கே.பாலசந்தரின் மன்மதலீலை படத்தில் வரும் மனைவி அமைவதெல்லாம் பாடல்

மன்மதலீலை படத்தில் ஹேமா சவுத்ரி என்னும் கமலின் அந்த நாள் ஜோடியை மறக்க முடியுமா?!!! மனைவி அமைவதெல்லாம் பாடலைப் பாடியே கவிழ்ப்பாரே கமல்?!!!படத்தில் அவரது குடிகாரக் கணவராக இயக்குனர் நட்ராஜ் தோன்றியிருப்பார், படத்தில் ரேடியோவில் வரும் நேயர் விருப்பம் கேட்ட நேயர்களின் பெயரை கமல்  மிமிக்ரி செய்து அசத்துவார். பின்னர் தாஸேட்டாவின் குரலில் பாடல் தொடரும்,

அதன் பின்னர் இவர் மனைவி ரேகாவுக்கு அடுத்த அறைக்குச் சென்று போன் பேசுகையில் கமலின் குரல் ஒலிக்கும்,பேசி முடித்தவுடன் தாஸேட்டாவின் குரல் என கலக்கலான, புதுமையானதொரு பாடல். பாடலின் முடிவில் ஹேமா சவுத்ரி கமல் விரித்த வலையில் விழுந்துவிடுவார். இந்த மிக அழகான பாடலுக்கு நடுவே மூன்று அழகான ஆச்சர்யமூட்டும் தடைகள் வைத்திருப்பார் இயக்குனர் பாலசந்தர், அதற்கு ஈடு கொடுத்து மொத்த கலைஞர்களும் மிக அழகாக உழைத்திருப்பார்கள். அது தான் இப்பாடல் பல வருடங்கள் கடந்தும் வியந்து பேசப்படும் ரகசியம்.

நடிகை ஹேமா சவுத்ரி கன்னட சினிமாவில் குணசித்திர வேடங்கள் செய்து வருகிறார். அவர் கமலை ஒரு விழாவில் அருகே அமர்ந்து மிகவும் சிலாகித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார் http://www.kollytalk.com/cinenews/kamal-hasnt-changed-since-manmadha-leelai-days-says-hema-115745.html

கவிஞர் கண்ணதாசனின் மனம் மயக்கும் இப்பாடல் வரிகளை கவனியுங்கள்.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்..

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்..

முதல் தடை
கமலின் குரலில்: விரும்பி கேட்டவர்கள்,

கூடுவாஞ்சேரி கோபால்,
புதூர் சுந்தரம்,
கரூர் காமாட்சி,
விம்கோ நகர் ராமன்,
பெரம்பூர் ராமன், முருகன் நண்பர்கள்,
மயிலாப்பூர்  சுகுணா, ஸ்வர்ணா,அபர்ணா மற்றும்,
சாந்தோம் விஸ்வநாதன்.


யேசுதாஸ் குரல் மீண்டும்.

இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு,
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு,
மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்

இரண்டாம் தடை
தினமும் இப்படி குடிச்சுட்டு,
ரோட்டுலே விழுந்து கிடக்கிறாரு,
ஒரு நாள் கார்லே தான் அடிபட்டு சாகப் போறாரு,
பாத்துக்கோங்க..
ரொம்ப நன்றிங்க..

நீங்க மேல பாடுங்க...


என் கணவர் தான்,
பாட்ட அவர் ரசிக்கவும் போறதில்ல,
வெறுக்கவும் போறதில்ல,
அறிமுகம் செஞ்சு வச்சா,
அவர் புரிஞ்சுக்கவும் போறதில்ல,
உலகத்தையே மறந்த ஒரு நிலை,
நீங்க பாடுங்க..
.


யேசுதாஸ் குரல் மீண்டும். 
மனைவி அமைவதெல்லாம்,
இறைவன் கொடுத்த வரம்...

பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்...

