ரீனோ ஸீஸன் [Rhino Season][2012][15+][ஃபார்ஸி][இரான்+துருக்கி]


நேற்று ரீனோ சீசன் என்னும் ஃபார்சி மொழிப் படம் பார்த்தேன்,இரானில் மக்கள் கிளர்ச்சிக்கு முன்னர் செல்வ சீமானாக இருக்கும் குர்து இரானிய ஷா வம்சத்து கவிஞன் ஷாஹேல் மற்றும் ,அவன் மனைவியின் கதை, மனைவியாக நடித்த மோனிகா பெலுச்சி ஒரு அற்புத இத்தாலிய நடிகை,கணவனைப் பிரிந்து வாடும் கதா பாத்திரத்திற்கென்றே பிறந்தவர், மலெனா என்னும் இத்தாலிப் படம் பார்த்துவிட்டு இவரைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது, 

இர்ரிவர்சிபிள் படத்தில் அந்த சுரங்கப்பாதைக்குள் ஒரு மிருகத்திடம் மாட்டிக்கொண்டு குதப்புணர்ச்சிக்கு ஆளாவாரே?!!! எப்படிப்பட்ட ஒரு நடிகை இவர்?,ரசிகர் மனம் முழுக்க ஆக்கிரமிக்கும் நடிகை, 46 வயதாகிறதாம், யார் நம்புவார்?,ஒரு உதாரணத்துக்கு ஹிந்தியில் மாதுரி தீட்சித் போன்ற அழகும் திறமையும் ஒருங்கே கொண்ட நடிகை,அப்படி நம்மை கிறங்கடிப்பார்,அப்படி நம்மை பச்சாதாபப்பட வைப்பார்.இயக்குனர் Bahman Ghobadi யின் டர்டுள்ஸ் கேன் ஃப்ளை என்னும் இரானியப் படத்தை ஒருவர் வாழ்நாளில் மறக்கமுடியாது,அதே இயக்குனரின் கம்பேக் படம், படத்தில் முக்கியமான மற்றொரு சிறப்பம்சம் அதன் ஒளிப்பதிவு,Touraj Aslani யின் ஒளிப்பதிவு படத்தை காலத்துக்கும் நினைவில் நிறுத்தும்.

அன்றைய தினம்,இரானில் மக்கள் கிளர்ச்சி வெடிக்க அன்று ஒரே நாளில் நாட்டு மக்களின் நிலைமை தலைகீழாகிறது, கவிஞன் ஷாஹேலும் அவனின்  காதல் மனைவியும் ஒரே சிறையில் வெவ்வேறு மதில்களுக்கு ஊடே அடைக்கப்படுகின்றனர், கவிஞனுக்கு  30 வருடமும், மனைவிக்கு 10 வருடமும் கொடிய சிறை தண்டனை, சிறையில் கடுங்காவல் என்றால் கூட தாங்கிக்கொள்ளலாம், அயோக்கியர்கள் நீரில் மூழ்க வைத்தும் லாடம் கட்டியும், கொட்டும் பனியில் வாயில் வெறும் துணி மட்டும் அடைத்தும் கட்டி போட்டு கவிஞனை இம்சிக்கின்றனர். தர தரவென்று தரையில் இழுத்துப்போகின்றனர்.  அவளுக்கு துணிகளை உருவியும் நடத்தையை கேலி செய்தும் இம்சை தரப்படுகிறது,அந்த சிறைக்கு ஓல்ட் பாய் படத்தின் தனிமை சிறையே தேவலாம்,அத்தனை கொடுமை,இதில் கவிதையால் விளைந்தது கொஞ்சமே,கவிஞனின் மனைவி மீது அவர்களின் கார் ட்ரைவர் கொண்ட அடங்கா காமத்தின் விளைவால் விளைந்ததே அதிகம்.

