இயக்குனர் கே.பாலசந்தரின் நிழல் நிஜமாகிறது [1978] அற்புதமான மாஸ்டர் பீஸ்



16 வயதினிலே பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என இயக்குனர்  பாலசந்தர் மனமாரப் பாராட்டினார்,அந்த அளவுக்கு   மயிலும் சப்பாணியும் அவர் மனதை  ஆக்கிரமித்திருந்தனர்.அதற்கு தன் பாணியில் மரியாதை செய்ய விரும்பிய இயக்குனர் தன் பாணியில் நிழல் நிஜமாகிறது படத்தை எடுத்தார்.16 வயதினிலே ஒரு  வண்ணப்படம்,

ஒரு வருடம் கழித்து வந்த நிழல் நிஜமாகிறது கருப்பு வெள்ளைப் படம், தன் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான பி.எஸ்.லோகநாத் தான் இதற்கும் ஒளிப்பதிவு, தன் ஆஸ்தான புகைப்படக்கலைஞர் E.K.S.நாயருக்கு இப்படத்தில் மறக்க முடியாத ஆத்ம திருப்தியை அளித்த பணியை அவர் கொடுத்தார். படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் மொத்தம் 22 ஸ்டில்கள் வரும்,அத்தனையும் புதுமுகம் ஷோபா அவர்களின் பிரத்யேக போட்டோ ஷூட்கள்,


அவை மேக்கப் டெஸ்டின் போது எடுத்தவை,அது அத்தனையையும் மிக அழகாக படத்தின் டைட்டில்ஸ்க்ரோலில் பயன்படுத்தினார் இயக்குனர், அவை அத்தனையும் பாலசந்தருக்குப் பிடித்த கருப்பு பின்னணியில்  எடுக்கப்பட்ட படங்கள் ,புதுமுக நடிகை என்ற எண்ணம் மக்களுக்கு தோன்றா வண்ணம் ஷோபாவை மக்களும் ஏற்றுக்கொண்டனர்.
1969ஆம் ஆண்டு வெளியான எழுத்தாளர் பம்மனின் கதையைத் தழுவி கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய அடிமகள் என்னும்  மலையாள திரைப்படத்தின் கதை உரிமையை வாங்கி திரைக்கதை எழுதி இயக்கினாலும், முழுக்க முழுக்க தன் பாணியில் மயில்,சப்பாணி என்கிற கோபாலகிருஷ்ணன் கதாபாத்திரங்களுக்கு ஈடான இந்த திலகம் [ஷோபா] ,செவிடன் என்கிற காசி [அனுமந்து] கதாபாத்திரங்களைப் படைத்தார் இயக்குனர்.

சிலக்கம்மா செப்பிண்டி என்னும் தெலுங்கு திரைப்படம் Eranki Sharma [பாலசந்தரின் Aaina -அரங்கேற்றம் இந்தி வடிவத்தின் அசோசியேட் டைரக்டர்] இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியானது இப்படமும் அடிமகள் படத்தை தழுவி உருவான படமே, இதில் தமிழில் கமல்ஹாசன் செய்த வெளியூர் நண்பன் கதாபாத்திரத்தை ரஜினிகாந்த் செய்திருந்தார், ரஜினிகாந்திற்கு தெலுங்கில் இதுதான் கதாநாயகனாக முதல் படம். சுமித்ராவின் கதாபாத்திரத்தை தெலுங்கில் சங்கீதா செய்திருந்தார், நடிகை ஷோபா செய்த ஏழை பணிப்பெண் கதாபாத்திரத்தில் தெலுங்கில் ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். சரத்பாபு செய்த சகோதரன் கதாபாத்திரத்தில் லக்‌ஷ்மிகாந்த் நடித்தார் , அனுமந்து நடித்த வேலைக்காரன் கதாபாத்திரத்தில்  நாராயணராவ் நடித்திருந்தார். எல்லோரும் இப்படத்தின் தழுவல் தான் நிழல் நிஜமாகிறது திரைப்படம் என்பர்,ஆனால் உண்மை அதுவல்ல,தன் படத்தில் அடிமகள் படத்துக்கே க்ரெடிட் தந்தார் இயக்குனர்.

