ஆமென். [Amen.][2002][ ஃப்ரான்ஸ்]

யக்குனர் காஸ்டா கவ்ராஸின் ஆமென் [ஃப்ரென்சு] படம்  இன்று மீண்டும் பார்த்தேன், யூத இனப்படுகொலைகளைப் பற்றி இதுவரை வெளிவந்த சுமார் 60 உலகப்படங்களில் மிகவும் முக்கியமான படம், இனப்படுகொலை பற்றி மிக  விரிவாக அலசுகிறது படம், இதே இயக்குனரின் EDEN IS WEST என்னும் தன் நாட்டினை முற்றிலும் தொலைத்து ஃப்ரான்ஸுக்குள்  சட்டவிரோதமாக குடிபெயர்ந்து அனுதினமும் செத்து செத்து பிழைக்கும் அகதியின் கதையையும் அவசியம் பாருங்கள்,

போர் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தினால் உலகெங்கிலும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து இன்னலுறும்  ஏழை மனிதனின் அவதியை நேரில் நாம் கண்ணுறுவது  போல் சித்தரித்திருப்பார், எந்த நாட்டின் அகதியையும் அதில் ஒருவர் பொருத்திப் பார்க்கலாம். இயக்குனரும் போரினால் ஃப்ரான்ஸுக்குள் புலம்பெயர்ந்த ஒரு அகதி என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா காட்சிகளின் மீடியம் என்னும் கூற்றுக்கேற்ப  முதல் காட்சியிலேயே ஜெனிவா நாட்டில் இயங்கிய லீக் ஆப் நேஷனின் , யூத இனப் படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தை நமக்குப் பரைசாற்றுகிறது படம். 1936 ஜெனிவா, ஸ்டீஃபன் லக்ஸ் என்னும் யூதர் ஒருவர் சபைக்குள்ளே அதிரடியாக நுழைகிறார், நாஜி ஆக்கிரமிப்பு போலந்தில் யூதமக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்படுகின்றனர் , இனியேனும் நடவடிக்கை எடுங்கள் நியாயமாரே!!!. என்னும் வாசகங்கள் கொண்ட காகிதங்களை சபையினரை நோக்கி வீசி எறிகிறார், உங்கள் இதயத்தை தொட எனக்கு வேறு வழி தெரியவில்லை, என்று தன் துப்பாக்கியால் நெஞ்சில் குறிவைத்து சுட்டுகொண்டு சரிகிறார், சபையினர் நிலைகுத்தி நிற்கின்றனர், ஸ்டீஃபன் லக்ஸ் பற்றி படிக்க ,பின்னர் படம் ஜெர்மானிய கத்தோலிக் மிஷனரியின் யூத இனப்படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தை நமக்கு மெல்ல பரைசாற்றுகிறது,

அடுத்ததாக ஹிட்லரின் ஆணையின் பேரில் ஜெர்மனி எங்கிலும் இருந்த ஊனமுற்றோர், மனநிலை குன்றியோர், பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் ஒன்று திரட்டப்பட்டு கருணைக்கொலை என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக அறையில் அடைத்து, கார்பன் மோனாக்ஸைடு வாயு உட்செலுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர், குடும்பத்தாருக்கு அவர்கள் உடல்கள் கூட தரப்படவில்லை,மரணச் சான்றிதழ் அறிக்கையும், சாம்பல் ஜாடியும் மட்டுமே தரப்படுகிறது, உலகப்போரில் அதிரடியாக போராடிவரும் ஜெர்மனி நாட்டின் உடனடி நலனுக்கும் உணவுப்பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்கும்  ஹிட்லரின் இந்த நடவடிக்கை மிக அவசியமானது என்று எல்லா சர்ச்சுகளிலும் வாராந்திரத் தொழுகையின் போது கத்தோலிக்க கிருஸ்துவ மிஷனரியினர் மூளைச்சலவையை செவ்வனே செய்கின்றனர், அதையும் மிக அருமையாக அலசுகிறது படம். பின்னர் நேசநாடுகள் அமெரிக்கா, ப்ரிட்டன், ஃப்ரான்ஸின், யூத இனப்படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தை நமக்கு காட்சிகளின் மூலமாகவும் வசனங்களின் மூலமாகவும் மெல்ல பறைசாற்றுகிறது,

நடப்பது இனப்படுகொலை எனத்தெரிந்தும் எங்கே நாம் எதிர்த்தால் ரோமாபுரியும் வாடிகனும் கையகப்படுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்படுமோ? என்று அஞ்சி எந்த முடிவுமே கடைசி வரை எடுக்காத போப் பியஸ் XII [Pope Pius XII] ன்  யூத இனப் படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தையும் பறைசாற்றுகிறது. இப்படி நுனி முதல் ஆணி வேர் வரை அலசிய படம் என்றால் இதுவாகத்தான் இருக்கும்,

