ஸ்வபானம் [സ്വപാനം] [Swapaanam][2014] [மலையாளம்]

படத்தின் ப்ரொமோஷன் போஸ்டர்
ஷாஜி என் கருணுடைய படங்கள் சுத்தமான அழகியல் படங்கள், இப்படம் கலைப்பட விரும்பிகள் உலக சினிமா காதலர்கள்,கர்நாடக் இசைப்பிரியர்கள் ,நாட்டார் இசைப் பிரியர்கள் தவறவிடக்கூடாதவை, மற்றையோர் சில காத தூரம் தள்ளியிருக்கவும். அவரின் குட்டி ஸ்ராங்க் மலையாள சினிமாவின் மிக அருமையான படைப்பு, அதைப் போன்றே எந்த சமரசமுமின்றி எடுக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பு தான் ஸ்வபானம், இதை தமிழில் குத்துயிர் [குலையுயிர்] என்று சொல்வார்களே, அப்படி  அர்த்தப் படுத்திச் சொல்லலாம்.

இயக்குனர் ஷாஜி கருண் ஒரு தேர்ந்த கேமரா கவிஞருமாதலால் அவருடைய படங்களில் வரும் இருளும் ஒளியும் மிக நேர்த்தியாய் இழையும் காட்சிகள் மேதைமையின் உச்சத்தில் இருக்கும், இவரின் முந்தைய படமான வானப்பிரஸ்தத்தின் ஒளிப்பதிவின் நேர்த்தியும் இயக்கமும்  இன்றும் பேசப்படுகிறது. இவரின் திரைப்படத்தின் லொக்கேஷன்கள் மிகவும் அற்புதமான காணக்கிடைக்காத தங்கமாக இருக்கும், அதற்கு சாட்சி குட்டி ஸ்ராங்க் படத்தில் குட்டி ஸ்ராங்கன் செல்லும் வெவ்வேறு ஊர்களின் சூழலுக்கு ஏற்ப இவர் தேர்ந்தெடுத்த லொக்கேஷன் தீம்கள், மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களை இவரது கேமரா ஸ்வபானத்துக்காக அள்ளி வந்திருக்கிறது.

காமினி மணி சகி பாடல் மேற்குத்தொடர்ச்சி மலையின் பின்னணியில்

ஜெயராம் மற்றும் காதம்பரி தோன்றுகின்ற பாடல் காட்சிகளில் அத்தனை கலைத்திறன் மிளிர்கிறது. க்ளைமேக்ஸ் காட்சியில் மயில் ஒன்று பறந்து வந்து கீழிறங்கி தோகை விரித்து ஆடுகிறது, அதில் அத்தனை அழகியல் பொதிந்துள்ளது. அதே போல ஜெயராம் இரவு வேளையில் செண்டை வாத்தியம் பயிற்சி எடுக்கும் ஒரு காட்சியில் ,அவர்களின் நாலுக்கெட்டு வீட்டின் ரேழியில் கட்டப்பட்டிருக்கும் யானையின் மீது நிலவு ஒளி விழும்,அசலான கவித்துவம் அது,அதே போல படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ஜெயராமின் வளர்ப்பு நாய் ஜெயராம் வைத்த விஷ சோற்றை உண்டு இறந்து கிடக்கும்,அங்கே அருகே ஒரு ஓங்கு தாங்கான மரம்,அது போல ரசனையான பல ஃப்ரேம்கள் படத்தில் உண்டு.

