மார்பின் Morphine (Морфий) (2008)[ரஷ்யா][கண்டிப்பாக18+]


லக இலக்கியங்கள் திரைவடிவம் பெறும் போது தான் உலக இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தும் அக்கலைச்சொற்களில்,கடினமான எழுத்துநடையில்  வாசிப்பனுபவமில்லாத வெகுஜன ரசிகனும் அந்த இலக்கியத்தினுள் இழுக்கப்படுகிறான், அது நல்லார்வத்திற்கு தூண்டுதலாய் இருந்துவிட்டால் அவன் மேலும் தேடுகிறான். 

ந்த தேடும் படலம் அவனுக்கு எல்லையில்லா கிளர்ச்சியை கற்றலின் மீது உண்டாக்குகிறது என்பது என் எண்ணம். அத்தேடுதல் உள்ள உலகசினிமா ரசிகர்களுக்கு நான் பலமாய் சிபாரிசு செய்வது தான் இந்த மார்ஃபின் என்னும் ரஷ்யமொழித் திரைப்படம், இப்படம் போதை எவ்வளவு கொடியது?!!!சமூகத்தில் எவ்வளவு பெரிய திறமை பொருந்தியவனையும் போதை எப்படி பைத்தியக்காரனாக மாற்றியிருக்கிறது, மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை மிக அருமையாக விளக்குகிறது.

அலெக்ஸெய் பாலபனொவ்
தன் இயக்குனர் அலெக்ஸெய் பாலபனொவ் [Aleksei Balabanov]ஒரு தேர்ந்த ஆட்டியர் [Auteur ]ஆவார். இவரின் 11 திரைப்படங்களுமே, இவருக்கு ரஷ்ய இலக்கியங்களின் மீதுள்ள காதலை அபாரமான பரீட்சயத்தை பறைசாற்றும் . அவர் ரஷ்ய இலக்கிய எழுத்தாளர் மைக்கேல் புல்காகோவ் [Mikhail Bulgakov.] 1975 ஆம் ஆண்டு எழுதிய கிராம மருத்துவனின் நாட்குறிப்பு [A Country Doctor's Notebook] என்னும் ஒப்பற்ற சிறுகதை தொகுப்பை மிக அருமையாக மார்பின் என்னும் இப்பெயரில் படமாக்கியிருக்கிறார். துவக்க 1900 களின் எத்தனையோ கதைகளை திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் இது போல படைப்பை பார்த்ததுமில்லை, என்னை பாதித்ததுமில்லை என்பேன்,

ந்த அளவுக்கு பார்வையாளரை திரைப்படம் நடக்கும் காலகட்டத்துக்கே கூட்டிச்சென்று உலவவிட்டதில்லை. இது தான் ஹாலிவுட்டிற்கே சவால்!!!, நம் ஊரில் இது போல கலைப்பட விரும்பிகள் என்னும் ஒரு சாரார் மட்டும் பார்க்கும்  படங்களுக்கு  இந்த மாதிரி எல்லாம் பணம் செலவழிக்கவே மாட்டார்கள் என்பது துயரமே!!!,   வணிகரீதி என்னும் பேச்சுகே இடமில்லா ஒப்பற்ற படைப்பு . உலகசினிமா விரும்பிகள் வாழ்வில் தவறாமல் காண வேண்டிய  திரைப்படம் இது .

படத்தின் கதை:-
1917ஆம் ஆண்டு அது, மருத்துவக்கல்லூரியில் படிப்பை முடித்த இளம் ரஷ்ய மருத்துவன் போல்யகோவ் [Mikhail Polyakov (Leonid Bichevin)] ரஷ்யாவின் கடைக்கோடியில் உள்ள பனிபொழியும் கிராமத்துக்குள் வருகிறான், பனிப்பொழியும் கடும் குளிர் பிரதேசம், தோல்தடித்த கொழுகொழு குதிரைகளால் இழுக்கப்படும் அவன் வரும் வண்டிக்கு சக்கரங்களே இல்லை, பனியை சீவிச்செல்லும் ஸ்கேட்டர் கட்டைகளே உண்டு. சிறிய மருத்துவமனையில் இரண்டு பெண் மருத்துவதாதிகளும், ஒரு ஆண் மருத்துவ உதவியாளனும் உண்டு. அடுத்து வரும் நாட்களில் மிகுந்த சவால்களை எதிர்நோக்கி எல்லோரின் நன்மதிப்பையும் பெறுகிறான் மருத்துவன் போல்யகோவ்.

