சண்டே இண்டியனில் வெளிவந்த இயக்குனர் அனுராக் காஷ்யபின் பேட்டி

அருமை நண்பர்களே!!!,சண்டே இண்டியனில் வெளிவந்த இயக்குனர் அனுராக் காஷ்யபின் முக்கியமான பேட்டி, அவரின் படங்கள் உருவாகும் சூழலை, இவின் மாற்று சினிமாக்கள் உருவாக்கும் போக்கை புரிந்து  கொள்ள உதவும். 

‘‘மக்கள் ரசிக்கும்வரை முயற்சிப்பேன்" ஸ்பிரிஹா ஸ்ரீவஸ்தவா | Issue Dated: ஜூன் 10, 2012 |நன்றி சண்டே இண்டியன்

இந்திப் பட இளம் இயக்குநர் அனுராக் காஷ்யப், தன் படங்களின் நவீன அணுகுமுறைகள், கதைகள் மூலம் தூசு படிந்த இந்திய மனச்சாட்சிகளை உலுக்குபவர். அவரது புதிய படம் ‘கேங்க்ஸ் ஆப் வாசிபூர்’ வெளிவர இருக்கிறது. இந்தப் பேட்டியில் அனுராக் தன் இயக்கம், குடியிலிருந்து மீண்டது உள்ளிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

உங்களது ப்ளாக் ஃப்ரைடே, குலால், தேவ் டி அல்லது நோ ஸ்மோக்கிங் என அனைத்துப் படங்களுமே பிரச்னைகளை சமாளிப்பது குறித்த படங்கள்.விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக நீங்கள் படம் எடுக்கிறீர்களா?
இல்லை. அவை எனக்கு ஆர்வமூட்டுகின்றன. பேசத் தகுதியான பிரச்னைகளைப் பற்றி நான் படங்கள் எடுக்கிறேன். பிரம்மாண்டமான முறையில் உண்மையான வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத  ஜாலங்கள் காட்டும் சினிமாக்களை என்னால் ரசிக்க முடியும். ஆனால் என்னால் அந்த சினிமாவை எடுக்கமுடியாது. ஏனெனில் அதுபோன்ற திரைப்படங்களை எடுக்கும் திறன் என்னிடம் இல்லை.

டிஎன்ஏ பத்திரிகை வெளியிட்ட 50 முக்கியமான இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளீர்கள். இந்த இடத்தை அடைவதற்கு உதவிய, தாக்கம் செலுத்திய நபர்களைப் பற்றி கூறுங்கள்?
ராம்கோபால் வர்மாவைக் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அவர் என்னை நிறைய பாதித்திருக்கிறார். இன்னொருவர் அதிகம் வெளியில் தெரியவராத ராபர்ட் ரோட்ரிக்ஸ். அவர் தனது முதல் படத்தில் எடுத்த கதை  மிகவும் வித்தியாசமானது. அதற்கு அவர் ஆய்வக எலியாக தன்னை மாற்றி பல சோதனைகளுக்கு உள்ளாக்கிக்கொண்டார். ஒரு படத்தை தனது வழியிலேயே சுயமாக நின்றுதான் உருவாக்க வேண்டும் என்பதை அவர்தான் உணரவைத்தார். இன்னொரு பெரிய தாக்கம் திருபாய் அம்பானி. நான் அவர் கதையைப் படித்திருக்கிறேன். குரு படத்திலும் பணியாற்றினேன். அவர் எந்த உதவியும் இல்லாமல் போராடியவர். பின்வாங்காமல் இருந்தவர்.

திரைத்துறைக்கு வரும்போது உங்களுக்கும் காட்பாதர் என்று யாரும் இங்கே இல்லை. நீங்களும் கடுமையாகப் போராடியே வந்துள்ளீர்கள். உங்கள் போராட்டம் நிறைந்த வாழ்க்கையில் கடுமையான காலகட்டம் எது?
பிறர் நினைப்பதுபோல அத்தனை கடினமானதல்ல எனது போராட்டம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று உள்மனம் சொல்லிவிட்டால், நீங்கள் அதை நோக்கிச் சென்று அதைச் செய்வீர்கள். எனது போராட்டம் என்று பிறர் கூறுவதை நான் உண்மையில் போராட்டம் என்றே அழைக்கமாட்டேன். இவற்றை எல்லாம் செய்தபோது நான் குஷியையே அடைகிறேன். பாஞ்ச் படம் வெளியீட்டின்போதுதான் கடுமையான சூழ்நிலை. நான் முதலில் இயக்கிய திரைப்படமான அது வெளிவருவதற்குத் திணறியது. அதைவிட கடுமையான காலகட்டம் எதுவெனில் எனது திருமணப் பிரிவு தான்.

