ரெட் ஒயின் റെഡ്‌ വൈൻ [ Red Wine][2013][மலையாளம்]


ரெட் ஒயின் திரைப்படம் இன்று பார்த்தேன்,சமீபத்தில் வந்த க்ரைம் திரில்லரில் இன்னொரு நல்ல படம்,ஃப்ஹாத் ஃபாசில் ஒரு பிஇ படித்த,அமெச்சூர் நாடக நடிகன்+ கம்யூனிச பார்டியின் இளம் சகாவுமாக நடித்துள்ளார்,தலப்பாவு ப்ரித்விராஜின் சகாவு வர்கீஸ் பாத்திரத்தை போல ஒரு கனமான பாத்திரம், ஃபஹாத்தும் பாத்திரத்தோடு ஐக்கியமகியிருக்கிறார், 33 வயதான சமூகத்தில் நன்கு மதிக்கப்படக்கூடிய சகாவு அனூப் ஒரு நடுத்தரமான லாட்ஜில் வைத்து நடுநிசியில் கத்தியால் குத்தி கொல்லப்படுகிறார்,தன் சுற்றத்தாருக்கும், வயநாட்டின் பழங்குடிகளுக்கும் நம்பிக்கை ஒளியான சகாவு அனூப்பிற்கு எத்தனையோ அரசியல் எதிரிகள், யார் கொன்றிருப்பார்?!!!இங்கே இக்கொலையை விசாரிக்க வரும் நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் ரதீஷ் பாத்திரமாக மோகன்லால்,இவரின் நடிப்பை இப்படி இருந்தது,அப்படி இருந்தது என விவரிப்பது மடமை,

இன்னொரு முக்கிய பாத்திரம் ரமேஷ் குமாராக ஒழிமுறியில் நடித்த ஆசீஃப் அலி,தன்னை நம்பி ஓடி வந்த பணக்கார காதல் மனைவியை நன்றாக வைத்து காப்பாற்ற போராடும் ஒரு நடுத்தர குடும்ப கணவன்.இவர் ஒரு டூவீலர் சேல்ஸ் ரெப்,கேரளாவில் கார் மோகம் அதிகமாகி,பைக் விற்பனை சரிந்து வருவதால் இவரால் டார்கெட் முடிக்க முடியாமல்,வேலைக்கும் பிரச்சனை வருகிறது,ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் லோன் போட்டு ஒரு ஃப்ளாட்டை வாங்கி விட்டு அதற்கு மாத தவணை கட்ட முடியாமல் தவிக்கும் எத்தனையோ இளைஞர்களைப் போல இவரும் ஒரு ஃப்ளாட்டை வாங்கிவிட்டார்,

கடந்த 8 மாதமாக ஒரு தவனையையுமே கட்டவில்லை,இவரது அப்பாவின் சொத்து வழக்கில் இருப்பதால் அதன் முடிவில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைக்கலாம் என்ற இவரது எண்ணம் ஈடேறவில்லை.இவரின் கர்ப்பவதி மனைவியிடம் மிகுந்த காதல் இருந்தாலும்,அவளின் பிரசவத்துக்கு கூட அருகே இருக்க முடியாத படிக்கு ஒரு வேலை விஷயமாக வெளியூர் போகிறார்.போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது,அவரும் மனைவிக்கு அழைக்கவில்லை,இந்நிலையில் மனைவி ஒரு பெண்குழந்தையை பிரசவிக்கிறாள்,கணவன் 1வாரத்துக்கு மேலாக காணவில்லையே என்று பயந்து போலீசாரிடம் புகார் அளிக்கிறாள்,

அவளிடமிருந்த ஒரே ஒரு கல்யாண போட்டோவைக்கூட போலீசார் அதில் அவனை கத்தரிக்கும் போது மிகவும் கலங்குகிறாள்.இவளின் அண்ணனும் அப்பாவும் இவள் மீது உள்ள கோபம் குறைந்து ஏற்றுக்கொள்வார்கள் என்றாலும் இவள் அவர்களிடத்தில் எந்த சூழ்நிலையிலும் உதவி கேட்டுப்போவது,கணவன் ரமேஷுக்கு பிடிக்காது என்பதால் தனியே பச்சைக்குழந்தையுடன் வாடுகிறாள்.

