குல மகளிர் வழுக்கி விழுந்ததைச் சொன்ன மூன்று சிறந்த படைப்புகள்

”எங்கள் ஊர்” சிறுகதை படித்து முடித்த உடன் எனக்கு இதே போன்ற சமகால படைப்புகளான அரங்கேற்றம்[1973] படமும், ஜன ஆரண்யா என்கிற தி மிடில் மேன் [1976] பெங்காலி திரைப்படமும் மனதில் வந்து போனது, அப்படைப்புகளை மீண்டும் அசைபோட வைத்தது, ஜி,நாகராஜன், கே.பாலச்சந்தர், சத்யஜித் ரே என்னும் மேதைகள் ஒருபோல சிந்தித்து சிருஷ்டித்த கருப்பொருள் தான் குலமகளிர் தடுமாற்றம்.

ஜி.நாகராஜனின் ”எங்கள் ஊர்” சிறுகதை 1968ஆம் வருடம் கண்ணதாசன் இதழில் வெளியானது,இது மீள்பதிப்பாக ஜி.நாகராஜனின் ஆக்கங்கள் என்னும் தொகுப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது,பக்கம் எண் 292-298வரை , இச்சிறுகதை குலப் பெண் ஒருத்தி வறுமையினால் பாலியல் தொழிலில் விருப்பமின்றி விழுவதை மிகுந்த யதார்த்த தொனியில் பேசுகிறது.

வேதாரண்யம் அருகே அடர்ந்த மூங்கில் காடும் சில சிமெண்ட் சாலையும் பேருந்தும் வந்து செல்லுகிற  ஒரு சிற்றூர். அங்கே பலான தொழில் செய்கிற சொக்கியிடம் மிகுந்த வறுமைச் சூழலாலும்,வைதீகம் பிழைப்பாகக் கொண்ட கணவனின் தீராப்பிணியாலும், இங்கே இருந்தால் மகளுக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கு வழி இருக்குமே என்று, தன் மகள் அரவிந்தாவை தொழிலில் கொண்டு வந்து விட்டு, அவ்வபோது வந்து பார்த்து ,சொக்கியிடம் பணம் வாங்கிச் செல்லும் பிராமணப் பெண் லட்சுமி,

வீட்டில் போஷாக்கு குறைபாடால் தேவாங்கைப் போலிருக்கும் அரவிந்தாவின் தம்பிக்கு வெள்ளெழுத்தும் வந்து,பார்வையும் பறிபோன நிலை, அடுத்து தங்கை வேறு வயதுக்கு வந்து விடுவேன் என பயமுறுத்துகிறாள். இத்தனைக்கிடையிலும் அரவிந்தாவுக்கு அப்பாவுக்கு குணமாகி தான் மீண்டும் குலமகளிராகிவிடுவோம் என்னும் நப்பாசையும் இருக்கிறது,

அது புரிந்த லட்சுமி அம்மாளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது, என மிக வீர்யமான சிறுகதை ”எங்கள் ஊர்” இதே போன்ற சிறப்பான 35 சிறுகதைகளையும்,2 குறு நாவல்களையும்,சில தமிழ் ஆங்கில கட்டுரைகள்,கடிதங்களைக் கொண்டிருக்கும் இத்தொகுப்பின் விலை ரூ=450. அகநாழிகை புத்தகநிலையத்தில் கிடைக்கும்.
அரங்கேற்றம்:-
==============
பாலச்சந்தரின் இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வந்த படமான அரங்கேற்றம் [1973] அவரின் புதுமையான படங்களுக்கு அச்சாரமாக விளங்கிற்று, ஒரு சிறு கிராமத்தின் ஆச்சாரமான வைதிக பிராமணக் குடும்பத்தின் மூத்த மகள் லலிதாவாக பிரமிளா நடித்திருந்தார், அவரின் வறட்டுப் பிடிவாதமான சொற்ப வருமானம் ஈட்டும் தந்தையாக எஸ்.வி.சுப்பையா,  9 குழந்தைகளை வரிசையாகப் பெற்ற தாய் எம்.என் .ராஜம். வீட்டில் நன்றாகப் படிக்கும்  சுயநலமி ஆண் பிள்ளையான கமல்ஹாசன்,என மிக அருமையான படம்,

