ஷட்டர் ഷട്ടർ [ Shutter ][2012][மலையாளம்]

நாடக நடிகரும், நாடக எழுத்தாளருமான ஜாய் மேத்யூவை நீங்கள் ஆமென் படத்தில் தலைமைப் பாதிரியாராகவும்,அன்னாயும் ரசூலும் படத்தில் அன்னாவின் ஒருவார்த்தை கூட பேசாத குடிகார அப்பாவாகவும் பார்த்திருப்பீர்கள்,அவர்  இயக்கிய படம் தான் ஷட்டர்,கத்தியின்றி ரத்தமின்றி ஒரு அட்டகாசமான லோ பட்ஜட் த்ரில்லர், க்ரைம்,பிகமி, செக்ஸ், ராபரி, டகாய்டி, இன்ஸெஸ்ட் வகை படங்கள் கூட கொடுக்காத ஒரு படபடப்பை கொடுத்த படம்,படத்துக்கு உயர்தர ஹைக்கூ கவிதை போலான ஒரு முடிவு என சிறப்பான இயக்கம்.படத்தை தயாரித்திருப்பது இயக்குனர் ரஞ்சித்.

இயக்குனர் ஜாய் மேத்யூ
லாலின் படங்கள் நான் விரும்பிப் பார்ப்பேன்,அற்புதமான நடிகர்,தலப்பாவு மற்றும் ஒழிமுறியில் மிகசிறப்பான நடிப்பை ஈந்திருந்தார்.இந்த படத்தின் டைட் க்ளோசப் காட்சிகளில் இதுவரை ஒருவர் லாலின் நடிப்பை தெரியாமல் இருந்தால் நிச்சயம் உணர்ந்து கொள்வர்.இரட்டை போனஸாக படத்தில் மகாநடிகன் சீனிவாசனும் உண்டு,ட்ராஃபிக் படத்தில் இவரின் நடிப்பு ஜவ்வு போன்ற அத்திரைக்கதையினால் விழலுக்கு இரைத்த நீரானது,இதில் மிக அற்புதமான இயக்குனர் பாத்திரம்,ரசிகர் மனதை நிறைக்கும்.விலைமாதுவாக நடித்த நடிகை சஜிதா அருமையாக பங்களித்திருந்தார்.இவர் ஒரு தேர்ந்த நாடக நடிகை ஆவார்.ஆட்டோ ட்ரைவர் சூராவாக வந்த வினய் ஃபோர்ட் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நல்ல நடிகர்,புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் நடிப்பு மாணவர்,இவர் நடித்து 2009ல் வெளிவந்த ரிது மற்றும் 2012ல் வந்த ப்ரபுவிண்டே மக்கள் படங்களிலும் மனிதர் மிக அருமையாக பங்களித்திருப்பார், கம்யூனிசம்,நாத்திகம்,ஆத்திகம்,யோகம்,தாந்த்ரிக் என்று அதன் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்த நல்ல வித்தியாசமான கதைக்களன் அது, அதில் ஒரு பறக்கும் ஆசனம் போடுவாரே பார்க்கனும்.வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்,அதிலும் இவரின் உழைப்பு புரியும்.


ஷட்டர் படம் இரண்டு பகல்கள், மூன்று இரவுகளில் நடக்கும் கதை. கதை நடைபெறும் இடம் கோழிக்கோடு நகரின் புறநகர் பகுதி. கல்ஃபில் பணிபு‌ரியும் ரஷீத் மிகவும் கண்டிப்பானவர்,சந்தேக புத்தியும் எதைப்பற்றியுமே முன்முடிவும் கொண்டவர். தன் மகள் நைலாவுக்கு 17 வயதாகின்றது,காதல் கத்தரிக்காய் என்று விழுந்துவிடக்கூடாது  என்னும் பதட்டத்தில் அவளுக்கு ஒரு கல்ஃப் மாப்பிள்ளையை நிச்சயித்து அவனின் விடுமுறைக்காக காத்திருக்கிறார்,இவருக்கு குறைவாக படித்த அழகிய மனைவியும்,ஒரு சிறிய மகளும் கூட உண்டு,பெரிய மகள் நைலாவுக்கு தொடர்ந்து படிக்கத் தான் ஆசை,அதற்கு கட்டுப்பெட்டியான மனைவியின் துணையுடன் முட்டுக்கட்டை போடுகிறார்.

