பேக்ஸ்டர் [ Baxter] [1989][15+][ஃப்ரான்ஸ்]


ன்று பேக்ஸ்டர் என்னும் ஃப்ரென்ச்சு டெரர் க்ளாஸிக் படம் பார்த்தேன், ஒண்ணேகால் மணி நேரம் விருட்டென பறக்கிறது,அவ்வளவு நேர்த்தி, பேக்ஸ்டர்  என்னு புல் டெர்ரியர் வகை பொசசிவ் நாயின் கதை தான் படம், தொய்வே இல்லாத திரைக்கதை அடுத்து என்ன நடக்கும்? என ஆவலைக்கூட்டி நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க வைக்கிறது, முதலில் புல் டெர்ரியர் வகை நாயைப் பற்றி பார்ப்போம், 

புல் டெர்ரியர் வகை நாய்கள் வேட்டைக்கென்றே வளர்க்கப்படுபவை,இதன் முகம் மாட்டின் முகம் போல முட்டையாக இருக்கும், கண்கள் முக்கோணமாக இருக்கும்,அநேகம் வெந்நிறமாக, கருப்பு திட்டுகள் கலந்தும்,கலப்பினத்தின் மூலம் இப்போது ப்ரவுன் நிறத்திலும் புல் டெர்ரியர்கள் உள்ளன,மிகவும் உயர்ந்த ரக நாய்கள் இவை, இதை வளர்க்கும் எஜமானர்கள் தனக்கு கட்டளையிட தகுதி இருந்தால் மட்டுமே ஒட்டுதலுடன் இருக்குமாம், இதற்கு குழந்தைகளை அதிகம் பிடிக்காது, எலிகள் அருகே ஓடினால் காலி, பூனை, குருவி,புறா என எதையுமே விட்டுவைக்காது,

வயதானவர்கள் வளர்க்க உசிதமான ரகம் அல்ல,இளம் ஜோடிகளிடம் இவை பிரியமாக இருக்குமாம்,மிகவும் பொசசிவ் குணம் கொண்டதால் இவை வசிக்கும் வீடுகளில் இன்னொரு ஆண் புல் டெரியரையோ அல்லது வேறு ரக நாய்களையோ வளர்ப்பது கூடாது என்கின்றனர்,சரி!!! படத்துக்குள் போவோம், இந்த புல் டெரியர் நாயின் பொதுவான கேரக்டர் ஸ்கெட்சை அப்படியே உள்வாங்கி திரைக்கதை அமைத்திருக்கிறார் ஃப்ரென்சு சினிமா இயக்குனர்’’Jérôme Boivin’’.இப்படம் 1989ல் வெளிவந்ததாம்,

டாரெண்டில் எங்கும் கிடைக்காத நிலையில் யூட்யூபில் முழுப்படமும் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்க ஆவலோடு பார்த்தேன்,மிக அருமையான படம்.நாய் பற்றிய கதை என்று குடும்பத்துடன் பார்க்க உகந்ததல்ல,இதே பெயரில் ஒரு காமெடி ஆங்கில படமும் உள்ளதால் நண்பர்கள் கவனமாக தேடிப்பார்க்கவும்,ஒரு நல்ல படம் இருந்தால் சனியன் அதே பேரில் இன்னொரு மொக்கைப்படங்கள் இருப்பது இயற்கை,ஏற்கனவே I AM [2010]என்றொரு அற்புதமான காம்போசிட் லிங்குஸ்டிக் படம் ஓநிர் இயக்கியது, அதை இணையத்தில் தேடினால், கண்ட கருமாந்திரங்கள் தான் கிடைக்கும், சப்டைட்டிலுக்கும் அதே கதிதான், இதே பேரில் சுமார் 5 படங்கள் வந்திருக்கிறது. இனி படம் எடுப்பவர்கள் இதையும் யோசிக்க வேண்டும் போல!!!

