புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் [pullippullikalum aattinkuttiyum][പുള്ളിപ്പുലികളും ആട്ടിൻകുട്ടിയും][2013][மலையாளம்]


புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் அருமையான பொழுதுபோக்கு மலையாளச் சித்திரம்,சமீபத்தில் கேரளத்தில் 75 நாட்களையும் தாண்டி ஓடிய படம், நிகழ்கால வேம்பநாட்டின் காயலின் மீதான கதைக்களம், அங்கே சுற்றுலா வரும் வெளிநாட்டவர் தங்கிச்செல்லும் ஹவுஸ்போட் வைத்து பிழைக்கும் சக்க கோபனின் [குஞ்சக்கோ போபன்]கதை, அதை சிறிதும் பாசாங்கே இன்றி சொன்னதில் இயக்குனர் லால் ஜோஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.அவசியம் குடும்பத்துடன் கண்டு ரசிக்க வேண்டிய படம்.

குஞ்சக்கபோபன்  ஒரு பயந்த சுபாவி.தன் ஹவுஸ் போட்  தொழிலில் போட்டியை சமாளிக்க வேண்டி சில பாவமில்லா பொய்களையும் ஆபத்தான உண்மைகளையும்  சொல்லி பிழைப்பை நடத்துகிறார்,அவர் விளையாட்டாய் சொன்ன உண்மை அவரை எப்படிப் படுத்தி எடுக்கிறது, அதிலிருந்து எப்படி விடுபட்டார்,உதவாக்கரை அண்ணன்களை எப்படி திருத்தினார்? என சுவையாக சொல்லியிருக்கின்றனர்.கொஞ்சமும் ஹீரோயிசம் இல்லாத  போபன் பாத்திரம் பார்ப்பவர் அனைவரையும் கவரும். அவரின் ஹவுஸ் போட்டில் மோகினியாட்டம்,கதக்களி ஆடும் பணத்தில் கறாரான ஏழைப்பெண் ஜெயஸ்ரீ மேல் அவர் வைத்த காதல் என மிக அழகான யதார்த்தமான படத்தை தந்திருக்கிறார் லால்ஜோஸ்,

காயல் கரையில் இதுவரை காணாத லொக்கேஷன்களுக்கு போய் காட்சிகளை எழிலாக அள்ளி வந்திருக்கிறது டீம், நாயகியான நமீதா ப்ரமோத் மிக அருமையான தேர்வு,எளிமையான அழகில் நல்ல நடிகையாக மிளிர்கிறார்,கேரளத்தில் அநேகம் ஏழைப் பெண்களையும் போல கல்ஃபிற்கு சென்று சம்பாதித்து வந்து நகையும் ஸ்ரீதனமும் சேர்த்து நல்ல வரனாக தேடிக்கொள்ள எண்ணும் யதார்த்தமான கதாபாத்திரம், போபன் தன் மூன்று குடிகார தண்டச்சோறு அண்ணன்களை எப்படி நல்வழிப்படுத்தி அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார் என அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்துடன் இணைந்து பயணிக்கும் யதார்த்தமான  நகைச்சுவையில் பல வசனங்கள் சிரிக்கை வைக்கும்.

காயல் கரையில் இது வரை கண்டிராத சிச்சுவேஷன்களும் உண்டு,காயல் கரையில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் மரணம் சம்பவித்தால் வாழைமட்டையில் சதுரமாக தெப்பம் செய்து அதில் விறகுகள் அடுக்கி சிதை அமைத்து எரியூட்டுகின்றனர்,மேலும் வீட்டுக்கு ஆண் வாரிசு இல்லை என்றால் பெண்ணே நீத்தாருக்கு கொள்ளி வைப்பதையும் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர். இப்படி படம் முழுக்க நிறைய  டீட்டெயிலிங் உண்டு,ஒரு காட்சியில் வல்லத்திலேயே இண்டேன் சிலிண்டர்கள் டெலிவரிக்கு எடுத்துப்போவதை காட்டியிருந்தார், மற்றொரு பாடல் காட்சியினூடே ஒரு படகிலேயே நடமாடும் மளிகைக்கடையையும் காட்டியிருந்தார். 

இதற்கு முன்பே காயல் கரையிலும் டூரிஸ்ட் ஹவுஸ் போட் பிண்ணனியிலும் ஏகம் படங்கள் வந்தாலும் இது கொண்டிருக்கும் அசலான டீட்டெயிலிங்கினால் இது தனித்து நிற்கிறது. படத்தில் எஸ்.குமாரின்  கேமரா இன்னொரு கதாபாத்திரமே எத்தனை எத்தனை க்ரேன் ஷாட்டுகள்? காயலுக்குள் ,மிகவும் சவாலான் பணியாக இருந்திருக்கும் மிக அற்புதமான காட்சியாக்கம். இசை வித்யாசாகர்,படத்தின் தயாரிப்பும் வித்யா சாகரே,படம் இசைக்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கும் ? !!! 5பாடல்களுமே தனித்துவமானவை, வித்யாசாகரின் மெலடிக்கு மயங்காதார் யார்,படத்தில் ஒட்டாத்தும்பி என்னும் பாடலும் கோட்டி முட்டிய என்னும் பாடலும் காதுகளில் ரீங்காரம் இடுகிறது,அநேக மலையாளப் படங்களில் வில்லங்கமான பாத்திரத்தின் தோன்றும் சூரஜ் வெஞ்சரமூடு இதில் மாமச்சன் என்னும் நல்ல சக மனிதராக தோன்றியுள்ளார், அவர் பாத்திரம் நன்கு நினைவில் நிற்கும்,லால் ஜோசின் முந்தைய படமான டயமண்ட் நெக்லேஸ் போன்றே ஆர்ப்பாட்டமில்லாத மனதுக்கு நிறைவைத் தரும் படம்.   அவசியம் பாருங்கள்.