இவரின் கல்ஃப் வருமானத்தில் கொஞ்சம் பெரிய வீட்டைக் கட்டி முன்னே உள்ள இடத்தில் வரிசையாக கடைகள் கட்டி வாடகைக்கும் விட்டுள்ளார், அதில் ஒரு கடை மட்டும் இவரும் இவரின் நண்பர்களும் இவர் விடுமுறையில் வரும் போது குடித்து கும்மாளமடிக்கவென்றே வைத்திருக்கிறார், பக்கத்து ஹாரன் ரிப்பேர் கடைக்காரன் கடையை காலி செய்யாமல் வழக்கும் போட்டு இவருக்கு தண்ணி காட்டுகிறான், இது ஒரு கதை.

மற்றொரு கதையாக ஒரு வழக்கொழிந்து போன ஒரு பரிட்சார்த்த சினிமா இயக்குனர் மனோஹரன்[சீனிவாசன்], தன் கம்பேக் படம் ஒன்றிற்காக மீண்டும் தயாராகிறார், கதை,திரைக்கதை,காஸ்டிங் எல்லாம் கழிந்த நிலையில் நடிகனின் கால்ஷீட் மட்டும் தேதி தட்டுகிறது, அதற்கான சிரமங்களை களையும் வேலையில் மும்முறமாக இருக்கிறார், இவருக்கு பழைய சினிமா தயாரிப்பாளர்களும்,டெக்னீஷியன்களும் இன்னும் தொடர்பில் இருக்கின்றனர்,தான் மீண்டும் சினிமாவில் நிரூபனம் ஆவோம் என்று நம்புகிறார்.

இவர்கள் இருவரையும் இணைக்கும் ஒரு கதாபாத்திரமாக ஆட்டோ டிரைவர் சூரா[வினய் ஃபோர்ட்],இயக்குனர் மனோஹரன் சூராவின் ஆட்டோவில் தன் திரைக்கதை குறிப்புகள் வைத்துள்ள பையை தவறவிடுகிறார்.அதே ஆட்டோக்காரர் அன்றைய தினம் வேறு சவாரிகளை முடித்தபின்னர் தன் நண்பர் குழுவில் இருக்கும் கல்ஃப் வாசி ரஷீத்திற்கு ஃபுல் பாட்டில் விஸ்கி வாங்கிக்கொண்டு போய் தருகிறான்,அவர் காலால் இட்ட வேலையை இவன் தலையாய் செய்வதற்கு காரணம்,ரஷீத் இவனுக்கு சரியாக்கி தரேன் என்று சொன்ன கல்ஃப் வேலைதான்,சூராவின் ரிங் டோனாக அனுராக விலோசனனாகி என்னும் நீலத்தாமரா படத்தின் வித்யாசாகர் இசையில் உருவான பாடலை வைத்திருந்தனர்,மிக அற்புதமான பாடல்,நானும் சில காலம் அதை ரிங் டோனாக வைத்திருந்தேன்.

