ஷார்ட்ஸ் [ Shorts][2013][ஹிந்தி] அனுராக் காஷ்யப்



ஷார்ட்ஸ் திரைப்படம்   அனுராக் காஷ்யபின் தயாரிப்பில் ஐந்து புதுமுக இயக்குனர்கள் இயக்கிய ஐந்து குறும்படங்களின் தொகுப்பாகும். ஐந்து கதைகளுமே  மும்பை நகர வாழ்கையை சொல்லும் படைப்புகள். ஐந்துமே சமுதாயத்தில் பெண் எதிர்கொள்ளும் அவலத்தை சொல்லும் படைப்புகள் என்பது இவை கொண்ட ஒற்றுமையாகும்.

1.முதல் குறும்படம் இயக்குனர் ஷ்லோக் ஷர்மாவின்  சுஜாதா, இன்செஸ்ட் சகோதரன் [பெரியம்மா மகன்] காமப் பிடியில் மாட்டிக்கொண்டு சிறுவயது முதல் அவன் மிரட்டலுக்கும்,  அடிக்கும் பயந்து ஒவ்வொரு நொடியும் நடுங்கிக்கொண்டிருக்கும் இளம் பெண் சுஜாதாவின் கதை, சுஜாதாவின் தூரத்து சகோதரி புனேவுக்கு போகிறாயா? அங்கே நல்ல  வேலை வாங்கித் தருகிறேன் எனக் கேட்டும் போக மறுத்து, வாழ்க்கையை அதன் போக்கிலேயெ எதிர்கொள்ள நினைக்கிறாள்,


இப்போது 2 வருடங்களாக சகோதரனின் பார்வையிலேயே படாமல் மும்பையின் நெரிசலான ஸியோன் பகுதியில் வீடு எடுத்து தனியே இருக்கிறாள். வீட்டிலேயே பின்னால் இருக்கும் திறந்த வெளி மொட்டை மாடிப்பகுதியில் சமையல் தொழில் செய்து கேரியர் கட்டிக்கொடுத்து பஞ்சம் பிழைக்கிறாள், சமூகத்தில் பெண்ணை வேட்டையாட தயாராக இருக்கும் வல்லூறுகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறாள். இங்கும் அந்த தருதலை ஒரு மழைநாளில் மோப்பம் பிடித்து வந்தவன், இவளை மீண்டும் சித்திரவதை செய்யத் துவங்குகிறான், சம்பாத்தித்த பணத்தை திருடிக்கொள்கிறான்,

மூன்று வேளையும் ஆக்கி வைத்ததை வக்கனையாக தின்று விடுகிறான், இவளை சமையல் செய்ய விடாமல், உடலெங்கும் அவன் கைகள் ஊறுகின்றன, இவள் தூரத்து சகோதரி வெர்சோவா என்னும் பகுதியில் இருக்கும் தெரிந்த போலீஸ்காரனிடம் நீ போய் உதவி கேள் நானும் அவனிடம் சொல்கிறேன் என்கிறாள், ஆனால் அவன் இவளுக்கு உதவுவதில்லை, ஸியோன் என் சரகமல்ல, இது பெட்டி கேஸ்,தவிர உறவு முறை,அவன் அம்மாவிடம் சொல்லி கண்டிக்கச்சொல் என விட்டேத்தியாக சொல்லி அனுப்புகிறான்.

அன்றும் அதே போல வாடிக்கையாளருக்கு ஆக்கி பூட்டி வைத்த டிஃபன் கேரியரை திறந்து உண்ணத் துவங்கியவனை,பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த சுஜாதா என்ன செய்தாள்? என்பது தான் மீதிக் கதை,பெண்கள் என்று துணிகிறார்களோ? அன்று தான் அவர்களின் மீதான வன்முறை ஓயும், என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உளமாற சொல்லி வருகிறார் அனுராக் காஷ்யப் , ஹ்யூமா குரேஷி தான் இதில் சுஜாதா, ஐந்தில் எனக்கு மிகவும் பிடித்த கதை.

