உதிரிப்பூக்கள் [Udhiri pookal] [இந்தியா] [1979] தமிழில் ஓர் உலகசினிமா!!!

கேந்திரன் தமிழ் சினிமாவின் நீங்காப் புகழ் வாய்ந்த இயக்குனர். இவரின் உதிரிப் பூக்கள் படத்தை  தமிழில் வெளிவந்த உலகசினிமா என்று நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், மனதை விட்டு அகலாத கதா பாத்திரங்களுக்காகவும் அழகுணர்ச்சி மிகுந்த ரசனை மிகு காட்சியமைப்புகளுக்காகவும் போற்றப்படவேண்டிய, காலத்துக்கும்  கொண்டாடப்பட வேண்டிய படம் இது.
இயக்குனர் மகேந்திரன்

யக்குனர் மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற குறு நாவலை பாதி வரை படித்து மூடிவிட்டு அதனில் இருந்து உத்வேகமாகக் கொண்டு உதிரிப் பூக்கள்  திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கினார். ஆயினும் நேர்மையாக புதுமைப்பித்தனுக்கு டைட்டிலில் க்ரெடிட் கொடுக்கிறார். இந்தப்படம் வசூலில் இமாலய சாதனை புரிந்ததா? எனத் தெரியாது, ஆயினும் இது தமிழ் திரையுலக வரலாற்றின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்று!!!.

சைஞானியின் ”ஏய் இந்த பூங்காத்து தாலாட்ட” என்னும் மயக்கும் குரலில் மந்திர இசையில் படத்தின் பெயர் போடப்படுகிறது, படத்தின் உலகத்தரமான உள்ளடக்கத்துக்கு முன்னோட்டமாக இந்த பாடல் அமைந்திருக்கிறது, அதன் பின்னர் படத்தில் லட்சுமி பாடும்  ”அழகிய பெண்ணே,உறவுகள் நீயே” என்னும் பாடல் மறக்க முடியாத ஒன்று. இசைஞானிக்கு பேரலல் சினிமாக்களுக்கு இசையமைப்பது என்றாலே இன்பம் தான் போலிருக்கிறது, அவர் பாடுகையிலேயே ஆத்மார்த்தமான ஈடுபாட்டை நாம் உணரமுடிகிறது. பிண்ணனி இசை பிந்தைய 70களின் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு. கிராமிய மணம்  ததும்பும்  மனதை ஊடுருவும் அதிர்வலைகளை தோற்றுவிக்கும் இசையமைப்பு.

ந்தப்படத்தினை ஒருவர் ஆத்மார்த்தமாக அனுபவிக்க வேண்டும் என்பதால் படத்தின் கதையை நான் இங்கு சொல்லவில்லை. பிரதான பாத்திரம் சுந்தரவடிவேலு(விஜயன்): திரைக்கதையில் ஒரு உத்தி இருக்கிறது. யாருடைய பார்வையில் இருந்து கதை சொல்லப் படுகிறதோ?  அந்தக் கதாபாத்திரத்தின் மேல் நமக்கு நம்மை அறியாமலேயே அனுதாபம் வந்து விடும். மிகக் கொடியவன் கூட அவனது மனதின் வழியே பார்த்தால் அவன் நல்லவன் போல் தெரிவான். நாம் எல்லோருமே நமக்கு நமே நல்லவர்களாக இருக்கும் மனித மனத்தின் மாயம் இது. [நன்றி-ஷன்முகப்ப்ரியன்] இந்த உத்திக்கு முக்கிய உதாரணம் இப்படம் . சிரித்தே கழுத்தறுக்கும் வில்லன்களை  நாம் பார்த்திருப்போம். சிரிக்காமலேயே கழுத்தை அறுக்கும் வில்லனை இதில் பார்ப்போம்.அவ்வளவு ஏன்?இவர் வில்லனா?அல்லது கதாநாயகனா?என்றே நம்மை குழம்ப வைத்து விடும். விஜயன் என்னும் அற்புத நடிகரை நாம் இழந்து விட்டிருப்பது நன்றாகப் புரிகிறது.