 ஒவ்வொரு காட்சியமைப்பும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன, படத்தின் இசை சேர்ப்புக்கு சென்னையைச் சேர்ந்த யுவராஜ் என்னும் பிண்ணனி இசை சேர்ப்பாளருக்கு தேசிய விருது கிடைத்தது,அதை எந்தப் பத்திரிக்கைகளும் வழக்கம் போலவே கண்டு கொள்ளவில்லை,படத்தின் மாபெரும் பலம் சாஜி நாயரின் ஒளிப்பதிவும்,ஸ்ரீவல்சன் மேனனின் இசையும் ஆகும். இன்னொரு முக்கியமான அம்சம் படத்தில் பாடல் வரிகள், எழுதியவர் பாடலாசிரியர் மனோஜ்குமார். படத்தில் சுவாதித்திருநாள் மகாராஜா எழுதிய ஒரு புகழ்பெற்ற பாடலான காமினி மணி சகி மிக அருமையாக படமாக்கிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.அப்பாடலை இங்கே கேட்கலாம்.

இது செண்டை என்னும் கேரள பாரம்பரிய தோல்வாத்தியத்தை வாசிப்பவனான உன்னிக்கிருஷ்ணனின் கதை, மாரார் சாதியில் ஜனித்து அண்ணன்களின் வழிகாட்டுதலில் செண்டை வாத்தியம் வாசிக்கப் பழகும் உன்னி கிருஷ்ணனுடைய [ஜெயராம்]  பிறப்பு இழிவான பிண்ணனியைக் கொண்டிருக்கிறது, உன்னியின் தாய் மூன்று மகன்களில் இருவரை மாரார் சாதிக் கணவனுக்கு பெற்றிருந்தாலும், உன்னியை அவர் முறை தவறி பெற்றிருக்கிறார், [அதன் உண்மைக்கதை படத்தில் எங்குமே ஃப்ளாஷ் பேக்காக வெளிப்படுவதில்லை ]

மூத்த அண்ணன்,உன்னி,இளைய அண்ணன்

இதை அறிந்த மூத்த மகன் எப்போதுமே உன்னியை ஊரார் முன் மிக இழிவாக நடத்துகிறார், உன்னியின் செண்டை வாத்திய வாசிப்பை எப்போதுமே மட்டம் தட்டி வருகிறார், தவிர உன்னிக்கு லேசான மனநிலை பிறழ்தல் குறையும் இருக்கிறது, இருந்தும் மூத்த அண்ணன் முன்னர் ஜெயிக்க வேண்டும் என்னும் உத்வேகம் பூண்டவர், சில வருடங்களில் அண்ணனையே செண்டை வாத்திய வாசிப்பில் மிஞ்சிவிடுகிறார். ஊரார் மெச்ச பெயரும் புகழும் பெறுகிறார்,அது நாள் வரை அண்ணன் என்னும் ஆலமர நிழலில் வளர முடியாமல் இருந்தவர், 

இப்போது தனியாக செண்டை வாசிப்பு அரங்கேற்றத்தை ஏற்று நடத்தும் அளவுக்கு உயர்கிறார். இவருடைய வாசிப்பில் மயங்கும் ஒரு செண்டை வாத்திய பித்து கொண்ட நாட்டாமை பூக்காட்றி திருமேனி [ சுரேஷ் குருப் ]இவருக்கு தன் மகள் கல்யாணியை [லஷ்மி கோபாலஸ்வாமி] அவளின் விருப்பம்  என்ன என்று கேட்காமல்  மணம் முடித்துத் தருகிறார், ஆனால் உன்னியின் செண்டை வாத்திய மோகமும்,அவளின் செண்டை வாத்தியத்தின் மீதான அதீத வெறுப்பும் இவர்களை,இல்லற பந்தத்தில் ஒன்று சேர்ப்பதேயில்லை, இவர் செண்டையைத் தழுவ,அவள் அங்கே கார் ட்ரைவராக பணிபுரிந்தவனை ரகசியமாக அழைதவள்,என்னுள் ஒரு ஆடவனும் இதுவரை இறங்கவில்லை,எனக்குள் இருக்கும் தாய்மை ஏங்கித் தவிக்கிறது,சூல் கொள்ளத் துடிக்கிறது,எனக்கு இறங்கு,எனக்குள் இறங்கு என அவனை தன்னிடம் இழுத்து சுகிக்கிறாள்,