கர்ட் கெர்ஸ்டெய்ன்-ஸைக்ளோன் -B டின்களுடன்
நாஜிப்படையில் மரைன் எஞ்சினியராக வேலைக்கு சேர்ந்த கர்ட் கெர்ஸ்டெய்ன் இங்கே நமக்கு அறிமுகமாகிறார், இவர் உக்கிரமான போரில் ஈடுபட்டிருக்கும்  ஜெர்மனி ராணுவத்துக்கு ஏற்ற இன்றியமையாத ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கிறார், எதிரி நாட்டு ராணுவத்துடன் போராடும் விரர்கள் நல்ல குடிநீர் இன்றி நோயால் பீடிக்கப்பட்டு இறந்து போவதை தடுக்க இவர் போர்க்களத்தில் மோட்டார் துணையால், மற்றும் கை பம்பினால் இயங்கும் கழிவு நீரை குடிநீராக மாற்றும் எந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார்,அது அவருக்கு குறுகிய காலத்தில் மிகுந்த புகழைப் பெற்றுத் தருகிறது.


இன்னொரு ஆராய்ச்சியாக ஸைக்ளோன் -பி என்னும் மிகக்கொடிய அபாயகரமான ரசாயனத்தைக் கொண்டு ,அப்போது வேகமாய் பரவி வந்த டைபஸ் என்னும் விஷகாய்ச்சல் உண்டு பண்ணும் பேரசைட்டுகளை அழிக்கலாம் என்று ஒரு ஆய்வறிக்கையையும் சமர்ப்பிக்கிறார், அதாவது வீரர்கள் தங்கும் பேரக்ஸுகளை சுத்தம் செய்வதற்கு மிகச்சிறிய அளவில் அந்த பேரக்ஸின் கூரையில் உள்ள திறப்பில் இந்த ரசாயனத் துகளை கொட்டவேண்டும்,ஒரு மணி நேரம் கழிந்த நிலையில் மூடிய அறைக்குள்ளே காற்றில் பரவிக்கலந்த ஸைக்ளோன் -பி உதவியால் அந்த பேரக்ஸ் கூடமே கிருமிகளற்றுப் போயிருக்கும்,இதனால் வீரர்களுக்கு டைபஸ் நோய்தொற்றை அடியோடு குறைக்கலாம் என்பது தான் இவரின் மற்றொரு ஆராய்ச்சி,

இப்போது நாஜி அரசு நடத்தும் கருணைக்கொலை முகாமை நாம் திகிலுடன் பார்க்கிறோம்,  இப்போது ஒரு மிகக் கொடூரமான இனவெறி கொண்ட விக்டர் ப்ராக் என்னும் நாஜி டாக்டரும் அங்கே நமக்கு அறிமுகமாகிறார் ,கர்ட் கெர்ஸ்டெயின் அக்கா மகள் பெர்த்தா மனவளர்ச்சி குன்றியவள், அவளும் அந்த கருணைக்கொலை ஸீஸனில் கூட்டிவரப்படுகிறாள், அக்குழந்தைக்கு அந்த நயவஞ்சக டாக்டரை எதனாலோ பிடித்துப்போகிறது,முகம் பார்த்து சிரிக்கிறாள்,அவனும் பொய்யாய் சிரிக்க, அவளின் ரிப்போர்டுகளை இன்னொரு டாக்டர் அவனிடம் காட்டி ,என்ன இவள் செலக்டடா?என்று வினவ!!!, அந்த டாக்டர் கண்களை சுருக்கி,தலையை வேகமாக ஆமோதிப்பது போல அசைப்பான், அக்குழந்தை என்னவோ தன்னை அவர்கள் விளையாடக்கூட்டிப் போவது போல நினைத்துக் கொண்டு அந்த மெடிகல் ரெகார்ட் ஃபைலை மார்போடு தழுவிக்கொண்டு மரண வரிசையில் செல்லும். மிகவும் கனமான காட்சி அது.

