடும் என்பதால் விட்டுவிடுவோம்.

வாழாவெட்டியான மூத்த சகோதரி நாகுவை மறுமணம் செய்து கொண்டு நல்லபடியாக வைத்து வாழத்துடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நண்பன் குற்றாலம். இதை துணிந்து ஏற்றுக்கொண்ட திரவியும் சகோதரி நாகுவும்.  இதை அறவே ஏற்றுக்கொள்ள மறுக்கும் மூத்த தலைமூறை பெரிசுகள் உண்ணாமுலை ஆச்சி, பாட்டா, நாகரு பிள்ளை அவர் மனைவி ஆகிய நால்வரும். அடுத்து திருமணத்துக்கு காத்திருக்கும் வயதுக்கு வந்த தங்கை விசாலம் வேறு,  நாகுவின் திருமணம் செய்ய வாங்கிய கடனில் அடமானத்தில் இருக்கும் வீடு ஒரு பக்கம்,  தன் பெண் குழலிக்கு திரவியுடன் உடனே திருமணத்தை நடத்தத்துடிக்கும் தாய்மாமன் மறுபக்கம், பொய்த்துப் போகும் அபாயத்தில் திரவி குழலியின் காதல்,!!! ....

இனி என்ன ஆகும்?!!! அருமையாக திரைப்படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.  ஒருவருக்கு நாவலை படிக்கும் அனுபவம் வாய்க்கிறது. சில குறைகள் இருந்தாலும் பெரிதாக தெரியவில்லை. தமிழில் இது போல படைப்புகள் எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்து வருவது, இது போன்ற படங்களுக்கு மக்களாகிய நாம் கொடுக்கும் வரவேற்பை பொறுத்தே அமைகிறது.   படத்தின் ஒளிப்பதிவும் ,இரண்டு பாடல்களும்,இசையும் பிண்ணணி இசையும்  மிகமிக நன்றாக இருந்தது,நாம் வித்யாசாகரை மிகவும் இழக்கிறோம் அவர் இப்போது மலையாளத்தில் கோலோச்சுகிறார்.,  ஆகமொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தவறவே விடக்கூடாத ஒரு குடும்பப்படம்.


ந்த பொருளுக்குமே விளம்பரம் அவசியமாகிறது, உணவுப்பண்டத்தை தவிர இன்றைய உலகில் எல்லாவற்றையுமே கூவிக்கூவி விற்க வேண்டியதாயுள்ளது. இலக்கியம் நிறைய மக்களை சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் இப்படி பாடுபட்டு படம் எடுத்துவிட்டு அதற்கான மார்க்கெட்டிங்கை, விளம்பரத்தை அளிக்கத் தவறியது விந்தையும் வேடிக்கையாயும் உள்ளது, தமிழ் திரையுலகின் பகாசுரர்களான சன் குழுமம், அல்லது ரெட் ஜெயண்ட்டிடம் இதை விற்றிருந்தாலும் நிறைய மக்களை சென்று சேர்ந்திருக்குமே!!! என்ற ஆதங்கம் எழுந்தது . அவர்கள் நினைத்தால் காக்கை குருவியைக் கூட ஊர்ப்பருந்தாக்கி உயரப்பறக்கவைப்பார்களே?!!!, உலகமகா சாமர்த்தியசாலிகள்.

இது நண்பர் செ.சரவணகுமார் எழுதிய தலைமுறைகள் புத்தக விமர்சனத்தின்   சுட்டி. இதில் நாவலைப்பற்றிய சீரான அலசலையும் கதையையும் ஒருவர் படிக்கலாம்.
மகிழ்ச்சி=பெருமகிழ்ச்சி
=======00000=======
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
=======00000=======