இன்று பல உலக சினிமா இயக்குனர்கள் ஃபிலிமில் தான் உயிரோட்டமான சினிமாவைப் படைக்க முடியும், டிஜிட்டல் எனக்கு ஒப்பவில்லை என்று சொல்கிறார்களோ? அதே போல பாலசந்தரும் கருப்பு வெள்ளையில் தான் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு தத்ரூபமாக உயிரூட்ட முடியும் என்று நம்பினார். வண்ணப்படத்துக்கு வியாபார ரீதியான உத்திரவாதம் இருந்த அன்றைய சூழலில் கருப்பு வெள்ளையிலேயே படங்கள் செய்தார், அவை இன்றும் தனித்துத் தெரிகிறது, பேசப்படுகிறது.

கமல் தன் குருவுக்காக சின்னஞ்சிறு வேடம் முதல் பல்லன் , சோடாபுட்டிக் கண்ணாடி எல்லாம் அணிந்து , தான் உச்சத்தில் ஆணழகன் அந்தஸ்தில் நடித்து வந்த   நாட்களிலும்  தன்னைத் தாழ்த்தி நடித்திருக்கிறார். தப்புத்தாளங்கள் படத்தில் அப்படி மனைவியால் ஏமாற்றப்படும் அவலட்சணமான சாயபு வேடத்தில் நடித்திருப்பார்.அப்படிப் பட்டவருக்கு இதில் தூண் போன்ற சஞ்சீவி என்னும் ஒரு ஏழைப் பங்காளன் கதாபாத்திரம். இதில் இவர் ஒரு சிவில் இஞ்சினியர், ஒரு கட்டிட வேலை இன்ஸ்பெக்‌ஷனுக்காக  ஆறு மாத வேலையாக சென்னை வருவார். அங்கே நண்பர் சரத்பாபுவின் வீட்டின் எதிரே இருக்கும் மன்மத நாயுடு[மௌலி] வீட்டில் தங்கியிருப்பார்.

நண்பன் வெங்கடாசலத்தின் தங்கை இந்துமதி நாட்டியப்பள்ளி நடத்துகிறார், ஆண்களை வெறுப்பவர், இவரைக் கண்ட நாள் முதல் இவர்கள் இருவருக்கும் எதைத் தொட்டாலும் குற்றம்,என்னும் ரீதியாக சண்டை நிகழ்கிறது,அவரின் திமிரை இவர் அடக்கி இறுதியில் மணம் முடிப்பார். தன் வீட்டில் வேலை பார்த்த ஏழை சமையல்காரப்பெண் திலகத்தை ஆசை வார்த்தைகள் கூறி சுமித்ராவின் அண்ணன் வெங்கடாசலம் தன் ஆசைக்கு இணங்க வைத்து கர்ப்பமாக்கி விடுவார்.

வெங்கடாசலம் மனம் திருந்தி வந்து ஏற்றுக் கொள்ளும் வரை திலகத்தை ஒரு குடிசை எடுத்து தங்க வைப்பார் கமல், துணைக்கு அனுமந்துவை அமர்த்திவிட்டு தன் வேலை விஷயமாக சென்றவர் வாரா வாரம் வந்து பார்த்தும் செல்வார்.இந்நிலையில் அக்கம் பக்கத்தவர்கள் ஷோபாவுக்கும் அனுமந்துவுக்கு என்ன உறவு? என அவர் அம்மாவின் பேச்சைக் கேட்டு பஞ்சாயத்துக்கு வர, அனுமந்து இக்குழந்தைக்கு நான் தான் தகப்பன், திலகத்துக்கு நான் தான் கணவன் என்பார்,இதில் பேட்டை வஸ்தாதாக வந்து பகலில் பஞ்சாயத்து செய்துவிட்டு இரவில் திலகத்தை அடைய வரும் இயக்குனர் நட்ராஜை சாதுவாக இருந்த இவர் மிரண்டு ஒரு டீக்கடையில் வைத்து வெளு வெளு என வெளுப்பார்.