FIRST INJECTION [முதல் ஊசி]
ஒரு நாள் நடுநிசியில்,தாதிகள் போல்யகோவை சத்தமிட்டு எழுப்ப, பதறியபடி அவன் கீழே வந்தால் ,கிராம நோயாளி ஒருவன் கடுமையான டிப்தீரியா நோய் தாக்கி ,மூச்சு விடமுடியாமல்,தரையில் புரண்டு கொண்டிருக்கிறான், வாந்தி வேறு எடுத்திருக்கிறான். அவனுக்கு எத்தனையோ முதலுதவிகள் செய்தும் பலனின்றி போக போல்யகோ அவன் வாய் மீது வாய்வைத்து ,சிறிதும் அருவருப்பிலாமல் ஊத, அவன் உதவியாளன் இடைவெளி விட்டு அவன் நெஞ்சு மீது குத்துகிறான் , ஐந்து முறை இதே போல செய்தும் சிகிச்சை பலனின்றி அந்த நோயாளி இறந்தும் விடுகிறான். மறுநாள் போல்யகோவுக்கும் டிப்தீரியா நோய் வரும் அறிகுறிகள் தென்படுகிறது, மருத்துவ தாதி அன்னா அவனுக்கு பென்சிலின் தடுப்பூசியை போடுகிறாள், அதன் விளைவாக அவனுக்கு தோல் தடித்து கருத்து, வலித்து, நமைத்தலெடுத்து சொறியவேண்டும் போலவும் இருக்கிறது, அவள் வலியைக் குறைக்க மார்பின் என்னும் எமனை ஒரு டோஸ் போடுகிறாள் , போல்யகோவுக்கு மிகவும்  இதமாய் இருக்கிறது, நல்ல தூக்கம் வருகிறது,அன்றைய தினம் நன்கு தூங்குகிறான் போல்யகோவ்.

WINTER [கடும் குளிர்காலம்]
இப்போது மிகக்கடும் பனிப்பொழிவும், கொடிய குளிரும் வாட்டுகிறது, பகல் பொழுதே தோன்றுவதில்லை, எப்போதும் நீண்ட இரவுகள் தான். கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு இரண்டுநாளுக்கு முன்னர் பிரசவ வலி எடுத்திருக்க, உள்ளூர் மருத்துவக்கிழவிகள், அந்த தாயின் யோனியில் குழந்தை சீக்கிரம் வெளியே வர சர்க்கரையை கொட்டியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் தாய் சேய் இருவருமே இறந்துவிடுவரோ?!!! என்று பயந்த கிராமத்தார் அவளை கடைசியாக மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கின்றனர், முன் பின் சிக்கலான பிரசவம் பார்த்து பழக்கமில்லாத மருத்துவன்   போல்யகோவ் இதோ புகைப்பிடித்துவிட்டு வருகிறேன் என்று போனவன், எதிர்க்கட்டிடம் சென்று மாடியேறி, தன் நூலகத்தில் போய் ஆயுதகேஸ் எனப்படும் ஃபோர்செப்ஸ் கொண்டு செய்யப்படும் சிகிச்சையை சித்தரிக்கும் வரைபடத்தை கூர்ந்து பார்க்கிறான்.  பின்னர் ஆழ்ந்த நம்பிக்கையுடன்  கீழே வந்தவன் கால்கள் அகட்டி படுக்கவைத்திருக்கும் பெண்மணியின் , அவளின் முன்னமே உடைந்துவிட்ட பனிக்குட நீரை , கைகளை கர்ப்பப்பையின் மேல் வைத்து இன்னமும் அழுத்தி வெளியேற்றுகிறான் .ஐஸ்கிரிம் அள்ளும் குழிக்கரண்டி போலுள்ள ஓர் ஆயுதத்தை யோனிக்குள் நுழைத்தவன் குழந்தையின் தலையை தேடி அமுக்கி வெளியேவும் எடுக்கிறான். முதல் பிரசவம் வெற்றிகரமாக முடிக்கிறான் போல்யகோவ் . கிராமவாசிகள் போல்யகொவை மிகவும் பாராட்டுகின்றனர்.

SECOND INJECTION [இரண்டாம் ஊசி]
நாளடைவில் தூக்கமின்றி ,கடும்குளிரின் அவஸ்தையாளும்,தனிமையாலும் மிகவும் சோர்ந்துபோன போல்யகோவ், தன் மருத்துவ தாதியிடம் தனக்கு மிகவும் வலியாயுள்ளது, ஆகவே இரண்டாம் முறை மார்ஃபின் ஊசி போடுமாறு கேட்டுப்பெறுகிறான். இந்த முறை புட்டத்தில் ஊசியை வாங்கிக்கொண்டவன் அப்படியே நெக்குறுகி சாய்கிறான்.