ஹ்யூமா மிகத்தேர்ந்த நடிகை, உழைத்து கண்ணியமாக வாழ எண்ணும் கதாபாத்திரம், மனுஷி அசத்தியிருக்கிறார். ஒரு காட்சியில் அவரின் சகோதரிக்கு குதிகால் மஸாஜ் செய்யும் காட்சி, எந்த ஒரு நடிகையும் செய்ய யோசிக்கும் ஒரு காட்சி அது, ஹ்யூமா குரேஷி தன் பற்கலால் அவரின் சகோதரியின் குதிகாலை அழுந்தக் கவ்வி ஒத்தடம் கொடுக்கிறார்,எந்த லஜ்ஜையுமில்லாமல் மிக அருமையாக செய்திருக்கிறார்,

இவர் சமையல் செய்யும் காட்சிகள் ,நன்கு தீஸீஸ் செய்து தொழில் முறை சமையல்காரி போலவே தோன்றியது சிறப்பு, ஹ்யூமா  தொளதொளவென ஒரு நைட்டி போட்டுக்கொண்டு, அதனுள்ளே சல்வார் பேண்டும் அணிந்து மேலுக்கு ஒரு துப்பட்டாவும் அணிந்தே காணப்படுகிறார்.  ஆண் வக்கிரத்தால் இளமையைக் கொன்று நடைபிணமான ஒரு கதாபாத்திரத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்  . படத்தின் வசனங்கள் ஒரே ஒரு A4 பேப்பர் தான் இருக்க வேண்டும். டே லைட்டில் எடுக்கப்பட்ட நீண்ட காட்சிகளைக் கொண்ட படம்.தேவையான இடங்களில் மட்டுமே கச்சிதமாக ஒலிக்கும் பிண்ணனி இசை, லைவ் ரிகார்டிங், மற்றும் கெரில்லா  படப்பிடிப்பு யுத்திகளை தன்னுள் கொண்ட குறும்படங்கள் இவை,


2.இரண்டாம் படமான சித்தார்த் குப்த் இயக்கிய  எபிலாக் [முடிவுரை] இது படத்துக்கு மிகவும் பொருத்தமான பெயர், மும்பையின் ஒரு மேல்தட்டு வர்க்கம் வசிக்கும் டூப்ளே ஃப்ளாட் ஒன்றில் ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் தம்பதிகள், உறவு கசந்துவிட்ட பின்னரும் பிரியாமல் வாழ்கின்றனர், காதலனுக்கு  ஈகோ பிரிவை அவள் முதலில் சொல்லட்டும் என்றிருக்கிறான், அவளிடம் முகம் கொடுத்தே பேசுவதில்லை, அவள் பேசினாலும் பதில் பேசுவதில்லை, காதலிக்கு அவன் மீது கண்மூடித்தனமான பொசஸிவ்னெஸ் , அவன் விலக விலக  சீண்டிக்கொண்டே இருக்கிறாள்,

அடி வாங்கினாலும் மீண்டும் சீண்டுகிறாள்,அவனின் கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து கிறுக்குத்தனங்கள் செய்கிறாள்,உதாரணத்துக்கு அவன் சட்டை மாட்ட வார்ட்ரோபை திறந்தால் இவள் அத்தனை துணிகளையும் அள்ளி பக்கெட் தண்ணீரில் அழுத்தி ஊறவைக்கிறாள்,அவன் சிகரட் பற்ற வைக்க எண்ணிணால் அவள் ஊதி அணைக்கிறாள், இப்படி தீப்பெட்டியே காலியாகிவிட, அவள் இப்போது லைட்டரால் பற்ற வைக்க வர அவன் விலகிப் போகிறான், அவன் சிறுநீர் கழிக்கையில் அவன் முதுகில் குதிரை ஏறுகிறாள்.அவன் சொக்கட்டான் ஆடுகையில் காய்களை கலைக்கிறாள். அவள் அவனின் ஸ்காட்ச் பாட்டில்களை உடைக்கிறாள், படங்களை நொறுக்குகிறாள்,கிடாரை அடித்து உடைக்கிறாள். படம் 20 நிமிடங்கள் நீளம் அதில் ஒரு வசனமும் கிடையாது.