இந்நிலையில் திலகத்துக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. ஒரு பக்கம் கமல் வெங்கடாசலத்தின் மனதை சாந்தமாக கரைக்க, மறு பக்கம் அனுமந்து சாதுவாக இருந்தவர் மிரண்டு அரிவாளுடன் சென்று மிரட்டி அவர் செய்த தவற்றை யோசிக்கச் செய்கிறார். தன் தங்கை இந்துமதி தன் நண்பன் சஞ்சீவியை விரும்புவதை மன்மத நாயுடு மூலம் ஆணித்தரமாக அறிந்த வெங்கடாசலம் அவள் சஞ்சீவியின் மீது இருக்கும் காதலை ஒத்துக்கொண்டால் திலகத்துக்கு தான் இழைத்த அநீதிக்கு விமோசனம் தேடத் தயாராக இருக்கிறேன் என்று தன் மன்னிப்பை அங்கே பணயம் வைப்பார்.

இவர் ஊராரைக் கூட்டி மேள தாளத்துடன் திலகத்தை அழைக்கச் செல்கையில் திலகம் ஒரு அயோக்கியனைக்கூட ஒரு பெண் மன்னித்து ஏற்பாள்,ஆனால் ஒரு கோழையை எப்போதும் ஏற்க மாட்டாள்,என் குழந்தைக்கு யார் வேண்டுமானாலும் தகப்பனாக இருக்கக்கூடும்,ஆனால் எனக்கு ஏற்ற கணவன் அனுமந்து தான் என்று புரட்சிகரமான முடிவை எடுப்பாள்,பணக்காரத் திமிரை அங்கே நசுக்குவாள், அதில் கமல் மிகுந்த மகிழ்ச்சியடைவார், அவரின் அம்முடிவை தான் கூட எதிர்பார்க்கவில்லை,என்று உச்சிமோர்ந்து பாராட்டி அனுமந்துவையும் ஷோபாவையும் சேர்த்து வைப்பார். உன்னை விட ஒரு நாள் சின்னவனாக இருந்தாலுமே உன் காலில் விழுந்திருப்பேன் என்பார்.

 காம்ரேட் கமல் இதில் எல்லா காட்சிகளிலுமே சிகரெட்டுடன் தான் இருப்பார். கூடவே செயின் ஸ்மொக்கர்களிடம் இருக்கும் வறட்டு இருமலையும் அழகாக வசனத்தினூடே பயன்படுத்தி இவர் தோன்றும் காட்சிகளை பேசும் வசனங்களை இயற்கையானதாக மாற்றி விடுவார்.படத்தில் அவர் ஒரு கம்யூனிஸ்ட் முதல் காட்சியிலேயே ஒரு பழக்கார அம்மாளின் கூடையை பஸ் க்ளீனர் மேலேயிருந்து தூக்கி போட பழங்கள் சிதறும்,


அவர் அழுது புலம்ப,கமல் அவன் சட்டையை கொத்தாக பிடித்து அறை விட்டு பழங்களை பொறுக்கச் சொல்லுவார்,பின்னர் இயல்பாக தன் விட்டுப்போன வாட்ச் பட்டையை சரி செய்வார். இவரது சிகரட் லைட்டரை சுமித்ரா எடுத்து ஒளித்து வைத்ததை திலகம் மூலம் அறிந்தவர், அவரின் அறைக்குள் சென்று அவரை மூர்க்கமாகக் கட்டிப் பிடிப்பார். லைட்டரை கொடுத்தால் விட்டு விடுகிறேன் என்பார், சுமித்ரா இவரது செய்கையை எதிர்பார்த்திருக்க மாட்டார், அங்கே இவரது லைட்டரை தலையணை அடியில் இருந்து எடுத்து வீசி எறிவார்.

அங்கே  வரும் ஒரு அருமையான வசனம்,ஏண்டா படவா உனக்கு ஒளிந்துகொள்ள இந்துமதி அம்மாவின் தலகாணி கேக்குதா?!!!  அவரின் அந்த ஆண்செருக்கை அடுத்த காட்சியிலேயே அனுமந்து நொறுக்குவார்,தான் ஷோபாவிடம் காதலைச் சொல்ல வழி தெரியாமல் கட்டிப்பிடித்துவிட்டதாகச் கூறுவார்,


தனக்கு 25 பைசாவுக்கு இவர் ஏதேனும் வேலை தந்தால்,அதில் மல்லிகைப்பூ வாங்கித்தந்து ஷோபாவிடம் தந்து தன்னை மன்னிக்கும்படி கேட்பேன் என்பார், கமல் 50 பைசாவாகத் தந்தவர் ,அதை தனக்கு ஒரு பாடமாகவே எண்ணி, சுமித்ரா சென்றிருக்கும் கோவில் வாசலில் அவரின் செருப்பை கையில் ஏந்திக் காத்திருப்பார்,அவரிடம் அவர் அறையில் வைத்து ஆண்மையின் செருக்கில் தவறாக நடந்தமைக்கு மன்னிப்பு கேட்கும் அந்த இடம் மிக அழகான ஒரு காட்சி.