அங்கே வைத்து ரஷீத் தன் உள்ளூர் நண்பர்களுடன் குடிக்கிறார்,இப்போது அவர்களுடன் ஒரு லாரி டிரைவரும் இணைந்து கொள்கிறார்,அவர் தன் வீர பிரதாபமாக தான் லாரி ஓட்டிச் செல்கையில் புணர்ந்த விலைமாதுக்களையும், அவர்களின் ஒத்துழைப்பையும் பிரஸ்தாபிக்கிறார், லாரிக்கார நண்பருக்கு வீட்டில் இருந்து மொபைலில் அழைப்புகளாக வருகிறது, ரஷீத் இதற்காகவே பரிவாடிகள் துவங்கும் முன்பே செல்போன் சனியனை வீட்டில் விட்டு வந்து விட்டார், வீட்டில் மனைவியோ இவருக்காக சாப்பாடு எடுத்து வைத்து விட்டு காத்திருக்கிறார், மகள்களுக்கு அப்பா வந்து விடுவார் என்னும் நம்பிக்கை, இப்போது மணி 12ஐ நெருங்குகிறது,

ஃபுல் பாட்டில் விஸ்கியும் தீர்ந்துவிடுகிறது, மற்றையோர் வீட்டுக்கு பறக்க, லாரி காரருக்கும்,ரஷீதுக்கும் மட்டும் இன்னும் குடிக்க வேண்டும் என்னும் ஆசை,கடை சாத்தியிருந்தாலும் ஷட்டருக்கு கீழே அதிக காசுக்கு வாங்க முடியும் என்ற தைரியம் வர,ஆட்டோவில் புறப்படுகின்றனர்,எறும் போதே லாரிகாரருக்கு வீட்டில் இருந்து அழைப்பு மீண்டும் வர, இது சரிவராது என்று அவர் கழண்டுகொள்கிறார், சூரா ஆட்டோவை அணைத்துவிட்டு வீட்டுக்கு போகலாம் இல்லையா? என்று கேட்க, இவரின் துபாய் ஷோக்கு, இல்லை ஒயின்ஷாப்புக்கு விடு என்கிறார், ஒயின்ஷாப் அருகே உள்ள பஸ்ஸ்டாப்பில் நடுத்தர வயது சுடிதார் மங்கையை சந்தேகக்கண்ணுடன் பார்க்கிறார்,சபலம் தட்டுகிறது, ஆட்டோ கிளம்புகையில் சூராவிடம் சொல்லி அப்பெண்ணை நூல்விட்டுப்பார்க்க சொல்கிறார்,

அவன் பயப்பட தைரியம் சொல்லி அனுப்புகிறார்,அவளை நெருங்கிய சூரா வருவாயா?என்று பயத்துடன் கேட்க,எத்தனை பேர் என்று அவள் எதிர்கேள்வி கேட்கிறாள்,அவன் குஷியானவன், எனக்கு அல்ல,என் அண்ணனுக்கு என்கிறார்,ஏன் நீ என்னை உறவுகொள்ள மாட்டாயா?என்று அவள் கேலி செய்ய,இவன் நெளிகிறான்,வண்டியில் ஏறும் முன்னர் பணம் பற்றி கறாராக பேசிவிடுகிறாள்,ஒரே ஆள் தான் என்று கண்டீஷன் போடுகிறாள்,

அவளுக்கு ரஷீதின் ஆஜானுபாகுவான அதே சமயம் வெகுளியான  தோற்றமும் பிடிக்க ஆசையுடன் வருகிறாள்,இப்போது பல லாட்ஜுகளுக்கும் ஏறி இறங்கியும் ரூம் கிடைக்கவில்லை, சரி சேற்றில் காலை வைத்தாகிவிட்டது, இனி பின்னால் வருவது ஆகாது,அப்புறம் முழுப்பணமும் வீண் என்று அதிக ரிஸ்க் எடுத்து தன் கடைக்குள்ளே அவளை ஏற்றி, ஷட்டரையும் சாத்துகின்றனர். சூராவை அவள் தனக்கு மிகவும் பசி என்று பரோட்டாவும் பீஃப் கறியும் வாங்கி வர சொல்கிறாள்,