உன்னியும் கல்யாணியும்

வயிற்றில் குழந்தையும் வளரப் பெறுகிறாள்.  உன்னிகிருஷணனுக்கு திருமணத்தின் போது மனைவியின் ஊரில் வசிக்கும் உயர்சாதி வானசாஸ்திர நிபுணரும் ஜோதிடருமான நாராயணன் நம்பூதிரி  நட்பாகிறார், அவரின் செவ்வாய் தோஷம் பொருந்திய தங்கையைக் கரை சேர்க்க இவர் 50 வயதாகியும் கூட மணம் முடிக்கவில்லை, தங்கைக்காக நிறைய வரன்களை சலித்துப் பார்க்கிறார்,ஆனால் எதுவும் குதிரவில்லை,

 இந்நிலையில் உன்னியை வீட்டுக்குள் அழைத்து செண்டை வாசிக்க வைத்து ரசித்துப் பார்க்க,அவரின் தங்கை நளினி உன்னியுடன் தர்க்கம் செய்கிறாள்.  தான் மோகினியாட்டம் ஆடுகையில்,அதற்கு ஏற்ப செண்டை வாத்தியமிசைக்கும் போட்டிக்கு ஒற்றைக்கு ஒற்றை  வருமாறு உன்னியை அழைக்கிறாள், அங்கே நிகழ்ந்த உன்னியின் செண்டை வாசிப்பில் இயற்கையின் ஒலிகளைக் கேட்டவள். மெய்மறக்கிறாள்,

 உன்னியும் அன்று தன் மனம் இட்ட கட்டளையை கைகள் கேட்டு வாசித்ததாக முதன் முதலாக உணர்கிறார். இருவருக்கும் அன்று ஏற்பட்ட வித்யா நெருக்கம், ஒரு பட்டப்பகல் உடலுறவு வரை சென்று முடிகிறது, உன்னியின் ஜாதகத்தை முன்பொருமுறை கணித்த நாராயணன் நம்பூதிரி,உன்னி முறைதவறிப் பிறந்தவர் என ஊகித்து தங்கைக்கும் சொல்லியிருந்த படியால், இருவரின் பகல் நேர ஆலிங்கனத்தை கண்டுவிட்டவர் அனலாய் கொதிக்கிறார்,  உன்னியை நன்றாக அடித்து விரட்டியும் விடுகிறார்.

உன்னியும் நளினியும்

உன்னிக்கு சாபமும் தருகிறார். உன்னிக்கு மூத்த அண்ணன் மூலம் பொறாமையும் வயிற்றெரிச்சலும் கிடைக்க, பெற்ற அன்னையோ அண்ணனின் படிதாண்டிய வேசி என்னும் சுடு வார்த்தைக்கு பயந்து அண்ணனின் பேச்சை மீறாதே!!!அண்ணனுக்கு விட்டுக்கொடு என்று உன்னிக்கு அறிவுருத்த, சின்ன அண்ணனோ பெரிய அண்ணனுக்கு பயந்து நடக்க, உன்னி கட்டிய மனைவியோ இவரையும் இவரின் செண்டை வாத்தியத்தையும் அடியோடு வெறுக்க, மன பிழற்தல் முற்றிய நிலைக்கு வருகிறார், போதாதக் குறைக்கு ஊரில் இருக்கும் ஒரு நாட்டு வைத்தியன் தந்த போதை மருந்து குளிகைகளையும் கஷாயத்தையும் உட்கொள்ளும் பழக்கமும் பீடிக்க, உன்னியின் அந்திமம் துரிதமாகத் துவங்குகிறது.