தம்பி கமல்ஹாசன் ப்ளஸ் 2 பரீட்சையில் மிகச் சிறப்பான மதிப்பெண்களுடன் தேறிவிடுகிறார்,அதற்கு சிபாரிசு செய்ய வேண்டி வற்புறுத்திக் கெஞ்சிய தம்பிக்காக சென்னை வருகிறார் லலிதா,அங்கே கல்வித்துறை மேலதிகாரி போல வேடமிட்டு, தன்னுடைய இச்சைக்கு இணங்கினால்,மருத்துவ சீட் உடனே கிடைக்கும் என ஆசைகாட்டி,அவனால் வன்புணர்வு செய்யப்பட்டு வறுமைச் சூழலில் அதை ஏற்றும் கொண்டு சென்னைக்கே நிரந்தரமாக வந்தவள் அங்கேயே பணியில் தொடர்கிறாள்,

இவள் இழுக்க இழுக்க சுமையும் அதிகமாக ஏற்றப்பட, அதை சமாளிக்க பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள், தன் ஜாகையை ஹைதராபாதுக்கும் மாற்றுகிறாள், தம்பி கமல்ஹாசனை ஒரு டாக்டர் ஆக்குகிறாள். எல்லாத் தங்கைகளுக்கும் நல்ல மணவாழ்வை அமைத்துத் தருகிறாள்.ஆனால் அவளின் முடிவு என்ன ஆகிறது? ,வாங்கித் தின்ற கையும் வாயும்,அவள் பாலியல் தொழிலாளி எனத் தெரிய வருகையில் அந்தக் காசிலா உடல் வளர்த்தோம்? என்று யாருமே உயிரை மாய்த்துக்கொள்வதில்லை, மாறாக அம்பாள் எனப் போற்றிய அவளைத்தான்  ஒதுக்கி வைக்கின்றனர்.

அதே ஊரின் குடியானவரான செந்தாமரையும்,அவரின் ராணுவ வீரனான மகன் சிவகுமாரும் மிகுந்த புரட்சி எண்ணம் கொண்ட நிஜ பெரிய மனிதர்கள், செந்தாமரை  லலிதாவை அப்படியே லலிதாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள முன்வருவார். மிக அருமையான படம்,கே.பாலச்சந்தரின் புனர் ஜென்மம் இப்படம் மூலம் துவங்கிற்று,அவர் அதன் பின் எடுத்த பெண்ணியம் பேசும் சோதனை முயற்சிகளுக்கு பாலமாகவும் அமைந்தது இப்படம்.

கற்பு, தாலி, பதி பக்தி,பதி விரதை,பெண் கன்னி கழிந்தால் அது கணவனோடு மட்டும்   , ஆனால் ஆண் ஊர் மேய்ந்து விட்டு வந்தால் தவறில்லை,அவன் 15 ஆவது ரீலில் திருந்தி மனைவியிடம் சேர்ந்து விடுவான்.

இது போன்ற பொது புத்தி கொண்ட  ஆணாதிக்க மனப்பாங்கு கொண்ட இயக்குனர்களால்,உருவாக்கப்பட்டது தான் தமிழ் சினிமாவின் கற்பு நெறி, யதார்த்தத்தில் அப்படியா இருக்கிறது? இதை 1960கள் துவங்கி இன்று வரை வடிவம் கெடாமல் தமிழ் சினிமாவில் பல படைப்புகள் மூலம் செவ்வன நிறைவேற்றி வருகிறார்கள்.

ஆனால் நவீன இலக்கியம் நேர்மையாக பல படைப்புகளை தந்துள்ளது, குறிப்பாக ஜி.நாகராஜனின் படைப்புகள், சமுதாயத்தின் இரட்டைவேடத்தை, முரண்பாடுகளை அவர் படைப்புகள் மூலம் துகிலுரித்திருக்கிறார். 

