மை ப்யூட்டிஃபுல் லாண்ட்ரெட் [My Beautiful Laundrette][1985][ஆங்கிலம்] [இங்கிலாந்து] [15+]



அருமை நண்பர்களே!!!
நலம் தானே? இந்த மை ப்யூட்டிஃபுல் லாண்ட்ரெட் படம் பார்த்தேன்,பகிர வேண்டும் என்ற உந்துதலை அளித்த ஒரு படம். இது ஒருங்கே ஒரின சேர்க்கை, நிறவெறி, காமம், காதல், நட்பு, அரசியல், குடியுரிமை, பஞ்சம் போன்றவற்றை தாட்சண்யமின்றி அலசுகிறது, ஒரிஜினாலிட்டி உள்ள திரைக்கதை, பிரிட்டனில் ஆசியர்களின்  வாழும் சூழல் போன்றவை படம் பார்ப்பவரை ஒன்றச்செய்து கட்டிப்போட்டு விடும். 1987ன் சிறந்த ஒரிஜினல் கதைக்கான ஆஸ்கர் நாமினேஷனையும் ஹனிஃப் குரேஷிக்கு பெற்றுத்தந்துள்ளது. பேரலல் சினிமா, இண்டிபெண்டண்ட் வகை சினிமாக்களில் நடிக்கும் ரோஷன் சேத், சையத் ஜஃப்ரி போன்ற ஜாம்பவான்கள் நடித்த படம். மேலும்  ஜானி என்னும் ஒரு முக்கிய பாத்திரத்தில் டேனியல் டே லேவிஸ் (there will be blood)  நடித்த படம்.

1980களின் மார்கரெட் தாட்சரின் வேடிக்கையான ஆட்சியின் போது இங்கிலாந்தில் நடக்கும் கதைக்களம் ஆகையால் அரசியல் எள்ளல்களுக்கு பஞ்சமில்லை. உலகில் நாம் எங்கே சென்றாலுமே நாம் இந்தியர்களையும் நம்மிடமிருந்து பிரிந்த பாகிஸ்தானியர்களையும் சர்வ நிச்சயமாக பார்க்கலாம், இப்படம் முழுக்க இங்கிலாந்தில் வந்தேறிய பாகிஸ்தானியர்களின் வாழ்வியல் சூழலை அலசுகிறது.

படத்தில் பிரதான பாத்திரமான ஹுசைன்  பாகிஸ்தானிய முன்னாள் பத்திரிக்கையாளர், வாழ்ந்து கெட்டவரும், ரயிலில் விழுந்து மாண்ட மனைவியை இழந்தவருமான  ஒரு அப்பா, லண்டனின் நெருக்கடியான , மெட்ரோ அடிக்கடி கடக்கும் ஒரு சேரிப்பகுதி குடியிருப்பில் வசிக்கிறார், சதா வோட்காவையும் சிகரெட்டையும் சுவைத்துக்கொண்டு படுக்கையிலேயே எந்த பிடிப்பும் இன்றி வாழ்கிறார், இவர் பாகிஸ்தானிய முன்னாள் பிரதமர் பூட்டோவுக்கு வேறு நெருங்கிய நண்பராயிருந்தாராம்.

இவரது மகனாக ஓமர் கிடைக்கும் அற்ப வேலைகளை செய்து கொண்டு, படிப்பிற்காக ததுங்கினத்தோம் போடுகிறான், அவனது நண்பர்கள் வேலையில்லாமல் வீதிகளில் பொறுக்கித்தனம் செய்பவர்கள், அவர்களைப் போலவே தன் மகனும் வயது வந்தோருக்கு அரசு வழங்கும் டோல்(dole) என்னும் உதவித் தொகை பெறும் வரிசையில் நிற்பதை அவர் விரும்பவில்லை. 