கமல்ஹாசனின் நாட்டியத்திறமையை படத்தில் உபயோகப்படுத்த நல்ல சமயம் பார்த்த இயக்குனர், இப்படத்தின் ஒரு காட்சியில் சுமித்ரா கடைக்குச் சென்றிருந்த நேரத்தில் அங்கே குழுமியிருக்கும் நடனம் கற்க வந்த சிறுமிகளுக்கு பரத் வகுப்பெடுப்பார், கமல்ஹாசன் வெற்று மார்புடன், பெல்பாட்டம் அணிந்து அங்கே பரதம் ஆடுவார்,உள்ளே நுழைந்த சுமித்ராவுக்கு அது ஆச்சர்யமாகவும்,அவரை கற்பூர வாசம் தெரியாத கழுதை என முன்பு திட்டியதற்கு நாணமாகவும் இருக்கும்,அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கல்லுளிமங்கத்தனமாக கமலின் சட்டையை விட்டெறிவார்.மிக அருமையான காட்சியது,


இயக்குனர்  பாலசந்தரால் கமல்ஹாசனை முழு நடனக்கலைஞனாக தோன்ற வைக்கமுடியாமலே போனது,ஆனால் அவரின் ஆப்த நண்பர் கே.விஸ்வநாத்தின் இயக்கத்தில் வெளியான சலங்கை ஒலி பார்த்துவிட்டு மிகவும் சிலாகித்தார்,உச்சிமோந்தார்,அதன் பின்னர் அப்படத்துக்கு மரியாதை செய்யும் வண்ணம் தன் பாணியில் ஒரு இசைக்கலைஞன் பற்றி இயக்கிய படம் தான் சிந்து பைரவி.

 

சுமித்ரா கமலின் ஆண்மை கம்பீரத்தில் தன்னை மெல்ல தோற்கும் இடங்கள் மிக அருமையானவை, அதை இலக்கணம் மாறுதோ பாடலில் மிக அழகாக மாண்டேஜ் ஷாட்களாக சித்தரித்திருப்பார் இயக்குனர், கலைப் பொக்கிஷம் அவை.அப்பாடலை இங்கே பாருங்கள் https://www.youtube.com/watch?v=gPFHSbywEic



இப்படத்தில் ஷோபாவும் அனுமந்துவும் தான் பிரதானமானவர்கள், ஷோபாவின் கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளத்தை அப்படியே பயன்படுத்தினார் இயக்குனர்.அதில் வெற்றி கண்டார்.அவர் ஒரு மான் போல தாவித்தாவி வீட்டை பெருக்குவது,அரிசி கல் நீக்கி புடைப்பது,லாவகமாக விரைவாக சமையல் முடிக்கும் காட்சிகள்,எஜமானி சுமித்ராவைப் போலவே காற்கறிக் குப்பையில் தனக்கு கண்ணாடி செய்து அணிந்துகொள்வது, தன்னை அரசியாக பாவனை செய்வது,எஜமானி இந்துமதி அம்மாவின் ஏகாதிபத்யத்தை எதிர்க்க முடியாமல் இருந்தவர்,


அதை கமல் எதிர்க்க அதற்கு மறைந்து நின்று வாயைப் பொத்தி சிரிப்பது, காது மந்தமான வேலைக்காரன் அனுமந்துவின் மீது இவர் கொண்டிருக்கும் இரக்கம், ஆச்சர்யம், அன்பு எல்லாமே மிக அற்புதமானவை, கிளி ஜோசியம் கேட்டு நல்ல கணவன் வருவான் என நம்பிக்கையோடு இருந்தவரை காமாந்தக எஜமானர் சரத்பாபு நம்பிக்கை வார்த்தைகள் பேசி பெண்டாளும் காட்சிகள் அத்தனை தத்ரூபமான சித்தரிப்புகள், அப்போதும் இப்போதும் ஏழை பணிப்பெண்களை எஜமானர்கள் பார்க்கும் பார்வையில் மாற்றமேதுமில்லை, சந்தர்ப்பம் கிடைக்கும் வரை தான் யோக்கியர்கள்,அதை மிக அருமையாக சொன்னார் இயக்குனர்.