கர்ட் கெர்ஸ்டெய்னின் ஸைக்ளொன் - பி கொண்டு டைபஸ் விஷகாய்ச்சல் பரப்பும் கிருமிகளை அடியோடு அழித்தல் என்னும்  ஆராய்ச்சி மிகவும் வரவேற்பை பெறுகிறது, ஆனால் அதில் ஒரு பெரிய மாற்றமாக, விஷமக்கார நாஜிப்படை அதிகாரிகள்,ஆக்கபூர்வமான அதை அழிவுக்கு பயன் படுத்த விழைகின்றனர், இவரின் ஆராய்சிகளை சற்றே மேம்படுத்தி மின்னல் வேகத்தில் கேஸ் சேம்பர்கள் போலந்தில் நிறுவப்படுகின்றன,

அதில் முதன் முதலாக ஒரு கேஸ்சேம்பருக்கு இவரை அனுப்பி பாரவையிடச் செய்கின்றனர் நாஜி உயர் அதிகாரிகள், இவர் வெளியே இருந்து பார்க்கையில் அது ஒரு பேரக்ஸ் போன்றே இருக்கிறது,கதவில் உள்ள கண்ணாடி துவாரம் வழியே பார்க்கையில் இவருக்கு உள்ளம் கொதிக்கிறது, இதயமே நின்று விடுவது போல உணர்கிறார், உள்ளே நூற்றுக்கணக்காணோர் அடைபட்டிருக்க, அனைவருமே தலைமுடியை ஒட்ட வெட்டப்பட்டு, அம்மணமாக்கப்பட்டிருக்கின்றனர்,

ஒரு காட்சியாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா,பாட்டி, அப்பா, அம்மா, மகன், மகள், பேரக்குழந்தைகள் என கைகோர்த்த படியே இறுக்க அணைத்துக் கொண்டிருக்கின்றனர், நீரால் முதலில் குளிப்பாட்டப்பட்ட , அவர்கள் மீது ஸைக்ளோன் -பி  கூரையின் திறப்பு வழியே, கவசமுகமூடி அணிந்த நாஜிக்களால் கொட்டப்படுவதையும், அவர்கள் மூச்சுத்திணறி, கீழே கூட விழ முடியா வண்ணம் அடைபட்ட கூட்டத்தின் மீதே சாய்ந்து இடிபாடுகளில் சிக்கி இறப்பதையும் காண்கிறார். மிகவும் அருவருப்புக்கும் , கையாலாகாத் தனத்துக்கும் உள்ளானவர், உடனே ஜெர்மனிக்கு செல்லும் ரயிலில் முன்பதிவு ஏதும் இன்றி ஏறுகிறார், அங்கே பரிசோதகர் இவரின் அதிர்சிக்குள்ளான தோற்றம் கண்டு உடம்பு சரியில்லையா?!!! என வினவ?ஏன்?  நாஜி அதிகாரி  ஒருவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகாதா என்ன? என்று பதிலுரைக்கிறார்.

உலகமே ரயிலில் பயணிக்கிறது, ரயிலில் இடமில்லை, அதோ அங்கே நடைபாதையில் ஸ்விஸ் நாட்டு தூதுவர் இருக்கிறார், அவருடன் இணைந்து கொள்ளுங்கள் என்கிறார் பரிசோதகர். அவர் அந்த ஸ்விஸ் நாட்டு தூதுவரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அன்று மட்டும் 3000 பேர் கேஸ் சேம்பரில் அடுத்தடுத்து கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டதை ஆவேசத்துடன் பகிர்கிறார். அதற்கு உண்டான ஆதாரங்களான ரசீதுகளை,வரைபடங்களை அவரிடம் தந்து லீக் ஆப் நேஷனின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு வேண்டுகிறார்.


தெரிந்தோ தெரியாமலோ இனப்படுகொலை துவங்கிய ஆரம்ப நாட்களில் நாஜிப்படை உயர் அதிகாரிகள், அடிமட்ட அதிகாரிகள் , இனப்படுகொலை கூடத்தை வடிவமைத்த கட்டிடக்கலை வல்லுனர் போன்றோரின் சந்தேகங்களுக்கு இவர் மிக அருமையாக பதிலுரைக்கிறார். அதன் மூலம் ப்ரேக் நாட்டில் நூற்றுக்கணக்கான ஸைக்ளோன் -பி தயாரிப்பு மையங்கள் திறக்கப்படுகின்றன, இவருக்கு புலி வாலைப் பிடித்த கதையாக இவரால் நாஜிப்படைக்கு உண்மையாக நடக்கவும் முடியவில்லை, இனப்படுகொலைக்கு சாட்சியாகவும் இருக்கவும் மனமில்லை,


