சாரு பற்றி நினைவு நாடாக்கள் தொடரில் கவிஞர் வாலி மனம் திறந்தவை!!!

ருமை நண்பர்களே!!!
இதை நான் எப்படி தவறவிட்டேன் ?!!! என்று தெரியவில்லை, கீழ் வருபவை  சாரு பற்றி ஆனந்தவிகடன் , நினைவு நாடாக்கள்  -19 வது அத்தியாயத் தொடரில் கவிஞர் வாலி மனம் திறந்தவை!!! என்னைப் போல இதை தவற விட்டவர்களுக்காக   இங்கே பகிர்ந்திருக்கிறேன். தமிழகத்தில் சமகால இலக்கியவாதிகளை, கலைஞர்களை யாரும் இது போல மனம் திறந்து பாராட்டமாட்டார்கள், அந்த வகையில்  இது அதிசய நிகழ்வே!!! சாரு மெய்யாகவே சாதித்திருப்பதால் தான் வாலியிடமிருந்து இந்த ஏகோபித்த பாராட்டுக்கள் சாத்தியமாகியுள்ளது !!! இது கருணாநிதிக்கு அநேக பேரால் வேண்டாவெறுப்பாக கிடைக்கும் முறைவாசல், பதில் மொய் , வகைப் பாராட்டுக்கள் அல்ல.

வாலியின் விகடன் கட்டுரை பற்றி யாருமே அதிகம் கண்டுகொள்ளாத நிலையில் சாரு இப்படி எழுதுகிறார். 
வாலி ஆனந்த விகடனில் என்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த ஆனந்தத்தில் அதைப் பற்றி சொல்வதற்காக மனுஷ்ய புத்திரன் வீட்டுக்குச் சென்றேன்.  இது போன்ற ஒரு விஷயத்தை எடுத்த எடுப்பில் கேட்டால் அல்பம் என்று நினைத்துக் கொள்வார் இல்லையா? அதனால் பல்வேறு அரசியல் விஷயங்களை அலசி விட்டு கடைசியில் எதேச்சையாகக் கேட்பது போல் விகடன் பார்த்தீர்களா என்று கேட்டேன்.  பார்த்தேனே என்றார் அசுவாரசியமாக.  அதற்கு மேல் எனக்கு எப்படி சுற்று வளைப்பது என்று தெரியாமல், வாலி என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்; படித்துப் பாருங்கள் என்றேன்.  உடனே ஆர்வமாக விகடனை எடுத்துப் படித்தார்.  படித்து விட்டு ஒன்றும் சொல்லாமல் பக்கத்தில் தூக்கிப் போட்டார்.  அதை செல்வி எடுத்துப் படித்தார்.  பிறகு ஏதோ பேசி விட்டுத் திரும்பி விட்டேன்.
போன இடத்தில் படுதோல்வியாகி விட்டதால் அவந்திகாவிடமாவது சொல்லலாம் என்று நினைத்தேன்.  அவள் ஆன்மீகம் தவிர வேறு எதுவுமே படிப்பதில்லை.  என்றாலும் இது விதி விலக்காக இருக்கட்டுமே என்று சொன்னேன்.  படித்தாள்.  படித்து விட்டு “என்ன பெரிய இது… உன் பெயரை ரெண்டு தடவைதானே எழுதியிருக்கிறார்?” என்று வருத்தத்துடன் கேட்டாள். அவள் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.  நான் ” அவர் என்ன என் பெயரை ஸ்ரீ ராமஜெயம் மாதிரியா எழுத முடியும்?” என்று கேட்டேன். அப்படியும் அவளுக்குப் புரியவில்லை.
இருப்பதே ஒன்றிரண்டு நண்பர்கள்.  மனைவியும் ஒரே மனைவி.  அவர்களும் இப்படி இருக்கிறார்கள்… எவ்வளவு சோகமான சூழலில் வாழ்கிறேன் பாருங்கள்?
பிறகு ஏதோ விஷயமாக மனுஷ்ய புத்திரன் எனக்கு போன் செய்த போது என் குரலில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்து என்ன என்று கேட்டார்.  நீங்கள்தான் விகடனைத் தூக்கிப் போட்டு விட்டீர்களே? என்றேன்.  அவர் அதற்கு சொன்ன பதில்: “சே, சே… அதை ஃப்ரேம் பண்ணித்தான் மாட்டலாம் என்று நினைத்தேன்.  செல்வி வந்ததால் படிக்கக் கொடுத்தேன்.”
 =====00000======
நினைவு நாடாக்கள் ஒரு Rewind...
உள்ளும் புறமும்!
நான் படித்ததில்லை; நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.சமீபத்தில்தான் என் நெருங்கிய நண்பர் திரு.கிருஷ்ணகுமார் கொண்டுவந்து என் முன் கொட்டினார் 'சாரு நிவேதிதா’வை! என்னை ஈர்த்தது அவர் எழுத்து; வசீகர நடை ஒருபுறமும், உலகளாவிய நுண்மாண் நுழைபுலமும் அவரெழுத்தில் விரவிக்கிடந்ததால் அல்ல.தன்னை, வரிக்கு வரி ஒரு திறந்த புத்தகமாகப் போட்டு - 'வாசி வாசி’ என்று வாசகனை வாசிக்கவைக்கும்...

