ஆல் இன் ஆல் அழகுராஜா AKA ஆல் இன் ஆல் காண்டாமிருகம்



ஆல் இன் ஆல் அழகுராஜா நேற்று தான் பார்த்தேன்,இது சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை முட்டாள் என நினைத்து எடுக்கப்பட்ட இன்னொரு படம், மற்றொன்று நையாண்டி, படத்தில் ஒரே சவசவ என பேசிக்கொண்டே இருக்கிறார்கள் கார்த்தியும், சந்தானமும் ,இதில் சந்தானம் தன்னை வாடா போடாவென கூப்பிடக்கூடாது என கார்த்தி ஸ்பெஷல் கண்டிஷன்  இயக்குனரிடம் போட ,சந்தானம்  அவரை நீங்க வாங்க  என செயற்கையாக அழைக்கிறார், ஹீரோக்கள் படத்தின் வசனத்திலும் கையை வைத்தால் இயக்குனர் என ஒருவர் எதற்கு தான் இருக்கிறார்?

கார்த்திக்கு 15 கோடி தந்து கோழி அமுக்குவது போல அமுக்கி விட்டதால், அவரை முதல் ஃப்ரேம் முதல் கடைசி ஃப்ரேம் வரை காட்டி நம்மை சாகடித்துள்ளார் ராஜேஷ் , அதே போலவே சந்தானம் கால்ஷீட்டும் பவுன் கணக்கானபடியால் அதையும் கடைசி ஃப்ரேம் வரை, ஐயகோ!!! .என்னால் 3 மணிநேர அன் கட் வெர்சன் பார்க்க முடியவில்லை [ரொம்ப முக்கியம்] ,

ராதிகா ஆப்தே என்னும் நல்ல மராட்டிய நடிகை அவருக்கு 80களின் அம்பிகா கணக்காக விக்,காதுக்கு பூ எல்லாம் வைத்து அழகூட்டி ஒரு உருப்படியான பாடலுக்கு ஆடவிட்டு அடுத்த ரீலிலேயே மும்பைக்கு பேக்கப் செய்து விட்டனர், அதற்கு பின்னர் கடைசி டைட்டில் கார்ட் வரை ஆளைக் காணோம், சென்னை எக்ஸ்ப்ரெஸ் படத்தில் தீபிகா படுகேன பேசிய இழவுத் தமிழை விட மிக நன்றாக இருந்தது இவர் தமிழ், பாவம் இவர்   சிரத்தையுடன்  நிறைய ரிகர்சல் எல்லாம் செய்து தமிழ் பேசினாராம், ப்ரொமோவில் சொன்னார்,என்ன பிரயோசனம்?,நிகழ்காலத்தில் அவர் என்ன ஆனார்? என அவரின் முன்னாள் லவ் இன்ட்ரெஸ்ட் பிரபு கூட கிளைமேக்ஸில் கேட்பதில்லை,

நரேய்ன் போன்ற அருமையான நடிகர்  சமீபத்தில் வந்த இரு படங்களில் அடுத்தடுத்து மொன்னையாக்கப் பட்டுள்ளார்,ஒன்று நையாண்டி, மற்றொன்று இது, மிக நல்ல நடிகரான நாசருக்கும் அதே கதி,படத்தை சகித்துக்கொண்டு  பார்க்க வைக்கும் ஒரே பிடிமானம் காஜல் அகர்வால் தான்,இவரை ஸ்பெஷல் 26 படத்திலிருந்து மிகவும் பிடித்து போனது,கமர்ஷியல் மொக்கைகளில் கூட தன் பெஸ்டை தருகிறார் கண்ணழகி,ஆனாலும் இவரது போர்ஷன்களில் அத்தனை கற்பனை வறட்சி, இவரையும் அரைலூசு ஆக்கி புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறார் ராஜேஷ்.

இதில் சந்தானத்தை பெண்   வேடத்தில் அத்தனை விகாரமாக காட்டியுள்ளார் , எங்கோ இருக்கும் வாழ்ந்து கேட்ட முன்னாள் ஹீரோ சுதாகரை கூட கலாய்க்கிறாராம் சந்தானம்,அதே போலவே குட்கா முகேஷையும் கலாயக்க அது படத்தில் இல்லை   , பாவம், நல்ல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ,அவரை இந்த விகாரமான பெண் மீது பித்தம் கொண்டது போன்ற பாத்திரம் தந்து தண்டித்திருக்கிறார், அவ்வை சண்முகி போலவே க்ளைமேக்ஸில் சந்தானத்தின் ரவிக்கையை  அவிழ்த்து காஜலுக்கு காட்டுகிறார் கார்த்தி, நாராசம்!!! , சரண்யா பிரபு இருவருமே நன்கு வீணடிக்கப்பட்டனர் ,விவேக் ஹர்ஷன் எடிட்டிங்காம், நன்றாகவே ஓப்பி அடித்துள்ளார்,இவர் வாங்கிய சம்பளம் உண்மையிலேயே ஜீரணிக்குமா?!!!  அடுத்த முறையாவது ராஜேஷ் ப்ரோமோஷனுக்கு செலவிடும் நேரத்தை எடிட்டருடன் செலவிடுங்கள்,, அப்படி இல்லாவிட்டால் ஹீரோவாக நடிக்க வந்துவிடுங்கள் ,இந்தக்  கொடுமைக்கு அதை தாங்கிக் கொள்வோம் ,