இப்போது ஜெர்மனியில் இருக்கும் தலைமை கத்தோலிக்க கிருஸ்துவ மிஷனரியின் குருமாரை நேரில் சென்று யூத இனப்படுகொலையின் ஆதாரங்களையும் தன் விலாச அட்டையுடன் கொடுக்க முயல,அங்கே இவரை ஏசுகின்றனர், எள்ளி நகையாடுகின்றனர், இவரின் விடாப்பிடியான தர்க்கங்களின் முடிவில் நான் ஏதாவது செய்யப்பார்க்கிறேன் ,என்று வெளியே அனுப்பி கதவையும் சாத்துகின்றனர், கிருஸ்துவ மிஷனரியினருக்கு, ஜெர்மானிய கத்தோலிக்கர்கள் மற்றும் ரய்ச்சின் காணிக்கையாக பெரும்பொருள் சேருகின்றது, அதை அவர்கள் எக்காரணத்திற்காகவும் இழக்க தயாராகவே இல்லை,


ஆகவே இவரை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை. இதனாலெல்லாம் மனம் தளர்ந்துவிடவில்லை கெர்ஸ்டெய்ன். தன் அண்டை வீட்டாரை, நண்பர்களை, நம்பிக்கையான அரசு அதிகாரிகளை, தான் வழிபடும் சர்ச்சின் தலைவர், பொருளாளர் என தன் வீட்டிலேயே ரகசிய கூட்டம் நடத்தி நடந்து வரும் இனப்படுகொலையை தடுக்க உதவி கேட்கிறார். யாரும் ஒத்துழைக்கவேயில்லை.

இப்போது ரிக்கார்டோ ஃபோன்டானா என்னும் முக்கிய கதா பாத்திரத்தை நாம் பார்க்கிறோம், இவர் இளம் மத குருமாராக பட்டப்படிப்பு முடித்து,பெர்லினில் இருக்கும் கிருத்துவ மிஷனரியின் தலைமை மதகுருமாரிடம்,உதவியாளராக பணிபுரிபவர், இவரின் குடும்பம் காலம் காலமாக வாடிக்கன் மடாலயத்தில் பணிசெய்து வருவதால்,அவர் தந்தைக்கு போப்பிடமே மிகவும் செல்வாக்கு இருக்கிறது, அவர் எளிதாக போப்பை பார்த்து பேசிவிடவும், யாரையும் கூட்டிப்போய் அறிமுகம் செய்யவும் முடியும். அன்றைய தினம் கர்ட் கெர்ஸ்டெய்ன் தான் கேஸ்சேம்பரில் கண்ணுற்றவற்றை புகாராக அளிக்கும் போது இவரும் உடனிருக்கிறார். ஒரு எஸ் எஸ் அதிகாரி நாஜிக்களைப்பற்றி மிக தைரியமாக புகார் அளிக்கிறாரென்றால் அந்த புகாரில் இருக்கும் நம்பகத்தன்மையை இவர் உணர்கிறார்.

அங்கே கர்ட் கெர்ஸ்டெய்ன் விட்டு  வந்த விலாச அட்டையை எடுத்து பாதுகாக்கிறார்.  பின்னர் ஒரு நாள் கர்ட் ஹெர்ஸ்டெய்ன் வீட்டுக்கு வந்து நட்பாகிறார், தன்னால் முடிந்த வரை இனப்படுகொலையை களைவதற்கு உதவுகிறேன் என்று உறுதியளிக்கிறார். தன் தலைமையிடம் கூட சொல்லாமல் வாடிகன் செல்கிறார். அங்கே நேசநாடுகளின் தூதுவர்கள் ,பெரிய அரசியல் தலைவர்களுடன் உரையாடும் தன்  வாய்ப்பை தந்தையின் மூலம் பெறுகிறார்.இருந்தும் பலனில்லை.


இவரின் புகார்களை கேட்ட யாருமே அதை  தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை, அவர்களின் மேலான உடனடி நோக்கம் கடவுள்மறுப்பு கம்யூனிச ரஷ்யா ஜெர்மனியுடன் நடக்கும் உக்கிரமான போரில் தோற்கடிக்கப் படவேண்டும், போரை முடிவுக்கு கொண்டு வந்த நல்ல பெயர் அனைத்தும் அமெரிக்கா, ப்ரிட்டன், ஃப்ரான்ஸ் மூவருக்கே கிடைக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. சிறிதும் மனம் தளராத ரிக்கார்டோ ஃபோன்டானா வாடிகன் திருச்சபையில் போப் தரிசனம் தரும் தர்பாருக்குள் அதிரடியாக நுழைகிறார், அங்கே பக்தர்கள் ஒவ்வொருவராக போப்பிற்கு தண்டம் செலுத்தி வணங்கி, அவர் கையை முத்தமிட இவரும் அதே வரிசையில் இணைகிறார், போப்பை வணங்கியவர்   இனப்படுகொலை தீவிரத்தையும், போப் சொன்னால் ஜெர்மானிய கத்தோலிக்கர்கள், மற்றும் மிஷனரிகள்,நேச நாடுகள் அதை செவிமடுத்து கேட்க இருக்கும் வாய்ப்பையும் தாழ்மையுடன் நினைவூட்டுகிறார்,

