மைக்கேல் மதன காமராஜன் [1990][michael madhana kamarajan]பெருமைமிகு தமிழ் சினிமா !!!


பெருமைமிகு தமிழ் சினிமா வரலாற்றில் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்துக்கு மிக முக்கியமான பங்குண்டு.இப்படம் கொண்டிருக்கும் சிறப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல,அவற்றை பட்டியல் இட்டு முடிப்பது எளிதும் அல்ல.நான் எத்தனையோ முறை இப்படத்தை 24 வருடங்களில் பல வயதுகளில் அதன் கண்ணோட்டத்தில் பார்த்திருந்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கையிலும் எனக்கு அது ஃப்ரெஷ்ஷாக இருக்கும், ஏதாவது புதிதாக புலப்படும்,அவ்வப்போது அவற்றை இங்கே அப்டேட் செய்ய முயற்சிக்கிறேன்.

இந்திய சினிமாவில் மைக்கேல் மதனகாமராஜன்[1990] படத்தில் தான் முதன் முதலாக ஆப்பிள் லேப்டாப் காட்டப்பட்டது என்னும் பெருமையையும் கமல்ஹாசன் தான் தக்க வைத்திருக்கிறார் இம்மாடல் 1989 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரிலீசாகியுள்ளது,


பென்ஸ் காரில் நாகேஷுடன் தன் மதன் மெஹல் [அப்படித்தான் ஸ்டைலாக சொல்லுவார்]செல்லும் போது அவினாஷி தன் அப்பாவிடம் கையாடிய 25 லட்சத்தை இதில் தான் கணக்குப் பார்த்து அவருக்கு கிடுக்கிப் பிடி போடுவார். 

கஜினி படத்தில் சூர்யா செய்த பிஸ்னஸ் மேன் வேடம் எல்லாம் மதனகோபால் கதாபாத்திரத்துக்கு முன் ஜுஜூபி என்றால் மிகையில்லை,சிறு குறிப்பு:- ஜுஜூபி என்பது ஒரு பழமாம்,அது இலந்தைப் பழம் போல இருக்கிறது, http://en.wikipedia.org/wiki/Jujube


இன்று வரை காமெடி ஜானரில் தமிழில் இப்படி ஒரு தரமான படம் வரவில்லை என்று அடித்துச் சொல்லலாம்,செம படம் இது, எத்தனை வெரைட்டியான  கதாபாத்திரங்கள் செய்திருப்பார் கமல்ஹாசன், ஒவ்வொருவருக்கும் டூயட் உண்டு [மைக்கேல் தவிர்த்து],குறிப்பாக ஊர்வசியுடன் கமல் பாடும் சுந்தரி நீயும் சுந்தரி ஞானும் பாடல் இந்திய சினிமாவில் முதன் முதலாக படமாக்கப்பட்ட முழுநீள ஸ்லோமோஷன்  பாடலாகும், இதற்கு நேர்மாறாக மிக வேகமான பாணியில் கதைகேளு,கதைகேளு என்னும் ஐந்தே நிமிட ஆரம்பப் பாடலில் நால்வர் பிறப்பும் சகோதரர்களின் பிரிவும் விவரிக்கப் பட்டிருக்கும்,

அப்பாடலில் ஃப்ளாஷ்பேக் காட்சியை கதைகேளு பாடலுக்குள் நறுக்கென்ற பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளுக்குள் அடக்க வேண்டி,ஃபாஸ்ட் ஃபார்வர்ட் யுத்தியிலும் [16 frame per second] ,கருப்பு வெள்ளையிலும் படம் பிடித்திருப்பார்கள்.

இளையராஜாவின் அளவில்லா எக்ஸ்பெரிமென்ட்களில் முக்கியமான படம் இது,அவரே பாடிய கதைகேளு கதைகேளு ,மலேசியா வாசுதேவன் பாடிய பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம், எஸ்பிபி பாடிய சிவராத்திரி தூக்கமேது போன்ற சிச்சுவேஷன் பாடல்களையும் எஸ்பிபி பாடிய ரம்பம் ஆரம்பம் , போன்ற டான்ஸ் நம்பரையும், கமல்ஹாசனை பாலக்காட்டு தமிழில் திறம்பட பாடவைத்த சுந்தரி நீயும் பாடல்களையும் மிகுந்த லாவகமாக உருவாக்கியதைக் கவனியுங்கள்,எந்த பாடலும் வீணில்லை,கதையுடன் பயணிப்பவை.

இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் [இப்பொது 82 வயது], பல திறமைகளை தன்னுள் கொண்ட அஷ்டாவதானி,தேர்ந்த ஒளிப்பதிவாளரும் கூட,அவர் தெலுங்கில் இயக்காத ஜானர் படங்களே இல்லை,அவர் இயக்கிய புஷ்பக் [பேசும் படம்] இன்றளவில் இந்திய சினிமாவின் முக்கிய சாதனை,அதன் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு அளிக்கப்பட்ட இயக்குனர் வாய்ப்பு இப்படம்,இதிலும் கமல்ஹாசனின் தலையீடு இல்லாமல் இருக்குமா என்ன?படம் டைட்டில் போட்டு முடித்தவுடன்,மதன் கமலின் போட்டோ சுவற்றில் மாட்டப்படும்,அங்கே இயக்கம் என்று சிங்கீதம் சீனிவாசராவின் பெயர் போடுவார்கள்,அது கமல்ஹாசன் இயக்கத்தில் அளித்த பங்கை சூசகமாக நமக்கு விளக்கிவிடும். 

படத்தில் சிங்கீதம் சீனிவாசராவ் ஃப்லிம் சுருளுக்குள் இருந்து முதலில் தோன்றி கதைகேளு பாடலில் கதை சொல்வார்,அவர் அங்கே கொண்டுவரும் கருவியின் பெயர் கைனடாஸ்கோப் http://en.wikipedia.org/wiki/Kinetoscope ,அதில் நாம் சிறுவயதில் நிச்சயம் நம் பள்ளிவாசலிலோ,வீட்டின் தெருக்களிலோ 25 காசு கொடுத்து படம் பார்த்திருப்போம்,நான் அதில் சார்லி சாப்ளின் படம் ஏதோ ஒன்று ஐந்து நிமிடம் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது,

படத்தில் ஒவ்வொரு கமல்ஹாசனுக்கும் தனித்தன்மையுடன் கூடிய தீம் இசை உண்டு, பாடல்கள் எதுவுமே இடைச்செருகல் போலத் தோன்றாது,என பல சிறப்புகள் உண்டு. படத்தின் அதிரடிப் பட்டாசு போன்ற காமெடி வசனங்களை திரைக்கதையை கிரகித்து உள்வாங்கி எழுதியது கிரேசி மோகன் , இவர் மளிகைக் கடைக்காரராக கேமியோ ரோலும் செய்திருப்பார்.இவர்  பாலக்காட்டு காமேஸ்வரனுக்கு எழுதிய வசனங்கள் தத்ரூபமாக இருக்கும்,எல்லா க்ளாஸ் ஆடியன்ஸுக்கும்  புரிய வேண்டும் என்னும் சமரசம் எதுவும் செய்யப்பட்டிருக்காது,உதாரணமாக இறுதிக்காட்சியில் குஷ்பு சுடும் இரட்டைக்குழல் துப்பாக்கியை காமேஸ்வரன் தோக்கு[மலையாளத்தில் துப்பாக்கி] என்றே சொல்வார்.அதே போன்றே ஷமிக்கனும்,[மன்னிக்கனும்] என நிறைய சொல்லலாம்.


படத்தில் வரும் நடிகர் நாகேஷின் அவினாசி என்னும் ஃப்ராடு மேனேஜர் கதாபாத்திரம் மிகவும் தத்ரூபமானது,படம் முழுக்கவே வரும் கதாபாத்திரம்.  எட்டு பெண்களின் தந்தை, எட்டு பேர்களுக்கும் எட்டு லட்சுமிகளின் பெயர் இட்டிருப்பார், அதில் இருவருக்கு மட்டுமே மணம் முடித்திருப்பார்,

மீதம் ஆறு பேருக்கு மணமுடிக்க வேண்டிய பொருப்பு, இளம் முதலாளி மதன் இவரது 25 லட்ச ரூபாய் மோசடியைக் கண்டறிந்த குற்ற உணர்வு, தேவைப்படுகையில் சுய எள்ளல் , பச்சாதாபம்,தன் மூன்றாம் பெண்ணின் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிடக்கூடாதே என்கிற பயம், ஒரு மோசடியை மறைக்க அவர் மேலும் மேலும் செய்து கொண்டே போகும் மோசடிகள் என அறபுதமாய் செதுக்கப்பட்ட ஸீன் ஸ்டீலிங் கதாபாத்திரம், ஆனாலும் வழக்கம் போலவே  எந்த விருதுகளும் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டார் நாகேஷ்.