FIRST AMPUTATION [முதல் அறுவை சிகிச்சை]
இப்போது சாலைவிபத்தில் சிக்கி சதைகள் கிழிபட்டும், கால் பாதி துண்டிக்கப்பட்டும், குற்றுயிரும் குலையுயிருமான நிலையில் தன் மகளை ஒர் தகப்பன் வண்டியில் போட்டு இழுத்துக் கொண்டுவருகிறான், போல்யகோவ்விடம் தன் மகளை காப்பாற்றும் படி இறைஞ்சுகிறான். போல்யகோவிற்கு எல்லாம் முற்றிவிட்டது  என்று தோன்றுகிறது,    கடைசி முயற்சியாக இருக்கட்டும் என்று,  அவளுக்கு மார்பின் கொடுக்கச் செய்தவன்,  தனிமையில் சென்று தானும் ரகசியமாக மார்பின் எடுத்துக் கொள்கிறான், பின்னர் அறுவை சிகிச்சை மேசைக்கு வந்தவன், அவளின் உடைந்து நொறுங்கி தொங்கிக்கொண்டிருக்கும் வலது காலின்  எலும்புகளை, சதைகளை கவனமாக அறுக்கிறான், தையலிடுகிறான். இப்போது அவளுக்கு ஒற்றைக் காலில்லை. மருந்திடுகிறான், தாதிகளிடம் சொல்லி பேண்டேஜ் இடுகிறான், மறுகாலை அவர்கள் வசம் ஒப்படைத்து அதுபோலவே அறுவை சிகிச்சை செய்ய சொல்கிறான்.

மிகவும் கொடூரமான சதைப்பிண்டங்களை அவன் இப்போதுதான் தொட்டு அறுத்துள்ளது நம்க்கு புரிகிறது. ஆயினும் அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறாள். மருத்துவ தாதிகள் இவன் முன்பிருந்த மருத்துவனை விட நன்றாக அறுவை சிகிச்சை செய்ததாக பாராட்டுகின்றனர். அந்த மகளின் மரணம் இவனை மிகவும் பாதிக்கிறது, அடுத்து வரும் நாளில் போல்யகோவ் மருத்துவமனை மருந்தகத்திலேயே மார்பின் திருட ஆரம்பிக்கிறான். எப்போதும் தன்னிடம் மார்பின் திரவ புட்டியும், ஊசி சிரிஞ்சியும் வைத்திருக்கிறான்.

ப்போது நகரின் பிரபல விலைமாது ஒருத்தியை போல்யகோவ் மருத்துவமனை ஆய்வு நாற்காலியில் அமர வைத்து யோனியில் கையை விட்டு அவளுக்கு பால்வினை நோய்தாக்குதல் இருக்கிறதா? என சோதிக்கிறான். அவள் ஒயிலாக பைப் கொண்டு புகைபிடித்து ஊதுகிறாள்.  அவள் கணவன் இறந்தபிறகு அவள் விலைமாதுவாக மாறி தன் வயிற்றை கழுவுகிறாள் என அறிகிறான். அரசே விபச்சாரத்தை அங்கீகரித்திருப்பதை நாம் அறிகிறோம். பின்னர் அவளுடன் தன் அறைக்குச் சென்று உடலுறவு கொள்கிறான் போல்யகோவ்.அடிக்கடி தன் மாடி அறையில் குளியல் தொட்டியில் வெந்நீர் நிரப்பி தாதிகள் இருவர் தேய்த்துவிட சுகபோகமாக குளிக்கிறான் போல்யகோவ்.

WOLVES[ஓநாய்கள்]
இப்போது பக்கத்து ஊரில், அரசுத்துறையில் நல்ல அந்தஸ்துடன் இருக்கும் செல்வந்தர் ஒருவரின் விட்டில் கடும் தீப்பிடித்துவிடுகிறது, அவரின் மகள் தீயில் கருகியும்  விடுகிறாள், அவள் கணவன் அவளைக்காப்பாற்ற எத்தனித்து அவளை தூக்கி வெளியே வீசியதில், அவளின் மண்டை உடைந்து கபால மோட்சம் அடைந்துவிட்டிருக்கிறாள். அவர்களுடன் சேந்து ஏனைய வேலைக்காரர்களும் தீயில் கருகிய நிலையில், போல்யகோவ்வின் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். போலயகோவ் மருத்துவமனை தாதிகளிடம் சொல்லி அவசர மருத்துவ உதவி செய்கையிலேயே மேலிடத்து உத்தரவின் பேரில் தலைமை தீயணைப்பாளன் நேரில் வருகிறான்.  போல்யகோவை உடனே தன்னுடன் வந்து அந்த செல்வந்தரின் மருமகன் உயிரை காக்குமாறு இறைஞ்சுகிறான்,