காதலன் காதலியிடம் மட்டுமல்ல கட்டிடத்தில் தன் முன் எதிர்ப்படும் ஒரு வாட்ச்மேனிடம் கூட  பேசுவதில்லை, பேசாநோய் கொண்டிருப்பான் போல, கடைசியில் தனிமை வாட்டிய காதலி என்னவாகிறாள்? என்று பாருங்கள்.இது குறும்படத்தில் வித்தியாசமான முயற்சி, இது கொண்டிருக்கும் கேமரா கோணங்கள், காதலியாக ரிச்சா சட்டா, அவருக்காக ஒரு பெண்ணின் மன கோபம்,பிடிவாதம்,மன அழுத்தம்,விரக்தி போன்றவற்றை இதைவிட அருமையாக யாரும் சொல்லிவிட முடியாது,ஒரு காட்சியில் காதலனிடம் மல்லுக்கட்டும் ரிச்சாவின் பேண்டி கழண்டு விழுகிறது, பாலிவுட் படத்தில் இப்படியெல்லாம் காட்சி வைக்க ஆரம்பித்துவிட்டனர் என எண்ணி எண்ணி வியக்கிறேன். ஒரு காட்சியில் பெரிய க்ளாக் ஒர்க் ஆரஞ்ச் படப் போஸ்டர் கூட இதில் கனென்ஷனாக வருகிறது.

3.மூன்றாவதாக மெஹ்ஃபுஸ்[உருதுவில் பாதுகாப்பு] ,நம் அபிமான நவாசுதீன் சித்திக்கி இதில் சுடுகாட்டின் வெட்டியான்,பலனே எதிர்பாராமல் கடமையைச் செய்கிறார்,சவக்கிடங்கில் இருந்து ஓய்வே இல்லாமல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிணங்கள் சிப்பந்திகளால் இவரிடம் எரியூட்ட தரப்படுகின்றன, 2013ன் முசாஃபராபாத் ,1984ன் கிழக்கு தில்லி,1984ஆம் ஆண்டின் போபால், 1993ஆம் ஆண்டின் கலவரமும்பை போன்றவை என் நினைவுக்கு வந்து போனது, அரசே கலவரக்காரர்களை அடக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒரு அவலத்தை என்னவென்று சொல்ல?,


ஒரு நாள் தெருவில் வைத்து அழகிய பெண்ணைப் பார்க்கிறார்,உடன் அவளின் காதலனும் இருக்கிறான், இருவரும் வீட்டை விட்டு ஓடிச் செல்ல திட்டமிடுகின்றனர் எனப் புரிகிறது, அவளை விழுங்குது போல சித்தன் பார்வை பார்க்கிறார் இவர், அவள் இவரின் தோற்றத்தால் அருவருப்படைந்து தலையை திருப்பிக்கொள்கிறாள்,நண்பன் சகிதமாக காரில் புறப்படுகின்றனர், மறுநாள் முதல் வேலையாக பக்கத்தில் துவைக்கும் பெண்ணிடம் துணி சோப்பு வாங்கி தன் முகத்தை நன்கு துணிசோப்பு போட்டு தேய்த்துக் கழுவுகிறார் சித்தன். அறைக்கு வந்தவர் கண்ணாடி விழுந்த கண்ணாடி ஃப்ரேமை அணிந்து கொண்டு,முகம் பார்க்கும் கண்ணாடியை தேடி எடுத்து முகம் பார்க்கிறார், முகம் தெளிவாயுள்ளது, ஆனால் பற்கள் கறை படிந்துள்ளதை பார்க்கிறார், தன் முகம் தனக்கே சகிக்கவில்லை என்றிருக்கிறார்.

அன்றும் மினி வேனில் எரியூட்ட இரண்டு பிணப் பொதிகள் தரப்பட, மண்ணெண்ணெய் தீர்ந்து போய் விட்டதாகவும்,வாங்கித் தரும்படியும் கேட்கிறார், அவர்கள் நன்றாக சிரித்து விட்டு மண்ணெண்ணெயெல்லாம் எதற்கு? நீயே துண்டு போட்டு சாப்பிடலாமே? என லந்து செய்கின்றனர். இருந்தும் கடமை தவறாதவர், மண் வெட்டியால் கடினமான மண்ணில் குழி பறிக்கிறார். தன்னிடம் வரும் பிணங்களை அதுவரை பிரித்துப் பார்க்காதவர்,முதல் முறையாக ஒரு பொதியைப் பிரித்துப்பார்க்க அது ஒரு இளைஞன் பிணம், அவனை நேற்று இரவு பார்த்தது நினைவுக்கு வர ,அவனின் ஷூக்களையும் பார்த்து உறுதி செய்கிறார், அவனே தான், மற்றொரு பிணத்தை வேகமாகப் பிரிக்க, நேற்று பார்த்த அந்த அழகிய இளம்பெண், அவளின் அழகிய ஹேர் க்ளிப் பார்த்து உறுதி செய்கிறார்,