படத்தின் முதல் பத்து வினாடிக்குள்ளேயே பேக்ஸ்டரின் வாய்ஸ் ஓவரில் கதை துவங்கிவிடுகிறது, ஃப்ரான்ஸில் ஒரு குடியிருப்புப் பகுதியில் தன் 70களில் இருக்கும் மார்கரெட்டுக்கு பிறந்த நாள் பரிசாக தன் மகள் மற்றும் மாப்பிள்ளை மூலம் பேக்ஸ்டர்  பரிசாகத் தரப்படுகிறது,

மார்கரெட் கிழவி மிகுந்த சுயநலமி என பேக்ஸ்டர் கண்டுபிடித்து விடுகிறது, அவளின் உடல் நறுமணம் பேக்ஸ்டருக்கு பிடிப்பதில்லை, பேக்ஸ்டர் அரைமனதோடு மார்கரெட்டுடன் பழகுகிறது, வேறு வழியே இல்லை, பேக்ஸ்டர் இயற்கையிலேயே காம குரோதம் நிறைந்தவன், கிழவியின் உள் ஆடையை முகர்ந்து பார்த்து தன்னைத் தேற்றிக்கொள்கிறது, மார்கரெட் எப்போதும் நாய் முன்பாக ஆடை மாற்றுவதோ குளிப்பதோ கிடையாது ஆதலாலும் மிகவும் கோபத்தில் இருக்கிறது பேக்ஸ்டர், 

அது ஓடிச்சென்று மார்கரெட்டை நக்கினால் மார்கரெட் அருவருப்படைவதால் மேலும் கோபம் வருகிறது,ஒரு நாள் கிழவியை நக்க முயல்,அதை அவள் செருப்பால் அடிக்கிறாள்,அவள் பேக்ஸ்டரின் மேல் தூக்கிபோட்ட செருப்பை அது கவ்விக்கொண்டு வந்து தருகிறது,முதலில் பேக்ஸ்டரை பிடிக்காமல் இருந்த மார்கரெட்,அதன் எஜமானனைக் கவருகிற அந்த நடிப்பில் ஏமாந்து போகிறாள்,தனியாக இருக்கும் தனக்கு பேக்ஸ்டர் தான் இனி ஆதூர துணை என்று அதை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்கிறாள்,தான் தூங்கும் போது பேக்ஸ்டரும் தூங்கவேண்டும் என்கிறாள்,

சாப்பிடும் போதும், அப்படியே, வெளியே கூட்டிப்போவதோ, தோட்டத்தில் நடமாட விடுவதோ மிகவும் அரிது,பேக்ஸ்டருக்கு பார்வை, செவித்திறன், முகரும் திறன் எல்லாமே உச்சத்தில், அது மார்கரெட்டிடமிருந்து இயற்கையாக தப்ப தருணம் பார்க்கிறது, இப்போது எதிர்வீட்டில் இளம் ஜோடிகள் குடி வருகின்றனர்,அந்த ஜோடிகள் தன் பெட்ரூமில் விளக்கை அணைத்து விட்டு அடிக்கும் கூத்தைக் கண்டும் கேட்டும் அக மகிழ்ந்திருக்கிறது பேக்ஸ்டர், எப்படியாவது அவர்களையே எஜமானராக அடைய ஆசை கொள்கிறது,

அன்றும் அப்படியே ஓசி காஜு அடித்து பேக்ஸ்டர் நைட் ஷோ பார்க்கையில், கிழவி பேக்ஸ்டரை கீழே தூங்க அழைக்க,பேக்ஸ்டர் வரவில்லை,கிழவி தன் கேரக்டரையே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே? என்று மனதுக்குள் கோபம் கொண்டாலும்,கிழவி கீழே விழும்படி போக்கு காட்டுகிறது ,கிழவி கீழே விழும் தருவாயில் அதிக சேதாரம் ஆகா வண்ணம் கிழவின் கவுனை பிடித்து இழுத்து காப்பாற்றியும் விடுகிறது,இப்போது பேக்ஸ்டருக்கு செம லவ் டார்ச்சர் கிழவியிடமிருந்து, பேக்ஸ்டருக்கு தன் கிழவி எங்கே தன் கற்பை சூறையாடிவிடுவாளோ? என்ற பயமும் சேர்ந்து கொள்ள,இபோது கிழவியை விபத்தாக கொல்ல நேரம் பார்க்கிறது,

