த ஆக்ட் ஆஃப் கில்லிங் [The Act of Killing][2012][டென்மார்க்]

ஆக்ட் ஆஃப் கில்லிங், நம்மை கொலை செய்ய தூண்டும் படம், தவறாக எண்ண வேண்டாம் நண்பர்களே!!!, கடவுள் என ஒருவர் இருக்கிறாரா?!!!என விரக்தியின் உச்சத்திற்கு நம்மை தள்ளி, இந்தப் பாவிகள் ஒருக்கால் நம்மிடம் மாட்டினால் நம் வெறி தீர வெறும் கைகளாலே அடித்தே கொன்று விடலாம் என தோன்றவைக்கும்படைப்பு,படத்தில் ஆண்டன் சிகர்க் போல டார்க் ஹ்யூமர் கதாபாத்திரங்கள் வந்தால் வியந்து பார்க்கலாம்,ஆனால் ஆண்டன் சிகர்கை விடக்கொடிய டார்க் ஹ்யூமர் ஜந்துக்கள் இன்னும் வாழ்ந்து வருவதை ஆவணப்படத்தில் பார்க்கையில் எப்படி இருக்கும்?

படத்தில் நாம் ஓடிக்களைத்த ரிடைர்டு கேங்ஸ்டர்களைப் பார்க்கிறோம், இந்த முக்கியமான சுட்டியில் போய் மேலதிக தகவல்களைப் படித்தால் ஒருவர் நன்றாக விளங்கிக் கொள்ளலாம், எல்லோருமே அப்போதைய 1965ன் சுகர்டோ [Suharto]அவசர அரசாங்கத்துக்கு கைக்கூலிகள் தான், எல்லோருமே இன்று தம் 60களில் உள்ளவர்கள், மனைவி குழந்தை என இன்றைய சொகுசு வாழ்வை சுகமாகக் கழிப்பவர்கள். கடவுள் நம்பிக்கையும் கொண்டவர்கள்.இன்னும் கட்டப்பஞ்சாயத்து செய்து வாழ்வை ஓட்டுகின்றனர்.ஒரு சிலர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

தண்டனை பெறாத கொலைகாரர்கள்
அவர்களின் தொழில் முறை கொலைகளைப்பற்றிய சுகமான நினைவு கூறல் தான் இந்த ஆவணப் படம்.அப்போதைய சர்வாதிகாரி சுகர்டோவின் ராணுவம் கம்யூனிஸ்டுகள் என்னும் சந்தேகத்துக்கு இடமான நபர்களின் பட்டியலை இவர்களிடம் கொடுக்க,இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கி வந்து அடித்தோ,கழுத்தை நெரித்து கொன்று புதைப்பதே இவர்களின் வேலை,அதை அரசுக்கு அணில் போல உதவினோம் என்று பெருமையாக சொல்கின்றனர். இது போர் குற்றமாகாதா?என்றால் நடந்து 40 வருடமாகிறது, விசாரிக்க வேண்டுமானால் காயின் ஆபேல் கதையில் இருந்து துவக்குங்கள் என்கிறான் ஒருவன், புஷ்ஷின் பார்வையில் குவாண்டனாமோ நியாயமானது,சதாமின் பார்வையில் ஷுயா முஸ்லிம்களைக் கொன்றது நியாயமானது,என அடுக்குகிறான்.காட்டுமிராண்டிகள் உலக அரசியல் பேசுவது கண்டு நமக்கு மலைப்பாக இருக்கிறது,

கிஞ்சித்தும் தாங்கள் செய்த தலா 1000க்கும் அதிகமான கொலைகளுக்கு வருந்தாதவர்களாக இருப்பதையும்  நாம் பார்க்கிறோம்.கொடிய நாஜிக்களைக் கூட மன்னித்துவிடலாம் ஏனெனில் அவர்கள் போர் குற்றம் புரிந்ததற்கு கடுகளவாவது தண்டிக்கப்பட்டனர்,நீயா நானா போல ஒரு இந்தோநேசிய டிவி நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு எப்படி கொலை செய்தோம் என்று விளக்குகிறான் அன்வர்,

நம் ஊரில் பன்றியைப் பிடிப்போம் பாருங்கள்,வெறும் கம்பியில் சுருக்கு போட்டு,அதே போல கம்பி கொண்டு கம்யூனிஸ்டு என்று குற்றம் சாட்டப்பட்டவரின் கழுத்தை சுற்றி ஒரு முனையை கம்பத்தில் கட்டியிருக்க மறுமுனை பொருத்தப்பட்ட கட்டையை அன்வர் என்பவன் இருகைகளாலும் இறுக்கி இழுத்து அவரைக் கொல்கிறான் ,இது போலவே சுமார் 1000 பேரை கொன்றிருக்கிறான் அவன்,இவன் எல்விஸ் ப்ரஸ்லி, அல் பசினோவின் தீவிர ரசிகனும் ஆவான்,அவர்களின் படங்களை ஒன்று விடாமல் பார்த்தவன்,ப்ளாக்கில் டிக்கெட் விற்ற திரையரங்க பணீயாளன்,