இவரின்  மகன் ஓமர் ஏழை இங்கிலாந்து சேரி வாசியான ஜானி (டேனியல் டே டேவிஸ்) என்பவனுடன் மிகுந்த நட்பும் ஓரினச்சேர்க்கை உறவும் கொண்டிருக்கிறான். ஜானி மிகவும் தெளிவானவன், சேரிவாசியாகையால் ஓமர் அவனை வைத்து நிறைய நிழலான காரியங்களை சாதிக்கிறான். பணத்தேவை ஏற்படுகையில் இவனது மூளையையும் அவனுடைய உழைப்பையும் வைத்து பொருள் ஈட்டுகிறான். இவர்களின் உறவின் மீது சந்தேகப்படும் அப்பா ஹுசைன் ஓமரை தன் ஒன்றுவிட்ட சகோதரன் நாசர் வீட்டுக்கு விடுமுறைக்கு அனுப்புகிறார். அங்கே சென்ற ஓமர் கார்களை கழுவி சம்பாதிக்கிறான்.


இவனது சித்தப்பா நாசர் ஒரு ஸ்த்ரி லோலர்,மனைவியும் மூன்று மகள்களும் வாய்ந்த அவர் ஒரு மேல்தட்டு பாகிஸ்தானி,தாட்சரின் ஆட்சியில் பூர்வ குடிகளான இங்கிலாந்து வாசிகளே அனுதினம் அல்லலும் , துயரமும்  படுகையில் இவரும் , இவரது நண்பர் சலீமும் எளிதாகவும் அதிகமாகவும் பணம் சம்பாதிக்கத் தகுந்த எல்லாவழிகளிலும் பணம் ஈட்டுகின்றனர்,அதில் ஹெராயின் கடத்தலும் அடக்கம்.ஓமரை அவனுக்கு தெரியாமல் தங்கள் கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.

பங்குதாரரான சலீம் ஓமரை முழுதாக நம்பவில்லை.ஒரு சமயம் ஓமர் வாங்கி வந்த வீடியோ கேசட்டை பெற்றுக் கொண்ட சலீம் ,ஓமரை வீட்டில் காத்திருக்கச் சொல்லிவிட்டு வெளியே செல்ல அந்-நேரத்தில் ஓமர் சலீமது அறையில் துழாவி ஒரு வீடியோ கேசட்டை இயக்குகிறான்,பின்னர் தன் நண்பன் ஜானிக்கும் தொலைபேசுகிறான். இதையெல்லாம் நோட்டம் விட்ட சலீம் ஓமரை கீழே தள்ளி கண்களிலேயே காலை வைத்து அழுத்தி துன்புறுத்தி எச்சரித்து வெளியேற்றுகிறான்.

மேலும் சலீமுக்கு ஏழை இங்கிலாந்து வாசிகள் என்றாலே ஒரு அசூயை,அவர்களை எங்கே பார்த்தாலும் வெறுத்து காரி உமிழ்வதை வழக்கமாக கொண்டிருக்கிறான். ஒரு சமயம் அப்படி சலீமும் அவன் மனைவியும்  இங்கிலாந்து சேரி வாசிகளிடம் வசமாக  மாட்டிக் கொள்கையில் ஓமர் இவர்களை தன் நண்பன் ஜானி அங்கே அவர்களின் கும்பலில் இருப்பதைக் கண்டு,  அவனிடம் குழைந்து பேசி இவர்களை காப்பாற்றுகிறான். இந்த ஜெர்க்ஸ் (jerks) கும்பல் நமக்கு க்ளாக் ஒர்க் ஆரஞ்ச் படத்தின் மால்கம் மெக்டவல் nightly orgies கேங்கை அச்சு அசலாக நினைவூட்டுகிறது.இவர்களிடம் மாட்டிய எந்த வேற்று இனத்தவனும் உருப்படியாக வீடு போய் சேர முடியாது என்பதை உறுதியாகச்சொல்வேன்.

