வொர்க்கிங்மேன்ஸ் டெத் - கோஸ்ட்ஸ் [Workingman's Death - Ghost's][ஆஸ்திரியா][2005][16+]



Workingman's Death என்னும் ஆவணப்படத்தில் Ghosts என்னும் இரண்டாம் பகுதி பார்த்தேன், இது  Ijen என்னும் ஊரில்,இந்தோநேசிய எரிமலையின் சல்ஃபர் சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளின் கதை. எரிமலை கக்கும் கந்தகத்தின் வெப்பம் எத்தகையது என சொல்ல வேண்டியதில்லை,ஏதோ ஒரு தர்மத்துக்கு கட்டுப்பட்டோ,எதனாலோ உந்தப்பட்டோ இத்தனை கடினமான வேலையை லயித்து செய்கின்றனர்.

இந்தப் படத்தில் இருப்பவர்கள் மூங்கில் கூடைகளில் தம் தோளில் சுமந்திருப்பது ஸல்ஃபர் பாறைகள்,ஒரு சுரங்கத் தொழிலாளி சராசரியாக 70 கிலோ முதல் 115 கிலோ வரை ஸல்ஃபரை இந்த எரிமலை சுரங்கத்தின் அடிவாரத்தில் இருந்து அதன் முகட்டிற்கு சுமந்து வருகிறார்,இது சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மிகவும் அபாயகரமான பாதை,போகும் வழியில் இந்த தொழிலாளிகள் பாரத்தை அங்கங்கே தென்படும் பெரிய கல்லின் மீது இறக்கி வைத்து இளைப்பாறுகின்றனர்.


செஞ்சி மலையில் நாம் ராஜா ராணிக் கோட்டைக்குச் செல்ல ஏறியிருப்போம்,அதைவிட மிகக் கடினமான பாதை அது,கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலை,தவிர காலை தவறி வைக்க அவர்கள் எரிமலைக் குழம்புக்குள் மூழ்கி விடும் அபாயமும் உண்டு, இந்த இந்தோநேசிய உழைப்பாளிகள் அன்றைய வேலை முடிவில் பெறுவது சொற்ப கூலியே,இவர்கள் சுமக்கும் அந்த இரு மூங்கில் கூடைகளும் அதை இணைக்கும் கடினமான நன்கு வளையக்கூடிய சீசன் செய்த இரு மூங்கில் பட்டைகளும் என இதன் எளிய ஆனால் உறுதியான வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது,கூடை எத்தனை ஆடினாலும் வளைந்தாலும் உடைத்துக் கொண்டு தெரிப்பதில்லை என்பது அதிசயம் தான்.
 
மலையடிவாரத்திலிருந்து முட்டி தெரிக்கும் கடும் பயணத்தின் முடிவில் மலை முகட்டிற்குச் செல்லும் இவர்கள் அங்கே மலை முகட்டின் மேலே குழுமியிருக்கும் டூரிஸ்டுகள்,இவர்களின் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று போட்டோ எடுத்துக் கொள்வதை  பொருட்படுத்துவதில்லை, முகம் சுளிப்பதில்லை,அவர்களைப் பார்த்து பொறாமைப் படுவதில்லை.ஸல்ஃபர் ஸ்லாபுகளை சிந்தாமல் சிதறாமல் எடைபோடும் மையத்தில் கொண்டு சென்று எடைபோட்டு,அதை காத்திருக்கும் லாரிகளில் கொண்டு சென்று கொட்டும் வரை,இவர்களின் கவனம் எங்கும் சிதறுவதில்லை,

சுமைதூக்கும் தொழிலாளிகளில் சிலர் டூரிஸ்டுகளுக்கு உதவிகள் கூட செய்கின்றனர், டூரிஸ்டுகள் ஸல்ஃபர் நிரம்பிய கூடைக்காவடியை தாங்கள் புஜபலம் கூட்டி தூக்குவது போல பாவனை செய்ய,அதை அந்த சுமை தாங்கிகள் அவர்களிடமிருந்து கேமரா பெற்று போட்டோ எடுத்தும் தருகின்றனர்,அதற்கு டூரிஸ்டுகள் விருப்பப்பட்டு தருவதை வாங்கிக்கொள்கின்றனர்.

அப்படி இவர்கள் ஸல்ஃபர் ஸ்லாபுகளை லாரியில் கொண்டு கொட்டியவுடன் ,அன்றைய தின வேலை முடிவில் இவர்கள் அந்த காவடிக் கூடைகளை ஒரு பெரிய மரத்தின் கிளைகளை நோக்கி வீச,அது அங்கே போய் மாட்டிக்கொள்கிறது,மறுநாள் யாராவது ஒருவர் ஏறி அதை எடுத்து கொடுப்பார் என நினைக்கிறேன். இந்த ஸல்ஃபர் சுமைதாங்கிகளில் ஒரு குற்றவாளி தன் மாநிலத்தில் தன்னை போலீஸ் தேடுவதால் இங்கே இங்கே ஒளிந்து மறைந்து ஸ்லஃபர் சுமப்பதாக சொல்கிறார்,

அவர் சுமை தூக்கும் நேரத்திலேயே, இதே சல்ஃபர் பாறை குழம்புகளை  அழகாக பெட் பாட்டில்களின் அடியை நறுக்கி அதில் மெழுகு போல வடிய விட்டு base போல செய்து  அந்தக் குழம்பில் சல்ஃபர் பாறைகளை சிற்பம் போல உடைத்து ,அதை அந்த base ல் சொருகி விற்கிறார்,இதன் மூலம் இவருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.ஒரு சிற்பம் 20 ருப்யா எனச் சொல்லும் இவரிடம்,ஒரு  வெளிநாட்டுப் பயணி 10 ருப்யாவைக் காட்டி, தருவாயா? என கறாராகக் கேட்க,இவர் மறு பேச்சு பேசாமல் கொடுக்கிறார், பின்னர் அந்த சிற்பத்துடன் தன்னை ஒரு போட்டோ எடுக்கச் சொல்லி தன் சிற்றின்பத்தையும் தணித்துக் கொள்கிறார்.

இன்னொருவர் bon jovi  பேண்டின் ஆதர்ச ரசிகர், அந்த பேண்டின் நால்வர் பெயரை Jon Bon Jovi, David Bryan,Tico Torres,Richie Sambora என மனப்பாடமாக சொல்கிறார்,பேண்ட் என்றால் என்ன என இன்னொரு சுமைதாங்கிக்கு விளக்குகிறார் பாருங்கள்,மிக அருமையான இடம் அது,உலகில் நாம் தான் வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கும் மாந்தர், நம்மை தான் கடவுள் மிகவும் சோதிக்கிறார்,  என நினைத்திருக்கும் யாரும் இந்த ஆவணப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும், வாழ்வில் கிடைத்ததைக் கொண்டு திருப்தியுற நல்ல தெளிவு கிடைக்கும்.

இது தவிர  4 ஆபத்தான தொழில்கள் இந்த ஆவணப்படத்தில் வருகின்றன, ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.இதில் முதல் பகுதியான ஹீரோஸ் பற்றி படிக்க இங்கே செல்லவும்.

அவசியம் இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள்,உங்கள் 22 நிமிடம் பயனுள்ளதாக செலவாகும்.