 ஊரே பற்றி எரியும் போதும் கூட கௌரவக் கொலைகள் முன்னெப்போழுதும் போலவே நடப்பதை நாம் இதன்மூலம் அறிகிறோம், இப்படி அனாதையாக வீதியில் சாக விட்டாலும் விடுவோம், விரும்பியவனோடு பெண்ணை வாழவிடமாட்டோம் என்றிருக்கும் சமுதாயத்தை மௌனமாக  நக்கல் செய்கிறது படம்.  சவக்குழிக்கு அருகே அவளைக் கிடத்தி அவள் அருகே இவரும் படுத்துக்கொள்கிறார், ஆதூரமாக அவளை அணைத்தும் கொள்கிறார், இப்போது அவள் இவரை தள்ளவில்லை. இந்தப் படமும் 20 நிமிடங்கள் நீளம், இரவுக்காட்சிகளில் கேமரா புகுந்து விளையாடுகிறது, கேங்ஸ் ஆஃப் வாஸிபூரீல் நடித்த ஏனைய நடிகர்கள் இந்த ஐந்து குறும்படங்களிலுமே தோன்றியுள்ளனர் என்பதும் கூடுதல் சிறப்பு.

 4,AUDACITY [ஆடாசிட்டி] [தில்]  அனிர்பின் ராய் இயக்கிய குறும்படம், மும்பையில் கொல்கத்தா குடும்பங்கள் வசிக்கும்  அடுக்குமாடிக் குடியிருப்பில்  நடக்கும் கதை, கணவன் குடிகாரன்,மனைவி இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்டவள், தூங்க அரும்பாடு படுகிறவள் தூக்க மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள், இவர்களுக்கு ஒரு பதின்ம வயது மகள் எந்நேரமும் அமெரிக்க இசை கேட்பதை விரும்புகிறாள்,பள்ளிப் பாடம் அவளுக்கு கசக்கிறது, குடும்பத்தலைவர் தினமும் வேலையை விட்டு வந்ததும் குடிக்க அமர்ந்து விடுகிறார்,

கஜல் இசை கசிந்து கொண்டே இருகிறது, மனைவியின் நிழல் கூட இவர் மீது படுவதை  விரும்பவில்லை, அவளுடன் பேசுவதையே கௌரவக் குறைச்சலாக எண்ணுகிறார், ஒவ்வொரு மாலையும் அவரின்  அண்டை அயலார் நண்பர்கள், ஒவ்வொருவராக பெல் அடித்து உள்ளே வந்து அவருடன் தனியறையில் குடித்துக்கொண்டே நடுநிசி வரை ரம்மி ஆடுகின்றனர், மனைவி தடையின்றி குடிப்பதற்கு தன்னால் முடிந்த வரை சைட் டிஷ் சமைத்து தீரத்தீர வைத்துக்கொண்டே இருக்கிறாள்,கணவர் மனைவியை மதிக்காத நன்றி கெட்ட ஒரு பிறவி எனப் புரிகிறது, மகள் இப்படிப்பட்ட மூர்க்கமான சுயநலமி அப்பாவை திருத்துவதற்கு தன் அமெரிக்க இசையையே லாவகமாக பயன்படுத்தும் அருமையான கதை இது. கொல்கத்தா வாசிகளின் சமூகம்,பழக்க வழக்கங்கள் இக்குறும்படத்தில் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

5,ஷோர் [Shor]-நீரஜ் கைவான் இயக்கிய குறும்படம், காசியில் இருந்து மும்பையின் தாராவி போன்ற பெரிய சேரிக்குள் பஞ்சம் பிழைக்க வந்த கணவன் மனைவிக்குள் நடக்கும் மிக யதார்த்தமான கதை,கணவன் வேலை செய்த மில்லை மூடிவிட வேலையில்லா கணவனை எதுவுமே சொல்லாத உத்தம மனைவி, அவனை எதிர்த்து பேசுவதோ? அவன்  இயலாமையை குத்திக்காட்டும் குணமோ அற்றவள், வேலைக்கு போவதையே விரும்பாதவள், கணவன், மாமியார்,4 வயது மகன் சாப்பாடு,வீட்டு வாடகை போன்றவற்றை சமாளிக்க வேலைக்கு சேர்ந்து ஓவர்டைம் பார்த்து கடுமையாக உழைக்கிறாள்,