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

மூன்றாம் தடை
கமலின் குரலில்:
ஹலோ ரேகாவா,
ஆபீஸ் லே இருந்து பேசுறேன்,
ஓவர் டைம் வொர்க் பண்ணீட்டு இருக்கேன்,
இன்னைக்கு சினிமா ப்ரோக்ராம் வேண்டாமே..
என்ன கோபமா???
சரி, சரி..
சினிமா வேண்டாம், அதுக்காக
ஓவர் டைம் னு, உடம்பை கெடுத்துக்காதீங்க...
thank You

யேசுதாஸ் குரல் மீண்டும்.
மனைவி அமைவதெல்லாம்,
இறைவன் கொடுத்த வரம்...

கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம்
அருகினில் இருந்தென்ன லாபம்?

மனைவி அமைவதெல்லாம்,
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம்,
இறைவன் கொடுத்த வரம்.

இப்பாடலில் கமலின் குரலுக்கும் தாஸேட்டாவின் குரலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பது அத்தனை கடினமாக இருக்கும், அதற்காக அப்படி மெனக்கெட்டிருப்பார்கள். 

கமலுடன் ஒரு பாடலில் மட்டுமே ஜோடியாக நடித்ததால்.இங்கே நடிகை கீதா பற்றியும் கொஞ்சம் எழுத வேண்டியிருக்கிறது, கமல் இது வரை எத்தனை அழகிய நடிகைகளுடன் ஜோடி போட்டிருப்பார்?!!!

ஒரு அழகிய நடிகை தனக்கு படத்தின் கதையில் ஜோடியாக நடிக்காவிட்டாலும் ஒரு பாடலிலாவது தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து விடுவார் கமல். அப்படி நடிகை கீதாவுடன் சலங்கை ஒலியில் வான் போலே வண்ணம் கொண்டு பாடலில் நடித்ததைச் சொல்லலாம்.

அப்பாடலில் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா போலவே விக் வைத்துக்கொண்டு மிட்டாய் ரோஸில் கோட் சூட் .பெரிய கூலிங் க்ளாஸ் எல்லாம் போட்டுக்கொண்டு கீதாவை புரட்டி எடுத்து விடுவார் ,இப்பாடலின் நடன அசைவுகள்  நடிகர் கிருஷ்ணா ஸ்ரீதேவி ஜோடி  அந்நாளில் டூயட் பாடியது போன்ற ஸ்டைலில் அமைந்திருக்கும்.நீங்கள் கிருஷ்ணாவின் எந்த டூயட்டை எடுத்துப் பார்த்தாலும் அதை உணரலாம்.


அதே போல இந்தியில் அதே  1984 ஆம் ஆண்டு கமல் 3 கதாநாயகரில் ஒருவராக [போலீஸாக]  நடித்த yeh desh படத்திலும் கீதா ஜோடி போடாமல் தப்பி விட்டார்,அதில் அவர் உத்பல் தத்தின் ஜோடி,மிக தாராளமாக நடித்திருப்பார்.

 பின்னாளில் ராஜ்கமலின் தயாரிப்பில் வெளிவந்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு [1987] படத்தில் நடிகை கீதா சத்யராஜுக்கு ஜோடி,இதிலும் மிக தாராளமாக நடித்திருப்பார். 


 மீண்டும் . 1995 ஆம் ஆண்டு குருதிப்புனல் படத்தில் கீதா அர்ஜுனுக்கு ஜோடி, எப்படி?!!! சிரிப்பு நடிகை கோவை சரளாவையே ஒரு படத்தின் தனது ஜோடியாக்கிக்கொண்டவர் மிகத் திறமையான நடிகை கீதாவை இன்னும் விட்டு வைத்தார் என்பது புதிரே!!!.

மனைவி அமைவதெல்லாம் பாடலை இங்கே முழுதாக அதன் இடையில் வரும் வசனங்களுடன்  பாருங்கள்