மார்கரேட்டுடன் அடிக்கடி ஒரு குடுகுடு கிழம் சோசியல் கிளப்பில் வந்து சீட்டு ஆடுகிறார்,அவள் தன் மனைவி இருந்த போதும் அவள் இறந்த பின்னரும் கூட மார்கரெட்டிடம் பைத்தியமாக இருக்கிறார்,அவரின் மகளுடன் வசிக்கும் அவர் எந்நேரமும் மார்கரெட்டை கவனம் எடுத்து நல்வார்த்தைகளாலே கழுவி குளிப்பாட்டுகிறார்,வழிகிறார்,இதனால் மார்கரெட்டுக்கு மிகவும் அவமானமாகவும், தொந்தரவாகவும் இருக்கிறது, தன்னிடம் அப்படி என்ன இருக்கிறது?, இக்கிழம் விடாமல் சுற்ற என்று கண்ணாடியில் அடிக்கடி சோதித்துக்கொள்கிறாள், தன்னம்பிக்கை கொள்கிறாள், எந்த 40 வயதுக்காரி தன்னை பார்த்தாலும் நிச்சயம் பொறாமை கொள்வாள் என்று இருமாந்திருக்கிறாள், 

பேக்ஸ்டருக்கு பொறுமை எல்லை மீறுகிறது,அன்று அப்படித்தான் தன் குளியல் அறைக்குள் பேக்ஸ்டரை கூட்டிச் சென்ற கிழவி,பேக்ஸ்டரின் ஆணுறுப்பை சைட் அடிக்கை,பேக்ஸ்டருக்கு எப்படி தப்பிப்போம்? என்னும் கவலை!!!கிழவி வெடுக்கென்று பேக்ஸ்டரை நீருக்குள் இழுக்க,பேக்ஸ்டர் விழுந்தடித்துக்கொண்டு மாடிக்கு ஓடி தப்பிக்கிறது,கிழவி அடிக்கடி பேக்ஸ்டர் மாடிக்கு போவதைத் தடுக்க,சிறு மரப்பலகைகள் கொண்டு அந்த ஸ்பைரல் வடிவ மாடிப்படியை மூடுகிறாள்,அதெல்லாம் பேக்ஸ்டருக்கு ஒரு பொருட்டா?ஒரே தவ்வு தவ்வி மாடிக்கு போய் விடுகிறது,பேக்ஸ்டருக்கு இனி அவகாசம் இல்லை,தன் ஆயுள் வெறும் 15 வருடம் தான்,தன் பொன்னான இளமைக்காலத்தை இந்த கிழவியுடன் கழிக்க விருப்பமின்றி இருக்கிறது.

அன்று கிழவி பேக்ஸ்டரை மாடியில் வந்து தேட முயல ,பேக்ஸ்டர் கிழவியின் மீது வலிக்காமல் பாய்கிறது, கிழவி படிகளில் உருண்டு உயிரை விடுகிறாள். கிழவியின் ஒருதலைக் காதலர் கிழவி இரண்டு நாளாக எங்கும் வராமல் இருக்க, வீட்டை சுற்றி சுற்றி வந்து வேவு பார்க்கிறார், பெல் அடிக்கிறார், கதவை தட்டுகிறார்,டெலிபோனும் செய்கிறார்,ம்ஹூம்,இப்போது வீட்டின் கண்ணாடிக்கதவை உடைக்கிறார்,தாழ்ப்பாளை நீக்கியது தான் தாமதம்,பேக்ஸ்டர் புயல் போல வெளியேறி எதிர் வீட்டு படுக்கை அறைக்குள் பிரவேசிக்கிறது,