அரங்கேற்றம் படத்தில் கே.பாலச்சந்தர் லலிதா கதா பாத்திரத்தை மிக அருமையாக செதுக்கியிருந்தார். அவர் கடைசியில் சிவக்குமார், அவளை மணமுடிப்பதாக மாற்றியிருந்திருக்கலாம்.ஆனால் அவர் லலிதாவை பைத்தியமாக்கினார்.ஒருக்கால் அவருக்கு அப்போதைய க்ளிஷேவாக இருந்த சுப முடிவு மீது ஒவ்வாமை இருந்திருக்கலாம். [இதை அவரது இன்ன பிற படைப்புகளில் கவனித்தால் விளங்கிக்கொள்ள முடியும்] 

அவரது சொந்தப் தயாரிப்பில் அவர் யாருக்கும் பயந்திருக்கத் தேவையில்லை, ஆனால் அவர் அதைச் செய்யவில்லை, ஆனால் அவர் படைத்த செந்தாமரை கதாபாத்திரமும், அவரது மகன் சிவகுமார் கதாபாத்திரமும் மிகச் சிறந்தவை,மிகவும் புரட்சிகரமானவை [மேலும் சிவகுமார் தன் ராணுவ பணி விடுமுறையில் ஹைதராபாதில் தன் இச்சை தணிக்க பிரமீளா வீட்டுக்குப் போவார்,] அதிலேயே தமிழ் சினிமாவின் பிரதான நாயக பிம்பத்தை [யோக்கிய சிகாமனி] தகர்த்திருப்பார். ப்ரி மேரிடல் செக்ஸை தைரியமாக திரையில் காண்பித்தவர் கே.பி தான்.
  
ஜன ஆரண்யா:-
==============
அடுத்த படமான ஜன ஆரண்யா என்னும் தி மிடில் மேன் சத்யஜித் ரே வின் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளியான நியோ ரியலிச பாணி வங்காள மொழிப்படம்,

கல்லூரிப் படிப்பை முடித்து பிஆர் ஓ வாக அவதாரம் எடுத்திருக்கும் சோம்நாத்துக்கு அவன் காலூன்ற மாதா மாதம் நல்ல வருமானம் தருகிற வியாபார ஒப்பந்தம் தேவை,அதற்கு போட்டிக்கா பஞ்சம்?. அத்தனையையும் சமாளித்து அந்த பர்சேஸ்அதிகாரியை நெருங்கி விடுகிறான்,ஆனால் அவர் ஒப்புதல் கடிதம் தருவதாயில்லை,அவர் சமீபமாக குடிப்பதில்லை,ஆதலால் மது விருந்து தர முடியாது,அவர் உடல் நலன் கருதி சமீபமாக புலால் உண்பதில்லை, ஆகையால் எந்த உயர்தர விருந்து தந்தாலும் அவர் வருவதாயில்லை.

இவருக்கு என்ன தந்தால் மசிவார் ? எனக் கண்டறிய பழம் தின்று கொட்டை போட்ட மிட்டர் என்னும் பிஆர் ஓ வை அமர்த்திக் கண்டறிகிறான் சோம்நாத், அந்த அதிகாரியின் பலவீனம் அழகிய இளம்பெண்கள்.

அவருக்கு விலைமங்கையை கூட்டித்தர மனமின்றி பின்வாங்க நினைக்கிறான் சோம்நாத், ஆனால் அவன் மிட்டருக்கு பெருந்தொகையை கமிஷனாக தரவேண்டியிருக்கிறது, முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என தனக்குள் கேட்டவன்.மிட்டருடன் இணைந்து பாலியல் தொழிலாளியை பிக்கப் செய்து வர பாலியல் தொழிலாளி-1ன் வீட்டிற்குச் செல்கிறான்,அங்கே அவளுக்கு அன்று பார்த்து மேலுக்கு சுகமில்லை,மேலும் அவளுக்கு மூடும் இல்லை,மிகவும் கெஞ்சி சமாதானம் செய்து,மேலே டிப்ஸ் எல்லாம் தருவதாகச் சொல்லி அவளைக் கிளப்பும் நேரம் அவள் கணவன் குடித்து விட்டு வந்து அவளிடம் சண்டை போட்டு,இவர்களையும் ஏசி விரட்டுகிறான்.

