வொர்க்கிங்மேன்ஸ் டெத் - ஹீரோஸ் [Workingman's Death - Heroe's][ஆஸ்திரியா][2005][16+]

வொர்க்கிங்மேன்ஸ் டெத் ஆவணப்படத்தின் முதல்பகுதியான ஹீரோஸ் மீண்டும் பார்த்தேன், இந்தப் படம் உக்ரெய்னின்  Donets Basin என்னும் பகுதியில் இயங்கும் சட்டவிரோதமான நிலக்கரிச்சுரங்க தொழிலாளிகளின் கதையை விரிவாகப் பேசுகிறது, Michael Glawogger இயக்கிய இந்த ஆவணப்படம் உலக சினிமா ரசிகர்கள்,ரசிகரல்லாதோர் எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு. இயக்குனரின் நெஞ்சுரத்தை ஒவ்வொரு சினிமா இயக்குனரும் ரோல்மாடலாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்பேன். உயிரைக் கொடுத்து படம் எடுப்பது என்று நான் இதைத் தான் சொல்லுவேன்.

மேலும் இது ஒரு நெஞ்சை உருக்கும் படைப்பு , உக்ரைன் அரசு தன் நிலக்கரிச் சுரங்க தொழிலாளிகளுக்கு பல மாத சம்பள பாக்கி வைத்துள்ளதால், அவர்களால் அங்கே தொடர்ந்து வேலை செய்ய விரும்பாத, முடியாத நிலையில், கடும் குளிரில், கணவன் மனைவி சகிதமாக ,அங்கே அந்த நிலக்கரிச் சுரங்கத்துக்குள் நிலக்கரி உடைத்து அள்ள சட்டவிரோதமாக ஊடுறுவுகிறார்கள்,

இவர்களால் வெடி வைத்தோ , பெரிய ட்ரில்லிங்,பொக்லைன் எந்திரங்களைக் கொண்டோ சுரங்கம் தோண்ட முடியாது, முதல் காரணம் வசதியின்மை, இரண்டாவது இவர்கள் செய்வது சட்ட விரோதம். ஆகவே இவர்கள் மலையை வெளிப்பார்வைக்குப் பார்த்தால் உடைத்தது போலத் தெரியாத வண்ணம், மலையை படுக்கை வாட்டில் குடைகின்றனர், சுமார் ஒன்றரையடி உயரத்துக்கு பெருச்சாளி வலை பறிப்பது போல மெல்ல கையுளி, சுத்தியல்,சம்மட்டி கொண்டு நாள் ஒன்றுக்கும் சுமார் 8மணி நேரம் படுத்த, ஊர்ந்த வண்ணம் வேலை செய்கின்றனர். ஒருவர் வியர்த்தாலோ,அரித்தாலோ திரும்பக் கூட முடியாது,

உள்ளே வெளிச்சத்துக்கு தங்கள் தலையில் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட டார்ச்சையே பெரிதும் நம்பியிருக்கின்றனர், அங்கேயே படுத்த வண்ணம் குழுமி சிகரெட் புகைக்கின்றனர், நீரும் உணவும் அருந்துகின்றனர், நிலக்கரியை ஒருவர் வெட்டி பாளம் பாளமாக விழுந்ததை, உடனே பின்னால் நகர்த்த அதை அடுத்தவர் பின்னே நகர்த்துகிறார்,இப்படியே அது சவப்பெட்டி போன்ற ஒரு பெட்டியில் சேருகிறது,இப்படி 4 தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு நாளைக்கு 4 சாக்குப் பை வரை நிலக்கரியை வெட்டி எடுத்து, அதை அந்த குன்றின் முகட்டுக்கு மேலே உள்ள கை ராட்டினத்தைச் சுற்றி இயக்கி மேலே ஏற்றுகின்றனர்,

பின்னர் அதை அங்கே இருக்கும் ஸ்டெப்னி கொண்ட யூகால் ரக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் செல்கின்றனர்,எல்லாவற்றிலுமே குழுவாகவே ஈடுபடுகின்றனர்,பாகம் பிரிப்பதையும் சரிசமமாக பங்கிட்டுக்கொள்கின்றனர்,இந்த ஆபத்தான திருட்டின் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தான் இவர்கள்,இவர்களின் குடும்பம் வயிறு வளர்க்க வேண்டும் என்பது துயரம்.