எல்லாமே குழப்பமாக இருந்த அந்த காலகட்டத்தில் திரைப்படக் கனவே வேண்டாம் என்று தோன்றியதா?
அந்த காலகட்டம் சற்று நீளமானது. ஆனால் எனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. சினிமா செய்வதை விட்டுவிட்டு எனக்கு என்ன செய்யத் தெரியும்? இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்.
பாஞ்ச், தணிக்கைக்குழுவினரிடம் மாட்டிக்கொண்டது. ஒரு சினிமா இயக்குநராக, இதுபோன்ற ஒரு கலாசார கண்காணிப்பு அமைப்பு நமக்கு அவசியமா? ஒரு படத்தை பார்ப்பது தொடர்பாக மக்கள் தானே முடிவெடுக்கவேண்டும்?
நமது சமூக அமைப்பு மற்றும் பார்வையாளர்களிடம்தான் பிரச்னையுள்ளது என்று எண்ணுகிறேன். அது தணிக்கைத் துறையின் பிரச்னை அல்ல. தணிக்கைக் குழுவினரை நெருங்கிப் பார்த்தபோது அவர்களிடம் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை உணர்ந்தேன். தணிக்கைத் துறைக்கு தன்னாட்சி கொடுக்காத அமைப்பால் அவர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர். பிராணிகள் நல வாரியம், தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் அமைப்புகள், சுகாதார அமைச்சகம் என எல்லா இடத்திலிருந்தும் அவர்களுக்கு அழுத்தங்கள் உள்ளன. தணிக்கைத் துறையை யாரும் சுதந்தரமாகப் பணியாற்ற விடுவதில்லை. மக்களிடமிருந்தும் அவர்களுக்கு அழுத்தங்கள் உள்ளன. உங்களுக்கு ஒரு படம் பிடிக்கவில்லையெனில் நீதிமன்றம் போகலாம். ஆனால் இங்கோ, போராடத் தொடங்கிவிடுகின்றனர். ஒருகட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக அது மாறிவிடுகிறது. கடைசியில் பழி, தணிக்கைத் துறையினர்மீது போடப்படுகிறது. ஓர் அமைப்பாக மக்களிடம்தான் பிரச்னை இருக்கிறது.
 
காட்சிகளை வெட்டாமலோ, தடை விதிக்காமலோ ஏ சான்றிதழ் கொடுத்துவிடுவது சரியான செயலாக உள்ளதா?
அடல்ட் திரைப்படம் என்பதற்கான அர்த்தத்தை இன்னும் பலர் முழுமையாகப் புரிந்துகொள்ள வில்லை. முதலில் நிறைய பேர் சினிமாத்துறையில் ஈடுபடுவது மோசம் என்ற பழைய மனநிலையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை. சினிமாவுக்குள் நுழைபவர்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்வார்கள் என்றே இன்னும் பலர் எண்ணுகின்றனர். அதேபோலத் தான் ஏ படம் என்பதைப் பற்றியும் அசிங்கமானது, மோசமானது, செக்ஸ் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றெல்லாம் நினைக்கின்றனர். ஏ படத்தைப் பார்ப்பது குறிப்பாக குழந்தைகளைப் பாழாக்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஒரு தீவிரமான அரசியல் படத்திற்குக் கூட ஏ சான்றிதழ் தரலாம். ஆனால் ஏ படங்களை நம் மக்கள் ஒழுக்கத்தோடு மட்டுமே தொடர்புகொண்டு பார்க்கின்றனர்.

தேவ் டி படம் மிகத் தைரியமாக எடுக்கப்பட்ட படம். தணிக்கைக் குழுவினர் அந்தப் படத்தை வெளியிடமாட்டார்கள் என்று பயந்தீர்களா? அதன் காட்சிகளை வெட்டிவிடுவார்கள் என்று எப்போதாவது நினைத்தீர்களா?
இல்லை. அப்படி நினைத்திருந்தால் என்னால் படம் செய்யமுடிந்திருக்காது. பார்வையாளர்கள் விரும்புவார்களா, விரும்பமாட்டார்களா என்று யோசித்துக்கொண்டு இருந்தால் சினிமாவில் ஈடுபடுவது சாத்தியம் அல்ல. நான் என்ன நினைக்கி றேனோ, அதை உருவாக்கும் சுதந்தரத்துடன் எனது படத்தை உருவாக்குகிறேன். அதைப் பார்க்கும் ரசனையை பார்வையாளர்கள் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் அதை ரசிக்கும்வரை நான் பொறுமையாக முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.