அங்கே தன் புது எஜமானர்களை அவர்கள் புணர்ந்து கொண்டிருக்கையில் இன்ஸ்டண்டாக தேர்வு செய்கிறது, தன் கணவனைக்கூட அவள் அப்படி கொஞ்சியிருக்க மாட்டாள், பேக்ஸ்டர் காட்டில் அடை மழை,தொலைவில் இருந்து பார்த்த காட்சிகளை 3டி கண்ணாடி போட்டு பார்க்கிற சுகம், பாக்ஸ்டரின் பொற்காலம் என்றே நினைக்கிறது, இப்போது பேக்ஸ்டரின் உரிமம் இந்த இளம் ஜோடிகளிடம் தரப்படுகிறது, இப்போது அந்த இளம் பெண் சூல் கொள்கிறாள், கணவன் இதற்கென்ன அவசரம்? என்கிறான்,ஆனால் அவளுக்கு அது தேவையாக இருக்கிறது, அவளின் பேறு காலம் முழுக்க பேக்ஸ்டருக்கு மிகவும் அவஸ்தையாக உள்ளது, அவளின் மேனி பேறுக்காலத்தில் துவண்டு , பொலிவிழக்க பேக்ஸ்டர் அதை விரும்பவில்லை, அவளின் மீதிருந்து இரண்டு உடல்களில் நறுமணம் வீசுவது பேக்ஸ்டருக்கு அவஸ்தையாக உள்ளது,

 அந்த இளம் கணவன் தன் தோட்டத்தில் புதைந்து போயிருந்த ஃபவுண்டனை கிளறி மேலே கொண்டு வர பேக்ஸ்டருக்கு கொண்டாட்டம், மண்வாசனை,புழுக்கள்,பூச்சிகள் என்றால் பேக்ஸ்டருக்கு கொண்டாட்டம், அவற்றை வதைத்து குதியாட்டம் போடலாம் அல்லவா?!!! பேக்ஸ்டரின் வாழ்வில் மிகக் கொடுமையான காலகட்டம் வந்தே விடுகிறது 3 நாட்களாக அது கேரேஜின் இருட்டுக்குள்ளேயே இருந்திருக்கிறது, அதன் கிண்ணத்தில் தண்ணீர் கூட மாற்றப்படவில்லை,என்ன கருமம் நேர்ந்தது? என குழம்பியிருந்த பேக்ஸ்டரை அந்த கணவன் வந்து தன் படுக்கை அறைக்கு அழைத்துசெல்ல அங்கே தொட்டிலில் பல் இல்லாத தலை மொட்டையான பிடித்த மாவு போன்ற ஒரு ஜந்துவை பெருமையாக இருவரும் கொஞ்சுவதை பேக்ஸ்டர் பார்த்துவிட்டு,இருட்டில் கொழுக்கட்டை பிடித்து விட்டு பெருமையைப் பார் என கருவுகிறது,

 தன் இடம் போச்சு என பொறுமுகிறது, அக்குழந்தை வளர வளர,பேக்ஸ்டரின் மீதான அந்த ஜோடிகளின் அன்பு தேய்கிறது,அக்குழந்தையை மெல்ல விபத்து நிகழ்த்தி தீர்த்துக்கட்ட நேரம் பார்க்கிறது பேக்ஸ்டர்,குழந்தை புல்வெளியில் விளையாட,அந்நேரம் பார்த்து ஆபீஸுக்கு கிளம்பிய கணவனை ,நீ ஆபிஸில் ஆணி பிடுங்க வேண்டாம்,என்னைக்கவனி என்று காலையிலேயே படுக்கை அறைக்குள் அழைத்துபோகிறாள் மனைவி,சரியாக இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி பேக்ஸ்டர் தவழும் குழந்தையை  நீர் நிலைக்குள் தள்ளிவிட்டு உதவி உதவி எனக் குலைக்கவும் செய்கிறது,அந்த ஜோடிகள் போட்டது போட்டபடி வந்து குழந்தையை தூக்க,அது சரியான நேரமாக அமைந்தபடியால் குழந்தை பிழைக்கிறது,அட வட போச்சே என பம்முகிறது பேக்ஸ்டர்,