இதில் மனைவி மீது மையல் கொண்ட ஒரு சைக்கோ ட்ரைவர் பற்றி அதிகம் சொல்லியே ஆகவேண்டும்,நன்றாக இருந்த குடும்பத்தை சிதைத்த பாவி அவன், கவிஞனின் மனைவி மீதான தன் வெறியை தீர்த்துக்கொள்ள மக்கள் கிளர்ச்சியை தவறாக பயன் படுத்துகிறான்,கவிஞன் ஷாஹேல் எழுதிய அரசியல் எள்ளல் கவிதை தொகுப்பை கட்டுப்பெட்டி ஏட்டுச்சுரைக்காய் அநீதிமன்றத்தில் கொடுத்து பட்டன் போட்டும் விடுகிறான்,

முதலில் உருளுகிறது கவிஞனின் மாமனாரின் தலை,அவர் தூக்குக்கு பலியாகிறார். இப்போது அந்த கார் டிரைவர் மக்கள் கிளர்ச்சியில் முளைத்த ராட்சத காளானாகிறான், உயர் பதவியால் அலங்கரிக்கப்படுகிறான். சிறைக்குள்ளேயே கவிஞனை யும் அவன் மனைவியையும் தேடிவந்து வெறுப்பேற்றுகிறான்.

ஒரு நாள் அவள் பூரணமாக துகிலுரியப்பட்டு முகமூடி போர்த்தி,மேலே போர்வையால் சுற்றப்பட்டு,முகம் மூடப்பட்ட கவிஞனின் அருகாமையில் கூட்டிவரப்படுகிறாள்,பல மாத பிரிவுத்துயரால் உந்தப்பட்ட இருவரும் கூடிக்கலக்கையிலேயே பலவந்தமாக பிரிக்கப்பட்டு அந்த கார் ட்ரைவரால் வன்புணர்ந்து இனப்பெருக்கம் செய்யப்படுகிறாள் அந்த கவிஞனின் மனைவி,சிறை நிர்வாகமே இதற்கு உடந்தையாக உள்ளது.

சில மாதங்கள் ஆன  பின்பு, அவளுக்கு இரட்டை பெண்குழந்தைகள் பிறந்து பாலூட்டக்கூட கதியின்றி அவையும் பலவந்தமாக பிரிக்கப்பட்டு அனாதைகள் முகாமில் வளர்கின்றன, சிறைக்குள்ளே பத்து வருடம் கழிந்த நிலையில் மனைவி விடுதலை ஆகிவிட,கவிஞன் உள்ளேயே அவள் நினைவுகளில் காலம் கழிக்கிறான்,இன்பம துன்பம் வலி வேதனை எல்லாம் மறக்கிறான் கவிஞன். இனி இழப்பதற்கு ஏதுமில்லை, நரகத்தின் கோடிக்கே போயாகிவிட்டது,கவிதை எழுதியது இத்தனை குற்றமா? என்றால் ஆமாம் கொமேனி ஆட்சியில் கவிதை எழுதுபவன் பேமானி என்று சரமாரியாக குத்துக்கள் விழுகின்றன.
 
சினிமா காட்சிகளின் மீடியம் என்று உணர்த்தும் படம் இது, படம் உண்மைக்கதையை மையமாக வைத்து பின்னப்பட்டது வேறு முகத்தில் மூர்க்கமாக அறைகிறது, இதை உலகசினிமா விழாக்களில் முன்னின்று வெளியிட்டவர் ஹாலிவுட்டின் சோதனை சினிமா தீர்க்கதரிசி மார்ட்டின் ஸ்கார்ஸஸி, படத்தில் ஒரு காட்சியில் காலம் எத்துனை மெதுவாக கழிகிறது? இவன் எத்தனை கல்லாகி மரத்துவிட்டிருக்கிறான் என்பதை காட்சியால் உணர்த்த அங்கே ஒரு கொடிய பனி மழையில் ஆலங்கட்டி மழைபோல இவன் மேலே ஆமைகள் மழையாக பொழிகின்றன,மேலே உள்ள படம் பாருங்கள், அப்படி ஒரு அற்புதம் நிகழ்த்தும் காட்சி,