இப்போது வேறொரு பாலியல் தொழிலாளியை பிக்கப் செய்து வர பாலியல் தொழிலாளி-2 ன் வீட்டிற்குச் செல்கிறான்,அங்கே அவளுக்கு ஏற்கனவே அறைக்குள் சம்போகம் நடந்து கொண்டிருக்கிறது,அவளின் அம்மா வெளியே இவர்களிடம் மிகுந்த கிராக்கி செய்கிறாள், மிகுந்த செலவு செய்து அறை அலங்காரங்களை மாற்றி அமைத்ததால் பழைய ரேட் கட்டுப்படியாகாது என்கிறாள், மேலும் பாப்பாவை இவர்களுடன் அனுப்ப இயலாது,என கறாராகச் சொல்கிறாள்.இங்கேயே ஏசி கூட உண்டு,ஆகவே உங்கள் கஸ்டமரை இங்கே வரவழையுங்கள் என்கிறாள்,விலையுயர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வேறு இவர்களை முறைக்க இடத்தை காலி செய்கின்றனர்.மணி 8க்குள் அங்கே அறை வாசலில் பெண்ணை நிறுத்தி அழைப்பு மணியை அடிப்பதாக அந்த அதிகாரிக்கு வாக்கு கொடுத்து அவர் அங்கே காத்திருக்கிறார்.

இப்போது மிட்டர் சோம்நாத்தை தெருமுக்கு தரகனிடம் கூட்டிச் செல்கிறான், அவன் சோம்நாத்திடம் சிகரட் கேட்டு வாங்கி பத்தவும் வைத்துக்கொள்கிறான், சோம்நாத் கூசிப்போகிறான். காந்தியவாதியான அப்பாவுக்குப் பிறந்த தான் வாழ்வில் ஒரு முன்னேற்ற பாதையை தேர்ந்தெடுக்க எத்தனை குறுக்கு வழிகளை நாடவேண்டியிருக்கிறது என குமுறுகிறான்.

அப்போது அங்கே அந்த தரகன் சொன்ன தொழிலுக்குப் புதிதான நங்கை வந்து விட அவளின் முகத்தைக் கூட பார்க்காமல்,டாக்ஸி பிடித்து அவளை பின்னால் ஏற்றி,டிரைவர் சீட்டின் அருகே அமர்ந்தவன்,கண்ணாடியில் அவளைப் பார்த்து அதிர்கிறான்.அவளும் தான்,ஆனால் ,சுதாரிக்கிறாள்,அவள் சோம்நாத்தின் உயிர்நண்பன் சுகுமாரின் தங்கை காவ்னா,ஆனால் அவள் தன்னை ஜூதிகா என்கிறாள்.பணத்துக்காக இப்படியா கேவலமாக இறங்க வேண்டும் என்கிறான்,அவள்,பிச்சையெடுப்பதை விட இது கௌரவம் தான் என்கிறாள்.

அறை வாசலில் நின்று கத்தையாக பணம் அவளிடம் தந்து,நீ வீட்டுக்கு போய்விடு என்கிறான் ,அவள் இன்று நீ தருவாய்,நாளை யார் தருவார் என்பது போல முறைத்தவள் அழைப்பு மணியை அழுத்த,அதிகாரி அவளை உள்ளே இழுத்தவர்,இவனை ரிசப்ஷனில் காத்திருந்து சிபாரிசு கடிதம் வாங்கிச் செல்லுமாறு சொல்கிறார்,அன்று அவனின் நிலையான வருமானத்துக்கான கெமிக்கல் சப்ளை காண்ட்ராக்ட் கிடைத்தது, ஆனால் அதை அனுபவிக்க விடாமல் அவனின் மிடில் க்ளாஸ் மனசாட்சி உறுத்தத் துவங்கி விட்டது என்று முடித்திருப்பார் ரே. ஜன ஆரண்யா பற்றி மேலும் படிக்க http://geethappriyan.blogspot.ae/2013/11/blog-post.html

குலமகளிர் வாழ்வில் தடுமாறும் தருணத்தை நிதர்சனமாகச் சொல்லும் படைப்புகளை என்னில் தோன்றியவாறு இப்படி வரிசைப் படுத்தியுள்ளேன். நேரம் வாய்க்கையில் மூன்று படைப்புகளையும் அவசியம் படிக்கவும் பார்க்கவும் இலக்கிய,உலக சினிமா ரசிகர்களை வேண்டுகிறேன்.