வரது உயிரே இப்போது மிகமுக்கியம், இந்த வேலைக்காரர்கள் உயிர்கள் மதிப்பற்றவை, உடனே வரவேண்டும் என்று அச்சுறுத்தும் தொனியில் கெஞ்சுகிறான். அவனுக்கு அவன் உயிர் மீது உள்ள பயம் நமக்கு புலப்படுகிறது. மிகுந்த பனிப்பொழிவில் அங்கே செல்லும் போல்யகோவ், மருமகனுக்கு சிகிச்சை அளித்து மார்ஃபின் ஊசி போட்டு சிகிச்சை அளித்துவிட்டு, மருத்துவமனைக்கு செல்ல விழைகிறான். ஆனால் குதிரை வண்டி ஓட்டுனன், இப்போது திரும்பிச்செல்வது மிகவும் ஆபத்து என்று சொல்லியும் போல்யகோவ் அதை கேட்கும் நிலையில் இல்லை அவனுக்கு உடனே மார்பின் போட்டுக்கொண்டாக வேண்டும். இதில் என்ன ஒரு கொடுமை? என்றால் பக்கத்து ஊர் மருத்துவனும் அங்கே வந்திருக்கிறான். அவனது மருத்துவமனையில் கைவசம் மார்ஃபின் இல்லாததால் போல்யகோவின் மருத்துவமனை யிலிருந்து 10கிராம் மார்ஃபின் கடனாகக் கேட்கிறான்.  நகரின் தலைமை மருத்துவமனைக்கு தான் செல்கையில் பெற்றுவந்து திரும்ப கொடுப்பதாகச் சொன்னவன்,  தானும் குதிரை வண்டியில் ஏறிக்கொள்கிறான்.போலயகோவுக்கு அந்த மருத்துவனை பிடிக்கவேயில்லை.

ழியில் பனிக்காற்றுடன் பழிப்பொழிவும் ஏற்பட, ஊசி ஊசியாக பனிக்கற்றைகள் மழைபோல எதிர்க்காற்றுடன் குதிரையின் கண்களை பதம்பார்க்க குதிரைகள், நிலை தடுமாறுகின்றன, நாம் பாதை மாறிவிட்டோம் என்று ஓட்டுனன் புலம்புகிறான். ஒருகட்டத்தில், மனிதர்களுக்கு தான் இரக்கம் காட்டமாட்டீர்கள், இந்த விலங்குகளுக்குமா இரங்கமாட்டீர்கள்? என்று சொல்லி, வண்டியை நிறுத்தியும் விடுகிறான், போல்யகோவ் அவனுக்கு ஓட்கா புட்டியைக் கொடுத்து இளைப்பாற்றியபடியெ மெல்ல ஒட்டிச்செல்கிறான். வழியில் மனிதவாசனை கண்ட ஓநாய்கள், வெறியுடன் பின்னே ஓடி வருகின்றன்,

நாயின் பளப்பளப்பான கண்களையும், கூரிய ஒளியில் மினுங்கும் பற்களையுமே நாம் அங்கே பார்க்கிறோம், மாட்டினால் கொலைப்பசியில் இருக்கும் அவ்ற்றிற்கு ஒரு வாரத்திற்கு சாப்பாடு ஆயிற்று என்னும் நிலை. போல்யகோவ் குறிபார்த்து சுட்டுத்தள்ளுகிறான், இப்போது வேகமெடுத்த வண்டி பாதை மாறி பக்கத்து கிராம அதிகாரி வீட்டிற்கு அருகே சென்றுவிட, இவர்கள் பாதைமாறிவந்ததை சொல்லி அங்கேயே இரவைக் கழிக்கின்றனர். அங்கே நிலபிரபுத்துவம், கம்யூனிச சித்தாந்தங்கள், நாத்திகம், அவற்றின் முரண்பாடுகள், மிகுந்த சர்ச்சையுடனும் நையாண்டியுடனும் விவாதிக்கப்பெறுகின்றன,

ங்கே இருக்கும் தேவதாசி பாடகியுடன் போல்யகோவ்வுக்கு பார்வையாலேயே நட்பு ஏற்ப்படுகிறது. அங்கேயெ கழிவறையில் போல்யகோவ் மார்பின் ஊசியை போட்டுக்கொள்ள, அவளும் கழிவறைக்கு வருகிறாள், இவன் கதவறுகே ஒளிந்துகொள்கிறான். அங்கே அவள் சிறுநீர் கழித்துவிட்டு தன் அழகிய புட்டங்களை கண்ணாடியில் பார்த்து அதீத பெருமை கொள்வதை போல்யகோவ் பார்க்கிறான். பின்னர் அவளிடம் எதிர்ப்பட்டவன் போதையின் உச்சத்தில் அவளின் விருப்பத்தின் பேரில் கழிவறைத் தரையில் வைத்து அவளைப் புணறுகிறான்.

