கருத்த லெப்பை குறு நாவல் - கீரனூர் ஜாகிர் ராஜா

கீரனூர் ஜாகிர் ராஜாவின் கருத்த லெப்பை,படிக்க ஆரம்பித்தவுடன் கீழே வைக்கவிடாமல் பறக்கிறது,நாம் அதிகம் கேள்வியுற்றிராத யாரும் எழுதத் தயங்கும் சாயபுமார் சமூகத்தின் கதைக்களம்,ஜாகீர் ராஜா அதில் ஒரு அங்கம் என்பதால் எந்தத் தயக்கமும் இன்றி தனக்கு எழுத களம் அமைத்துக்கொண்டுள்ளார்,

குறிப்பிட்ட சமூகத்துக்கும் ,வட்டாரத்திற்கும் உரிய வட்டார வழக்கு எழுத்து நடை,சுய எள்ளல்கள்,டார்க்ஹ்யூமர்,யாரும் எழுத யோசிக்கும் வக்கிரம் இல்லாத பாலியல் மொழி ,அதில் புதைந்திருக்கும் குரூரம் நிஜம் என ஸ்ட்ராங்கான கண்டெண்ட், கேரளாவில் கயிறு திரிக்கும் கம்பெனி வைத்திருக்கும் ராவுத்தர்களும்,அவர்களிடம்  கணக்கெழுதவும்,எடுபிடி வேலைகளுக்கும் தமிழக எல்லையிலிருந்து போகும் லப்பைமார்களும்,அவர்களுக்குள் பிறவியிலேயே கனன்று கொண்டிருக்கும் உட்பூசலையும் மிக அழகாக எழுத்தில் வடித்திருக்கிறார் .

ஒரே ஊரில் வசித்து,ஒன்றாய் புழங்கி, ஒன்றாய் வழிபடும் ராவுத்தர்கள் லப்பைகளை வெறுக்கும் பிரதான காரணம்,அவர்கள் உண்ணும் மாட்டுக்கறியாம்,சமூகத்தில் பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்தில் இருக்கும் ராவுத்தர்கள் லப்பைகளை கீழாக எண்ணி,சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கருவருக்கும் இடங்கள் நாவலில் மிக நுட்பமாக சொல்லப்பட்டுள்ளன.

ஜாகிர்ராஜாவின் படைப்பில் எங்கும் சமரசம் என்பதே கிடையாது,  ஒருக்கால் பிற்போக்கு ஆசாமிகள்  எவரேனும் இவரைப் படிக்க நேர்ந்தால் தேடிப்போய் அடி சர்வ நிச்சயம்.எப்படி? சிறிதும் பயமோ தயக்கமோ இன்றி எழுதுகிறார் என ஆச்சர்யம் ஏற்படுகிறது,இவரின் பிற படைப்புகள் மீன்காரத் தெரு,வடக்கே முறி அலிமா, துருக்கித் தொப்பி. அதில் வடக்கே முறி அலிமா படித்து விட்டேன்,அதுவும் பல கலாச்சார அதிர்ச்சிகளை தோற்றுவிக்கும் நாவல்.

கதைக்குள் வரும் கதாபாத்திரங்களான அம்மா ஃபாத்துமா, அப்பா அம்பா,அக்காள் ருக்கியா,அவளின் பைத்தியக்கார கணவன் பதுருதீன், அவனின் அண்ணன் ஈசாக், கருத்த லெப்பை வளர்க்கும் பூனையான ஹிட்லர், சாம்பான் மாடத்து பாவா, கொடிக்கால் மாமு, சின்னப் பேச்சி,மிட்டாய் அமீது,அகமது கனி ராவுத்தர்,சிறுவன் அன்சாரி, நாணி, என்று சிருஷ்டித்து 70 பக்கங்களே கொண்ட குறுநாவலுக்குளே எத்தனை வீர்யமான ஒரு படைப்பை தந்திருக்கிறார் ஜாகிர் ராஜா. இதை விஸ்தரித்து இன்னும் விரிவாய் எழுதுவதற்கு  களமிருந்தும் இதை குறுநாவலாகவே வார்த்திருக்கிறார் ஜாகிர் ராஜா . ஒரு வேளை இதை நறுக்குத் தெரித்தார்போல சொன்னதனால் தான் இத்தனை பாதிப்போ என நினைக்கத் தோன்றுகிறது.

கருத்த லெப்பை ரொம்ப ஸ்ட்ராங்,முற்போக்கு வாசிப்பாளர்களுக்கு மட்டுமானது,கருத்த லப்பை நாவலின் விலை 50 ரூபாய் ,ஆழி பதிப்பகம் வெளியீடு, அகநாழிகை புத்தகக் கடையில் கிடைக்கும்.பத்துப் பக்கங்களுக்கு ஒரு எழுத்துப் பிழை உண்டு,ஆனாலும் படிக்க தடையில்லாத பிழைகள் தான் அவை.கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் இப்படி வெகு சில படைப்புகள் வெளியாகி ஆச்சர்யமூட்டுகின்றன.

ஜாகீர் ராஜாவின் எழுத்தாளுகைக்கு ஒரு உதாரணமாக இந்த 2 பக்கங்களைத் தந்திருக்கிறேன்,நாம் வாழும் சமூகத்தில் பெரிய மனிதர் போர்வையில் நீக்கமற நிறைந்திருக்கும் பீடோஃபீல்கள்  [Phedophiles] பற்றி தினத்தந்தியில் நிறைய படித்திருப்போம், ஆனால் அப்படி ஒரு குரூரமான பிறவியை நவீன இலக்கியத்தில் ரத்தமும் சதையுமாக காண வைக்கிறார் ஜாகிர் ராஜா,எத்தனை? சொற்சிக்கனம் , ஆனால் அது தோற்றுவிக்கும் விளைவைப் பாருங்கள், இது நானும் பாலியல் எழுதுகிறேன் என கிளம்பும் முன் ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியது.


எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் வலைத்தளம் இது
http://jakirraja.blogspot.ae/

ஜாகிர்ராஜாவின் மூன்று படைப்புகளை ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது, 
கருத்த லெப்பை ,விலை=50, 
வடக்கே முறி அலிமா=100,
காபிர்களின் கதைகள் தொகுப்பு விலை Rs.160,

மீன்காரத் தெரு =60 மருதா பதிப்பகம் வெளியீடு
ஜின்னாவின் டைரி = 150,எதிர் பதிப்பகம் வெளியீடு,
தேய்பிறை இரவுகளின் கதை=120 பாரதி புத்தகாலயம்,
துருக்கி தொப்பி=125,அகல் வெளியீடு, 

பொதுவாக ஜாகிர்ராஜாவின் ஆக்கங்கள் பேராசை இல்லாத பதிப்பகங்களால் தரமாக, பாக்கெட்டில் வைத்து பயணங்களில் படிக்கும் வண்ணம்  அச்சேறி வருகின்றன, கொடுக்கும் காசுக்கு மிகவும் மதிப்புள்ள படைப்புகள் அவை.