அந்த மெய்ம்மை!!!! நான் பத்மஸ்ரீ வாங்கும்போது - என்னுடன் திரு.குஷ்வந்த் சிங் பத்ம விபூஷண் வாங்கினார்.அவர், illustrated Weekly-யில் இருந்த காலம் தொட்டு, அவர் எழுத்துகள் எனக்கு நிரம்பப் பிடிக்கும். ஆசிரியராக இருந்தபோது எழுதியதைவிட - அவரது தனிப் படைப்புகள், ஒளிவு மறைவின்றி எதையும் ஒப்புவிக்கும். சுய விமர்சனங்களில் அவர் தன்னையே நடுமுள் நடுங்காத தராசில் அமர்த்தித் தன் எடையை அறிவிப்பார்! என்னளவில் ஒரு மானுடனின் உயர்ந்த பண்பு - Confession-தான்! கிறித்துவம் இதை ஏற்று பாவ விமோசனம் தருவதால், அந்த மதத்தினுடைய அளப்பருங் கருணை புலனாகிறது!

'குற்றம் புரிவாரைக்
கொடுநரகில் இடுவாயெனில் -
குற்றம் புரியாதார்
குவலயத்தில் யாருளரே?’

- இது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் அற்புதமான பாடல்!...Sex - என்பது விஸ்வாமித்திரனே வழுக்கி விழுந்த இடம். எத்தகு விஸ்வாமித்திரன்?! வசிஷ்டரே, 'உன் மகனை அவனோடு அனுப்பு; அது உன் மகனுக்கு நலம் பயக்கும்!’ என்று -  தசரதனிடம் பேசும்படி தகவுகள் வாய்ந்த விஸ்வாமித்திரன். 'ஆவருந்தவத்தோன்!’ என்று கம்பனால் சுட்டப்பெற்ற அவன்தான் - மேனகையைக் கண்டதும், துவராடைகளைத் தூர எறிகிறான்! முனியாய் இருந்தாலென்ன; மூலக்கடை முனியாண்டியாய் இருந்தாலென்ன -மனிதன் பலவீனங்களால் ஆக்கப்பெற்றவனே; அதைப் பொத்திவைத்துத் தன்னைச் சுத்த சுயம்பிரகாசமாகக் காட்டிக்கொள்பவன் -

கண்ணதாசன் பாட்டு மாதிரி, 'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்பவன்!’ Self Abuse எனப்படும் - Masturbation குரங்குகளிடம்கூட உண்டு; குரங்கிலிருந்து பிறந்த மனிதன், என்னணம் அதைத் தவிர்க்க ஏலும்? பிள்ளைப் பிராயத்தில் அதைப் பழகாதிருக்க - எவ்வுயிரையும் இயற்கை அனுமதிக்காது!.  ஓரினச் சேர்க்கையையே - இப்போது ஒவ்வாததல்ல என்று - இந்திரப் பிரஸ்தமே இயம்பிவிட்டது!  Gays are with gay now!...மேற்கண்ட விஷயங்களையெல்லாம் நான் இவ்வளவு விரிவாக எழுதக் காரணம் - சில தவறுகளை - அந்த அந்தப் பருவச் சூழல்களால் நேர்ந்தவற்றை - ஒப்புக்கொள்வது ஒரு புழுத்த சிந்தனையல்ல எனப் புரியவைக்கத்தான்!

நான் இந்த நினைவு நாடாக்களில் - கவிதா ஹோட்டலில் நடந்த ஒரு நிகழ்ச்சியை - அதுவும் என்னைப் பற்றியதை ஒளிவு மறைவின்றி எழுதியதை -போற்றியோரும் உண்டு; தூற்றியோரும் உண்டு!என்னைச் சிலுவையில் நானே அறைந்துகொள்வதில், எவர்க்கென்ன வந்தது?  இன்று என் வயதுக்கும், எனக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து -நான் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் உத்தமன் என்று பிரகடனப்படுத்திக் கொள்வது -  பித்தலாட்டத்தின் பிழிவாகும்.

