கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் வரும் கார்ட்டூன் கொலைக் காட்சியின் சிறப்புகள்



ஆளவந்தான் 20 வருடங்கள் அட்வான்ஸாக வந்த படம், [அதாவது மக்கள் சோதனை முயற்சிகளுக்குத் தயாராகாத போது வந்த படம்] அதில் மனீஷாவை வதம் செய்து சோஃபாவில் கிடத்திவிட்டு பின் சுயநினைவு வந்ததும் அவரை கொஞ்சி அழுதபடி அமரும் நந்துவிடம் அவரது டாக்டர்  அசரிரீயாக தோன்றி கேட்பார்,நந்து ஆர்யு பிகமிங் நெக்ரோபீலியாக்? [Necrophiliac] அன்று எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரிந்திருக்கும்?அவ்வளவு ஏன் இன்று  எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரிந்திருக்கும்? 

இந்த கொலை துவங்கும் முன்பாக, நந்து மனிஷாவிடம் தான் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் எனப் பாடுவார். மனிஷா அதிசயித்தவர் தனக்கு கடவுள்பாதி மிருகம் பாதியாக கலந்த கலவி வேண்டும் என்று நந்துவிடம் சொல்ல,அவர் அது கிடைக்காது ,ஏதாவது ஒன்று தான் கிடைக்கும் என்பார்.

அப்போது அதற்கு தீர்வு காண அவர் அந்த coin டாஸ் போட்டு ,அங்கே மிருகம் என்று முடிவாகி அதில் வென்றிருப்பார்,பின்னணியில் அந்த லெ மெரிடியன் ஹோட்டல் அறையின் டிவியில் கார்ட்டூன் ஓடிக்கொண்டிருக்கும், முதலில் அந்த கார்டூன் கதாபாத்திரம் நந்துவின் சித்தி கிட்டு கிட்வானியாக தோற்றமளிக்கும், கையில் சாட்டை வைத்திருக்கும், பின்னால் திரும்பினால் மனீஷா பெல்டை வைத்து அடித்து BDSM வகைக் கலவியில் Dominance and submission கூடலுக்கு நந்துவை தயார் செய்வார்,

ஆனால் எல்லாமே அங்கே தவறாகிவிடும்,கமல் மனீஷாவை தன் சித்தியாக எண்ணி அங்கே ருத்ரதாண்டவமே ஆடியிருப்பார்,அந்த வதம் முடிந்தவுடன் பார்க்கையில் மனிஷாவின் இடையில் ஆழமான அறுப்பு ஒரு கைதேர்ந்த டாக்டர் அடாப்ஸி செய்ததைப் போல போடப்பட்டு ரத்தம் வடியும்,ஆனால் குடல் வெளியேறியிருக்காது,அது தான் வன்முறையின் அழகியலின் உச்சம்.

அங்கே என்ன அழகாக மேக்கப் ஆர்டிஸ்டின் பணி இருக்கும்.காட்சியின் முடிவில் மனீஷாவுக்கு சோஃபாவிலேயே வைத்து கமல் கொள்ளியும் வைப்பார்,அப்போது இந்த பட்டினத்தார் பாடலின் வரிகளை அழகாக பாடுவார்.

”முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!”
 
அதெல்லாம் எந்த ஹாலிவுட் படத்துக்கும் குறையாத தரத்தில் அமைந்த காட்சிகள். இந்த வதக்காட்சியை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் அனிமேஷன் செய்யாமல் இருந்தால் அக்காட்சி மிகக்கொடூரமாக அமைந்திருக்கும்,

அதை டைல்யூட் செய்ய இந்த காமிக் அனிமேஷன் மிகவும் உதவியது,அதை கமல் செய்ததால் எந்த சினிமா விமர்சகருக்கும் பாராட்ட மனமில்லை, ஆனால் படம் வெளியாகி இத்தனை வருடம் கழித்து அக்காட்சியை நினைவு கூறுகிறோமே இதுவே அக்காட்சியின் வெற்றிக்கு சாட்சி,
https://www.youtube.com/watch?v=GM9CvCVoYbs


இப்படத்தின் பாதிப்பில் க்வெண்டின் டாரண்டினோ உருவாக்கிய கில்பில் பாகம் ஒன்றில் வரும் ஒ-ரென் என்னும் அழகிய ஜப்பானிய தொழில்முறைப் பெண் கொலைகாரி பற்றிய அறிமுகப் படலம் சுமார் எட்டு நிமிடம் நீளுகிறது, கமல்ஹாசன் 2001 ஆம் ஆண்டு ஆளவந்தான் திரைப்படத்தில் செய்ததை அவர் 2003 ஆம் ஆண்டில் மிகச்சிறப்பாக மேம்படுத்தி தன் பாணியில் கில்பில்லில் மிதமிஞ்சிய வன்முறை தெறிக்க வழங்கியதை இங்கே பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=ImyntxVxZyE



இந்தப் படம் கொண்டிருக்கும் ஆச்சர்யங்கள் பற்றி விளக்க தொடர்கள் எழுதினால் தான் சரிவரும்,அதை உலக சினிமா ரசிகன் எழுதினால் தான் சரிவரும்