நிழல் நிஜமாகிறது படத்தில் ஷோபா தான் நாயகி, அனுமந்து தான் நாயகன்,கமல்ஹாசன்,சரத்பாபு,சுமித்ரா, மௌலி இவர்கள் எல்லாம் உப கதாபாத்திரங்கள் தான். இதில் அனுமந்துவிடம் சப்பாணி கமல்ஹாசனின்  பாதிப்பை ஒருவர் பார்க்கவே முடியாது, இத்தனைக்கும் இவரது அம்மா புகையிலைக்காரி இவரை சப்பாணி என்றும் அழைப்பார்,ஆனால் செவிட்டுப் பிணம் என்றே அதிகம் அழைப்பார். சஞ்சீவி [கமல்] இவரிடம் அறிமுகமாகையில் உன் பெயர் என்ன என்று கேட்பார், செவிடன் என்பார் அனுமந்து, உன அம்மா எப்படி கூப்பிடுவார்? செவிட்டுப் பொணம் என்று அனுமந்து சொல்ல ,வருந்தியவர்.

 நீ போய் உன் அம்மா நீ பிறந்த போது ஒரு பெயர் வைத்திருப்பார்,அது என்ன என்று கேட்டு வந்து சொல்லு என்பார். மறுநாள் அனுமந்து இவரிடம் ஆவலுடன் வந்து தன் பெயர் காசி என்பார். சரி நான் இனி அப்படியே கூப்பிடுகிறேன் என்றவர் அனுமந்து படியிறங்குகையில் காசி எனக்கூப்பிட, அவர் முதன் முறையாக தன்னை ஒருவர் கௌரவமாக பெயர் சொல்லி கூப்பிட்ட ஆனந்தத்தில் இவரை நன்றியுடன் பார்க்க,கமல் பெயர் நன்றாக இருந்தது,அது தான் கூப்பிட்டுப் பார்த்தேன் எனச் சொல்ல, அனுமந்து காலில் விழுவார், அவரைத் தூக்கிய கமல் அட செவிடா என அக்காட்சியை முடித்து வைப்பார், இப்படி நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் அடுத்தடுத்து வரும். , தன்னளவில் தனித்து அப்பாத்திரத்திற்கு உயிரூட்டியிருப்பார் அனுமந்து.
அனுமந்துவின் இயற்பெயர் அனந்து,இவர் ஒரு நாடக நடிகரும் கூட,இவரின் ஒரு சமையல்காரர் கதாபாத்திரத்தை கண்ட இயக்குனர் இவருக்கு இந்தப் படத்தில் வரும் சுமித்ரா வீட்டின் முரட்டுவேலைகளைச் செய்யும் வேலைக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். மனிதர் அசத்தியிருப்பார். பாலசந்தரின் நூல்வேலி படத்திலும் இவருக்கு வீட்டு வேலைக்காரன் கதாபாத்திரம் தான்.

பின்னாளில் கவிதாலயாவின் சகோதர நிறுவனமான கலைவாணி பிக்சர்ஸ் தயாரிப்பில் மௌலி இயக்கிய அண்ணே அண்ணே படத்தில் இவர் மௌலிக்கு டிரைவர். இவரை நான் மேற்கு மாம்பலத்தில் ஏரிக்கரை தெருவில் வைத்து அடிக்கடி பார்த்துள்ளேன்,மிகுந்த குடிப்பழக்கம் இருந்தது சிவந்த கண்களிலும்,பலநாள் தாடியிலும் தெரியும்,இவர் 2003 ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் இறந்து விட்டார்.இவர் பாலசந்தர் மற்றும்,மௌலி அவர்கள் படங்களில் தொடர்ந்து கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார்.