இதனால்தான் - சாரு நிவேதிதாவின் எழுத்தில் உள்ள சத்திய தரிசனம், என்னை அவர்பால் மரியாதைகொள்ளச் செய்கிறது.புலனடக்கத்தைக் காவிகளே புறந்தள்ளிவிட்ட பிறகு - சராசரி மானுடன் அதனோடு சண்டை செய்து வெல்லல் சாத்தியமா?!!!! அறுபதனாயிரம் தசரதனுக்கு; அவன் மகனுக்கு, ஒன்றே ஒன்று.  இது எதைக் காட்டுகிறது? பலதாரப் பழக்கத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டது போல், ஓர் ஒருதாரப் பழக்கம் பரிணமித்திருக்கிறது என்பதைத்தானே! நம்முடைய பிழைகளே,  நம்முடைய நெறிகளுக்கு - நம்மை இட்டுச் செல்கின்றன!

திரு.கவிஞர் மாயவநாதனின் அற்புதமான பாட்டு இது:

'தப்பித்து வந்தானம்மா! - காலம்
கற்பித்த பாடத்தின் அடிதாங்க    
  முடியாமல்
தப்பித்து வந்தானம்மா!’

கொலை கொள்ளை பயின்ற வேடன், வால்மீகியானது இப்படித்தான்; திருடன், திருமங்கையாழ்வாராயானதும் இப்படித்தான்; கருப்புகழ் பாடியே காலங்கழித்தவன், திருப்புகழ் பாடுபவனாகக் கனிந்ததும் இப்படித்தான்; இதுபோல் அனேகம் சொல்லலாம்!  கண்ணதாசனும் நானும் - எங்களையே அழுக்குப் போகத் துவைத்துக் காயப் போட்டவர்கள்; தன்னையறிந்தவர்க்கே ஆன்மானுபூதி சித்திக்கும்!  இந்த அலைவரிசையிலேயே - சாரு நிவேதிதாவையும் வைத்துப் பார்க்குங்கால் - அவரது எழுத்து, ஒழுக்கத்தை ஓம்புகிறது எனலாம்!

'உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று பாடினான் -  தண்ணீரில் விளக்கெரித்துக் காட்டிய தவத்தோன்!  நெஞ்சுள் உள்ளது - நஞ்சாயினும், நறவம்ஆயினும், அதை வாய்வழி உமிழ்தலே வாய்மையாகும்!

பாண்டவர்கள் வனவாசம் புரிகையில் ஒருநாள் அசுரப் பசி; அடவி பூராவும் அலைந்தும் ஆகாரம் கிடைக்கவில்லை!ஒரே ஒரு மரத்தில் ஒரே ஒரு கனி, கிளையில் தொங்குவதைக் கண்டதும் - அதை உண்டு அனைவரும் ஓரளவு பசியாறலாம் என நினைத்து -யுதிஷ்டிரன், அதைப் பறிக்க யத்தனிக்கையில் -கண்ணன் வந்து தடுக்கிறான் - அந்தக் கனி ஆர் கைக்கும் அகப்படாது என்று!  'இத்துணை காலம் - உங்கள் இதயத்தின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் ஆசையை - நாகரிகம் கருதி வெளியே சொல்லாதிருக்கும் உண்மையை -எவர் உள்ளது உள்ளபடியே உரைக்கிறாரோ, அவருக்கே இந்தக் கனி கிட்டும்!’ என்கிறான் தேவகி மைந்தன்!

உள்ளத்தில் உள்ளதை உதட்டு வழி உமிழ ஒருவருக்கும் துணிவில்லாதபோது -ஐவரின் பத்தினியான பாஞ்சாலி - தன் உள்ளத்தில் வெகு காலமாக ஒளித்துவைத்திருக்கும் ஆசையைக் கூச்சமின்றிக் கூறுகிறாள்; கனி, அவள் கையில் விழுகிறது!'ஐவரின் மனைவியாய் இருந்தாலும், அந்தக் கர்ணனோடு ஒருநாள், பள்ளியறை புக வேண்டும் என்பதுதான் -என் நெடுநாள் ஏக்கம்!’  இப்படிச் சொன்ன, துரோபதியைத் தான் -போற்றப்பட வேண்டிய பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியாக, ஒரு வடமொழி ஸ்லோகம் வந்திக்கிறது!

'பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம்
மஹாபாதக நாசனம் -
அஹல்யா த்ரௌபதீசைவ
தாரா ஸீதா மண்டோதரீ!’

- சுழலும்...
நன்றி:- ஆனந்த விகடன்.