கணவனுக்கு மொபைலுக்கு டாப் அப் கூட அவள் தான் செய்கிறாள், மாமியார் இவள் தங்கள் உயர்ந்த சாதியின் ஆச்சாரத்தை மீறுகிறாள் என அனுதினமும் மகனிடம் புகார் வாசிக்கிறாள்,அம்மாவின் பேச்சை மீறாத மகன் மனைவியை விஷ சொற்களால் துளைக்கிறான்,அம்மா வீட்டில் ஒரு பாத்திரத்தைக் கூட நகர்த்தாதவள், வீட்டிலேயே பணம் திருடி புகையிலை, லாகிரி வஸ்துக்கள் வாங்குபவள் என மனைவி சொல்லும் எதையும் நம்ப தயாரில்லை,ஆண் என்னும் தடித்திமிரில் மனைவி ஆக்கியதை உண்டு விட்டு அவளையே வார்த்தையால் அடிக்கிறான்,

அன்றும் அப்படி அம்மா மூட்டி விட,அவள் வேலைக்கு சீக்கிரமே கிளம்பி ரயிலில் செல்கையில் செல் போனில் அழைத்து அவளின் கற்பு நெறியை சந்தேகித்தும்,மிக அசிங்கமான சொற்கள் சொல்லியும் அவளை வீழ்த்துகிறான்,இறுதியாக ஆண் என்னும் திமிரில் அவளை விவாகரத்து செய்யப் போகிறேன்,உன் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு காசிக்கே போ என மிரட்டுகிறான்,ரயிலில் மிகவும் அழது அனத்தியவள் ,அவன் மீண்டும் செல் போனில் அழைக்க பொறுத்தது போதும் என வெடிக்கிறாள்,தான் வீட்டுக்குச் சென்று மகனையும் கூட்டிக்கொண்டு வெளியேறப்போகிறேன்,

உன் தயவு எனக்கு போதும்,நான் சமூகத்தில் தனியே வாழ்ந்துகொள்கிறேன்,நீ ஆட்டோ வாங்க கடனுக்கு முன்பணத்துக்காக அலைகிறாய் எனத் தெரியும்,அதற்கு 12000 ரூபாய் சேர்த்து வைத்துள்ளேன்,அதை பக்கத்து வீட்டில் சென்று வாங்கிக்கொள், நான் இனி உன்னை பார்க்கப் போவதில்லை என்கிறாள். இவன் வெலவெலத்தவன்,கண் இருண்டுவிட்டது,உயிரே போய்விடுவது போன்ற நிலை, இனி என்ன ஆகும் எனப்பாருங்கள்?,கணவன் மனைவிக்குள்ளான ஊடல் நீண்ட காலம் நீடிப்பது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்னும் உண்மையை மிக அருமையாக விளக்குகிறது படம், இதில் மனைவியாக வந்த ரத்னபாலி பட்டாசார்ஜி எக்ஸலண்ட் பெர்ஃபார்மர், அனாசயமாக நடிக்கிறார், இது இவருக்கு முதல் திரைப்படம்,இவர் ஏற்கனவே மும்பை காலிங் என்னும் டீவி சீரீஸ்களில் தோன்றியுள்ளார்.

படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருமே நாம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கக் கூடிய மாந்தர்களே,தலைசிறந்த நடிகர்களின் பங்களிப்பு,மிக அருமையான படைப்பாக மிளிர்கிறது. தோபிகாட் , மும்பை மெரி ஜான் போன்றே ரத்தமும் சதையுமான ஒரு படைப்பு. படம் டாரண்டில் கிடைக்கிறது,  சப்டைட்டிலுடன்  யூட்யூபில் கிடைக்கிறது,காபி ரைட் பிரச்சனைகளுக்கு பயந்து அதை யாரேனும் அழிக்கும் முன்னர்  பார்த்து விடுங்கள்.குறும்படங்கள் எடுப்பவர்கள் பேணவேண்டிய தரத்துக்காக அவசியம் பார்க்க வேண்டிய ஸ்டடி மெட்டீரியல் இப்படம்.