இதில் பெரும்பாலானோர் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்பது வேதனையான விஷயம்,தாங்கள் செய்யும் வேலைக்கு தாங்கள் ஓவர் குவாலிஃபைட் என்னும் உண்மையை நன்கு அறிந்தும் இருக்கின்றனர், வேலையில்லாத் திண்டாட்டத்தால் குடும்பம் பட்டினி கிடப்பதற்கு இது மேல் என்கின்றனர், இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டஆண்டு 2004,அனைவருமே நன்றாக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்,ஆனால் சேமிக்க மறந்தவர்கள்.அரசு வேலை தந்த அனைத்தையுமே அன்றாட வாழ்க்கையை ஓட்டவும்,குழந்தைகள் கல்விக்கு,கேளிக்கைக்கு  என்று  செலவிட்டு வந்திருக்கின்றனர்,

பல நிலக்கரி சுரங்க தொழிலாளர் குடும்பங்களில் இது தான் நிலைமை, உயிரை பணயம் வைத்து உழைத்தால் தான் நாள் ஒன்றுக்கு தலைக்கு 100கிலோ நிலக்கரி கிடைக்கும். என்னால் இந்த குறும்படத்தை நிம்மதியாக பார்க்க முடியவில்லை, மூச்சு திணறல் வருவது போன்றும்,நானே அந்த நிலக்கரி குன்றின் பரணுக்குள் மாட்டியது போன்றும் உணர்ந்தேன், இவர்கள் வாழ்க்கை எத்தகைய பேரிடரைக் கொண்டிருக்கிறது?,

 ஆனால் இவர்கள் அதிலும் அருகியிருக்கும் நல்லவற்றை தேடிப்பிடித்து அந்த தருணத்தையும் கொண்டாடுகின்றனர் என்பது தான் யதார்த்தமாக இருக்கிறது.
பழைய வீர்யமிழந்த ஓட்காவும்,கரியால் மூடிய தேகத்தை தேய்த்துக் கழுவ மனைவியால் வைத்துத் தரப்படும்  வெந்நீரையும், பசித்த வேளைக்கு கிடைக்கும் ப்ரட் துண்டங்களும், ஆறிய, எண்ணெய்யில் பொரித்த அரிசிக்கொழுக்கட்டைகளையும் இவர்கள் பெரிதும் கொண்டாடுகின்றனர்.

இதில் இன்னொரு நகை முரண்,அரசு 1930களில் தொழிலாளிகள் வர்க்கத்தை ஊக்கப்படுத்தி,அதில் கிளம்பிய தொழிற்புரட்சியைக் கொண்டு உற்பத்தியைக் பெரிதும் ஊதிப் பெருக்கி , உக்ரைனின் கனிம வளங்கள் ஏகத்தை வாரிவிட்டிருக்கின்றனர்,நாடு கடும் பொருளாதார வீழ்ச்சியும் கண்டாயிற்று, நாடும் சிதறுண்டும் போயாயிற்று,இருந்தும் அங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் நிலக்கரிச் சுரங்க தொழிலாளி Alexey Stakhanov ன் ராட்சத சிலை, அங்கேயே பல தொழிலாளிகளின் துயரக் கதைகளுக்கு சாட்சியாக நின்றபடி இருக்கிறது, Alexey Stakhanov என்பது அசகாய சாதனை செய்த ஒரு நிலக்கரிச் சுரங்க தொழிலாளியாம்,அவரைப் பற்றிப் படிக்க இங்கே செல்லவும்

 இன்றும் நிறைய சுரங்கத் தொழிலாளர்கள், உழைப்பே கடவுள், ஆலையே கோவில், வேலையே உய்வு தரும், என நம்புகிறவர்கள் தங்கள் திருமணத்தை அங்கே அந்த சிலைக்கு முன்னர் நின்று செய்துகொள்கின்றனர்.அந்த சிலைக்கு மாலை மட்டும் தான் யாரும் அணிவிக்கவில்லை.ஆனால் அதன் பீடத்தில் மலர்கொத்துக்களை சொருகி பூரிக்கின்றனர்.

60 வயதைக் கடந்த நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி ஒருவர் முறையாக ஓய்வு பெறுவதை நாம் வியந்து பார்க்கிறோம், அத் தொழிலாளி தன் சுரங்க சீருடை, தொப்பி, பூட்ஸுகள், கவசங்கள், போன்றவற்றை அந்த சதுக்கத்தில் வைத்து நீண்ட பிரயத்தனத்துக்குப் பின்னர் கொளுத்த, சகாக்கள்,அவருக்கும் தங்களுக்கும் ஓட்காவை ஊற்றிக்கொண்டு சியர்ஸ் சொல்ல,அந்த கதகதப்பில் அந்த முதிய தொழிலாளி ஓய்வு பெறுகிறார்.

வேலை செய்கிறவனுக்கே சாப்பாடும் உறைவிடமும் கேள்விக்குறி என்னும் நிலையில்,ஓய்வு பெற்றவர் நிலை என்ன ஆகும்? என நாம் கவலைப் படுகிறோம்,ஆனால் அவர் அதைப்பற்றி கவலைப்படாமல் ஓட்காவை ரசித்துப் பருகுகிறார்.அவசியம் இந்த ஆவணப்படத்தைப்  பாருங்கள்,உங்கள் 22 நிமிடம் பயனுள்ளதாக செலவாகும்.