எல்லாவற்றையும் கேட்ட போப், இத்துயரமான போர் சூழலில் பலியாகும் ஒவ்வொரு உயிருக்கும் என் இதயம் ரத்தத்தை கண்ணீராக விடுகிறது,நாட்டு மக்களின் நன்மைக்கு நம்மால் என்ன செய்யமுடியுமோ அதை திருச்சபை மூலம் செய்வோம், நீ உடனே பெர்லினுக்கு திரும்பி உன் திருச்சபை காரியங்களை கவனி என்கிறார். ரிக்கார்டோ ஃபோன்டானா மனம் மாறவில்லை, சதா இனப்படுகொலைகளை தடுப்பது பற்றியே சிந்திக்கும் இவரை தேற்ற அவரது தந்தை உனக்கு ஒரு ஆச்சரியமளிக்கும் செய்தி சொல்ல இருந்தேன், ஆனால் நீயே முந்திக்கொண்டாய், வரும் கிருத்துமஸ் நன்னாளில் போப் வழங்கும் உரையில் யூத இனப்படுகொலை பற்றிய கண்டனமும் வருத்தமும் இடம் பெற்றிருக்கும் ,என்று தெம்பூட்டி அவரை திரும்ப பெர்லினுக்கு அனுப்புகிறார்.


இப்போது கர்ட் கெர்ஸ்டெய்னுக்கு நாஜிப்படையில் தலைமை லூட்டினென்ட் ஜெனரலாக பதவி உயர்வும் கிடைக்கிறது, விருப்பமே இல்லாமல்,எல்லா கேஸ் சேம்பருக்கும் ஸைக்ளோன் -பி ரசாயன டப்பாக்களை பார்வையிட்டு, அங்கீகரித்து விலைக்கு வாங்குவது இவரது வேலை, இவர் இனப்படுகொலையை குறைக்கும் வண்ணம் தன் பணிக்காலத்தில் நிறைய ஸைக்ளோன் -பி சரக்குகளை அவை தரமாயிருந்தாலும் வேண்டுமென்றே தரமில்லாதவை,செல்லாது,செல்லாது என்று திருப்பி அனுப்புகிறார், தன்னால் ஆன இந்த ஒரு துரும்பை கிள்ளிப்போட்டு, இன்னும் அதிகம் பேர் ஒரேநாளில் மடிவதை சற்றே தள்ளிப்போடுகிறார்.

இப்போது ரிக்கார்டோ ஃபோன்டானா கர்ட் கெர்ஸ்டெய்னை சந்திக்கிறார். போப் வரும் கிருத்துமஸ் நன்னாளில் ஐரோப்பா  மக்களிடம் ரேடியோவில் வாழ்த்து செய்தி தரும் போது, யூதர்களின் இனப்படுகொலை குறித்த கண்டணத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்வார் என்று நம்பிக்கை அளிக்கிறார், ஆனால் கிருத்துமஸ் நன்னாளில் போப்பின் லத்தீன் மொழி வாழ்த்து செய்தியை வாட்டிகன் ரேடியோ ஒலிபரப்ப, அதை ரிக்கார்டோ ஃபோன்டானா ஜெர்மனில் மொழிபெயர்த்து கர்ட் கெர்ஸ்டெய்னுக்கு உடனே சொல்கிறார். அதில் எந்த ஒரு இடத்திலுமே யூதர்களோ, ஜிப்ஸிக்களோ, இனப்படுகொலை என்றோ வாசகம் இல்லாமல் இருப்பதை கண்டு துணுக்குறுகின்றனர், தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் உணர்கின்றனர்.

