சிகரம் தொடு



சிகரம் தொடு நேற்று தான் பார்த்தேன் ,ஜாக்கி அண்ணன் வரும் காட்சி மிகவும் பிடித்தது,நல்ல அழகான நீல நிற சட்டையில் மிதமான மேக்கப்புடன் , பணம் பறிகொடுத்துவிட்டு வங்கி மேனேஜர் பாண்டுவிடம் கோபமாக வசனம் பேசும்ஒரு பாத்திரம்,தமிழ் சினிமாவில் இது கண்டிப்பாக அட்டகாசமான எண்ட்ரி,மிகவும் பெருமையாக இருக்கிறது,வீட்டார் நண்பர்களிடம் இதை பகிர்ந்து கொண்டேன்.இன்னும் மென்மேலும் சினிமாவில் நிறைய நல்ல அழுத்தமான கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும் அண்ணே Jackie Sekar

படம் நல்ல விறுவிறுப்பான ஒரு சப்ஜெக்ட்,ஏடிஎம் ராபரி,அதன் பின்னால் உள்ள நெட்வொர்க்,இதை மிக அழகாக இன்னும் தீஸீஸ் செய்து மெருகூட்டியிருக்கலாம், யூடிவிக்காரர்கள் தண்ணீராக பணம் செலவு செய்கிறார்கள் என்று   ஹரித்வார் போவது,அந்த ஃப்ளைட்டில் ஹீரோ ஹீரோயினுக்கு லிப்லாக், பின்னர் அந்த போலிச்சாமியார் செக்மெண்ட், அந்த புனிதப் பயணத்தில் காமெடி ட்ராக்குக்கு வேண்டி வலிய திணிக்கப்பட்ட சதீஷ், ஆனால் சிரிப்பு தான் வரவில்லை,தவிர ஹரித்வார் ரிஷிகேஷ்,கங்கோத்ரி யமுனோத்ரி போய்விட்டு வருவது அத்தனை காமெடியான விஷயமாக இயக்குனர் வைத்திருக்க வேண்டாம். போகிறவர்கள் நல்லபடியாக திரும்புவார்களா?என்றே சொல்லமுடியாத மிகக்கடுமையான பயணம் அது.

தவிர  ஹீரோவுக்கு  போலீஸ் வேலை என்றால் அலர்ஜி, ஹீரோயினுக்கும் போலீஸ் வேலை என்றால் அலர்ஜி,அதற்கு சொல்லப்படும் அழுத்தமில்லாத காரணம், என்று நல்ல விறுவிறுப்பாக போயிருக்க வேண்டிய கதையை கொத்துக்கறி போட்டு பொருமையை சோதித்து விட்டனர், அப்பா சத்யராஜ் பிள்ளையின் போலீஸ்  வேலையைக் காப்பாற்ற உயிரையே துச்சமாக எண்ணி பயங்கர குற்றவாளிகளுடன் போராடி கோமாவில் விழுகையில் தானா? காதலியிடமிருந்து போலீஸ் வேலைக்கு இவர் செல்ல க்ரீன் சிக்னல் வரவேண்டும்?!!!

இயக்குனர் கௌரவ், சிவா என்னும் வங்கி ஊழியர் கதாபாத்திரத்தில் வந்து மோசமில்லாமல் ஸ்கோர் செய்திருந்தார்,ஆனால் போலீசாரிடம் பிடிபடுகையில் இவரும் அவர் கராத்தே நண்பருமான சரண்தீப்பும் தங்களை அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாகச் சொல்கின்றனர்.இது இவர்களுக்கே அடுக்குமா?அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தால் ஏடிஎம் ராபரி செய்வார்களா?இன்று பரவலாக ஏடிஎம் ராபரி செய்பவர்கள் யார் என்று தினத்தந்தி பார்த்தாலே தெரியுமே?

அனாதை ஆசிரமங்களில் போதிக்கப்படும் நல்லொழுக்கம் வேறு எங்கும் போதிக்கப்படுவதில்லை, அதைக் கூட புரிந்து கொள்ளாமல் இப்படியா? அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலம் பாழாவது போல ஒரு பயங்கரமான ஏடிஎம் கொலையாளிகளை அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாக சித்தரிப்பது?!!! இதை நம்மாட்கள் பார்த்துவிட்டு மறந்தாவிடுவார்கள்?ஏய் ,இப்படித்தான் அனாதைபசங்க கிளம்பறானுங்க என்று ஒன்றுக்குப் பத்தாக கதை கட்டமாட்டார்களா?!!!

மிகவும் வேதனையான இடம் அது,இதே போல வேலையில்லா பட்டதாரி படத்திலும் வரும் ஒரு வசனமான என்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தானே படிக்க வைத்தீர்கள் என்பது!!!

படத்தின் ஸ்டைலான மேக்கிங்,எடிட்டிங் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.அந்த கிலோமீட்டர் கல்லில் இவர்கள் கடந்த தூரத்தை காட்டுவது,முதல் காட்சியில் அபார்ட்மெண்ட் முழுதாய் காட்டி,அதன் பால்கனி வழியே உள்ளெ கேமராவை அனுப்பி ஹாலுக்குள் நுழைந்து வீட்டின் இண்டீரியரை நமக்கு காட்டி விட்டு,அப்பா சத்யராஜை அறிமுகம் செய்யும் லாங் ஷாட் மிகவும் அருமையாக இருந்தது,கேமரா கலைஞர் விஜய் உலகநாத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்,

 நல்ல போலீஸ் கரைம் ஸ்டோரியாக மிளிர வேண்டியதை இப்படி இடைச்செருகலான மூன்று பாடல்களால் வீணடித்தாலும்,மிக முக்கியமான பிரச்சனையை எடுத்துக்கொண்டு சிறப்பாக படம் செய்து வணிகரீதியாக பெற்றி பெறவைத்ததற்கு இயக்குனர் கௌரவை பாராட்ட வேண்டும்.விக்ரம் பிரபு நன்றாக ஒரு தேர்ந்த நடிகராக வளர்த்திருக்கிறார்,சண்டைக் காட்சிகளில் நல்ல உழைப்பு தெரிகிறது.

படத்தில் பல விஷயங்கள் பார்த்துப் பார்த்து மெருகூட்டியது தெரிகிறது, குறிப்பாக சத்யராஜின் அப்பா கேரக்டர்,மிகவும் நளினமாக கம்பீரமாக படைக்கப்பட்டுள்ளது,சத்யராஜ் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடிக்காமல் தன் வய்துக்கேற்ற கதாபாத்திரங்களை கேட்டு வாங்கிச் செய்வது அருமையான பாங்கு,

படத்தின் ரிச் அண்ட் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்கு உதாரணமாக சத்யராஜின் துண்டான காலுக்கு செயற்கை கால் மாட்டும் அந்த காட்சிக்கு செய்யப்பட்ட தத்ரூபமாக க்ராஃபிக்ஸ், இதே போலவே ஃப்ரென்சுப் படமான ரஸ்ட் அண்ட் போன் படத்தில் நாயகிக்கு திமிங்கிலம் தின்று கால்கள் துண்டாகிவிட,படம் முழுக்க அழகாக கால்களை அழித்து க்ராஃபிக்ஸ் செய்திருப்பார்கள்.அது நினைவுக்கு வந்தது

அடுத்த படத்தில் இன்னும் நன்றாக கவனத்துடன் பட்டையை கிளப்பட்டும் கௌரவ்.