இப்போது கொலைக்கான விசாரனையை சகாவு அனூப்பின் நண்பன் நவாஸ் பரம்பன்[சாஜு குருப்]இடமிருந்து துவங்குகிறார் ரதீஷன்,பல்ப் ஃபிக்‌ஷன் படத்தில் ஒரு பாத்திரமான வின்செண்ட் வேகா சுட்டுக்கொல்லப்பட்டாலும் படம் முழுக்கவே வியாபித்திருப்பார்,அதே போல இதில் மூன்றாவது ரீலிலேயே அனூப் கொல்லப்பட்டிருந்தாலும்,படம் முழுக்க ரதீஷனது புலன் விசாரனைகளின் மூலம் படம் முழுக்க வியாபித்துள்ளார்,தமிழில் விஜய்யோ,சிம்புவோ,சூர்யாவையோ இப்படி படம் துவங்கியவுடனே மார்சுவரியில் பிணமாக ஸ்ட்ரெட்சரில் வைத்து வெளியே இழுத்து வர முடியுமா?!!! தனுஷ்  மட்டுமே 3 படத்தில் இது போல துர்மரணத்தை தழுவிய ஒரே ஹீரோவாக இருப்பார்.

அது ஒரு சாபக்கேடு,ஃப்ஹாத் போல ஈகோவே இல்லாத ஒரு நடிகன் மூலம் தான் இப்பாத்திரம் சாத்தியாமாகியுள்ளது,இதற்கு மற்றொரு உதாரணம் காட்ட பர்ன் ஆஃப்டர் ரீடிங் என்னும் படத்தில் ஹாலிவுட்டின் உச்ச நடிகர் ப்ராட்பிட்டின் சுயஎள்ளல் கொண்ட CHAD என்னும் ஒன்றை சொல்லுவேன்,விளையாட்டாய் வேவு பார்க்க ஜார்ஜ் க்ளூனியின் வார்ட் ரோபுக்குள் போய் இவர் ஒளிய,உடைமாற்ற கதவை திறக்கும் ஜார்ஜ்க்ளூனி,இவரைப்பார்த்து பயந்து தான் 20வருடங்களாக எப்போதுமே உபயோகித்திராத தன் துப்பாக்கியை இயக்கி,ப்ராட் பிட்டின் மூளை சிதறி அங்கேயே இறந்து விடுவார்,24 கேரட் டார்க் ஹ்யூமரின் உச்சம் அது.அது போல எந்த ஸ்க்ரிப்டானாலும் ஏற்றுச்செய்யும் நல்ல நடிகனாக ஃபஹாத் இருக்கிறார் என்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சியாக,சகாவு அனூப்பின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஊரெங்கும் அதிகாலையிலேயே ஒட்டப்பட்டு,டிவிக்களில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடத்துவங்க,அதன் மூலமாக நாம் அநூப் சடுதியில் கொல்லப்பட்டதை அறிகிறோம்,அது ஒரு மார்ச்சுவரி ,சகாவுக்கள் வெளியே அனூப்பின் உடலுக்காக காத்திருக்க,அங்கே அனூப்பை தூக்கி வளர்த்த மூத்த சகாவு நாராயணட்டன்[டி.ஜி.ரவி]கண்ணில் தாரையாக கண்ணீருடன் நடுங்கும் கைகளில் பால்பாயிண்ட் பேனா கொண்டு அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் அனூப்பின் வயது 34 என்றிருப்பதை,33 என்று திருத்தி எழுதுவார், மிகவும் உணர்ச்சிகரமான காட்சியது, பின்னொரு சந்தர்ப்பத்தில் அவர் ரதீஷனிடம் உரையாடும் போது சகாவு அனூப்பை பள்ளியில் சேர்க்கும் போது அட்மிஷன் பொருட்டு தானே ஒரு வயது கூட்டி சேர்த்துவிட்டேன்,அவன் மிடுக்கன், படிப்பாளி, என்று விவரிக்கும் காட்சியும் நெகிழவைக்கும்.