இனி பொறுப்பதில்லை, இனப்படுகொலைக்கு நேரடி சாட்சியான கர்ட் கெர்ஸ்டெய்னை வாடிகனுக்கு கூட்டிப்போய் போப்புடன் நேரடியாக உரையாடவிட்டு மன்றாட வேண்டி , தன் தந்தையுடன் பேசி ஏற்பாடு செய்கிறார் ரிக்கார்டோ ஃபோன்டானா,மிகுந்த கெடுபிடிகளுக்கு பின்னர்  கர்ட் கெர்ஸ்டெய்னை  தன்னுடன் காரில் வாடிகனுக்கு அழைத்துப் போகிறார். நாஜிக்கள்  ரோமுக்குள்,அங்கே நாஜிக்கள்   வாடிகனுக்குள் புகுந்து யூதர்களை சிறை பிடிக்க கொத்து கொத்தாக கணக்கெடுப்பதை கண்ணுறுகின்றனர். போப்பை யாருமே அன்று சந்திக்க முடியாத படிக்கு  வாடிகன் அரண்மனை முழுக்க நாஜிக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்,

 ரோமில் இருக்கும் கிருத்துவ மதத்துக்கு ஏற்கனவே மதம் மாறிய யூதர்களையும் திரட்டி கொல்ல நினைக்கிறான் ஹிட்லர். அதை தடுக்க லஞ்சமாக 50கிலோ தங்கக் கட்டிகளையும் வாடிகன் வாழ் யூதர்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர் நாஜிப் படையினர் , ஆனாலும் திடீரென மனம் மாறி ஹிட்லரின் ஆணைக்கு பயந்த நாஜி அதிகாரிகள், அன்றைய தினம் 1000 பேரை முதல்கட்டமாக ஒன்று திரட்டி கேஸ்சேம்பருக்கு ரயிலில் ஏற்றி அனுப்ப ஆயத்தமாகின்றனர், இரும்பு இதயம் கொண்ட போப்பையும், கூட இருக்கும் குருமார்களையும் இனி மேலும் தன்னால் கரைக்கவே முடியாது என்று முடிவெடுத்த ரிக்கார்டோ ஃபோன்டானா, அவர்கள் முன்பாகவே தன் கிருத்துவ மதத்தை புறக்கணிக்கும் விதமாக யூதன் எனக் குறிக்கும் ஸ்டார் ஆஃப் டேவிட் என்னும் நட்சத்திர குறியை தன் உடையில் அணிந்து கொள்கிறார்,அது மதத்துரோகம் என்கின்றனர் போப்பும்,சக குருமார்களும், இவர் பணியவில்லை.

அன்றிரவு  1000 பேர் கொண்ட யூதர்களுடன்  ரிக்கார்டோ ஃபோன்டானாவும் மரண ரயிலில் ஏறி விடுகிறார், பின்னர் அதில் ஆஷ்விட்ஸ் சென்ற அவர் கேஸ் சேம்பரில் விழும் பிணங்களை அப்புறப்படுத்தி எரியூட்டும் பணியையும்  செய்கிறார். இறைவனின் கொடிய தீர்ப்புக்கு தானே சாட்சியாக நிற்கிறார். வேறு வழியின்றி மறுநாள் கர்ட் கெர்ஸ்டெய்ன் பெர்லின் திரும்பி தன் குடும்பத்தாரையும் சந்திக்கிறார். ஸ்டாலின்க்ராடில் இரண்டு லட்சம் நாஜி ராணுவத்தினர் ,கொல்லப்பட்டு 1லட்சம் நாஜி ராணுவத்தினர் போர் கைதிகளாக பிடிக்கப்பட்டதையும் அறிகிறார்.

இப்போது ஆஷ்விட்ஸுக்குள் தானே முன்வந்து நுழைந்த ரிக்கார்டோ ஃபோன்டானாவை விடுவிக்கக் கோரி வாட்டிகனில் இருந்து வேண்டுகோள் கடிதம் வந்தும் அவரை விடுவிக்காமல், அவர் பிணத்தை எரியூட்டும் வேலைக்கு தள்ளப்படுகிறார். அங்கே பிணத்தை எரிக்கும் இடத்தில் கொடூர நாஜிக்களின் மன நிலையும், அதனை எதிர்த்துப் போராடும் வலிவற்ற யூதர்களின் மன நிலையையும் தன் கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்க்கிறார். சாவைக் கூடச் சலனமின்றி வரிசையில் நின்று ஏற்றுக் கொண்ட அந்த யூத மக்களின் மன நிலையை ஆயாய்கிறார்,

அடக்கி வைத்தவர்களின் எண்ணிக்கை, அடங்கிப் போனோர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து தானும் இவர்களுடன் மடிவதே போப்பின் மௌனத்துக்கும் ஒட்டுமொத்த கத்தோலிக்கர்களின் தவற்றுக்கும் தண்டனையாக இருக்கும் என்று தன் மரணத்தை இன்முகத்துடன் நோக்கியிருக்கிறார் ரிக்கார்டோ ஃபோன்டானா.அன்று ஒரு நாள் கர்ட் கெர்ஸ்டெய்ன் நாஜி ராணுவ தலைமை ஜெனரல் ஹிம்லரின் கையெழுத்தை போலியாக போட்டு,  ரிக்கார்டோ ஃபோன்டானாவுக்கு ஒரு விடுதலை அறிக்கையை தயாரிக்கிறார்,