இதில் மன்மத நாயுடுவாக வரும் மௌலியின் கதாபாத்திரம் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம். சரத்பாபுவிடம் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் சமையல்காரி திலகம் பற்றி ஆர்வமாக விசாரித்தவர்.  கொஞ்சோண்டு பாத்துட்டு தர்ரேனே கூப்பிடுடா, என்பார். பின்னொரு சமயத்தில் கமலிடம்  பொம்பள வாசன வர்ரதே, இந்த செண்டை போட்டால் ஆம்பள பொணம் எழுந்து பொம்பள பிணத்த தேடிக்கொண்டு போயிடும் போலருக்கே. வாத்ஸாயனா என்பார்.  எத்தனை க்ரியேட்டிவிட்டியுடன் இப்படத்துக்கு காமெடி ட்ராக் எழுதி இருப்பார்.


தமிழ் சினிமாவில் சற்றும் ஆபாசமின்றி voyeurism தொனிக்கும் கதாபாத்திரங்களில் முதன்மையானது மன்மத நாயுடு கதாபாத்திரம்,மௌலி அவர்கள் 1973ல் வெளியான சூர்யகாந்தி திரைப்படத்திலேயே அறிமுகமாகிவிட்டாலும், நடிப்பில் முறையான அங்கீகாரம் நிழல் நிஜமாகிறது படத்தில் கே.பாலசந்தர் அவர்களால் தான் அமைந்தது.ஒரே பார்வையாலேயே கடந்து போகும் பெண்ணின் அங்க அளவுகளையும் எடையையும்  துல்லியமாகச் சொல்லிப் பெருமை பட்டுக்கொள்வார்,


யாராவது உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா?என்று ஏதாவது புத்திமதி சொன்னால்,நான் அரசமரத்தடிப் பிள்ளையாராட்டம், ஹார்ம்லெஸ் ஃபெல்லொ,பார்க்கிறதோட சரி,அழகை ரசிப்பேன்,அடைய நினைக்க மாட்டேன் அவ்வளவு தான் என்பார்.அப்படத்துக்காக தன்னுடைய காமெடி ட்ராக்கிற்கு 16 சீன்கள் இவரே எழுதி இயக்குனரிடம் தந்து படத்தில் சேர்த்தாராம்.இயக்குனர் முழு சுதந்திரம் தந்து பணியாற்ற வைத்ததை அவ்வப்பொழுது பொதுமேடைகளில் நினைவுகூர்வார் மௌலி.


மௌலி அவர்களின் முழுப்பெயர் T. S. B. K. Mouli,அதன் விரிவாக்கம் திருவிடைமருதூர். சம்மந்தமூர்த்தி கனபாடிகள்.பால்கிருஷ்ண சாஸ்த்ரிகள் .மௌலி.என்பதாகும்,இப்பெயரை  படிக்கையில் தில்லுமுல்லு படத்தில் ரஜினியின் அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமாள் சந்திரன் என்னும் பெயர் நினைவுக்கு வரும்,அப்பெயரை விட பெரிதாக இருக்கும்.

இவரின் இயல்பான நடிப்புக்காகவே நான் நாதஸ்வரம் சீரியல் பார்ப்பேன்.அதில் பல நீளமான ஷாட்களை[அதிக பட்சம் 18 நிமிடங்கள்]  ஒரே டேக்கில் ஓக்கே செய்து பிரமிப்பூட்டும் திறமைசாலி நடிகர்.




ஒருவிரல் கிருஷ்ணாராவ் பாலசந்தரின் எல்லா படங்களிலுமே இருப்பார். இப்படத்தில் ஷோபாவுக்கு இருக்கும் ஒரே உறவினர் மிகுந்த கோபக்காரர், அதில் அவர் சலவைத் தொழிலாளியாதலால்,அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அக்காட்சிக்கான  சூழலையும்,துணியின் தரத்தை, வண்ணத்தை, அது சாயம் போகும் தன்மையையும் ஒப்பிட்டு இணைத்து பேசுவது போல இயல்பான நகைச்சுவையில் மௌலி அவர்களை வைத்து எழுதப்பட்டிருக்கும். அப்படம் பார்க்கையில் கவனித்துப் பாருங்கள்.பல சுவையான அம்சங்கள் பிடிபடும்.உதாரணமாக சுமித்ரா இவரிடம் ரொம்ப சின்னப் பொண்ணா இருக்காளே?பொண்ணு எப்படி,இவர் ,சில துணிங்க பழசாயிட்டாலும் சாயம் போகாதும்மா,அது போல இவ என்பார்.