 ஓமரின் சித்தப்பா நாசருக்கு ராச்சல் என்னும் இங்கிலாந்து முதிர்கன்னியுடன் உடல் தொடர்பும் உண்டு.அவளை தன் அலுவலகத்துக்கே பகல் வேளைகளில் அழைத்து வேண்டிய படி இன்பம் துய்க்கிறார். இது ஓமருக்கும் தெரிகிறது. நாசர் ஓமரை நன்றாக வேலை வாங்கிக்கொண்டு ஒரு பழைய காரை உபயோகிக்கச் சொல்லி தருகிறார். விரைவில் தன் வீட்டுக்கும் ஓமரை கூட்டிப்போகிறார். அங்கே நாசரின் குடும்பம் மேல்தட்டு இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்கள் வாழுகிற சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதை காண்கிறான், அவர்களின் பேச்சில் இருந்து பாகிஸ்தானில் இருப்பதை அவர்கள் கேவலமாக கருதுவதை காண்கிறான்.அவர்கள் சோசியலிசத்தையும், கம்யூனிசத்தையும் எள்ளி நகையாடுகின்றனர்.இவர்கள் பாரம்பரிய முஸ்லீம்கள் போல ஐந்து வேளை தொழுவதில்லை, மேலும் நாசருக்கு வீட்டுக்குள் அவரது மனைவி மகள்களிடமிருந்து மரியாதை இல்லாத சூழலே நிலவுகிறது,

நாசரின் வீட்டில் கேளிக்கை மது விருந்து நடக்கையில் ஓமரும் நாசரின் மகள் தானியாவும் அறிமுகமாகின்றனர்,அவர்கள் சிறு வயதில் பார்த்திருந்தாலும் ஓமரின் ஆகிருதியும் அழகும் தானியாவை உணர்ச்சியூட்டுகிறது,அவனுடன் உறவு கொள்ள துடிக்கிறாள் அவள்,அவனை விரைந்து மணம் முடிக்கவும் விரும்புகிறாள்.  ஓமருக்கு பணம் சம்பாதிக்க ஆதாரமாக ஒரு பணக்கார பெண் தேவைப்படுகிறாள், அதற்கு வேண்டி தானியாவை விரும்புவது போல் நடிக்கிறான் ஓமர். மற்றபடி அவனுக்கு ஜானியுடனான ஓரின சேர்க்கை உறவே முக்கியம்.

அங்கே விருந்தில் தன் அப்பாவுடைய நண்பர்களிடம் ஓமர் நீண்ட நேரம் பேசுகையில் அவனை திசை திருப்பி தன் அறைக்கு அழைக்க வேண்டி ஜன்னலுக்கு வெளியே தானியா தன் டிஷர்டை மேலே  மடித்து தூக்கி அவளது இளம் மார்பகங்களை ஓமருக்கு காண்பித்து மேலே வருமாறு அழைக்கிறாள் , இதிலிருந்து பாகிஸ்தானிய முஸ்லிம் பெண்களான அவர்கள் இங்கிலாந்தில் எவ்வளவு கலாச்சார சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பது நமக்கு விளங்குகிறது.

ஒரு சமயம் ஓமரின் சித்தப்பா நாசர், ஜானியை தன் வாடகை தாரர் ஒருவன் காலி செய்ய மறுக்கும் ஃப்ளாட் ஒன்றிற்கு அவனை வைத்து காலிசெய்ய வேண்டி அழைத்துப் போகிறார்,அங்கே நாசருக்கும் அங்கே வசிக்கும் இங்கிலாந்து கருப்பின பூர்வகுடி கவிஞனான் வாடகைதாரருக்கும் கைகலப்பு முற்ற ஜானி  முன்னின்று உதவி அவனை தூக்கி வெளியே போடுகிறான், பின்னர் அவரிடம் கேட்கிறான், பாகிஸ்தானியனான நீ இப்படி இங்கே வந்து அடக்குமுறையும்  ஆக்கிரமிப்பும் செய்கிறாயே? இது உனக்கே நியாயமா? என்று. அதற்கு நாசர் இப்படி பதிலளிக்கிறார். that country's been sodomized by religion. என் நாடு பாகிஸ்தான் என் மதத்தினால் குதப்புணர்ச்சி செய்யப்பட்டது,நான் பணம் சம்பாதிக்கவே இங்கே வாழ்கிறேன்,அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்,எனக்கு அதில் ஏழை பணக்காரன்,ஆசியன் ஆங்கிலேயன் வேற்பாடு இல்லை என்கிறார்.

