நீதியரசர்களா?நிதியரசர்களா?!!! பாகம் 2


சினிமாவில் காட்டப்படும் நீதிமன்றக் காட்சி போலத்தான் நிஜத்திலும் இருக்கிறது,இன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரன்,விஜயேந்திரன் அனைவரும் நீதித்துறையுடனான 8 வருட தொடர் போராட்டத்துக்கு பின்னர் விடுதலை ஆகியுள்ளனர்,கூடவே கொலைக் குற்றம் சாட்டப்பட்ட,அப்ரூவராய் மாறிய, நாங்கள் தான் கொலை செய்தோம் என வாண்டடாக வண்டியில் ஏறிய அனைவருமே ஒருவர் மிச்சமில்லாமல் விடுதலை ஆகியுள்ளனர், 

இது  விருமாண்டி படத்தில் சின்னக்கோனார் பட்டியில் வைத்து கொண்டராசு நாயக்கரை, அவரின் கைக்குழந்தை,அவரின் உறவினர்கள்,அவரின் வேலையாட்கள் சகிதமாக  மொத்தம்  24 பேரை கொடூரமாக அரிவாள், ஏர், கடப்பாறை போன்ற ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும்  கொலைசெய்த கொத்தாளத்தேவரும், விருமாண்டியும் பின்னே அவர் சகாக்களும், சம்பவத்தை நேரில் பார்த்த  சாட்சியங்கள் எதுவும் ருசுவாகாததால்,  சந்தேகத்தின் பலனை எதிரிக்கு தந்து கொத்தாக விடுதலை ஆவார்களே?!!! அதே போலவே இருக்கிறது. ஒருக்கணம் இவர்கள் நீதியரசர்களா? நிதியரசர்களா? என சந்தேகம் வந்து போனது. 

நேற்று தான் காஸியாபாத் சிபிஐ நீதி மன்றத்தில் ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சுமார் ஐந்தரை வருடம் வழக்கு நடந்து ஒருவழியாக வெளியானது, சாட்சிகள் எதுவும் ருசுவாகாவிட்டாலும், சாட்சியங்களை அழித்த, மூடி மறைக்க முயன்ற குற்றத்துக்காகவும், குற்றத்தை ஒத்துக் கொள்ளாத கள்ளுளிமங்கத்தனத்துக்காகவும் தான் அந்த ஆயுள் தண்டனை தீர்ப்பு, இன்று அதற்கு கரும் புள்ளி போல நீதித்துறைக்கே களங்கம் போன்ற இந்த தீர்ப்பு பாண்டிச்சேரியில் இருந்து வெளியாகியுள்ளது.

சீ!!! இதை நினைக்கவே மிகுந்த அருவருப்பும், அயற்சியாயிருக்கிறது, ஏற்கனவே இதே பெயரில் போபால் விஷவாயு குற்றவாளிகளை நீதிபதிகள் இலேசான தண்டனை தந்து தப்ப விட்ட பொழுது எழுதினேன். அது பாகம்-1, இது பாகம் -2

நீதியரசர்களா?நிதியரசர்களா?!!! பாகம்-1

ஒரு நல்ல ஆத்திகனுக்கு மதகுருவின் தேவையே இல்லை , தன் விருப்பம் போல அவன் கடவுளைத் தொழுவான் ,மதகுரு போன்ற இடைத் தரகர்களால் பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள தூரம் தான் அதிகமாகும் , இன்றைய அவசரயுகத்தில் அவனவன் உள்ளத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டியது முக்கியம்.நீங்கள் எந்த மதகுருவிடம் சென்றாலும் இதைத் தான் போதிப்பார்கள், அந்த டெம்ப்ளேட் இங்கே.

குரங்கு போல தவ்விச் செல்லும் மனதை கட்டுப்படுத்துங்கள், அதற்கு தியானம் செய்யுங்கள், மனதை வழிக்குக் கொண்டு வர உடலைக் கட்டுப்படுத்துங்கள், அதற்கு யோகாசனம் செய்யுங்கள், பேராசைப் படாதீர்கள், கிடைத்ததைக் கொண்டு வாழுங்கள், சைவ உணவு உண்டு, இயற்கையோடு ஒன்றி வாழுங்கள், வருவாயில் சிறு பகுதியையாவது தர்மம் செய்யுங்கள், பொறாமை, அகங்காரம், கோபம் முதலியவற்றை விட்டொழியுங்கள், செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், உலகுடன் அன்பு எளிமை அழகுடன் உறவு கொள்ளுங்கள் !!!

இதை ஒருவரால் சுயமாக கற்றுணர முடியாதா?இதை கற்க ஒரு மதகுருவின் துணையும் ஆசியும் அவசியமா?இன்றைய சூழலில் இது போல எந்த ஒரு கார்பொரேட் சாமியாரின் டெம்ப்ளேட் மகுடிக்கும் மயங்காத நிஜ ஆசாமியாக இருக்க வேண்டும். போலி மத குருக்களால் அவர்கள் சார்ந்த மதத்துக்கே கேவலம் ,காஞ்சி பீடத்தை பிடித்த பீடை ஜெயேந்திரன் , சங்கர மடத்தை வம்புக்கு இழுக்கும் கருணாநிதி கூட கள்ள மௌனம் காத்து அநீதிக்கு துணை போயுள்ளார் ,சங்கர ராமன் மகனும் குடும்பத்தாருமே ஒரு கட்டத்துக்கு மேல் போராட முடியாது,என் உயிர் வெல்லக்கட்டி என்று சாட்சியத்தின் போது பிறழ்ந்து விட்டிருக்கின்றனர். இன்று வெளியானது   தாமதிக்கப்பட்ட நீதிமட்டுமல்ல,  மறுக்கப்பட்ட நீதியும் ஆகும்.

கடிதங்கள் மட்டுமே எழுத விரும்பும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இதற்கு எதிராய் கால் கடிதம் கூட எழுத மாட்டார் எனத் தெரியும் , குற்றமில்லாதவர், தன் மீது நீதிமன்ற வழக்கு இல்லாதார் யாருமில்லை, யாரும் இங்கே உத்தமரில்லை , யாருக்கும் வெட்கமில்லை , எனவே யார் தவறையும் தட்டிக் கேட்க யாருக்குமே தகுதியில்லை , இனி அநீதியை பொறுக்காதார் யாராயினும் தாமாக தற்கொலை செய்து கொள்ளுங்கள் , புதிதாய் கொலைகாரர்களாவது உருவாகாமல் இருப்பர் !!!
=======0000========