அவன் இவர்களின் வசதிக்காக வெளியே ஷட்டரை தாழ் போட்டு, பூட்டும் போட்டு விட்டுப் போகிறான்.  அவளின் பேச்சு, அத்தனை சத்தம் கொண்டதாயிருக்கிறது,இவருக்கு வியர்த்து விடுகிறது, நண்பனின் விலைமாதுவுடனான வீர தாபம், இவருக்கு சபலத்தை தூண்டி விட்டாலும் காரியம் என்று வருகையில், இவருக்கு கைகூடவில்லை, பயத்தில் எச்சில் விழுங்குகிறார், அவளுக்கு நிமிடத்துக்கு ஒரு முறை மொபைல் சனியனில் அழைப்புகள் வர, அவள் அலறிக்கொண்டு பேசுகிறாள், இவர் நடுங்கிப்போகிறார், கடையின் பின்சுவரில் உள்ள  வெண்டிலேட்டரில் ஏறிப்பார்த்து,  தன் வீட்டில் விளக்கெறிகிறதா? என்று பார்க்கிறார்.

அதற்குள்ளாக அந்த விலை மாது தான் கொண்டு வந்திருந்த ஒரு ஏர்பேக்கில் இருந்து தன் நனைந்துபோன சுடிதார் துணிகளை உரிமையாக அங்கே கட்டப்பட்டிருக்கும் கொடியில் காயப்போடுகிறாள், அங்கே இருக்கும் ஹாஃப் பாட்டிலை திறந்து, தனக்குள் சரித்துக்கொள்கிறாள், சைட் டிஷ் இல்லையா? என்று எள்ளலுடன் இவரை வைகிறாள், சரி வேகமாய் வந்து என்னை முயங்கு, எனக்கு 12-30க்கு போகவேண்டும்,இல்லையென்றால் ஓவர் ஸ்டேக்கு காசு அதிகம் தரவேண்டியிருக்கும் என்கிறாள்,

இவருக்கு பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்தது போல ஒரு நிலை,இவருக்கு அந்த பூகம்பத்திலும் ஒரு கிளுகிளுப்பு வேண்டியிருக்கிறது, இல்லை என்றால் வீணாக காசு தரவேண்டுமே என்று,அங்கே ஒரு ரப்பர் பாயை போட்டு உறங்கும் அவளை பின்னால் சென்று தொட, அவள் வேகமாய் எழுந்திருக்கிறாள்,இவர் பதட்டத்திலும் பயத்திலும் எலி எலி என்று பொய் சொல்கிறார், அவள் எலியை அடிக்க தேடுகிறாள்.

இப்போது இயக்குனர் மனோஹரன் தன் வாழ்ந்து கெட்ட பழைய தயாரிப்பாளர் நண்பருடன் அவரது அம்பாசடர் காரில் வைத்து மது அருந்துகிறார், மனோஹரன் எடுக்க இருக்கும் படத்தில் அவரது பழைய படத்தில் உபயோகிக்காமல் விட்ட ஒரு பாடலை இடைச்சொருக வேண்டுகிறார்.இவர் கவலையுடன் தன் கைப்பை ஆட்டோவில் வைத்து காலையில் காணாமல் போய்விட்டது, நாளை படவிஷயமாக அவசரமாக எர்னாகுளம் போகவேண்டும், என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்க, இப்போது பரோட்டா வாங்கும் ஹோட்டலில் வைத்து இயக்குனர் மனோஹரனை பார்க்கிறான் சூரா, தானே போய் அவரின் பையை ஒரு கடையில் பத்திரமாக வைத்துள்ளேன் என்று கூறுகிறான்,