இங்கிலாந்தில்,  நாசருக்கு ஒரு பழைய ஓய்ந்து உழன்ற தானியங்கி லாண்டரி இருக்க அங்கே அதை கழுவி பெருக்கி பராமரிக்க ஓமரை நாசர் அழைத்துப்போகிறார்,அங்கே  அதை நிர்வகித்து லாபம் ஈட்டித்தருவதாக உறுதியளித்து சாவியை வாங்குகிறான் ஓமர்.அங்கே அட்டகாசம் செய்யும் உள்ளூர் இங்கிலாந்து போக்கிர் பொறுக்கி சிறார்களை அடித்து துவைத்து வெளியே எறிய ஜானியை தன் லாண்டரியில் வேலைக்கு சேர்க்கிறான் ஓமர்.
அந்த லாண்டரி மிகவும் பழுதடைந்து உள்ளது,அதை மாற்றி அமைக்க பணம் தேவைப்படுகையில் சலீம் ஒரு விலாசம் கொடுத்து பொருளை வாங்கி வர அனுப்புகிறான்,அங்கே போனால் ஒரு பாகிஸ்தானிய பத்தான் பெரிய வெண்தாடியில் இருக்க, இவன் முன்பாக அவன் அந்த ஒட்டு தாடியை பிரிக்கிறான், ஓமரிடமும் அதை தந்து அனுப்புகிறான். அதை வாங்கி வந்து ஓமரும் ஜானியும் பார்க்கையில் அதில் ஹெராயின் பொட்டலங்கள் இருக்கிறது,அதை ஜானியின் உதவியால் சந்தையில் சரியானவர்களுக்கு விற்று பெரும் பொருளீட்டுகிறான் ஓமர். சலீமிடம் குறும்புடன் வெறும் தாடியை கொண்டு போய் கொடுக்கும் ஓமர் , அவன் அதை தனி அறையில் சோதித்துப் பார்க்கையில் நகைக்கிறான். சலீம் இவனின் திருட்டுத்தனத்தை கண்டுகொள்ளவில்லை, அவனின் பங்குதாரர் நாசரின் மகளை ஓமர் திருமணம் செய்துகொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறபடியால் விட்டு விடுகிறார், ஆனால் தொடர்ந்து நோட்டம் விடுகிறார்,


அந்த பணத்தைக்கொண்டு ஓமரும் ஜானியும் லாண்டரியை நவீனமாக அலங்கரித்து உள் அலங்காரம் செய்கின்றனர். திறப்பு விழாவின் போது நாசரும் சலீமும் வர நேரமாகிவிட,அந்த நேரத்தில் லாண்டரியின் உள்ளே உள்ள அறைக்குள் சென்று ஓமரும் ஜானியும் உறவு கொள்கின்றனர். வெளியே அப்போது நாசரும் அவரின் காமுகி ராச்சலும் வந்துவிட லாண்டரியின் அலங்காரத்தை வியந்து பார்த்த பின்னர் ஷாம்பெய்ன் அருந்திவிட்டு நடனமாடுகின்றனர்.வெளியே தம் துணிகளை துவைப்பதற்காக ஏழை இங்கிலாந்து வாசிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அங்கே அறையில் ஓமரும்,ஜானியும்  உள்ளே அறைக்குள் ஒன்றாக இருப்பதை நாசர் பார்த்து சந்தேகிக்கிறார். அங்கே ராச்சல் லாண்டரியை மக்கள் உபயோகத்துக்காக திறந்து வைக்கிறாள். நாசரின் மகள் தானியா ஓமரின் அழைப்பின் பேரில் அங்கே வந்தவள் ராச்சலை பார்த்து கொதிக்கிறாள்.