அன்றைய திருமணங்களில் புழங்கிய வரதட்சனை மாப்பிள்ளை முறுக்கு இத்யாதிகள் சிறிது நேரமே வந்தாலும் டீடெய்லாக வரும், மதன் அவரைப் பார்க்க சகியாமல் பீமை விட்டு  வெளியே தூக்கி எறிந்தால் கூட திரும்பத் திரும்ப வந்து இழையும் குழையும் ஓவர் கானஃபிடனஸ் , மேனேஜர் கதாபாத்திரத்தை அவரைத் தவிர இத்தனை இலகுவாய் யாராலும் செய்திருக்க முடியாது

நடிகை மனோரமா இப்படத்தில் ஜமுனாபாய் என்னும் ஆணால் வஞ்சிக்கப்பட்டு மகளுடன் தனித்து வாழும் ஒரு நாடக நடிகையாக வாழ்ந்திருப்பார்,அவரின் மகள் ஜக்குபாயாக ரூபினி, வயிற்றுப்பிழைப்புக்காக அவர்கள் நிஜ வாழ்வில் மதனிடம் நடிக்கப் போக அவரால் பாதுகாப்பு வேண்டி தன் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கப்படுவர்.அங்கே மனோரமா தான் பட்ட வாழ்க்கை அனுபவங்களால் பாடம் கற்றவர்,தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரப் போராடும் ஒரு சந்தர்ப்பவாதியாக உருவெடுப்பார்.

ஒரு கட்டத்தில் பெற்ற மகளையே பக்குவமாகத் தயார்படுத்தி மதனுக்கு கூட்டித்தருவார்,எத்தனை வக்கிரமான விஷயம் அது ,அதை அழகாக  டைல்யூட் செய்து சிவராத்திரி தூக்கமேது என்னும் பாடலாக வைத்து வெற்றி பெற்றிருப்பார் கமல் ஹாசன்,இப்பாடலால் படத்துக்கு அட்டகாசமான ரொமான்ஸ் நம்பரும் கிடைத்தது,பாடலில் மனோரமாவின் வித்தியாசமான அவல நகைச்சுவை நடிப்பும் டான்ஸ் மூவ்மென்டும் மிகவும் சிலாகிக்கப்பட்டது, பாடலின் இறுதியில் ரூபினியை துகிலுரிந்தே விடுவார் கமல்ஹாசன், அதைப் படமாக்கி முடித்தவுடன் முழுதாகப் பார்த்து அதிர்ந்த மனோரமா,மிகவும் நெக்குருகி நல்லா இல்லையேப்பா,என் பெயரை டேமேஜ் செய்துவிடுமே என மிகவும் கவலைப்பட, கமல் புரிந்து கொண்டவர் மெனக்கெட்டு மீண்டும் எடுத்த பாடல் தான் இப்போது இருக்கும் பாடலாம். அப்படியென்றால் ஒரிஜினல் எப்படி இருந்திருக்கும்?

படத்தில் நாசர் கதாபாத்திரம் காமெடியானது என்றாலும் ஆபத்தான வில்லன் கதாபாத்திரம் அது,பங்காளிச் சண்டையில் அப்பாவை கொலை செய்து விட்டு சகோதரனையும் போட்டுத்தள்ள தகிடு தத்தங்களை சத்தமின்றி பின் நின்று செய்யும் கதாபாத்திரம்.நாகேஷ் வந்து துப்பு தருகையில் அதில் சுவாரஸ்யம் காட்டாமல் திருப்ப அனுப்பும் காட்சி ஒன்றே அதற்குச் சான்று.

இதில் சாம்பாரில் மீன் விழும் [கருவாடு] காமெடி எத்தனை பிரசித்தி பெற்றதோ?,அதே போன்றே பின்னாளில் சிங்காரவேலன் படத்தின் கருவாடு காமெடியும் மிகவும் பேசப்பட்டது.

