இரு ஒப்பற்ற இந்திய திரைப்படங்களும் அதன் ஒற்றுமைகளும்!!!

ரெயின் கோட்[2004] மனு,ஷீலா மற்றும் நண்பன் கதாபாத்திரங்கள்
 காலம் சென்ற இயக்குனர் ரிதுபர்ன கோஷின் ரெயின் கோட் திரைப்படம் ,இந்திய கலை சினிமாவின் முக்கியமான படைப்பு, இது எழுத்தாளர் ஓ.ஹென்ரியின் 1906ல் வெளிவந்த The Gift of the Magi என்னும் சிறுகதையைத் தழுவி வெளியான திரைப்படம், ரிதுபர்ன கோஷ் தன் மானசீக ஆசான் சத்யஜித் ரே வின் ஒப்பற்ற படைப்பான , 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ஜன ஆரன்யா[ஆங்கிலத்தில் The Middleman] வில் இருந்து ஒரு காதல் தோல்வி திரியில் வரும் ஒரு முக்கியமான காட்சியை தன் ரெயின் கோட்டில் எடுத்தாண்டிருக்கிறார்,

ஆனால் இது காப்பி அல்ல ட்ரிப்யூட்.மூலத்தை விடவும் தழுவல் மேம்பட்டு நிற்கையில் அது ட்ரிப்யூட் ஆகிறது,மூலத்தை விடவும் தழுவல் கோணிக்கொண்டு பல் இளிக்கையில் அது காப்பி ஆகிறது,இது தான் கீ.இப்படித்தான் நான் காப்பியையும் ட்ரிப்யூட்டையும் வரையறுக்கப் பழகியுள்ளேன்.

ரெயின் கோட் படம் பற்றி நான் இதுவரை எழுதிய படங்களை எல்லாம் விட அது உயர்வாக இருக்க வேண்டும் என்பதால் அதை எழுதி முடிக்காமல் ட்ராஃப்டில் வைத்துள்ளேன், இன்று ஜன ஆரண்யா மீண்டும் பார்த்தேன்,கொல்கத்தாவின் நகர சூழலில் வேலை தேடி அலுத்துப்போய் காதலியை வேறொருவன் தட்டிக்கொண்டு போவதை தடுக்கமுடியாமல் மனதுக்குள் குமையும் சோம்நாத் [ப்ரதிப் முகர்ஜி] கதாபாத்திரம் தான் ரெயின் கோட் திரைப்படத்தில் ஊரக வங்காளத்தில் படிப்பை முடித்து,வேலை தேடிக்கொண்டிருக்கும் மனு [அஜய் தேவ்கன்]

ஜன ஆரண்யாவில் சோம்நாத் தன் அண்ணி கமலாவை உற்ற தோழி போலவே பாவிக்கிறான், தாயிழந்தவன் மனம் விட்டு அவரிடம் அப்படிப் பேசுகிறான்,கமலாவும் தன் கணவன், மாமனாருக்கு தெரியாமல் சோம்நாத்&அபர்னா சென் காதலுக்கு உதவுகிறாள், அபர்னா சென் பெற்றோரின் கட்டாயம் மற்றும் செட்டில் ஆக வேண்டிய சந்தர்ப்பவாதத்தால் ஒரு டாக்டரை மணந்து கொண்டு வெகு தொலைவுக்கு செல்ல நினைக்க, அண்ணி கமலா அவனுக்காக அப்படி வருந்துகிறாள்,

இதே போலவே ரெயின் கோட்டில் காதல் தோல்வியுற்று , சணல் கம்பெனியில் வேலையும் இழந்து,தன் முன்னாள் நண்பர்களிடம் பண உதவி பெற்று புதுவாழ்வை தேட கொல்கத்தா வரும் மனுவுக்கு, நண்பனின் மனைவியான ஷீலா [மவ்லி கங்குலி]அப்படி கரிசனம் காட்டுவார், அஜய் தேவ்கன் மிகுந்த தாழ்வு மனப்பான்மையால் நண்பனின் ஒயிலான அபார்ட்மெண்டில் புழங்க சிரமப்படுவார், இவர் தான் அப்படி ஓடி ஓடி உதவுவார்,மனு டாய்லெட்டில் ஷேவ் செய்கையில் அழுவதை வெளியில் இருந்து உற்றுக் கேட்டவர் , இனி அழும் போது ஷவரை திருகி ஓடவிட்டு அழுமாறு ஆலோசனை சொல்வார், மனு புது தைரியம் பெற்றவர், ஷீலாவிடம் தன் நண்பனுடனான திருமணத்தன்று அவள் ஏன் அப்படி அழுதாள் எனப் புரிகிறது என்று ஷீலாவை மடக்குவார். மிக அருமையான காட்சியாக்கம் அது,மனுவும் நண்பனின் மனைவி ஷீலாவை பாபி என்று தான் அழைப்பார்.


ஜன ஆரண்யா [1976] கமலா,சோம்நாத் கதாபாத்திரங்கள்
இக்காட்சியை சத்யஜித் ரே தன் ஜன ஆரண்யாவில் இப்படி வைத்திருந்தார்,தன் மைத்துனன் சோமநாத் காதல் தோல்விக்காக அண்ணி கமலா மிகவும் வருத்தம் கொண்டு, நாளை அவள் திருமணத்துக்கு போகமாட்டாய் தானே?!!!ஆனால் அவள் தேம்பித் தேம்பிஅழுவதை நீவிரும்புவாய் தானே?!!! கவலைப்படாதே ,அவள் நாளை திருமணத்தின் போது நிறைய அழுவாள்,என்கிறாள்,

சோம்நாத் அண்ணியை நிதானமாகப் பார்த்தவன்.அண்ணி, நீங்கள் ஏன் உங்கள் திருமணத்தின் போது அப்படி அழுதீர்கள் எனப் புரிகிறது!!! என்பான். இரு ஒப்பற்ற படைப்பாளிகள் அவர்கள் இயக்கிய இந்த காட்சியில், கலை அதன் உச்சத்திற்கு உயர்ந்து நிற்கிறது.இந்த இரு படங்களின் கனெக்‌ஷனையும் என்னால் ஆயுளுக்கும் மறக்க முடியாது.