அங்கேயே வைத்து அவளை திட்டுகிறாள்,இது பொறுக்காத ராச்சல் அங்கேயிருந்து அழுதபடி வெளியேறுகிறாள்.இதன் பின்னர் நாசருக்கு நிம்மதி பறிபோகிறது,தானியாவின் அம்மா ராச்சலுக்கு எலியைக் கொண்டு ஒருவகையான பில்லி சூனியம் வைக்கிறாள்,அதில் ராச்சலுக்கு உடல் முழுக்க சொறியும் தேமலும் திடீரென தோன்றுகிறது. மேலும் ராச்சலின் வீட்டில் நாற்காலிகளும் மேசைகளும் நகர ஆரம்பிக்கின்றன,இதனால் மிகவும் பயந்து போன ரேச்சலுக்கு இது நாசரின் மனைவி வேலை என புரிகிறது,அவள் நாசரிடம் முறையிட்டு விட்டு , ஊரை விட்டே அன்று வெளியேறுகிறாள்.

அன்றே நாசரின் மகள் தானியாவும் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்,வெளியேறியவள் ஓமரின் லாண்டரிக்கு வந்து ஓமர் எங்கே என்று ஜானியிடம் கேட்கிறாள்,அவன் வெளியே சென்றிருப்பதாக ஜானி சொல்ல,ஜானியை தன்னுடன் ஓடி வர முடியுமா?விரும்பிய படி வாழலாம் ,அதற்கான பணம் என்னிடம் உள்ளது என்கிறாள்.இதன் மூலம் நாம் தானியாவுக்கு உடல் தொடர்புக்கும் பாதுகாப்புக்கும் ஒரு ஆடவன் வேண்டுமே அன்றி அது யார் என்பதில் அக்கரை இல்லை எனப்புரிகிறது

அதே நேரத்தில் ,ரேச்சலின் பிரிவால் மிகவும் மனமுடைந்த நாசர்,வெகு நாட்கள் கழித்து படுக்கையிலேயே வாழ்க்கையை கழிக்கும் ஹுசைனைப் போய் பார்க்கிறார்,எனக்கு எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை என்கிறார், ஹுசைன் அவரை தேற்றுகிறார்,தன் மகன் கல்லூரியில் சேர்ந்து நன்றாக படிக்க வேண்டும் ,பின்னர் நல்ல பெண்ணாக பார்த்து மணம் செய்ய வேண்டும் அது அவரது மகள் தானியாவாக இருந்தால் நல்லது என கோடியும் காட்டுகிறார். ஆனால் எல்லாம் கிடைத்தும் எதுவுமே கிடைக்காதது போல தானியா வீட்டை விட்டு வெளியேறி தனக்குப் பிடித்தபடி வாழப் போகிறாள்,அவளை ரயிலடியில் வைத்துப்பார்க்கும் தந்தை நாசர் கத்தி அழைத்ததும் தானியா விரைந்து மறைகிறாள்.