கம்யூனிஸ்டுகளை வெறுக்க காரணம் சொல்கிறான் கேளுங்கள், கம்யூனிஸ்டுகள் ஹாலிவுட் சினிமாக்களை இந்தோனேசியாவில் தடை செய்தனராம், அதனால் திரையரங்கிற்கு வரும் கூட்டம் அருகிவிட்டதாம், அதனால் திரையரங்க முதலாளிகளும் தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டனராம். எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா?!!! 1965-66 வரை கொல்லப்பட்ட கம்யூனிஸ்டுகளின் அதிகார பூர்வமான எண்ணிக்கை 5லட்சம் பேர், நாம் பார்ப்பது  வடக்கு சுமத்ராவில் மேடான் என்னும் நகரில் நடந்த கம்யூனிஸ்டுகள் கொலைகளை மட்டும்.நடந்தவற்றில் 5 சதம் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் பார்க்கும் இந்த கொலைகாரன்கள் ஒரு பானை சோற்றின் பருக்கைகள் தான் , அந்த டிவி காம்பியரிங் அழகி வாய் நிறைய பற்களுடன் இந்த கேங்ஸ்டர்கள் செய்த கம்யூனிச கொலைகளை வியந்து பாராட்டுகிறாள், ஸ்ஸ்ப்ப்பா!!! கம்யூனிஸ்டுகள் என கேவலமாக உடலை சிலுப்பியவள் அவர்கள் சாக வேண்டியவர்கள் தான்! என்கிறாள்.இப்படி மக்கள் மனதில் விஷவிதையை விதைத்திருக்கிறான்கள் இந்த கேடுகெட்ட பொறுக்கிகளும் சர்வாதிகார அரசியல்வாதிகளும்.

இப்போது நாம் அநேகம் பேர் விரும்பி அணியும் ரீபொக்,அடிடாஸ்,ஃபிலா போன்ற ப்ராண்டு ஆடைகள் முதல் ஷூக்கள்,தொப்பிகள் வரை பெரும்பாலும் இந்தோனேசியாவில் தயாரிக்கப்பட்டவையே, 5 லட்சம் கம்யூனிஸ்டுகள் ஒரே வருடத்தில் கருவருக்கப்பட்டதை பெருமையாக பேசும், நியாயம் கற்பிக்கும் நாட்டு மக்கள் தயாரிப்பவை, இனி இவர்கள் தயாரிக்கும் எந்தப் பொருட்களையுமே வாங்கவே கூடாது என அருவருக்க வைக்கிறது, நான் உலகத்தில் சுற்றுலா அல்லது வேலை நிமித்தம் செல்லவே விரும்பாத நாடு என ஒன்று இருக்குமானால் அது பாகிஸ்தான் அல்ல!!! இந்தோநேசியா தான், இதைப் பற்றி எழுத வேண்டுமானால் எழுதிக்கொண்டே போவேன்,மிகவும் அயற்சியாக இருக்கிறது, நம் நாட்டிலேயே ஆவணப்படுத்த வேண்டியவை நிகழ்வுகள் நூறைத் தொடுகின்றன, ஆனால் ஒன்றுமே ஆவணப்படுத்தப்படவில்லை,  

நான் இதை ஒரு மாதம் முன்பு பார்க்க ஆரம்பித்து,அதற்கான அற்பணிப்பான  மனநிலை இல்லாததால் பின்னர் பார்க்கலாம் என வைத்துவிட்டேன், நேற்று கொழந்தயின் இந்தப் பதிவை படித்தேன்,பாலாவும் உடனே பாருங்க என்றார், இன்று வேலை  முடிந்து வந்ததும் பார்த்து,மனம் கேட்காமல் பதிவாகவும் இட்டு விட்டேன். உண்மையிலேயே போர் குற்றங்களைப்பற்றி அறிய இது போல உண்மைக்கு வெகு அருகே பயணிக்கும் படியான ஆவணப் படங்கள் வரவேண்டும்,சினிமா எடுப்பதையே பெரிய தொழிலாக செய்யும் நாடு இந்தியா , உண்மையில் வெட்கக்கேடு ,நம்மிடம் இப்படி உண்மைக்கு அருகே பயணிக்கும் படியான ஒரு ஆவணப்படமும் கிடையாது,