ஒரு நாள் மனப்பிழற்சியின் உச்சத்தில் , அண்ணன் இது நாள் வரை தனக்கும் தன் இளைய அண்ணனுக்கும் தராமல்  மூட்டையாகக் கட்டி  ஸ்டீல் பீரோவினில் சேர்ந்து வைத்திருக்கும் பணத்தை சாவியைப் போட்டு திறந்து,அள்ளிப் போய்,பக்கத்துத் தெருவில் வசிக்கிற இளைய அண்ணன் வீட்டு வாசலுக்குச் சென்று பிரிக்கிறார். அங்கே இளைய அண்ணன்,மூத்தவரை பகைத்துக் கொள்ள விரும்பாமல்,குருதுரோகம் செய்ய விரும்பாமல், அண்ணன் சுயநலத்துடன் நமக்கு வரவேண்டிய பணத்தை அவர் சுருட்டிக்கொண்டால் அந்தப் பாவம்,அவருக்கு,ஆனால் எனக்கு அதை அடித்துப் பறிப்பதில் உடன்பாடில்லை,என்றது தான் தாமதம்,சுருக்கென்று குச்சியை கிழித்து உன்னியின் பங்கை கொளுத்திவிடுகிறார் உன்னி,காகிதம் எரிந்து சுருண்டு பறக்கும் தூசுகள் உன்னியின் முகத்தில் மோதுகிற அக்காட்சி உலக சினிமாக்கள் மட்டுமே தரும் ஒரு அனுபவம்.
 
இது தான் சரியான தருணம் என்று கணக்கு போட்டு காத்திருந்த நாராயணன் நம்பூதிரிக்கு, தன் தங்கைக்கு ஏற்ற வரன் இவன் தான் என்று எண்ணும் படி துப்பன் நம்பூதிரி[வினீத்] ஜாதகம் வர,அவளை தன் தங்கை நளினிக்கு விரைந்து மணம் முடிக்கிறார்,ஆனால் முதல் ராத்திரியிலேயே துப்பன் ஒரு இரண்டும் கெட்டான் என தெரிந்தும் விடுகிறது, எந்நேரமும் பூஜையும் புனஸ்காரமும் மடி ஆச்சாரமுமாக இருக்கும் துப்பன், உடையில் ஆணாக இருப்பினும் நடையில் ஒரு பெண், 

நாராயணன் நம்பூதிரியாக இயக்குனர் சித்திக்
இவரை அனைவரும் அர்த்தநாரிஸ்வரர் அருள் பெற்ற இசை வாத்தியம் செய்பவர் எனப் புகழ்ந்து, இவரிடம் பெரிய பணக்காரர்கள் எல்லாம் நாடு விட்டு நாடு வந்து ஆசி பெற்று இசை வாத்தியம் வாங்கிச் செல்கின்றனர், மீட்டாத வீணையாக மனைவி நளினி கட்டிலில் வீற்றிருக்க, துப்பன் அகால இரவிலும் இசைவாத்தியம் செய்து அதை மீட்டுகிறார்.மனைவி தன்னை தொட்டாலும் கூட குளத்தில் பாய்ந்து குளித்து தீட்டுக் கழிக்கிறார்.

கார் சாவியோடு 25பவுன் நகையேனும் கேட்டிருக்கலாமோ?!!! என்றெண்ணும் ப்ரகாஷனும் கள்ளக் காதலி கல்யாணியும்
மிகவும் விந்தையான ஒரு மனிதனுக்கு வாழ்க்கைப்பட்ட நளினி, அண்ணனுக்கு செய்யும் நன்றிக்கடனாக நினைத்து,துப்பனுடனே தங்கியிருக்கிறாள், அண்ணன் இந்த இரண்டு கெட்டானுக்குப் போய் தன் அரிய மாணிக்கம்  போன்ற தங்கையை மணம் முடித்தோமே என நினைத்து,அவளை தன் வீட்டுக்கு அழைத்தாலும் நளினி வருவதாக இல்லை.