அபய் மற்றும் கல்கியை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?
அபய் அந்தப் படத்தின் பகுதியாக ஏற்கெனவே முடிவு செய்யப் பட்டிருந்தார். நாங்கள் சேர்ந்து குடித்துக்கொண்டிருந்தபோதே அது முடிவாகிவிட்டது. நவீனகாலச் சூழலில் தேவதாஸ் கதையைச் செய்வது பற்றிய யோசனையோடு அவர் வந்தார். அபய்யை எனக்கு படம் எடுப்பதற்கு முன்பே தெரியும். கல்கி நடிகர்கள் தேர்வின்போது வந்தார். அவரை எங்கள் தயாரிப்பாளர்கள் அழைத்து வந்தனர். அவரை நான் படத்துக்குத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார்கள். நான் அத்தனை நிச்சயமாக இல்லை. ஆனால் பிறகு, எல்லாமே மாறியது...எல்லாம்(சிரிக்கிறார்)

உங்கள் படங்களுக்கான கருவை எப்படிப் பிடிப்பீர்கள்?
எங்கிருந்தெல்லாமோ வரும். புத்தகங்கள், பிறரின் வாழ்க்கை, நிகழ்வுகளை வாசிப்பது, மக்களின் நெருக்கடிகள், போராட்டங்கள் என்று படிக்கும்போதெல்லாம் என்னுடைய போராட்டம் என்பது ஒன்றுமே இல்லை என்று உணர்வேன். என்னைவிட எத்தனையெத்தனை நெருக்கடிகளை இவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை உணரும்போது பெரிய புரிதல் எனக்கு வரும். அதுதான் என்னைத் தூண்டி என்னை மாறிய நபராக உணரவைக்கும்.

படத்தை இயக்கும்போது படைப்புரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதா?
எனது முதல் படமான பாஞ்சில் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. பிறகு அப்படியான எதுவும் இல்லை. நான் என்ன செய்கிறேன் என்று அப்போது பலருக்கும் விளங்கவில்லை. இவன் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறான் என்றுதான் எல்லாரும் நினைத்தனர்.

திரைப்பட விமர்சனம் உங்களைப் பொறுத்தவரை முக்கியமா?
என் படத்தில் நட்சத்திரங்கள் இல்லை. என் படம் மட்டுமே நட்சத்திரமாக இருக்கமுடியும். விமர்சகர்கள் பாராட்டினால்தான் பார்வையாளர்கள் அரங்குக்கு வந்து படம் பார்ப்பார்கள். இல்லையெனில் பார்க்கமாட்டார்கள். யாராவது ஒருவரின் அபிப்ராயத்தைப் படிக்காமல் படம் பார்க்கப் போவதில்லை. அதனால் விமர்சகர்கள் முக்கியமானவர்கள்தான்.

உங்கள் படங்களில் பெரிய நட்சத்திரங்கள் இல்லை. ஏன்?
உண்மைத் தன்மை இல்லாத படங்களை எனக்கு எடுக்கத் தெரியாது. நான் எதார்த்த படங்களையே எடுக்க விரும்புகிறேன். உதாரணத்திற்கு, அசலான இடங்களிலேயே படங்கள்  எடுப்பதை விரும்புகிறேன். பெரிய நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு என்னால் தெருக்களில் படமெடுக்க முடியாது. அது ஒரு பிரச்னையாக இருக்கும். அவர்களால் கூட்டம் ஏற்படும். அதனால் படப்பிடிப்பு சிக்கலாகும்.

போதைப்பொருட்கள் மற்றும் குடியின் பிடியில் சிக்கி மீண்டவர் நீங்கள். நிறைய இளைஞர்கள் வாழ்க்கையின் விரக்தியைப் போக்க இதற்கு அடிமையாகின்றனர். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நிறைய பேர் என்னதான் இருக்கிறது. பார்க்கலாம் என்ற குறுகுறுப்புக்காக இவற்றை நாடுகின்றனர். நீங்கள் மன அழுத்தத்தோடு இருந்தால் அதிலிருந்து விலகுவதற்கு இந்த போதை நிச்சயத் தீர்வு அல்ல. தற்போது நான் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என்னை அது எந்த அளவுக்குச் சீரழித் துள்ளது என்று தெரியும். அதனால் இந்தப் போதைகளை நான் யாருக்கும் பரிந்துரைக்கமாட்டேன்.