ANNA NIKOLAJEWNA [அன்னா நிகோலஜெவ்னா]
இவள் சிறப்பான மருத்துவமனை தாதி, போல்யகோவின் நலம் விரும்பியும் ஆவாள், போல்யகோவ் எந்நேரமும் மார்பின் போதையில் இருப்பதைப் பார்த்தவள், ரஷ்ய அரசாங்க மருத்துவ ஆணையம், எங்கே இங்கு.மருந்து கையிருப்பு சோதனைக்கு வருமோ என்றஞ்சுகிறாள். மிக விலை உயர்ந்த அரிய மருந்தான மார்பினை இவர்களின் மருத்துவமனை ஒருவருடகாலம் வைத்துக்கொள்ளவேண்டியதை வெறும் மூன்றே மாதத்தில் தீர்த்தும் விட்டனர்.  போல்யகோவுக்கு இனிமேல் மார்பினே தயாரித்துத் தருவதில்லை என்று அன்னா கோபமாக சொல்லியும் விடுகிறாள். அவன் அவளை தேற்றியவன். தான் முன்னர்  நாள் ஒன்றுக்கு நான்கு ஊசி போட்டுக் கொண்டதாகவும் இப்போது நாள் ஒன்றுக்கு இரண்டு தான் போட்டுக் கொள்கிறேன் என்கிறான். ஆனால் உண்மையில் அவள் மருந்து தயாரிக்கும் போது, பின்னே மறைந்திருந்தவன் அவள் போன பின்  அவள் தயாரித்து வைத்த மார்பின் திரவம் அடங்கிய புட்டியில் வேறொரு மருந்தை நிரப்பி வைத்து  ஏமாற்றி சூழ்ச்சி செய்கிறான்.ஊழல் ஆரம்பமாகி வெகுநாளானதால் அவனால் சட்டென நிறுத்தமுடியவில்லை.

PHARMACY [மருந்தகம்]
இப்போது மார்பினே கைவசமில்லை, போல்யகோவ் நகர மருந்தகத்திற்கு சென்றவன், அங்கே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மார்பின் கேட்க, அங்கே ஏற்கனவே ஆஜராகியிருந்த பக்கத்து கிராம மருத்துவனும் த்ன் மருத்துவமனைக்கும் மார்பின் கேட்கிறான்,போல்யகோவோ அவனிடம் , அவன் தனக்கு ஏற்கனவே 10 கிராம் மார்ஃபின் தரவேண்டும் என்று  தர்க்கம் செய்து போராடியும் வாதாடியும் அங்கேயிருந்து 23 கிராம் மார்பின் புட்டியை வாங்கிக் கொண்டு மருந்தகம் விரைந்து வருகிறான்.  தாதி அன்னாவிடம் தந்து மார்பின்  திரவம்  விரைந்து தயாரிக்கச் சொல்கிறான்.பறித்து போட்டுக்கொள்கிறான்.

விரைவில் இப்பழக்கத்தை விட்டுவிடுவேன் என்கிறான், அவள் அப்படி என்ன ? தான் அந்த மார்பின் திரவத்தில் இருக்கிறது என்று ஆவலும் வெறுப்பும் மேலிடக்கேட்க, இவன் அவளுக்கும் மார்பின் ஊசியைப் போடுகிறான். அடுத்து வரும் நாட்களில் இருவரும் சதா மார்பின் போதையில் மூழ்கித் திளைக்கின்றனர். நோயாளிகள் வந்தாலே போல்யகோவிற்கு அலுப்பாயுள்ளது.  நிராகரிக்கிறான். கடிசியாக வாங்கிவந்த மார்பின் கையிருப்பும் கரைகிறது.