இப்போது இழந்த நம்பிக்கையை திரும்ப பெறுகிறார் மனோஹரன்,அவரின் தயாரிப்பாளர் நண்பர் சடுதியில் இரண்டும் ஸ்மால் ஃபிக்ஸ் செய்து பை திரும்ப கிடைத்த மகிழ்ச்சிக்கு குடி என்று அவருக்கும்,சூராவுக்கும் நீட்ட,சூரா மறுக்கிறான், நான் குடித்தால் போலீஸ் என்னை பிடிக்கும் என்கிறான். அவர், உன் வாழ்வில் ஒரு பழைய தயாரிப்பாளருடன் மது அருந்திய சம்பவத்தை இழக்காதே!!! ,இந்தா என்று அன்புடன் திணிக்க,அதை ஒரே கல்பில் அடித்துவிட்டு, பையை எடுத்துத்தர மனோஹரனையும் அங்கே கடைக்கு அழைத்து போகிறான்,

இப்போது இரவு வாகன சோதனையில் இருக்கும் கறாரான போலீசிடம் வசமாக மாட்டிக்கொள்கிறான் சூரா, அவர்களிடம் மனோஹரன் சட்டமும் சவடாலும் பேச, இருவரையும் கசவை என்னும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப்போகின்றனர், மனோஹரனுக்கு ,அவர் நண்பர் அங்கே அதே ஸ்டேஷனில் எஸ் ஐயாக இருப்பதால் பெருமிதம் பொங்க, அங்கே செல்கிறார், இவர் கெட்ட நேரம், அவர் அங்கே வீட்டுக்கு போய்விட்டிருக்கிறார். தவிர பனிஷ்மெண்ட் ட்ரான்ஸ்ஃபரில் அங்கே வந்த அவர் போலீஸ் நண்பர், ஓவர் டைம் வேலை செய்வதில்லை,

வீட்டுக்கு போனதுமே செல் போன் சனியனை அணைத்துவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார், இனி அவர் ஸ்டேஷன் வருவதற்கு காலை 9-30 ஆகும், அதுவரை இருவராலுமே வெளியே நகர முடியாது,கடைக்குள்ளே இருவரையும் வைத்து பூட்டிவிட்டு வந்த சூரா,பயத்தில் நடுங்குகிறான்,ரஷீத் அவர்களி வீட்டாரிடமும்,சுற்றத்தாரிடமும் நல்ல மரியாதையை கொண்டவர்,அவர் இந்த சபலத்தால் படப்போகும் அவமானம் சூராவை நடுங்க வைக்கிறது,ஏதோ ஒரு நினைவில் ரஷீதின் மொபைலில் அழைத்து தான் குடித்திருப்பதால் போலீசிடம் மாட்டி உள்ளேன்,ஷட்டரை திறக்க காலை 10 மணி கூட ஆகும் என்று பயத்துடன்ஒப்பிக்க,எதிர் முனை மௌனம் சாதிக்கிறது,யார் எடுத்தது? என்று குழம்புகிறான் சூரா,நாக்கை கடித்துக்கொள்கிறான்,அவர்கள் போய் உடனே திறந்துவிட்டாள் போச்சே!!!போச்சே என அலறுகிறான்.

இப்போது மூடிய ஷட்டருக்குள்,ரஷீத்துக்கு இன்றைய இரவு தூங்காமலே கழிகிறது,அவளுக்கு போன் அழைப்பு வரா வண்ணம் சைலண்டில் போடுகிறார்,மெல்ல வீட்டை பார்க்கிறார்,தூங்கும் அவளுக்கு இப்போழுது பசி வாட்ட ஆரம்பிக்கிறது,அவள் இவரிடம் திரும்பி எப்படியாவது ஷட்டரை திறக்க வழி பார் என்று கத்த ஆரம்பிக்கிறாள்,இவர் அவளுக்கு பணம் கொடுத்து சிறிது நேரம் அவள் வாயை அடக்கி வைக்கிறார்,சிறிது நேரம் கழித்து அவள் மீண்டும் பினாத்த ஆரம்பித்து விடுகிறாள்,பசியால் என்னால் சாக முடியாது என்கிறாள். இவர் பொறுமை இழந்து அவளை அடித்து விடுகிறார்,அவள் மேலும் கத்த வாயை துணி கொண்டு கட்டியும் விடுகிறார்.அங்கே இருக்கும் கடப்பாரை கொண்டு ஷட்டரின் பூட்டை திறக்க முயன்றும் முடியவில்லை.பயம் கூடுகிறது.