மனநிலை பிழற்விலும் காதல் தோல்வியிலும் உழலும் உன்னியை அவனின் தாய் பாலக்காட்டில் இருக்கும் ஒரு மனநோய் காப்பகத்தில் சென்று சேர்த்து தானும் உடனிருந்து நான்கு மாதங்கள் வரை உடனிருந்து கவனிக்கிறாள்,அங்கேயே ஓய்வு நேரத்தில் உன்னி அங்கே உள்ள பாலகர்களுக்கு செண்டை வாத்திய  வகுப்பெடுக்கிறார். இப்போது உன்னியிடம் விரும்பத்தக்க மாற்றங்கள் தெரிய, அவர்கள் ஊர் திரும்புகின்றனர், அங்கே உன்னியின் மனைவி கல்யாணி 6 மாத கர்ப்பமாக இருக்கிறாள், ஊரார் பார்வைக்கு அது உன்னியின் குழந்தை, ஆனால் உன்னிக்கும் கல்யாணிக்கும் மட்டும் தெரியும் அது ட்ரைவர் பிரகாசனின் குழந்தை என்று.

அதற்கு மேலும் தாமதிக்க விரும்பாத கல்யாணி ,அதே இரவு காதலன் பிரகாஷனை அழைக்க, அவர்கள் இருவரும் நடுநிசிக்கு கல்யாணியின் நாட்டாமை அப்பாவான பூக்காட்றி திருமேனியை சந்தித்து உண்மையை உரைக்க, அவர் உன்னியை நினைத்து கதி கலங்கிப் போகிறார். அந்நிலையிலும் பிரகாசன், தாங்கள் இருவரும் உய்க்க உதவ வேண்டி அவரின் காரைத் தருமாறு இறைஞ்சுகிறான். அவரும் அவனிடம் அதன் சாவியைத் தர, அவர்கள் பொள்ளாச்சி சென்று சொச்ச வாழ்க்கையைத் இன்புற்று வாழ ஆரம்பிக்கின்றனர்.
 
யாரும் தவறவிடக்கூடாத துப்பன் நம்பூதிரியின் பட்டறைக் காட்சி
இந்நிலையில் துப்பன் நம்பூதிரி ஒரு இரவில் ,தன் பட்டறையில் வைத்து குண்டு பல்பின் ஒளியில் ஒரு ஃபிடில் வாத்தியத்தை புதிதாக தந்தி பூட்டி மெல்ல வாசித்தவர்  .இதை யாருக்கு நிரந்தரமாக வாசிக்கக் கொடுத்து வைத்திருக்கிறதோ? என்று மனைவியைப் பார்த்து  வித்யா கர்வம் பொங்க பெருமிதம் கொள்கிறார்,நளினி இவரின் கையாலாகாதத் தனத்தை எண்ணி எள்ளி நகையாடுவது போல பார்க்கிறாள்.பெருமூச்சு விடுகிறாள் அப்போது மின்சாரம் தடைபடுகிறது,குண்டு பல்பை தேங்காய் நாரின் மீது வைத்து விட்டு தூங்குகிறார் துப்பன்,அப்போது நடுநிசியில் மின்சாரம் வர,குண்டுபல்பு ஒளிர்ந்து,சூடாகி அது தேங்காய் நாரினைப் பொசுக்கி பல்பு உடைந்து தீப்பற்றி அந்த மாடி அறையின் பட்டறையே பற்றி எரிகிறது,

அர்த்தநாரி போன்ற துப்பன் பாத்திரம்

யார் தொட்டாலும் குளத்தில் முங்கிக் குளிக்கும் துப்பனை ஆஸ்பத்திரி ஊழியர்கள் உடல் முழுக்க தீக் காயங்களுடன் ஸ்ட்ரெட்சரில் ஏற்றி வேனில் வைக்க,அங்கே வரும் உன்னி,நளினியை பார்த்து என்ன ஆயிற்று? எனக் கேட்க, அங்கே விஷய்ம் கேட்டு ஓடி வந்த நாராயணன் நம்பூதிரியோ உன்னியை போட்டு அடிக்க, நளினி மனதுக்குள் கோயிலே கட்டி வைத்திருக்கும் உன்னியை நோக்கி கைக்கூப்பி, இங்கே மீண்டும் வராதீர்கள், .உங்கள் வெள்ளந்தியான மனதையும் உடலையும் இல்வாழ்வையும் கெடுத்தப் பாவத்துக்கு நானே அதை ஏற்று  அனுபவிக்கிறேன், என்னை மறந்து விடுங்கள் என விருட்டென வேனில் ஏறி விடை பெறுகிறாள்.