இப்படத்தில் வரும் கம்பன் ஏமாந்தான் பாடல் என்ன ஒரு நவீனமான ,நளினமான ஈவ் டீசிங் பாடல்?!!!,அதில்  என்ன ஒரு இருள் கவிந்த ஒளிப்பதிவு, கமல்ஹாசனின் குறும்பு சுமித்ராவின் சீற்றம், சரத்பாபுவின் பம்மாத்து, அத்துடன் கவிஞரின் பாடல் வரிகள் ,வசீகரம்.


இப்பாடல் நிகழும் இடம் ஹைதராபாத் சாரதி ஸ்டுடியோ, இப்படத்தில் ஷோபாவின் கிராமம் திருவிடந்தை, ஷோபா அவர்கள் தன்னை அரசியாக கற்பனை செய்யும் காட்சிகள் அங்கே எடுக்கப்பட்டன, அவருடன் அவரது கண்டிப்பான உறவினர் ஒருவிரல் கிருஷ்ணாராவ் மந்திரியாக வலம்  வருவார். கமல் சுமித்ராவின் எதிரெதிர் வீடு ஆளரவமற்ற சாலை இயல்பாக இருக்க தேடியதில் சாரதி ஸ்டுடியோ அப்படி அமைந்தது. இதில் கமல் தங்கியுள்ள வீட்டிற்கு பி.எஸ்.லோகநாத் அவர்கள் செய்த  ஒளியமைப்பை பாருங்கள்.



இப்படத்திற்கு உதவி ஒளிப்பதிவு ரகுநாதரெட்டி,ரகுநாத ரெட்டி அவர்கள் கவிதாலயாவுக்கு பணியாற்றியது போக சின்ன வாத்தியார் தாலாட்டு கேக்குதம்மா போன்ற நிறைய வெளிநிறுவனப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார், ஆனால் அவரின் குருவான பி.எஸ்.லோகநாத் அவர்கள் பாலசந்தர் அவர்களிடம் மட்டுமே சுமார் 55 படங்கள் பணியாற்றியிருக்கிறார்,அதில் ரகுநாத ரெட்டி உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், பி.எஸ் லோகநாத்துக்கு பின்னர் சுமார் 25 படங்கள் பாலசந்தருடன் பணியாற்றினார்.
அப்பாடலை இங்கே பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=CvgO_P-xlgs&feature=youtu.be


இப்படம் கட்டுக்கோப்பான கலைப்பெட்டகம், எத்தனை வருடம் கழித்துப் பார்த்தாலும் அதன் புதுமை மெருகேறிக்கொண்டே இருக்கிறது,இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் மாஸ்டர் பீஸ் இப்படம்,இதன் முன் வடிவங்களான அடிமகள் [மலையாளம்]சிலக்கம்மா செப்பிண்டி[தெலுங்கு] அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டுத் தெரியும் ஒரு Auteur ரின் ஆக்கத்தை ஒருவர் உணரலாம்.நடிகை சுமித்ராவை அழகாக ரசிக்கும் படி காட்டிய திரைப்படம் இது,அதிலும் அவரின் ஊரைக் குறிக்கும் படி குண்டூர் மிளகாய் இது,அத்தனை லேசில் காரம் குறையாது என்று வசனமும் வைத்திருப்பார் இயக்குனர் , எலியும் பூனையும் போல நாயகன் நாயகி மோதிக்கொள்ளும் தீமில் இதன் பின்னர் வந்த எந்த படமும் இதற்கு உறை போடக்கூடக் காணாது.


கமல் கடைசியில் நாயகன் நாயகி போட்டியில் ஜெயித்து சுமித்ராவை தன் சைக்கிளின் முன்னால் பாரில் அமர வைத்து டபுள்ஸ் அடித்துக் கொண்டு போவார்.மிக அழகான முடிவு,நம் பழைய மஹாபலிபுரம் சாலை அது,தன் கம்பெனி ஜீப்பில் உற்றார் உறவினரை ஏற்றுவதில்லை,இது என் சைக்கிள் இதில் வந்தால் கூட்டிப்போகத் தயார்,என்று அத்தனை பெரிய இந்துமதி அம்மாளின் அகங்காரத்தை அடக்கி,பெட்டிப்பாம்பாக ஆக்கி புதிய எளிமையான பெண் அவதாரமாக மாற்றிவிடுவார் கமல்.
 
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)