TRACHEOTOMY [கழுத்தறுத்து வைத்தியம்]
இப்போது ஒரு சிறுமி டிப்தீரியா நோய் முற்றி, மரணத்தின் தருவாயில் போல்யகோவ்வின் பார்வைக்கு வருகிறாள், அவன் அச்சிறுமியின் பெற்றோரிடம் கழுத்தறுத்து செய்யும் TRACHEOTOMY  என்னும் சிகிச்சையை செய்ய அனுமதி கேட்கிறான்,  அவர்களோ ?!!! நாட்டு மருத்துவர்கள் செய்வது போலவே, பச்சிலைச்சாறு கொடுக்கச் சொல்கின்றனர். அவர்களிடம் எரிந்து விழுந்த போல்யகோவ் , சிறுமிக்கு மார்பினை தந்து அரைமயக்கத்தில் ஆழ்த்தியவன், பெற்றோரை வெளியே கதவைத்தள்ளி சாத்திவிட்டு தாதிகளிடம் சொல்லி அவர்களைத் தேற்றி கையொப்பம் வாங்கச் சொல்கிறான், அறுவை சிகிச்சை மேசையில் சிறுமியை கிடத்தியவன், கழுத்தை கோடிட்டு அறுத்து, வீக்கத்தை அகற்றி, கெட்ட ரத்தம் வெளியேற்றி, மூச்சுக்குழாயில் இருந்த அடைப்பை சரிசெய்கிறான், குழந்தை கடும் சிரமப்பட்டு திணறி மூச்சுவிட, இப்போது தையலிடுகிறான். இது எல்லாமே தான் மார்ஃபின் உட்கொண்டிருப்பதாலேயே சாத்தியாமாகிறது என உறுதியாக நம்புகிறான். போல்யகோவ் மார்ஃபினுக்கு மிகுந்த அடிமையாகிவிட்டிருக்கிறான்.
FIRE[தீ விபத்து]

இப்போது பக்கத்து ஊரில் கடும் தீவிபத்து நேரிட, ஒரே குடும்பத்தில் தாய் தந்தை மகன் மகள் கருகியநிலையில் ஊரால் தூக்கிவரப்பட்டு அனுமதிக்கப்பட, அங்கே அவர்கள் வலியில், எரிச்சலில் முனக, அவர்களுக்கு மார்ஃபின் இல்லாததால் அது தரப்படாமலே சிகிச்சை அளிக்கப்படுகிறது, அதைத்தாங்க முடியாமல் அவர்கள் யாருமே உயிர் பிழைக்காமல் போகின்றனர், போல்யகோவுக்கு குற்ற உணர்ச்சி மிகுகிறது, அன்னாவிடம் புலம்புகிறான். தன்னை கொலைகாரன் என்று குற்றம் சாட்டி காவலர்கள் கொன்றுவிடுவார்கள் என அஞ்சுகிறான். அவளோ இப்போது நிலப்பிரபுக்களே ஆள்கிறார்கள், அவர்கள் இதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள், மன்னித்தும் விடுவார்கள்  என அவனைத் தேற்றுகிறாள் . ஆயினும் அவளும் குற்ற உணர்ச்சி மிகுந்து காணப்படுகிறாள். கீழே அந்த பக்கத்து கிராம மருத்துவன் வந்து மீண்டும் தன் பங்குக்கு மார்ஃபின் கேட்டு மிரட்டுகிறான், இல்லை என்றதும் தான் தலைமை மருத்துவ ஆணையத்திடம் இது பற்றி புகாரளிக்கப்போவதாக முழங்குகிறான்.

UGLICZ[உக்லிக்ஸ்ச்]
ப்போது உக்லிக்ஸ்ச் என்னும் நகருக்கு போல்யகோவ் ரயிலில் வருகிறான். அங்கே நகர மருத்துவமனையில் தான் போதை மருந்தின் பிடியிலிருந்து மறுவாழ்வு கோரும் விண்ணப்பத்தை அளித்தவன், நோயாளிகள் அணியும் சீருடையை மாற்றிக்கொண்டு சிகிச்சையும் பெறுகிறான், போதையின் கோரப்பிடியில் வாடும் பல நோயாளிகளை அங்கே அவன் பார்க்கிறான். அங்கே தரப்படும் போதை முறிவு மருந்தினால் இவனுக்கு ஒவ்வாமை ஏற்ப்பட்டு கழிவறையின் அசுத்தமான மலக்கறைபடிந்த கோப்பையிலேயே வாந்தி எடுக்கிறான். மிகவும் அசுத்தமான மருத்துவமனை அது.