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, இந்திய சீனப்போர், இந்திய பாகிஸ்தான் போர் போன்ற காலகட்டங்களில் நம்நாட்டிலும் எதிரி நாட்டிலும் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பேர்கள், போர்கைதிகளாக வாடுவோர். அனாதையான குழந்தைகள், புலம் பெயர்ந்தோர்,ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்த பணக்காரர்கள்,உயிருக்கு பயந்து மதம் மாறியோர், அன்னை, தந்தை, பிள்ளைகள் சகோதரரை பற்கொடுத்தோர்  மனைவி, மகள்,சகோதரிகளை வன்புணர்வுக்கு பலி கொடுத்தோர், மதக்கலவரங்களில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பேர்கள்,எமர்ஜென்சி சமயத்தில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பேர்கள், கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், அதில் மணமே ஆகியிராத ஆண்கள் பெண்கள், போபால் விஷவாயு கசிவினால் மாண்டோர். என எத்தனையோ ஆதாரங்கள் கொட்டிக்கிடந்தும் எதுவுமே ஆவணப்படமாக்கப்படவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படை நமக்கு மறக்க முடியாது,3 வருட அட்டூழியத்துக்கு பின்னர் அமைதிப் படையை வெளியேற்ற புலிகளும்,சிங்கள ராணுவமும் ஒன்றாய் இணைந்து பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல,அது ஆப்பரேஷன் பூமாலை அல்ல ஆப்பரேஷன் சவமாலை,உலக அரங்கில் அமைதியை திரும்ப வைத்தவர் என ராஜீவின் புகழை பரைசாற்றும் சுயநலத்துக்காக,புற்றுநோய் கிருமி போல நாட்டையே சூறையாடிய கோரப்படை அது,ஆப்பரேஷன் பூமாலையின் அட்டூழியங்களால் மடிந்த உயிர்களுக்கும் ,வன்புணர்வு செய்யப்பட்ட சகோதரிகளுக்கும்,அங்கே இன்றும் நடைபிணங்கள் போல வாழ்பவர்க்கும் நினைவேந்தல் செய்யும் வண்ணம் நல்ல ஆவணப்படங்கள் நம்மிடம் உள்ளதா? இல்லவே இல்லை.

நாம் வரலாற்று நிகழ்வுகளை ,பேரழிவுகளை அல்லது போரினை பற்றி காணும் திரைப்படங்கள் அல்லது ஆவணப்படங்கள் எல்லாமே ஒன்று வழவழா கொழகொழாவென இருக்கிறது,அல்லது அரைவேக்காடாக இருக்கிறது, அல்லது உண்மையை திரித்து கூறப்பட்டதாக இருக்கிறது.1971 ஆம் ஆண்டு சுமார் 4லட்சம் பெண்கள் கிழக்கு பாகிஸ்தான்  தேசத்தில் மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தினராலும் அவர்களுக்கு உதவிய ரஜாக்கர்கள் மற்றும் இதர போராளி குழுக்களாலும் வன்புணர்வு செய்யப்பட்டனர்,

பல்கலைக்கழக ஹாஸ்டலில் படித்த 600 இளம்பெண்கள் கைகால்கள் கட்டப்பட்டு சுமார் 9மாத காலம் வரை ராணுவ வீரர்களுக்கு பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டனர்,நிறைய பெண்கள் கழிவறையில் தங்கள் நீண்ட கூந்தலையே சுருக்காக இட்டு தொங்கினர்,போரின் முடிவில் கருவை கலைக்க முடியாதபடி முற்றிய இளம் பெண்களை இந்திய எல்லையில் இருந்த அன்னை தெரசாவின் அபலைகள் இல்லம்  ஏற்றுக்கொண்டது, அங்கே தங்கி நிறைய அபலைப் பெண்கள் குழந்தை பெற்றனர்,பெற்றதும் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விரும்பாமல் அநேகம் பெண்கள் வீடு திரும்பினர்.வீட்டார் அப்பெண்களை ஒன்று விரட்டினர் அல்லது விஷம் வைத்து கொன்றனர், 25000 க்கும் மேல் விரும்பத்தகாத அனாதை குழந்தைகள் உருவாயின,இன்னும் அவர்களுக்கு நியாயம் கிடைத்த பாடில்லை,ஆனால் மேற்சொன்ன கொடூரங்களை பற்றிய ஒரு ஆவணப்படமும் நம்மிடம் கிடையாது.இது வெட்கக்கேடு தானே?!!!

படத்தைப்பற்றி  சொல்ல நிறைய இருக்கிறது,இனப்படுகொலைகளை பற்றி தொடர்ந்து விரிவாக எழுதவே அயற்சியாக இருக்கிறது,இப்படம் உருவான விதம் பற்றி மிக விளக்கமாக கொழந்த எழுதியிருக்கிறார்,அது முக்கியமான  கட்டுரை அதையும் அவசியம் படியுங்கள்.ஆகவே  நண்பர்கள் அவசியம் பார்த்து கருத்துக்களைச் சொல்லுங்கள்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-