கணவன் பேக்ஸ்டரை நன்றி கூர்ந்திருக்க,மனைவிக்கு மட்டும் பொறி தட்டுகிறது,பேக்ஸ்டருக்கு இப்போது அடுத்த எஜமானர் தயார்,இந்த எஜமானன் ஒரு சிறுவன்,இவன் ஒரு வளரும் சோஸியோ பாத்,ஹிட்லரின் ஃபனாடிக்கும் கூட,த்ரில்லுக்காக தன்னையே தினமும் சுய சேதம் செய்து கொள்ளும் ரகம்,பேக்ஸ்டருக்கெல்லாம் பாட்டன் குரூரத்தில்,அடிக்கடி ஹிட்லரை அவளின் காதலி ஈவாவை,ஹிட்லர் வளர்த்த ஜெர்மன் ஷெபர்டு நாயை,4 சிறு குட்டிகளை ,அவர் உயிர் விட்ட பங்கரை என்று தேடி தேடி படிப்பான்,ஹிட்லரின் ஆவியே இவனுள்ளே புகுந்து விட்டதோ என எண்ணும் படியான ஈடுபாடு,இவனின் வினோத படிப்பார்வம்,ஈடுபாடு,எல்லாம் பெற்றோருக்கு கவலை உண்டு பண்ணுகிறது, 

அப்பா மகன் மீது பாசம் வைத்து அவனிடம் நிறைய பேசத்துவங்குகிறார்,அவனை வெளியே கூட்டிப்போகிறார்,அன்று அப்படித்தான் உனக்கு அப்பா ஒரு பரிசு தருகிறேன் என்று பேக்ஸ்டரின் கேரேஜுக்குள் கூட்டிப்போகிறார்,பேக்ஸ்டர் இப்போது புது வீட்டுக்கு கிளம்பத் தயாராகிறான்,பேக்ஸ்டர் எதிர்பார்த்தது போல சிறுவன் கமாண்டிங்காக இருக்கவே அவனுக்கு அடிபணிகிறான் பேக்ஸ்டர்,அவன் வேகமாக சைக்கிள் மிதிக்க பேக்ஸ்டர் கூடவே ஆட்டி ஆட்டி ஓடுகிறான்,தசைகள் இன்னும் வலுவடைகின்றன பேக்ஸ்டருக்கு,

சிறுவன் ஊருக்கு ஒதுக்குபுறமாயிருக்கும் குப்பை மேட்டில் ஹிட்லரின் பங்கர் போலவே கிடைத்த பொருட்களைக் கொண்டு நிறுவ ஆரம்பிக்கிறான்,அங்கே வைத்து பேக்ஸ்டருக்கு மனித உருவ பொம்மைகளை கட்டி அதை  துரத்தவும் தாக்கவும் பேக்ஸ்டருக்கு ஆணையிட்டு வேலை வாங்குகிறான்.பேக்ஸ்டர் என்ன தான் சொன்னபடி கேட்டாலும் அதன் மீது அன்பு கொள்ள மாட்டேன் என்கிறான்,ஹிட்லரின் சித்தாந்தத்தை பின்பற்றுபவனாதலால் ஹிட்லர் சாகும் தருவாயில் தன் ஜெர்மன் ஷெபர்டு நாய்க்கும்,4 குட்டிகளுக்கும் சயனைடு புகட்டியதை மனதில் வைத்து பேக்ஸ்டரை வைத்து அதே போல பரிசோதனை நடத்த எண்ணுகிறான்.