வரை நிறம் மாறாத பூக்கள் துவங்கி, கடைசியாக 7 ஜி ரெயின் போ காலனி வரை ரசித்திருக்கிறேன். இரக்கமேயில்லாத வில்லன் , இவரை துரத்தி வரும் ஊர் மக்களால் தற்கொலை செய்துகொள்ளும்படி பலவந்தப்படுத்தப்படுகிறார். ஆற்றில் மார்பளவு நீரில் நிற்கிறார். வெளியே வந்தால் ஊரார் அடித்தே கொன்றுவிடுவர். கொலையுண்டு சாவதா அல்லது தற்கொலை செய்துகொள்வதா என்பதை அவர்தான் அப்போது தீர்மானிக்க வேண்டும். அத்தனை பேரும் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் தற்கொலைக்குத் தயாராகிறான். திருந்துகிற சோலியெல்லாம் இல்லை. நீரில் மூழ்குமுன் கடைசியாக அவர்களைப் பார்த்து புன்னகைத்தவனாக அவன் சொல்கிறார். ''நான் எத்தனையோ தவறு செய்திருக்கேன். ஆனா, இப்போ உங்க எல்லாரையும் என்னை மாதிரி மாத்திட்டேன். அது தான் நான் செய்திருக்கும் பெரிய தவறு...'' என்று  சொல்லிவிட்டு,  தன் குழந்தைகளை அணைத்தவர், ''அப்பா குளிக்கப் போறேன்... நீங்க நல்லா படிங்க'' என்று கூறி விடைபெறுகிறார் பாருங்கள்!!!, அங்கே அந்தக் கொடியவனுக்காகவும் நாம் கண்ணீர் சிந்துகிறோம். இதே போலவே நான் இரக்கப்பட்டது ஹிட்லரின் கடைசி பனிரெண்டு நாட்களை கண்முன் நிறுத்திய டவுன்ஃபால் படத்தின் ப்ரூனோ கான்ஸ் ஏற்று நடித்த ஹிட்லர் பாத்திரத்துக்கு தான்.

சுந்தரவடிவேலுவின் மனைவி லட்சுமி (அஸ்வினி): இந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்காகவே இவர் பிறந்திருக்கிறாரா?!!! அல்லது இந்தப் பாத்திரம் இயக்குனர் மகேந்திரனால் இவருக்காகவே படைக்கப்பட்டதா? என்று பிரித்துப் பார்க்கமுடியாத அளவுக்கு அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். ஒரு காட்சியில் ,மருத்துவ அதிகாரி சரத்பாபு ஒன்பது வருடத்துக்கு முன்னர்,  அவரை பெண் கேட்டு வந்த சம்பவத்தை நினைவூட்டுவார் பாருங்கள்.ஒரு விநாடி பூரிப்பை இதழோரத்தில் சிறு புன்னகையாய் மலரவிட்டு, அடுத்த கணமே,நமக்கு திருமணமாகிவிட்டதே!!!! அப்படி நினைப்பதே தவறு என்று முகம் மாறுவார் பாருங்கள் .நாம் மிக நல்ல நடிகையை இழந்து விட்டிருக்கிறோம். கொடுமைக்காரக் கணவன் சுந்தரவடிவேலு பூ வாங்கிக் கொடுத்து, சினிமாவுக்குப் போகத் தயாராக இருக்கச் சொல்லும்போது, மனைவி லட்சுமி மழை வருகிறதா?!!! என்று வானத்தை அண்ணாந்து பார்ப்பதும், அப்போது வான்னோக்கிய கேமராவில் மழை மேகம் திரண்டிருப்பதை காட்டுகிறார் மகேந்திரன் அது .உலகத்தரமான குறும்பு நகைச்சுவை.

லட்சுமியின் தந்தை (சாரு ஹாசன்): இவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட தகப்பன் பாத்திரங்கள் சோடை போனதேயில்லை, உதாரணம் வேதம் புதிது, தளபதி, அப்புறம் இதோ  இப்படம், நறுக்கு தெரித்தார் போலே தெளிவான வசன உச்சரிப்பு, 'நான் என் பெண்ணுக்கு தகப்பனாராகவே இருக்க விரும்பறேன்... புரோக்கரா இருக்க விரும்பலே...' என்று அவர்  யதார்த்தமாக இரண்டாம் பெண்ணை  சுந்தரவடிவேலுவுக்கு மணம்முடித்துத தர இயலாது என சொல்லும் இந்த இடம் மிக அருமை, இதைவிடக் நேர்த்தியாக ஒரு வசனம் உச்சரிக்கப்படமுடியுமா? என்று வியக்க வைக்கிறது,இது போல பல இடங்களில் மின்னுகிறார் சாரு ஹாசன்.