ங்கே பக்கத்து படுக்கைக்காரனோ ஒரு மது வியாபாரி, ஒரு கோப்பை வோட்கா அரை ரூபிள் மேனிக்கு சகலருக்கும் நிர்வாகம் அறியா வண்ணம் விற்கிறான், போல்யகோவ் இப்போது வோட்காவுக்கும் அடிமையாகிறான். மார்ஃபினை மருத்துவமனையில் எங்கே சேமித்து வைக்கின்றனர் ? என்று ஆர்வமாய் தெரிந்து வைத்துக்கொள்கிறான். நிறைய செல்வந்தர்களும் தாங்களும் மது அடிமைகள் என்று சொல்லி மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அவர்கள் புரட்சி வெடித்துள்ள நிலையில் மருத்துவமனையே சிறந்த புகலிடம் என்று குசுகுசுவென தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.

ப்போது நகரில் புரட்சி உக்கிரமாக வெடிக்கிறது, வேலைக்குப் போகாமல் சும்மா இருப்பவர்கள், வரி கட்டாதவர்கள், முன்னாள் நிலப்பிரபுக்கள் தீராத நோயாளிகள் காவலர்களால் தேடிப்பிடித்து தண்டிக்கவும் கொலை செய்யவும் படுகின்றனர். அதன் விளைவாக ஒரு போலீஸ் படையே போல்யகோவ் இருக்கும் மருத்துவமனைக்கும் வந்து கொலைகளைத் துவங்க, போல்யகோவ் லாவகமாய் மருந்தகத்தின் மார்ஃபினை திருடிக்கொண்டு, தன்னுடைய கைப்பையையும், உடைகளையும், காலணிகளையும் அணிந்தவன், வேகமாக வெளியேறுகிறான். அவனிடமுள்ள இரண்டு குப்பி மார்ஃபின் திரவம் இன்னும் இருவாரங்களுக்கு போதுமானதாயிருக்கும்.

ங்கே வெளியே திடீரென காவலர்களால் நிறுத்தப்பட்டு சோதனையிடப்படுகிறான், தான் மருத்துவன் என்னும் சான்றை காட்டி பெரிய பாடுபட்டு வெளியேறுகிறான், ஊசி போட்டுக்கொள்ள ஒதுக்குப்புறமாக இடம் தேடி வந்தவன் ஒரு சந்தை கட்டிடத்துகுள்ளே நுழைய, அங்கே பக்கத்து கிராம மருத்துவனால் கூவி அழைக்கப்படுகிறான்,அவன் கையில் துப்பாக்கி வேறு வைத்திருக்கிறான்.

ப்போது உள்ள புரட்சியாளர்களிடம் அவன் இணைந்து கொண்டவன், போல்யகோவின் மார்ஃபின் அடிமைத்தனத்தால் விளைந்த உயிரிழப்புக்கு தண்டனை கொடுக்க போல்யகோவை துரத்துகிறான். அங்கே  தப்பிக்கையில் தாதி அன்னாவை பார்க்கிறான் போல்யகோவ் அவள் போதையில் பிரமை பிடித்தது போல நிலைக்குத்தி நிற்பதைப்பார்த்து ,குற்ற உணர்வுடன் இரக்கமும் படுகிறான்,அவசரத்திலும் கூட அவளுக்கும் ஒரு புட்டி மார்ஃபினை அவளது கையில் திணித்து விட்டு அகல்கிறான்.  அதற்குள் அந்த மருத்துவன் போல்யகோவை நிற்கும் படி கத்திக்கொண்டே வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே வந்தேவிட்டான், வேறுவழியில்லாத போல்யகோவ் பையிலிருந்து தன் கைத்துப்பாக்கியை எடுத்து அவனை சுட்டுவிட்டு அகல்கிறான்,  இப்போது அன்னா தெளிவாக அந்த மருத்துவனின் பையிலிருக்கும் மார்ஃபின் புட்டிகளை விரைந்து களவாடுகிறாள்.

ப்போது போல்யகோவ் காவலருக்கு பயந்தவன், ஒரு இரும்பு பட்டறையில் சென்று குளிருக்கு இதமாக தஞ்சம் புகுகிறான். அங்கிருக்கும் பணியாளனால் தொடர்ந்து விரட்டவும் படுகிறான், அங்கே நடுங்கியபடியே புகைபிடித்தவன் , அங்கேயிருந்து அகன்று ஓர் தேவாலயம் வருகிறான், அங்கே மார்ஃபின் ஊசியைப்போட்டுக்கொண்டு புகைப்பிடித்தபடி அமர்ந்திருந்தவனுக்கு தேவாலயத்தின் மதகுரு போல்யகோவின் தலையில் தன் மேல் துண்டைப்போட்டு ஜெபிக்கிறார்.  