இப்போது பேக்ஸ்டர் சிறுவன் தன்னை மதிக்க வைக்க திட்டம் தீட்டுகிறது,அந்த குப்பை மேட்டுக்கு ஒரு கருப்பு சடை நாய் வந்து இதனுடன் மோத வர,அதை கடித்தே கொன்று விடுகிறது பேக்ஸ்டர்,இது சிறுவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது,

பேக்ஸ்டரைப் பற்றி சிறுவன் இப்போது ஆராய ஆரம்பிக்கிறான்,இறந்து போன கிழவி மார்கரேட்டின் வீட்டுக்குள் கதவை உடைத்து நுழைகிறான்,அங்கே இருந்து எதிர் வீட்டின் இளம் ஜோடிகள் அடிக்கும் கூத்தை சன்னல் வழியே வேடிக்கை பார்த்து குரூர இன்பம் துய்க்கிறான்,பேக்ஸ்டர் அவர்களிடம் செல்லமாக சிலகாலம் இருந்ததால் பேக்ஸ்டர் மீது ஒரு வித பொறாமை கூட வருகிறது,தானும் அங்கே அவர்கள் வீட்டுக்குள் செல்லமாக நுழைய ஏக்கம் கொள்கிறான்,தருணம் பார்க்கிறான்.

இந்நிலையில் சிறுவனுக்கு  கூட படிக்கும் மாணவி பள்ளி பேருந்தில் வைத்து பழக்கமாகிறாள்,அவளின் அம்மா இவளையும் அவளின் குடிகார அப்பாவையும் விட்டு பிரிந்து சென்றிருக்கிறாள்,அவளின் நினைவாக இவளிடம் ஒரு ஸ்பானியல் ரக பெண் நாய் இருக்கிறது,அதை நடைபயிற்சிக்கு சிறுவனுடன் கூட்டி வருகிறாள்,அப்போது பேக்ஸ்டருடன் அந்த ஸ்பேனியல் ரக நாய் புணர விடப்படுகிறது,பேக்ஸ்டருக்கு தீராத ஆத்திரம்,ஸ்பேனியலை அதற்கு பிடிக்கவே இல்லை,ஆனாலும் வேறு வழியில்லை,இதை விட்டால் வேறு பெண் வாசனையே கிடைகாமலும் கூட போகலாமென்று,தன் இனத்தை விட தாழ்ந்த ஸ்பேனியலை வேண்டா வெறுப்பாக புணறுகிறது பேக்ஸ்டர்.

இப்போது சிறுவனின் நண்பன் ஒருவன் அந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குப்பை மேட்டுக்கு வந்து அந்த பங்கரையும் ஆராய்கிறான்,அங்கே உள்ளே அடைக்கப்பட்டிருந்த பேக்ஸ்டர் அந்த பையனை துரத்தி கடிக்க எத்தனிக்கிறது,மேலே இருந்து சிறுவன் பேக்ஸ்ட்ரை நோக்கி அவனை கொல்,விடாதே!!! என்று ஹிட்லரை போல ஆணையிட,பேக்ஸ்டர் காரணமில்லாமல்,தனக்கு விருப்பமில்லாமல் தான் யாரையும் கொல்வதில்லை என்னும் கொள்கைக்கு ஏற்ப அவனின் கட்டளைக்கு அடிபணிய மறுக்க,சிறுவன் பேக்ஸ்டரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டியவன்,அதை பெல்டால் விலகி நின்று விளாசுகிறான்,