ராஜேஷ் அடுத்த படத்திலாவது படம் பார்ப்பவனை முட்டாள் என கருதாமல் இருந்தால் சரி, இந்தப் படத்துக்கு எல்லாம் விளக்கம் வேண்டாம் தான் ,இருந்தாலும் தருகிறேன். ஒரே நாளில் சிட் பண்ட் விளம்பரப் படம் எடுக்கின்றனர், அதில் கேனைத்தனமாக மங்களம் சிட்பண்டுக்கு நான் கேரண்டி என்கிறார் காஜல், இந்த மொக்கை சேனலில் விளம்பரம் பார்த்து, மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஒரே நாளில் கட்டுகின்றனராம், அதை சிட்பண்ட் அதிபர் [பாவம் v.s. ராகவன்] ஒரே இரவில் எடுத்து ஓடுகிறாராம், அதை மக்கள் அதே இரவில் கண்டு பிடித்து ,விடியலில் முதல் வேளையாக விளம்பர மாடல் காஜல் வீட்டு வாசலில் நின்று கோஷம் போட்டு பணத்தை திருப்பி கேட்கின்றனராம், அவரின் அப்பா முழுப்பணத்தையும் செட்டில் செய்கிறாராம்.

கார்த்தி காஜலை வீட்டில் இறக்கி விட்ட அதே இரவில்  இது அத்தனையும் நடக்கிறதாம், காஜல்இரவு  காதலை சொல்வார் என போன் கால் எதிர்பார்த்த கார்த்தி, காஜல் உடனே வருமாறு சொல்ல ,நடு இரவில் அங்கே சென்றால் இவை அனைத்தும் அவருக்கு தெரிய வருகிறதாம்,இதை  படிக்கவே எத்தனை கேவலமாக இருக்கிறது?, அத்தனை கேவலமாக இயக்கியுள்ளார் ராஜேஷ். இதையெல்லாம் எழுதனும் என்று எனக்கு மட்டும் ஆசையா? காமெடி படம் என்றால் கன்டினியூட்டி முக்கியம் இல்லை என விட்டுவிட்டீர்களா?

ஏனையா, ஒரு இரவை முடியக் கூட விடமாட்டீர்களா? அப்படி என்ன அவசரம்? அதில் ஒரு ஜம்ப், இரவு - பகல் கண்டினியூட்டி எத்தனை முக்கியம் திரைப் படத்தில்? இத்தனை மிக்ஸ் அப் ஏன்? கன்டினியூட்டி பார்க்க அசிஸ்டெண்ட் டைரக்டர் யாருமே இல்லையா? இல்லை எல்லோருக்கும் இயக்குனர் ராஜேஷ் என்றால் சிம்ம சொப்பனமா? எம்.எஸ் பாஸ்கர் முன்பொரு படத்தில் நல்ல வசனம் ஒன்று பேசுவார், வேண்டா வெறுப்பாய் புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம் என்று, இந்தப்படத்தில் அவரும் இருக்கிறார், இந்தப்படம் அழகுராஜா அல்ல காண்டாமிருகம்.

இதில் ஒரே ஒரு ஆறுதல், கல்லில் நாரை உறிக்கும் பலே தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜாவைக் கூட ரைட்ராயலாக ஏமாற்றியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ், எத்தனுக்கு எத்தன் வையகத்தில் உண்டு என உணர்ந்தேன்,இதே K.E.ஞானவேல் ராஜா [இனிஷியல் ரொம்ப முக்கியம்] பீட்ஸா என்னும் பேரை மட்டும் வைத்துக்கொண்டு ,பீட்ஸாவின் இரண்டாம் பாகம் என நம்பிப் போன எத்தனையோ ரசிகர்களை ரைட்ராயலாக ஏமாற்றியியது நினைவருக்கும், புளிசாதத்துக்குள்ளே முட்டையை வைத்து பிரியாணி என சத்தியம் செய்தது போன்ற மோசடி அது,சரவணபவன் லோகோவைத் திருடி த்ராபையான ஓட்டல் துவங்கி உள்ளே ஊசிப்போன பண்டம் விற்றது போன்ற மோசடி அது,  நவீன ஜேப்படி அது!!!