இதில் மதனகோபால் கதாபாத்திரம் வளர்ப்பால் ஹைலி எஜுக்கேட்டட், சோஃபிஸ்டிக் என்பதால் அவர் லாஜிக்காக அடியாட்களுடன் சண்டை போட மாட்டார், அந்த சர்ச் காட்சிக்கு பின்னர் வரும் டாய்லெட் சண்டைக்காட்சியை கவனித்தால் புரியும்.அதிலும் ஒரு டாய்லெட் காட்சியில் மதன் தன் கால்களை சுவற்றில் அழுத்தி, மனோரமாவையும்,ரூபினியையும் தன் கால்களின் மீது அமர்த்தியபடி தாங்குவார்.அது மட்டும் சிறு விதிவிலக்கு.

மதன் சிறுவயது முதலே மூளையால் பலசாலி,அதனால் தான் அவரின் சிறு வயது முதலே அவருக்கு உற்ற துணையாக உடல்ரீதியான பலசாலியாகிய பீம் [Praveen kumar Sobti] http://en.wikipedia.org/wiki/Praveen_Kumar_%28actor%29
உடன் இருப்பார்,

இதை கடைசிக் காட்சியில் மதனின் அப்பா [ ஆர்.என்.கிருஷ்ணபிரசாத்] பீமைப் பார்த்து என்னடா பீம்கண்ணா இப்படி இளைச்சுப் போயிட்டே? என்று சொல்லுகையில் உணரலாம்.[அப்போது தூர்தர்ஷனில் 1988ல் வெளியான மஹாபாரதம் பீமன் கதாபாத்திரத்தில் இவரைப் பார்த்துவிட்டு மிகவும் பிடித்ததால் கமல் இதில் அவரை நடிக்க வைத்தார்.]இதில் தூர்தர்ஷனையும் கமல் சந்தடிசாக்கில் கலாய்திருப்பார்.பீம் தூர்தர்ஷன் பார்க்கிறேன் என மதனிடம் சொல்கையில் முகத்தை கோணுவாரே பார்க்க வேண்டும்.
படத்தில் அப்பாவாக வந்த ஆர்.என்.கிருஷ்ணபிரசாத் கன்னட சினிமாவின் முக்கியமான கேமராமேன்,அவரின் பேராசைக்கார தம்பியாக நடித்த ஆர்.என்.ஜெயகோபால் அவரின் தம்பியும் ஆவார்.

அதே போன்றே படத்தில் மைக்கேலின் வளர்ப்பு அப்பாவான சந்தான பாரதியும்  படத்தில்  கூலிப்படை புரோக்கராக வரும் ஆர்.எஸ்.சிவாஜியும் அண்ணன் தம்பி கூட்டணி,என்பதும் மற்றொரு ஒற்றுமை.

மேலும் கமலுடன் ஐந்து  வருடங்களுக்கு  முன்னர் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் கிளுகிளுப்பாக நெருங்கி நடித்த ஜெயபாரதி,பின்னாளில் 4 கமல்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டிவரும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இதிலும் எத்தனை டல் மேக்கப் போட்டாலும்,அவரின் சொச்ச இளமையை மறைக்க முயன்று தோற்றது தெரியும்.

படத்தில்  ஆபத்தான சாகசங்களை செய்யவே ராஜு கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும், அத்தனை ரியாலிட்டியாக அமைந்திருக்கும் அந்த 7 நிமிட டாய்லெட் சண்டைக் காட்சி.அதில் நெத்தியடி,மூக்கில் வெத்திலை பாக்கு போடுதல்,கிடுக்கிப்பிடி சண்டை,என தூள் செய்திருப்பார்,கத்தி சண்டையும் இருக்கும்,சீரியஸாக துவங்கும் சண்டை மதன் ராஜுவுக்கு சண்டை போட வாளை எறிகையில் காமெடி சண்டையாக உருமாருவதைப் பார்ப்போம். அதே போன்றே பெங்களூர் ஹைவேயில் காண்டெஸாவின் ப்ரேக் லைனிங்கை ராஜு கமல் கார் ஓடுகையிலேயே எக்கி சரி செய்யும் காட்சியையும் குறிப்பிட வேண்டும்.