இப்போது ஸ்பேனியல் நாய்க்கு பேறுகாலம் ,அது நான்கு குட்டிகளை பேக்ஸ்டரின் சாயலிலேயே ஈன்றிருக்கிறது,உடம்பில் இரண்டு விதமான வாசம் வீசும் அக்குட்டிகளை பேக்ஸ்டருக்கு பிடிக்கவுமில்லை என்றாலும் பிடிக்காமலுமில்லை,அந்த குட்டிகளை சிறுவனின் தோழி கலப்பினம் என்பதால் அப்பா விரும்பமாட்டார்,ஆகவே அவற்றை வெளியே கொண்டு விடப்போகிறேன் என்கிறாள்,சிறுவனுக்கு அந்த குட்டியின் மீது ஒரு வெறுப்பு கலந்த மோகம், இவளுக்கு அவன் மீது மோகம்,தன் மார்பகங்களின் மீது அவனின் கையை எடுத்து வைத்து ,உனக்கு பிடித்திருக்கிறதா? என்கிறாள்,

அவன் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை என கல் போல காணப்படுகிறான், இவள் அவனை முத்தமிட்டு நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்,நான் உடன் படுகிறேன்,ஒத்துழைக்கிறேன் என்று சொல்ல,அப்படி என்றால் வாயை மூடு என்று சொல்லிவிட்டு அவளை புணர்ந்து விட்டு நாய்க்குட்டி ஒன்றை வீட்டுக்குள் கொண்டு வருகிறான்,பேக்ஸ்டரை அவன் 3 நாட்களாக சோறு தண்ணீர் வெளிச்சம் ஏதுமின்றி கேரேஜிலேயே கட்டி வைத்திருக்கிறான்,இருந்தும் தன்னுடைய குட்டியை அவன் இங்கே தூக்கி வந்ததை மோப்பம் பிடிக்கிறது பேக்ஸ்டர்,அதை அவன் என்ன செய்வான் என அவனுடன் பழகிய நாட்களைக்கொண்டு கணிக்கிறது,

மறு நாள் சிறுவன் பள்ளிக்கு சென்ற நேரம் பார்த்து,அந்த குப்பை மேட்டுக்கு சென்று அந்த பங்கரில் சென்று,இவன் தன் குட்டியை கழுத்தை அறுத்து புதைத்த இடத்தை மோப்பம் பிடித்து நோண்டி கிளறுகிறது,அதை நோண்டி வெளியே கொண்டு போட்டு சிறுவனைப் பழிவாங்க கறுவுகிறது,இப்பொது வலிமையுள்ளது தான் மிஞ்சும்,சிறுவன் பலசாலி மூர்க்கன் தான் என்றாலும் பேக்ஸ்டர் ஒரு போக்கிரி மிருகம்,நீயா நானா?பார்க்கலாம் என்று நிமிர்ந்து நிற்கிறது,அதோ அங்கே சிறுவன் பெரிய இரும்பு சக்கரத்தை தூக்கி பேக்ஸ்டர் மீது போட எத்தனிக்கிறான்.

இனி என்ன ஆகும்?
பேக்ஸ்டர் சிறுவனைக் கொன்றதா?
சிறுவன் பேக்ஸ்டரைக் கொன்றானா?


படம் பாருங்கள்,அத்தனை விறுவிறுப்பான காட்சிகளை தவற விட்டுவிடாதீர்கள்,கல்ட் க்ளாஸிக் படங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் இது போன்றதொரு டார்க் ஹ்யூமரும்,ஹாரரும்,இதே போன்றதொரு குறும்பான டார்க் ஹ்யூமர் படம் என்றால் டின் ட்ரம்மை சொல்லலாம்,அப்படி ஒரு ஹிஸ்டாரிக்கல் வார் மேஜிக்கல் ரியாலிசம் படம் அது,அதில் சிறுவன் ஆஸ்கர் எப்படி நம்மை களிப்பூட்டினானோ இதில் பேக்ஸ்டர் அந்த வேலையைச் செய்கிறது,எத்தனை வருடம் போனாலும் அப்படி ஒரு ஃப்ரெஷ்னஸ் படத்தில் இருக்கும் குறையாது.
யூட்யூபில் உள்ள முழுப்படத்தின் காணொளிக்கான சுட்டி.