குழந்தை நட்சத்திரங்கள் ராஜா, பவானி (ராஜா, பேபி அஞ்சு): ராஜா, தந்தை சுந்தரவடிவேலுவைப்போலவே  சிரிக்காமல் அழுத்தமாகக் காட்சி அளிக்கிறான்.தங்கை பவானி பசிக்கும் போதும் சிரிக்கிறாள், தாய் லட்சுமி இறக்கும்போதும் சிரிக்கிறாள் அக்குழந்தை, அப்படி அது சிரிக்கச் சிரிக்க நாம் கலங்கியே விடுகிறோம். அப்பேர்ப்பட்ட குழந்தை நட்சத்திரம் அஞ்சுவை இப்போது பருத்த பெண்மணியாக சின்னத்திரையில் பார்க்கையில் நம்பவே முடியவில்லை, ராஜாவாக வந்த சிறுவன் பின்னாளில் அந்த ஏழு நாட்களில் பாக்யராஜுக்கு எடுபிடியாக வருவார், சம்சாரம் அது மின்சாரம் படத்திலும் தொடர்ந்து எஸ் எஸ் எல் சி எழுதும் பையனாக வருவார். இப்போது என்ன ஆனார்? என்றே தெரியவில்லை. ஆனால் வாழ்நாளுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இப்படம் இருவருக்கும்.

எடிட்டர் பி.லெனின், மிக அருமையான எடிட்டிங்,மெதுவாக செல்லும் படத்தில் நிறைய கட் ஷாட்டுகள் கொண்டிருக்கின்றன, விஜயனையும்,லட்சுமியையும் ஏனைய நட்சத்திரங்களையும் நம் மனதில் நீங்கா இடம் பெறச்செய்கிறது இவரின் தொய்வில்லாத எடிட்டிங்.இப்படம் எனக்கு டெர்ரன்ஸ் மாலிக்கின் டேஸ் ஆஃப் ஹெவன் என்னும் ஆகச்சிறந்த ஹாலிவுட் ஆர்ட் ஹவுஸ் திரைப்படத்தின் தரத்தை நேர்த்தியை நினைவுபடுத்தியது.நம்மூரிலும் டெர்ரன்ஸ் மாலிக்குகள் இருந்திருக்கின்றனர் என நினைப்பதே பெருமைதான்.

ஒளிப்பதிவாளர் அசோக்குமார், இவர் மகேந்திரனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருமாவார். 1979 களின் சினிமாவுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு கலைத்தன்மை பொதிந்த நீண்ட ஷாட்டுகள், டீடெய்ல்டான ஒளிப்பதிவு, 35 எம் எம் செலுலாய்டு கவிதையாய் அமைந்தது, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான  ஒளிப்பதிவு. இந்தப்படத்தில் இவருக்கு தேசிய விருது கிடைக்காமல் போனாலும் பின்னாளில் 1981ல் வெளியான மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளேதே படத்துக்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இவர் ஜீன்ஸ் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தது நினைவிருக்கலாம்.