மேலும் அரக்கர் கூடாரமான இரானிய சிறை நிர்வாகம் கவிஞனின் மனைவியிடம் கவிஞன் இறந்துவிட்டான், என்று அவன் புதைக்கப்பட்ட ஒரு சமாதிக்கு பொய்யான முகவரி ஒன்றை கொடுக்கிறது, இவள் தன் இரு பிஞ்சு மகள்களுடன் அங்கே அந்த வெற்று சமாதியை நோக்கி கதறுகிறாள், அங்கே கொட்டும் அந்த ராட்சத பனிக்காற்றும் அந்த ஒற்றை மரமும்,அருகே நெடுகிலும் இதே போன்ற சான்றோர்களின் கல்லறைகளும் துக்க வரலாற்றின் சின்னங்கள்,

சர்வாதிகாரம் அன்று தூங்கப்போனதோ என எண்ணும் படியான ஒரு நாள்,30 வருடம் அன்றோடு கடந்திருக்கிறது, அன்று கவிஞன் விடுதலையாகிறான், அவன் தேடிப்போகாத இடமில்லை, எங்கேயும் இவன் மனைவி பற்றி பதிலில்லை,அவனுக்கு மக்கள் இருப்பது பற்றி தெரியாது!!!யாரோ எதோ சொல்ல ஒருக்கால் துருக்கி இஸ்தான்புல் நகரில் அவர்கள் குடியேறியிருக்கலாம் என்று அங்கே தேடி வரும் கவிஞருக்கு எண்ணற்ற அதிர்ச்சிகள், நாம் நினைப்பது போல போர் அகதிகளை அத்தனை எளிதில் கண்டு பிடித்துவிட முடியாதாம்,

அங்கே சுமார் 10லட்சம் கோப்புகள் உள்ளன,அதில் ஒரு கூத்து என்ன என்றால் தேடும் நபருக்கு ஒரு கோப்பும் மனு போட்டு தேடிய நபருக்கு ஒரு கோப்பும் உண்டாம் ஆக 20 லட்சம் கோப்புகள்,இவரைபோலவே வெளியே மனுபோட்டு தேடிப்பார்க்கும் அபலைகள் கூட்டம்,இவருக்கு எஞ்சிய நட்பின் உதவியால் ஒரு பெரிய ஆளைப்பிடித்து அங்கே கோப்புகள் வைக்கப்பட்ட அறைக்குள்ளே நுழைகிறார்,அங்கே இவர் தேடும் இவரின் மனைவியை அவள் விடுதலையாகி 6வருடங்கள் கழிந்த நிலையில் வேறொருவனும் தேடியிருக்கிறான் என தெரிய வருகிறது,

அவனின் பெயரை வைத்து அவனின் ஜாதகத்தை ஆராய அவன் இவர்கள் வீட்டு கார் டிரைவர் என்று தெரிகிறது,இன்று சமூகத்தில் அவன் பெரும்புள்ளி,இவனின் மனைவி மக்களின் பாஸ்போர்ட்களை பறித்து வைத்துள்ளவன், அவர்கள் ஐரோப்பாவுக்குள் தஞ்சம் புகுவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறான் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உளவறிகிறார், மிகவும் நலிந்த தன் உடலின் இரத்த நாளங்களை உரமூட்ட அங்கே உள்ள அட்டைக்கடி தெரபி பார்லருக்கு செல்கிறார்,