அதைக் கொண்டு ஆஷ்விட்ஸுக்குள் நுழைகிறார். அக்கடிதம் கண்டவுடன் பயந்து போன அதிகாரிகள்  ரிக்கார்டோ ஃபோன்டானாவை இவர் முன்பாக கொண்டு வந்து நிறுத்துகின்றனர், ஆனால் அவருக்கு கோழை போல தப்பி ஓட மனமில்லை, நான் இங்கேயே இவற்றிற்கு சாட்சியாய் இருப்பேன் , இறப்பேன் என்று உறுதியாக இருக்கிறார். அந்நேரம் ஹிம்லரின் கடிதத்தை ஆராய்ந்த நாஜிப்படையின் கொடுங்கோல் டாக்டர் விக்டர் ப்ராக் அது போலியானது, என்று கண்டுபிடித்து. ரிக்கார்டோவை கேஸ் சேம்பருக்கு உடனே அனுப்பி கதையை முடிக்க  ஆணையிடுகிறார்.ரிக்கார்டோ உயிரோடு இருந்தால் தான் ஒருபோதும் வாட்டிகனில் சென்று அடைக்கலம் கேட்க வழியிருக்காது என்னும் பயமே அதற்கு காரணம்.

கர்ட் கெர்ஸ்டெய்னை தன்னுடனே காருக்கு இழுத்து வருகிறார்.இவருடன் காரில் வரும் போது எல்லாமே முடிந்து விட்டது, சாட்சியங்கள் எதுவுமெ இல்லாதபடிக்கு புதைத்த பிணத்தைக் கூட நோண்டி எடுத்து எரியூட்டுகிறோம், கேஸ் சேம்பர்கள், எரியுலைகள் கூட  இன்று இடிக்கப்படும், நீயும் எங்காவது வேறு நாட்டுக்கு தப்பிச்சென்று அடைக்கலம் கேள், நானும் வாட்டிகன் செல்ல எண்ணுகிறேன் என்கிறார், சுமார் 6 வருடங்கள் இவர் மீது கொண்ட அபிமானத்தினாலும் நட்பினாலுமே தான் இவரை நாஜிக்களின் கோர்டில் ஒப்படைக்காமல் விடுவிப்பதாக சொல்கிறார்.

ரிக்கார்டோ ஃபோன்டானா
இப்போது கட் கெர்ஸ்டெய்ன் பெர்லினுக்குள் வந்து மீண்டும் தன் வீட்டாரைச் சந்திக்கிறார், எந்நேரமும் ரஷ்ய செம்படையும், நேசநாட்டுப் படையும் ஜெர்மனிக்குள் புகுந்து தன்னை போர் குற்றங்களுக்காக கைது செய்யும், அதற்கு முன்பாக தாமே சரணடைந்து தன் பாவங்களை கழுவப் போகிறேன், என்று மனைவியிடமும் குழந்தைகளிடமும்  சொல்லி விட்டுப் புறப்படுகிறார், இனி எப்போதும் திரும்பப்போவதில்லை என்னும் முடிவுடன் தன் மனைவியை ஆரத்தழுவி முத்தமிடும் காட்சியும்,அப்போது அவளின் கண்ணில் தெரியும் காதலும்,நெஞ்சுரமும் மிக அற்புதமான ஒரு காட்சி அது.

பின்னர் நாம் ஆஷ்விட்ஸின் கேஸ் சேம்பரையும் எரியுலையையும் கண்ணுறுகிறோம், அங்கே ஒரு வயதான யூதர் ,சற்று முன்னர் கேஸ் சேம்பருக்குள் அனுப்பப் பட்டவர்களின் துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருக்கையில் அதில்  ரிக்கார்டோ ஃபோன்டானாவின் மதகுருமார் அணியும் கருப்பு அங்கியையும், அதில் அவர் பிணைத்துக்கொண்ட ஸ்டார் ஆஃப் டேவிட் பட்டையையும் எடுத்து ஏற இறங்கப் பார்க்கிறார். இந்த ஒற்றைக் காட்சியில் நாம் நெஞ்சம் உடைகிறோம். ரிக்கார்டோ ஃபோன்டானாவின் நேரம் வந்து விட்டதை உணர்த்திய அற்புதக் காட்சி அது.