படத்தில் வரும் பட்டாணி ஃபைனான்ஸியர் போன்ற ஆட்கள் 90 வரை அதே போன்றே உடை அணிந்து கையில் கோலுடன் திரிந்தனர்.இப்போது அவர்களை சென்னையில் காண்பது மிக அரிது,கமலின் வாட்சைப் பார்த்து ஐ ரோலக்ஸ் வாட்சு என்பார், மதன் அவரிடம் its may Dad Gift என்பார், [ரோலக்ஸ் போன்ற உட்ச விலை வாட்ச்களை பரம்பரை பரம்பரையாக சீதனமாக வழங்குவதைக்கூட மிக அழகாக கமல் உள்வாங்கி சின்ன வசனத்தில் சேர்த்திருப்பார்] படத்தில் கமலின் மானசீக சினிமா குருவான அனந்துவும் ஒரு கதாபாத்திரம் செய்திருக்கிறார் என க்ரெடிட் ஸ்க்ரோல் சொல்கிறது,அவர் இந்த பட்டாணி வேடம் செய்தாரா?என யாரேனும் தெரிந்தவர்கள் சொல்லவும்,அப்படி அந்த வேடம் செய்யவில்லை என்றால்,எந்த வேடம் அவர் செய்தார் என சொல்லவும்.

அதே போல படத்தில் கமல்ஹாசனின் frequent colabarator  ஆன எஸ்.என்.லட்சுமி பாட்டியை அவசியம் குறிப்பிட வேண்டும்,மனோரமாவைப் போலவே ஆதரவற்ற நிலையால் சந்தர்ப்பவாதியாக மாறி அப்பாவி காமேஸ்வரனை மருமகனாக வரிக்கும் கதாபாத்திரம்,  ஊர்வசியின் திருட்டுப்பாட்டியாக அதகளம் செய்திருப்பார்,அருமையாக பாலக்காடு பிராமண பொல்லாத்தனம் கொண்ட அத்தைப் பாட்டியாகவே அவர் உருமாறியிருப்பார்.குஷ்பூவைப் பார்த்து அவர் சொல்லும் கருநாக்குத் துக்கிரி என்னும் வசவு மிகவும் புகழ்பெற்றது , http://en.wikipedia.org/wiki/S._N._Lakshmi என்ன அற்புதமான காலம் சென்ற மூத்த நடிகை அவர்? அவர் கமலின் அடுத்தடுத்த படைப்புகளான தேவர் மகன் [பாட்டி] ,  மகாநதி [மாமியார்], விருமாண்டி[பாட்டி] என மிகச் சிறப்பாக பங்காற்றியதை ஒருவர் மறக்க முடியுமா?!!!

காமேஸ்வரனின் வளர்ப்பு அப்பா பாலக்காடு மணிஐயராகவே வாழ்ந்த டெல்லி கணேஷின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, கமல்ஹாசனை விட 10 வயது மூத்தவர்,அவரின் அநேகமான எல்லா படங்களிலுமே இவர்  frequent colabarator என்றே சொல்லலாம்,புன்னகை மன்னன் படத்திலும் கமல்ஹாசனின் குடிகார தந்தையாக நடித்திருப்பார்.இதில் தன் வளர்ப்பு மகன் காமேஸ்வரனுக்காக திருமணமே செய்து கொள்ளாமல்,கண்ணியமாக சமையல் தொழில் செய்யும் ஒரு ஆச்சாரமான பிராமண சமையல்காரர்.

இவரின் கையப் பிடுச்சு இழுத்தியா? டயலாக் நாம் இன்றும் வாழ்வில் ஏதாவது தருணத்தில் கிண்டலாக பயன்படுத்துவோம்,அத்தனை அருமையான கதாபாத்திரம் அவருடையது. இவர் ஹேராம் படத்தில் பைரவ் என்னும் ஒரு தீவிர இந்துத்வா கதாபாத்திரம் ஏற்றிருப்பார்,ஷாரூக்கானை பெரிய சம்மட்டி கொண்டு அடித்து மண்டையை உடைக்கும் பாத்திரம்,அதுவும் நன்கு பேசப்பட்ட கதாபாத்திரம்.

ஃப்ரேமுக்குள் முதலில் ராஜுவும் மதனும் சந்திப்பர்,பின்னர் காமேஸ்வரன் ,அதன் பின்னர் மைக்கேல் என படிப்படியாக ஒரே ஃப்ரேமுக்குள் நான்கு கமலை ப்ரில்லியண்ட்டாக எந்த சந்தேகமும் வராத படிக்கு திரையில் தோன்ற வைத்து எங்கும் ஒட்டுப் போட்டது தெரியாமல் அசத்தியிருப்பார்கள். ஒளிப்பதிவாளர் பி.சி.கெளரிஷங்கரும் எடிட்டர் வாசுவும்.