அன்று காலையில் தான் பக்கத்து  ஹாரன் ரிப்பேர் கடைக்காரனுக்கும் ரஷீதுக்கும் தள்ளுமுள்ளு வேறு ஆகியிருக்கிறது,அவர்கள் கடையை காலை 8மணிக்கு திறந்தால் 10மணிக்கு தான் மூடுவர்,இவனுக்கு பயத்தில் வயிற்றை கலக்குகிறது,யாரிடமும் சொல்லி திறக்கவைக்க முடியாத இக்கட்டான கவுரவ பிரச்சனை, இனி என்ன ஆகும்?!!!படத்தை அவசியம் பாருங்கள்,பார்ப்பவர்கள் முடிவை யாரிடம் சொல்லாதீர்கள்,அது புதிதாக பார்ப்பவருக்கு பதட்டமான உணர்வை தக்க வைக்க உதவும்.

படத்தின் நகைச்சுவைகள் சிரிப்பு மத்தாப்புகளாக கதையின் ஊடாகவே வருகின்றன,தன் காணாமல் போன பையை எதிர்பார்த்து காத்திருக்கும் மனோஹரனுக்கு அவரின் லாட்ஜ் மேனேஜர் ஒரு பார்சல் வந்திருக்கிறது என்று சொல்லி ஒரு கவரை கொடுக்க அதில் நடிக்க வாய்ப்பு கேட்டு போட்டொக்கள் அடங்கிய ஆல்பமாயிருக்கிறது,அதை பார்த்து சலித்துக்கொள்ளும் சீனிவாசன் முகபாவணை சான்சே இல்லை,இவர் சூராவின் ஆட்டோவில் பயணிக்கும் போது அவன் இன்றைய சினிமாக்களைப் பற்றி விவரித்து,சினிமான்னா அப்படி இருக்கனும் இப்படி இருக்கனும் என்று ஐடியா கொடுக்க,இவர் நீயே எடேன் என்று மடக்க,இவன் அது என் வேலை இல்ல சாரே என்று வழிய,பின்னே ரோட்டை பார்த்து ஓட்டு என்று சொல்லும் இடம் எல்லாம் சான்சே இல்லை,இவரின் மகன் வினித் சீனிவாசனுக்கு இவர் அப்பாவை நடிப்பில் மிஞ்சுவதே வாழ்நாள் சாதனையாக இருக்கும். 

இப்படம் கேரளாவில் நடந்த 17வது சர்வதேச திரைப்பட விழாவில்  ஆடியன்ஸ் விருது வென்றது. 9வது துபாய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டைப் பெற்றது. தேசிய விருதையும் இப்படம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருவிருதுகூட படத்துக்கு கிடைக்கவில்லை.தேசிய விருதின் பிராந்திய ஜூ‌ரியாக இருந்த இயக்குனர் டாக்டர் பைஜுவின் மட்டமான அரசியல்தான் தனது படத்துக்கு விருது கிடைக்காததற்கு காரணம் என்று தனது முகநூலில் காட்டமாக அவரை விமர்சித்தார் மேத்யூ. அவரது போன் நம்பரையும் அதில் தெ‌ரிவித்திருந்ததால் பைஜுக்கு அனானிமஸ் போன் கால்கள் கண்டபடி வந்திருக்கின்றன எனப்படித்தேன்.என்னைப் பொறுத்த வரை விருதுகள் எல்லாம் ஒரு படத்தின் தரத்தை நிர்ணயம் செய்வதில்லை,படத்தின் பரீட்சார்த்தமான,பிழையில்லாத ஆக்கமே அதன் தரத்தை நிர்ணயம் செய்யும்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-