படத்தில் ஒரு மெடிக்கல்காலேஜ் சான்சிலராக பசங்க ஜெயப்ப்ரகாஷும் உண்டு ,இன்றைய சமூகத்தின் தவிர்க்க முடியாத அவலமாக நிலவும் தனியார் வங்கி வைப்பு திட்டம்,கோல்டு லோன்,கார் பைக் லோன்,பெர்சனல் லோன் போன்றவை எப்படி அப்பாவி நடுத்தர மக்களை விட்டில் பூச்சி கணக்காய் விளக்கில் விழ செய்கின்றன என்று காட்டின.மேலும் இப்போது ஊரெங்கும் ஆயுர்வேத கிளப்,ரிசார்டுகள் என்று பழங்குடியினரின் பூர்வ நிலங்கள் எத்தனை பகாசுரத்தனமாக கபளீகரம் செய்யப்படுகின்றன,மெடிக்கல் காலேஜில் கேப்பிடேஷன் ஃபீஸாக வாங்கப்படும் 25 லட்சம் பணம் எப்படி வருகிறது, எப்படி கணக்கில் காட்டாமல் மறைக்கப்பட்டு கருப்பு-வெள்ளையாக மாற்றப்படுகிறது, அதில் தனியார் வங்கியின் பங்கு என்ன என்று டீடெய்லாக சொல்லியிருக்கின்றனர்,முக்கியமாக மருத்துவர்கள் எப்படி ? தம் புனிதமான  தொழிலை உபயோகித்து ஒரு வி ஐ பி கொலைகாரனுக்கு கடந்த 10 வருடமாக அல்செய்மர் நோய் இருக்கிறது என்று வண்டையாக புளுகி ஒரு 200 பக்கத்துக்கு மருத்துவ அறிக்கை தயாரிக்கின்றனர் ,அந்த குற்றம் சாட்டப்பட்ட கொலைகார விஐபியை போலீசார் தகுந்த சாட்சி இருந்தும் கைது செய்ய முடியாத படிக்கு செய்தல் போன்றவை மிக முக்கியமானவை. அது போன்ற மருத்துவர்கள் சமூகத்தில் களையெடுக்கப்படவேண்டியவர்கள் அவர்களை வெளிசமிட்டு காட்டியது அருமை,

இதெல்லாம் ஒரு சாம்பிள் தான்,படத்தில் முடிவில் சில குறைகள், இருந்தாலும் அது இன்றைய சமூகத்தில் நடக்காதது ஒன்றுமில்லை, எத்தனையோ கோர்டுகளில் பெரும்புள்ளிகளின் மேலே போடப்பட்ட வழக்குகளுக்கு இன்னும் தீர்ப்போ நியாயமோ கிடைத்தபாடில்லை, ஆகவே அதை பார்வையாளர்களின் முடிவுக்கே விட்டது போல தோன்றியது.நல்ல சினிமா காண விழைவோர் அவசியம் காணவேண்டிய படம்,மோகன் லாலுக்கு எங்குமே பன்ச் டயலாக் கிடையாது,ஒரு யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக பங்களித்திருப்பதே அதன் சிறப்பு.ரெட் ஒயின் ஃபாசிலின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்.படத்தில் கதாபாத்திரங்கள் 40க்கும் மேலே உண்டு,அதில் எதுவுமே திணிக்கப்பட்டதில்லை,படத்தோடு ஜீவனாக ஒன்றியுள்ளனர்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-