கடைசி மலை உச்சி வீட்டையும் மினியேச்சர் என சொல்ல முடியாதபடி படமாக்கியிருப்பார் கபீர்லால் என்னும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கேமராமேன், அங்கே டீமின் ஒட்டுமொத்த ப்ரில்லியன்ஸியும் வெளிப்பட்டிருக்கும்.

படத்தில் மிகவும் கண்ணியமாக போர்த்தி நடித்த ஊர்வசியின் உடை கூட அங்கே அந்த மரவீட்டில் இருந்து கயிற்றில் இறங்குகையில் வார்ட்ரோப் மால்ஃபங்ஷன் ஆகியிருக்கும்,அதே போலவே ரூபினிக்கும் மிக அதிகமாக வார்ட்ரோப் மால்ஃபங்ஷன் ஆகியிருக்கும்.ஆனால் குஷ்பூ ஜீன்ஸில் இருந்ததால் ரசிகர் ஆர்வக் கண்களில் இருந்து தப்பியிருப்பார்.

இதில் அசைவப் பிரியரான கமல்ஹாசன் சைவ சாப்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தை காமேஸ்வரன் கமல் கடைசியில் சொல்வதாக வைத்திருப்பார்.அந்த மரவீட்டில் இருந்து காமேஸ்வரன் பள்ளத்தாக்கை நோக்கி தொங்கும் வேளையில்,மைக்கேல்,மற்றும் மதன் கமலைப் பார்த்து நான் வெஜிட்டேரியன்,எனக்கு ஏறிவரத் தெம்பில்லை,பாடி வீக்காக்கும், என் மனைவி திரிபு,பாட்டி,வளர்ப்பு அப்பா மணிஐயர் எல்லோரையும் பார்த்துக்கோங்கோ,என சொல்லிவிட்டு விழப்போவார்.ஆனால் கமல் தன்னையும் அறியாமல் பீம் கதாபாத்திரத்தின் மூலம் அவன் சைவம் சாப்பிட்டாலும் பலசாலி என்றிருப்பார். [படத்தில் பீமை ஒரு சைவப் பிரியனாகத் தான் சித்தரிப்பார்]

ஒவ்வொரு கமலுக்கும் அவர் துறை சார்ந்த ஸ்பெஷாலிட்டி வசனங்கள்,சிறு குறிப்புகள் subtle ஆன காமெடி இழையோடக் கொடுத்திருப்பார்,அதில் ராஜு தன்னை ஆள்மாறாட்டத்தின் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தான் ஒரு ஃபைர் என்பதும்,நாகேஷ் திரும்ப கொண்டு வந்து ஒப்படைக்கும் 6 லட்சத்தை வாங்கி பூட்டச் சொல்லுகையில் ஃபைர் ட்ரில்லின் போது பயன்படுத்தும் லெவலா ஃபார்மேஷனா நிக்கனும் என மிரட்டுவார்,நாகேஷ் ஃபார்மேஷனாவா?என முழிக்கும் இடம் எல்லாம் பட்டாசாக இருக்கும்.

காமேஸ்வரன் தான் ஒரு வெஜிட்டேரியன் குக் என்பதை ஆள்மாறாட்டத்தின் போது மதன் மெஹல் சமையல்காரனிடம் வெகுளியாக வெளிப்படுத்துவதும்,என மிக அற்புதமாக சிருஷ்டிக்கப்பட்ட படம்.

படத்தின் திரைக்கதை மட்டுமே கமல்ஹாசன்,படத்தின் மூலக்கதை பாலிவுட்டின் பிரபல கதாசிரியரான காதர் கஷ்மீரி ,இவருக்கு 24 வருடங்கள் கழிந்தும் சம்பள பாக்கியான 11 லட்சத்தை கமல்ஹாசன் தரவில்லை என்னும் வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்து ,நீதிமன்றத்துக்கு வெளியே பேசி முடித்துக் கொள்ளும் படி தீர்ப்பானதாம்,ஆனால் பணம் தந்தாரா எனத் தெரியாது.கஷ்மீரி என்னும் குடும்பப் பெயரை தன் விஸ்வரூபம் படத்திலும் உபயோகித்திருப்பார் கமல்.
http://freepressjournal.in/kader-kashmiris-case-against-kamal-haasan/

மேக் போர்டபிள் லேப்டாப் பற்றி படிக்க

http://en.wikipedia.org/wiki/Macintosh_Portable