முந்தைய நாள் இரவு சலீம் ஜானி ஓமர் மூவரும் காரில் பயணிக்கையில் சலீம் ஜானியின்  சேரி வாழ் வெள்ளையன் ஒருவனை சாலையில் பார்த்து மேலும் ஆத்திரம் அதிகரித்து அவனது பாதத்தில் காரின் டயரை நொடியில் ஏற்றி இறக்கி வேகமாக செல்கிறான்,அவன் ஜானியின் நண்பன் வேறு,ஜானிக்கு இதை விட ஒரு அவமானம் இருக்க முடியாது. இதன் மூலம் ஜானியின் உள்ளார்ந்த வெறுப்பை சம்பாதிக்கிறான் சலீம்,மறு நாள் ஓமரைப் பார்க்க சலீம் லாண்டரிக்கு வருகிறான். அங்கே வெளியே காத்திருந்த ஜானியின் சேரி வாழ் நண்பர்கள் சலீமின் விலையுயர்ந்த காரை அடித்து துவைக்கின்றனர்.பின்னர் சலீம் ஆத்திரம் கொண்டு வெளியே வர அவனை அடித்து துவைக்கின்றனர்.அதில் வேண்டா வெறுப்பாக நண்பர்களை தடுக்க வந்த ஜானியும் பலத்த காயமடைகிறான்,சலீம் பலத்த காயங்களுடன் உயிர்  பிழைக்க தப்பித்து ஓடுகிறான்.

அங்கே வரும் ஓமர் காயமடைந்த  நண்பனை தேற்றுகிறான்.ஜானியின் நண்பர்கள் லாண்டரி கடையின் வெளிப்புற கண்ணாடியை ஆத்திரத்தில் உடைத்தும் விடுகின்றனர். ஜானி , பிறப்பால் ஆங்கிலேயனான தான்,த ன்  ஆசிய நண்பன் ஓமரால் இழுத்த இழுப்புக்கெல்லாம் விலை போவதை உணர்கிறான், இருந்தும் அவனின் களங்கமில்லா நட்பும் , ஓரினச் சேர்க்கையும் அவனை மீண்டும் ஓமருக்கு அடிமையாக்குகிறது, அவனை எந்த சந்தர்ப்பத்திலும் இழப்பதை அவன் விரும்பவில்லை. சாலையென்றும் பாராமல் அவன் தோள்பட்டைகளை ஓமர் நக்கி சுவைக்கிறான். உள்ளே அறைக்குள் அழைத்துப்போகிறான். இப்போது ஓமர் நண்பனின் காயங்களை நீர் கொண்டு கழுவுவது போலவும்,ஒருவரின் மேல் ஒருவர் நீரை வாரி இறைத்துக்கொள்வது போன்றும் படம் முடிவுறுகிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல ஒரு நாடு என்பது பல நிறைகளையும் பல குறைகளையும் ஒருங்கே தன்னிடத்தில் கொண்டது தான்  என்பதை  இப்படம் மூலம் நாம் புரிந்து கொள்கிறோம்.இங்கிலாந்தின் வேற்று முகத்தை இப்படியோர் பாகிஸ்தானிய சமூகத்தின் கண்ணோட்டத்தில் கிழித்தது போன்று வேறெந்த படமும் கிழித்திருக்குமா? என்பது சந்தேகமே!! நம் பாலிவுட் ஆசாமிகளும் 100க்கு 30 படம்  லண்டனுக்கு போய் அங்கே வைத்து ஹிந்திப்படக் குப்பைகளை எடுத்துத் தள்ளி அசுத்தம் செய்கின்றனர், ஆனால் உண்மைக்கு வெகு அருகே பயணிக்கும் யதார்த்த உலகின்  மாணிக்கம் போன்ற இப்படம் போல ஒன்றாவது தேறுமா? என்றால் என் பதில் இல்லை!!! என்பது தான்.

படத்தில் ஒரு முக்கியமான ஒரு விஷயம் நுரைக்குமிழி எழும்பும் (bubble) சத்தம் படத்தில் மிக அருமையாக தீம் மியூசிக்காக வெளிப்பட்டுள்ளது.இதே போல முயற்சிகளை ரன் லோலா ரன் படத்தில் பார்த்தும் கேட்டும் உள்ளேன்.


படத்தில் இருந்து ஒரு காட்சி:-(இப்போதெல்லாம் யூட்யூபில் முதல் 20 செகண்டுக்கு த்ராபையான விளம்பரம் போட்டு தொல்லையளிக்க ஆரம்பித்து விட்டனர்)