அன்றைய தினம் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர,  ஃப்ரென்சு ராணுவத்தாரிடம் சரணடைந்து ,போலந்தில் நடந்த இனப்படுகொலைகளைப் பற்றி இவர் விரிவாக தக்க ஆதாரங்களுடன் ஃப்ரென்ச், ஜெர்மன் மொழிகளில்  கொடுத்த முதல் தகவல் அறிக்கை ’’கெர்ஸ்டெய்ன் அறிக்கை ’’ என்று அழைக்கப்படுகிறது,அதில் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய ஒவ்வொரு அதிகாரியின் பெயரையும் இவர் குறிப்பிட்டிருந்தார்.

கொடுங்கோல் டாக்டர்
இந்த அறிக்கை  போர்குற்றம் பற்றி விசாரிப்பதற்கென்றே துவங்கப்பட்ட நூரம்பர்க் விசாரனை மன்றத்துக்கு [Nuremberg Trials] இனப்படுகொலையில் கொல்லப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையை  கணக்கிடவும் ,குற்றவாளிகளை கண்டறிந்து சுற்றி வளைக்கவும்   பேருதவியாக இருந்தது, கெர்ஸ்டெய்ன் தன் முதல் தகவல் அறிக்கையை சமர்பித்த பின்னரும் மனசாந்தி அடையாமல் தான் விருப்பமில்லாமல் நாஜிப்படையின் இன அழிப்புக்கு சுமார் 6 வருடங்கள் பணிசெய்த குற்ற உணர்வு மிகவும் வாட்ட, தான் வீட்டுக்காவலில் தங்கவைக்கப்பட்டிருந்த ஓட்டல் அறையிலேயே தூக்கு மாட்டி தற்கொலையும் செய்து கொள்கிறார் , இப்போது அந்த கொடுங்கோல் டாக்டர் தன் நாஜி உடையைக் களைந்து விட்டு வாட்டிகனுக்கு சென்று அடைக்கலம் கேட்பதை நாம் பார்க்கிறோம், போரின் விளைவுகளால் தான்  ஜெர்மனியிலிருந்து உயிர் தப்பி அகதியாக வந்திருப்பதாகவும், தனக்கு மருத்துவம் தெரியும் என்றும் சொல்கிறார், வாடிகனில் அவர் போப்பின் உதவியாளர் மூலம் அகதியாக ஏற்கப்பட்டு, மருத்துவத் தொண்டு புரிவதற்கு அர்ஜெண்டினா அனுப்பி வைக்கப்படுவதை நாம் அங்கே பார்க்கிறோம், ஆனால் நிஜ வாழ்வில் அர்ஜெண்டினாவில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய அவர் நூரம்பர்க் நீதி மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு  2 June 1948 அன்று தூக்கில் போடப்பட்டதாகப் படித்த பின் தான் என் மனம் ஆறியது.

கர்ட் கெர்ஸ்டெய்னின் மனைவி பெரும் போராட்டங்களுக்குப் பிறகு சுமார் 20 வருடங்கள் நடந்த வழக்கு விசாரணைகளின் முடிவில்,  கெர்ஸ்டெய்னின்  பணிக்காலத்தில் இனப் படுகொலையை நிறுத்தக்கோரி அவர் முதலில் சந்தித்த ஸ்விஸ் நாட்டு தூதுவரின் சாட்சியம், அவர் வாடிகன் பயணம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக ரோமில் போப்பிற்கு நெருக்கமான சிலரின் சாட்சியம், மற்றும் தகுந்த ஆவணங்களின் துணை போன்றவற்றின் உதவியால் கர்ட் கெர்ஸ்டெய்ன் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு ,இறந்த தன் கணவருக்கு பொதுமன்னிப்பும் பெற்றுத்தருகிறார்.அவருக்கு பென்ஷனும் கிடைக்கப்பெற்றார் என்று படித்தேன்.

படத்தை நிச்சயம் பாருங்கள்,நண்பர் உலக சினிமா ரசிகன் ஆமென் படம் பற்றிய விரிவான தொடர்களை எழுதி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும், அவர் பதிவில்  படத்தின் சிறப்பு மிக்க காட்சியாக்கங்கள் விவரணையாக கிடைக்கும்.அதையும் படியுங்கள்.நண்பர் ஒருவர் இப்படி பெரிய விக்கி கட்டுரை போல எழுதுவதால் என்ன பயன் என்று கேட்டார்.ஒரு சிறப்பான படம் பற்றியும்,வரலாற்று சம்பவத்தை நினைவு கூற வேண்டியும் 10பக்கம் எழுதினாலும் அர்த்தமுள்ளது தான் என்று சொன்னேன்.ஏன் எனக்கும் பின்னாளில் இதை படித்து நினைவு கூற வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-