இயக்குனர் ஷாஜி என் கருண் இந்த துப்பன் நம்பூதிரி கதாபாத்திரத்தில் பொதித்து வைத்த டார்க் ஹ்யூமர் உலகத் தரம்.குட்டி ஸ்ராங்க் படத்திலும் இதே போல ஒரு காட்சி உண்டு, அது ஒரு பெரிய காங்கிரீட் குரிசு,அதை ஊர் ஜனம் மொத்தமும் சேர்ந்து தூக்கி பீடத்தில் நிறுத்தும் வைபவத்தின் போது அதன் ராட்டினக் கயிறு அறுந்து கீழே மக்களின் மீது விழ,அங்கே ஒரு கிழவி உடல் நசுங்கி குருதி கொப்பளிக்க  உயிர் விட்டிருப்பாள். மிகக் குதூகலமாக ஆரம்பித்த காட்சி சடுதியில் ஒரு துன்பியலான முடிவில் கொண்டுவிடும். அதே போலவே இங்கே இந்த குண்டு பல்பு காட்சி.   அதை உள் வாங்கி ஏற்றுச் செய்த நடிகர் வினீத் காலத்துக்கும் பேசப்படுவார், இவர்  ஒரு அண்டர் ரேட்டட் நடிகர். இவரின் அரிகே படத்தின் வில்லத்தனமும், பாவுட்டியுடே நாமத்தில் என்னும் படத்தின் வில்லத்தனமும் மறக்க முடியாதவை, இவர் வயதினை ஒத்த நடிகர்கள் யாருமே ஏற்றுச் செய்ய யோசிப்பவை, எந்த கவுரவமும் பார்க்காமல் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் ஒரு நடிகர் வினீத்.

செண்டை செய்யும் ஆப்த நண்பனும் உன்னியும்

விதி போடும் முடிச்சுக்கள் மிகவும் விந்தையும் விசித்திரமுமானவை, இனி என்ன ஆகும் ?!!! என்று படத்தில் பாருங்கள் ,உன்னியாக வந்த ஜெயராம் எத்தனையோ நூறு படங்கள் நடித்திருந்தாலும்,இது தான் அவரின் பெயர் சொல்லும் படம் என்னும்படியான பாத்திரம், அதற்கு இவர் மிகவும் தகுதியானவர் என நிரூபித்திருக்கிறார், இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்காததன் அரசியல் என்ன என்று தெரியவில்லை, படத்தை நடுவர்கள் பார்த்தார்களா? என்றே ஐயம் எழுகிறது, நாராயணன் நம்பூதிரியாக வந்த சித்திக் மிக அருமையான நடிகர் என நிரூபித்திருக்கிறார். உன்னியின் காதலி நளினியாக வந்த காதம்பரி மிகவும் அருமையான நடிகை,

உலகசினிமா ரசிகர்களுக்கென்றே படம் இயக்கும் இது போன்ற அசல் ஆட்டியர் இயக்குனர்களின் படங்களை நாம் தேடிப்பார்த்து ஊக்கம் தருவோம், அது அவர்களுக்கு அடுத்த படைப்பை இழைத்து மெருகேற்ற மிகுந்த உத்வேகத்தைக் கொடுக்கும்.

படத்தினைப் பற்றிய ரிவர்ஸ் க்ளாப் செய்த முக்கியமான கண்ணோட்டம்