ட்சுமியின் தங்கையாக வந்த மதுமாலினி மிகவும் அழகு, மருத்துவ அலுவலராக வந்த சரத் பாபு ஏனைய படங்களில் நாம் பார்க்கும் குணசித்திர கதாபாத்திரங்களைப் போல படம் முழுவதும் வராதது யதார்த்தமாகப்பட்டது, வாழ்வில் யாரோடும் நாம் ஒருகட்டத்துக்கு மேல் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. க்ளிஷேக்களை ஆனவரை பல இடங்களில் தவிர்த்திருக்கிறார் இயக்குனர்,அந்த சுந்தரவடிவேலு இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணை மணம் முடித்துக்கொண்டு வருகையில் பாடப்படும் பாடல்,மற்றும் லட்சுமியின் தங்கை ஆற்றங்கரையில் பாடும் பீப்பி பாடல் மட்டுமே வழமையான தமிழ் சினிமாவின் க்ளிஷேக்களை நினைவுபடுத்தியது, இந்த இரண்டு பாடல்களை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும், இன்னும் படத்தில் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. 
 நிறைய நட்சத்திரப் பட்டாளங்கள் சிவச்சந்திரன். குமரிமுத்து, சரத்பாபுவின் மனைவியாக வந்த பெண்மணியின் பெயர் தெரியவில்லை, அவரை இப்போது தொலைகாட்சி சீரியலில் மாமியாராக பார்த்தது. ஆசிரியராக வந்து  பல்பு வாங்குபவரை என்னால் நினைவு கூற முடியவில்லை,  மனோரமாவின் மகன் பூபதி இதில், சரத் பாபுவின் உதவியாளராக வந்துபோனார். படத்தில் பரீட்சார்த்தமாக நிறைய இரவுக் காட்சிகள்,மனதுக்குள்ளேயே  அசை போட வைக்கும்  கூர்மையான வசனங்கள் உண்டு. சுந்தர வடிவேலுவின் மன விகாரத்தின் உச்சமாக அவனிடம் குழந்தைகளை கேட்க வரும் மைத்துணியை துகில் உரிந்து நிர்வாணமாக்கி அழவைத்து விட்டு,நான் உன்னை துகிலுரிந்தது கற்பழிக்க அல்ல, உன்னை முழு நிர்வாணமாக முதலில் பார்த்தது நான் தான் என்னும் நினைப்பு உனக்கு ஆயுளுக்கும் இருக்க வேண்டும் அதற்காகத் தான் என்கிறார். மிகக்கொடிய பாத்திர சித்தரிப்பு சுந்தரவடிவேலு. நிறைய காட்சிகளில் நகைச்சுவை இழையோடி அப்பாத்திரத்தின் மீதே நமக்கு இரக்கமும் தோன்றி விடுகிறது. தனக்கு நீச்சல் தெரியாததால் தான் நிர்வகிக்கும் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியனும் நீச்சல் அடிக்கக்கூடாது என நினைப்பது ஒரு சோற்றுப்பதம். ஒரு ஆற்றங்கரைக்காட்சியில் வைத்து விஜயன் சரத்பாபுவை புரட்டிப்போட்டு அடிப்பார்.ஆனால் இயக்குனர் மகேந்திரன் அதை காட்சிப்படுத்தவில்லை,ஓடும் ஆற்றையும்,மணலில் ஒரு சிறுவன் தலையை தூக்கி பார்ப்பதையும்,நெற்கதிரையும் காட்டுகிறார்.மறு காட்சியில் சரத்பாபு வாயில் கசியும் ரத்தத்தை கழுவுகிறார். தன் கீழே விழுந்த மூக்கு கண்ணாடியை எடுத்து அணிகிறார். பின்னர்  லட்சுமி விதவையாகக்கூடாது என்று தான் நான் திருப்பி அடிக்கவில்லை என்று சுந்தரவடிவேலுவிடம் சொல்லிவிட்டு அகல்கிறார். இது போல இன்றைய இயக்குனர்கள் உபயோகிக்கும் மேலான உத்திகளை அன்றே இயக்குனர் உபயோகித்துவிட்டார்.

ட்சுமியின் மரணத்தில், தமிழ்த் திரையுலகில் இதுவரை நாம் கண்டிராத யதார்த்தத்தைக் காண் கிறோம்.கணவன் தன் தங்கை மேல் ஆசைப்பட்டு என்ன என்ன விதத்தில் எல்லாம் கையாண்டு அவளையும் இரண்டாம் தாரமாக அடைய வழி பார்க்க, இதற்கு உடன்படாத லட்சுமியை பலவாறாக பழி தீர்க்கிறார் சுந்தர வடிவேலு. அவளை வாழாவெட்டியாக்குகிறார்,தனக்கு தேவையில்லை என்றாலும், வீம்புக்கென்றே இரு குழந்தைகளை தன்னுடனே அடைத்து வைத்துக்கொள்கிறார். ஏற்கனவே சீக்காளியான லட்சுமிக்கு புத்திர சோகமும் ஏற்படுகிறது. லட்சுமி எப்போது இறந்து போனாள்?!!! என்பதுகூட அருகில் இருப்பவர்களுக்குத் தெரியா  வண்ணம் இயற்கையாக, வாழ்க்கையோடு ஒட்டியதாக அமைந்திருக்கும் அக் காட்சியில் ஒரு சோகக் ஓவியத்தையே தீட்டியிருக்கிறார் இயக்குனர். தாயையும், தந்தையையும் இழந்துவிட்ட பின்னர் தனியாகக் ஆற்றங்கரையோரம் நடந்து செல்லும் இரு குழந்தைகளைக் காட்டிப் படத்தை முடித்து விட்டது மனதைப் புரட்டிப்போட்டது. இந்தப்படத்துக்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது படம் வெளியான 1979ஆம் வருடம் தான் நானும் பூவுலகில் ரிலீஸ் ஆனேன். இந்தப்படத்தை பார்த்துவிட்டு எழுத வேண்டும் எழுத வேண்டும் என நினைத்து முடியாமல் போனது,ஒருவழியாக எழுதியும் விட்டேன்.யாராவது தமிழில் நல்ல சினிமா சொல்லு என சொன்னால் இதை தைரியமாக சொல்லுங்கள்.
உதிரிப் பூக்கள்=தமிழின் முதல் உலக சினிமா

குறிப்பு:- தமிழகத்தில் இப்படம் பார்க்க விழைவோர் அருகாமையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மோசர் பேயர் வெளியீடாக 28 ரூபாய்க்கு கிடைக்கிறது அதை வாங்கி புத்தக அலமாரியில் வைத்து கலெக்டர் டிவிடியாக பாதுகாக்கலாம்.