அங்கே இவரின் காயங்கள் மீதும் வதங்கிய நரம்புகள் மீதும் 4 அங்குல நீளம் கொண்ட அட்டைகள் விடப்பட்டு ,இவர் மேனியை மெருகூட்டிக்கொள்கிறார். மெல்ல தன் மகள்களை நிழலாக பின்தொடர்கிறார்,அவர்களுக்கு ஐரோப்பாவிற்கு குடிபெயர 3000 யூரோக்களேனும் உடனடியாக தேவை,அதை சம்பாதிப்பது பெரும் சவாலாக இருக்கிறது, அதற்காக அவர்கள் தற்காலிக விலை மங்கைகளாக இருப்பதை அறிகிறார் கவிஞர், அப்படி ஒரு கொடிய பாரம் அவருக்குள் இறங்குகிறது, மனைவியை தூர நின்றே பார்க்கிறார்,அவள் சிறையில் இருக்கும் போதே அடித்து துவைத்து இவரை விவாகரத்து செய்ய பத்திரங்களில் கையெழுத்து வாங்குகின்றனர் சிறை அதிகாரிகள்,அவள் வருடா வருடம் இரனுக்கு சென்று இவரின் கல்லறையில் அழுது வருவதை அறிகிறார்,மகள்களுடன் நெருக்கமாகிறார்,

அவர்களிடம் உண்மையை சொல்ல முடியாத நிலை கவிஞருக்கு, இவர் எழுதிய கவிதைகளை அவரின் மகள்கள் முதுகில் டாட்டூக்களாக வடித்து உள்ளதை படிக்கிறார், அவளின் அம்மா அந்த அரசியல் எள்ளல் கவிதைகளை காகிதத்தில் பிரசுரிக்காமல் இளைஞர்களின் மேனியில் கவிதையாக டாட்டூ வடிப்பதை கேள்விப்படுகிறார்,

 தானும் டாட்டு வடித்துக்கொள்ள விரும்புவதாக மகள்களிடம் சொல்ல,கவிஞனின் மனைவி வருகிறாள்,இவர் எழுதிய ஒரு பாரசீக ஹைக்கூ ஒன்றை லாவகமாக இவரின் முதுகின் மீது வடிக்கிறாள்,இவரின் கல் போன்ற ஒரு மௌனம் கடைசி வரை அவளுக்கு காட்டவேயில்லை, அப்படி ஒரு செய்நேர்த்தி கொண்ட ஒரு இயக்கம், பிரமிப்பில் நாம்,

 இனி இவருக்கு பொறுமையில்லை,துலாபாரம் படம் கூட தோற்கும் படியான இவரின் வாழ்வில் வீசிய புயலால் விளைந்த சோகம்,என்ன செய்தார் கவிஞர்?படத்தில் பாருங்கள் நண்பர்களே,சற்றே மெதுவாய் நகரும் கதைக்களம்,காலம் கடக்கும் வேகத்தை உணர்த்த அந்த தாமதம் தேவையாக இருக்கிறது என இயக்குனர் அதை நியாயப்படுத்தியிருக்கிறார்,படத்தில் வந்த பாத்திரங்கள் அனைவரும் இரானிய சினிமாவின் கைதேர்ந்த நடிகர்கள்,கவிஞர் ஷாஹேல் கதாபாத்திரம் உண்மையான ஒன்று,நிஜ வாழ்வில் அவளது மகள் எழுதிய கவிதைகளே பிண்னணி இசை போல படத்தில் அங்கங்கே தூவப்பட்டுள்ளன,மிக அருமையான அனுபவத்தை தரும் படம் உலக சினிமா ரசிகர்களுக்கு மட்டும் ஆன படம்.

இத்தனை அரசு,அரசியல் ரீதியான  சர்ச்சையான படம் எடுக்க இயக்குனர் எத்தனை கஷ்டப்பட்டாரோ? ஒரு காட்சி கூட இரானில் படமாக்கப்படவில்லை,அனைத்துமே  துருக்கியிலேயே   படமாக்கப்பட்டு லொக்கேஷன் மேட்ச் செய்யப்பட்டுள்ளன.டர்டுள்ஸ் கேன் ஃப்ளை படம் ஒருவருக்கு விளைவித்த தாக்கத்தை இப்படமும் தரவல்லது.
படத்தின் காணொளி யூட்யூபிலிருந்து:-