CINEMATOGRAPH[திரையரங்கம்]

ப்போது நன்கு விடிகிறது, போதை தெளிந்தவன், வேறு ஊருக்கு போக விழைகிறான், அவனுக்கு ஊசி போட்டுக்கொள்ள இடம் தேவைப்படுகிறது, அருகே ஓர் திரையரங்கத்தை பார்க்கிறான்  போல்யகோவ், உள்ளே சென்றவன் நுழைவுச்சீட்டுக்கு தன்னிடம் காசில்லை என்கிறான். தன் விலையுயர்ந்த கைக்கடிக்காரத்தையும் கழற்றிக் கொடுக்கிறான், நுழைவுச்சீட்டு தரும் பெண்மணியோ , கைக்கடிகாரமெல்லாம் வேண்டாம் என வாங்க மறுத்து இலவசமாகவே போல்யகோவை அனுமதிக்கிறாள். உள்ளே 16mm திரையில் பியானோ இசை ஒளிக்க ஒரு நீச்சலுடையணிந்த பெண் சிரிப்பு வருமாறு ஆடுகிறாள். அங்கே காவலர்கள், முதலாளிகள், தொழிலாளிகள் என எல்லோருமே கூடியிருக்கின்றனர். உட்காரவே இடமில்லாமல் அரங்கே நிரைந்திருக்கிறது.எங்கும் புகைமூட்டம். கேளிக்கைக்கு ஏங்கும் கூட்டத்தை  எங்கிலும் பார்க்கிறான் போல்யகோவ்.

சொல்லி வைத்தது போல அனைவரும் அற்பகாட்சிக்கெல்லாம் கைதட்டி சிரிக்கின்றனர். சிரிப்பாமா,!!!கடுப்பான போல்யகோவ் மார்ஃபின் திரவத்தை முழுக்க சிரிஞ்சியில் ஏற்றியவன் தன் தொடையில் குத்திக் கொள்கிறான். இப்போது இவனுக்கும் அவர்களைப் போலவே சிரிப்பு தொற்றிக்கொள்கிறது, நன்றாக சிரிக்கிறான். சட்டென கைத்துப்பாக்கியை எடுத்தவன் வலது கன்னத்துக்கு கீழே வைத்து சுட்டுக் கொண்டு சரிகிறான், போல்யகோவின் மூளை வெளியே சிதறி அடுத்து அமர்ந்திருந்தவன் மேலே தெரிக்கிறது ,அவனோ இவன் சுட்டுக்கொண்டு  கீழே விழுந்ததைப் பார்த்து முகம் சுளிக்கிறான். படம் போகிறதே!!! என்று ரத்தத்தை துடைத்தபடியே விட்ட படத்தைப்பார்க்கிறான்.  இப்போது திரையில் முற்றும் என்று போடப்படுகிறது.
=====00000=====
ப்படம் முழுக்க யதார்த்தம், வன்முறை, குரூரநகைச்சுவை நிரம்பி வழிகிறது, நீங்கள் புல்ககோவ், தஸ்தாவெஸ்கியை விரும்புபவரென்றாலும் விரும்பாதவரென்றாலும்  அவசியம் பார்க்கவேண்டிய படைப்பு. படத்தின் திரைக்கதையை எழுதியவர் அகால மரணமடைந்த எழுத்தாளர் & நடிகர் செர்ஜி போட்ரோவ் ஜூனியர்.[Sergei Bodrov, Jr.], இவர் இயக்குனர் அலெக்ஸெய் பாலபனொவின் 2002 ஆம் ஆண்டு வரையிலான படைப்புகளில் பெரும் பங்காற்றியுள்ளார். படத்தின் பாத்திரங்களின் நடிப்பும் , ஒளிப்பதிவும், இசையமைப்பும்,  ஆடை அரங்க வடிவமைப்புகளும் ஆகச்சிறந்த உலகத்தரத்தின் உச்சம். இது திரைப்படக்கல்லூரிகளின் ரெஃபெரென்ஸ் மெட்டீரியலாக வைக்கப்படவேண்டிய படம் , எல்லாவற்றுக்கும் மேல் இது உலகசினிமாத்தேடலை துவக்க சரியான படம் .

படத்தை தரவிறக்க சுட்டி:- 

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

படத்தின் கலைஞர்கள் விபரம் யூட்யூபிலிருந்து:-
Directed by Aleksei Balabanov
Written by Mikhail Bulgakov, Sergei Bodrov, Jr.
Starring Leonid Bichevin, Ingeborga Dapkūnaitė, Andrei Panin
Cinematography Alexandr Simonov
Release date(s) November 27, 2008
Country Russia
Language Russian
 =====00000======