ப்படம் தரவிறக்க டாரண்ட் சுட்டியே கிடைக்கவில்லை. டிவிடியை வாங்க வழியில்லாதோர். இப்படம் யாரோ ஒரு நல்லெண்ணம் கொண்ட அன்பர் மூலம் தரவேற்றப்பட்டு 10 நிமிடங்கள் X 15 பாகங்களாக யூட்யூபில் காணக்கிடைக்கிறது. முழு அமர்வில் உட்கார்ந்து பார்க்க ஏற்றது. மெதுவாக சென்றாலும் தொய்வே இருக்காது.அதை அவசியம் பாருங்கள்.
இது படத்தின் முதல் பாகம்

நண்டு-திரைப்படம் பற்றி சிறு பார்வை:-
யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கேற்ப இயக்குனர் மகேந்திரனுக்கு அடி சறுக்கிய படம் நண்டு,படத்தில் எத்தனையோ பிழைகள் உண்டு என்றாலும்,ஒரு நல்ல இயக்குனர் கவனம் சிதறுண்ட ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.எப்படியோ எடிட்டிங்கில் கூட பார்க்காமல் விட்டுவிட்டார்,ஆனால் படத்தை ரிலீசான பிறகு எப்போது பார்த்தாலும் வருந்தியிருப்பார். இதில் இந்த 14 நிமிட யூட்யூப் காணொளியை பாருங்கள்,பொறுமை இழந்து விடுவீர்கள்,யாரும் கன்டின்யூட்டி பார்க்கவில்லையோ ,யாரும் வசனங்களை சரிபார்க்கவில்லையோ என எண்ண வைக்கும் காட்சி. 

லக்னோவைச் சேர்ந்த நாயகன்,[ஆனால் நாயகன் துவங்கி,வீட்டு வேலைக்காரன் வரை எல்லோருமே தமிழ் பேசுகிற குடும்பம்] தன் கொடிய அப்பாவின் மேல் கோபப்பட்டு சென்னை வந்தவன் வேலைக்கு சேர்ந்து,உடன் பணிபுரியும் பெண்ணை மணந்து கொள்கிறான், சில மாதம் கழித்து தங்கை திருமணத்துக்கு லக்னோ போகிறான்,அங்கே லக்னோவில் அவனுக்கு குதிரை வண்டி ஓட்டுபவரும் கூட தமிழ் பேசுகிறார். இறங்கி வீட்டுக்குள் நுழைகிறான்,அங்கே அம்மா தமிழில் வரவேற்கிறாள், பேரனையும் வாங்கி அழகுத் தமிழில் கொஞ்சுகிறாள். பின்னர் மருமகளை அங்கே உள்ளோரிடம் ஹிந்தியில் அறிமுகம் செய்கிறாள். 

 அடுத்த காட்சி வருகிறது உள்ளே ஹாலில் அமர்ந்திருக்கும் மருமகளிடம் வந்த நாயகனின் அம்மா,என்ன சாப்பிடுகிறாய்? என ஹிந்தியில் பேசுகிறார், திடீரென அந்தப் புள்ளியில் அவர் தமிழை மறந்து விடுகிறார்,நாயகியும் அலட்டிக்கொள்ளாமல் தமிழிலேயே விழிக்கிறார்,ஹிந்தி தெரியாத்தால் அசடு வழிகிறார்,நாயகன் குறுக்கிட்டு மொழி பெயர்த்து சொல்லும் அந்த இடத்தை நன்கு ,வேண்டாம் வேண்டாம் சாதாரணமாக கவனியுங்கள்,இப்படி பல்பு வாங்கலாமா மகேந்திரன் சார்?!!! இதே போலவே மெட்டி படத்திலும் நிறைய பல்புகள் உண்டு,அது பின்னொரு சமயம் பகிர்கிறேன்,முள்ளும் மலரும் & உதிரிப்பூக்களுக்கு திருஷ்டி இரு படங்களும்,ஆனால் ராஜா சாரின் இசை ஒன்றினால் மட்டுமே இரு படங்களுமே நீங்கா புகழை இன்னும் கொண்டிருக்கின்றன.