மெட்ராஸ்[Madras] [2014]


தமிழில் குப்பம் ,குடிசை மாற்று வாரிய LIG ஹவுசிங் போர்ட் செட்டில்மெண்ட் ,கதைக்களனில் எத்தனை சினிமாக்கள் வந்திருக்கும்?!!! ஆனால் எங்கேனும் ஜெய்பீம் என்னும் வாசகமோ? அவர்களின் நீல நிறமோ?அவர்களின் கட்சிக்கொடியையோ,அவர்களின் இயக்க புத்தகங்களையோ திரையில் சில்ஹவுட்டிலேனும் காட்டியிருப்பார்களா?!!!

ஒரு ஜெய் பீம் காம்ரேடையேனும் மெட்ராஸ் படத்தின் அன்பு போல முழுதாகக் காட்டியிருப்பார்களா?!!! தலித் மக்களுக்கு சமூக விடுதலை பெற்றுத்தந்த அண்ணல் அம்பேத்கரின் படத்தையேனும் காட்டி காட்சிகள் ஏதேனும்  அமைத்துள்ளனரா?!!!

அவ்வளவு ஏன்? அம்பேத்காரை சினிமாவில் வரும் அரசாங்க அலுவலக காட்சிகளிலேனும் காட்டியிருப்பார்களா?!!!எனக்குத் தெரிந்து இல்லை, முதல் முறையாக இயக்குனர் ரஞ்சித் அசல் தலித் மக்களை அட்டக்கத்தி படத்தில் உலவ விட்டிருந்தார், இதிலும் அச்சு அசலாய் தலித் மக்களைத்தான் நாம் பார்க்கிறோம், அதற்கு அவர் தலைப்போ சப்டைட்டிலோ போட்டு அவர் விளக்கவில்லை அவ்வளவு தான்.

தென் சென்னை,பம்மலில் ஒரு செட்டில்மெண்ட் இருக்கிறது, அங்கே எந்த பெட்டி கேஸ் பிடிக்கவும் போலீஸ் உள்ளே சென்று ஜீப்பில் ரெய்ட் செய்து ஆள்பிடித்து வருவார்கள், இன்று அந்த நிலை நன்கு மாறியிருக்கிறது.எனக்கு அங்கே நிறைய நண்பர்கள் இருந்தனர்,அதே போலவே பல்லாவரத்தில் மலங்ஷாப் AKA மலங்கானந்தபுரம் என்னும் செட்டில்மெண்ட் இருந்தது,

 அங்கே கால்பந்து விளையாட்டை தான் சிறுவர்களும் இளைஞர்களும் தீவிரமாக ஆடுவார்கள்.பாப் மார்லி படம் கூட நிறைய வீடுகளில் இருக்கும்,எனக்கு யார் என்று அப்போது தெரியாது,மைக்கேல் ஜாக்சனின் ஆல்பத்தை சிலர் அங்கே ஆடியும் பாடியும் அதகளம் செய்வார்கள், அதைத் கூடி ரசிப்பார்கள், அநேகம் சிறுவர்கள் இளைஞர்கள் அம்பேத்கார் டாலரை அவரை தெய்வமாக எண்ணி அணிந்திருப்பார்கள். அங்கே பெரிசு என அழைக்கப்படும் மாட்டுக்கறி ஸ்டால்கள் சாதாரணமாக பார்க்க முடியும். பெரிசு என்று மாட்டுக்கறியை அட்டக்கத்தி படத்தில் சொல்லுவர். [LIG=low income group] [MIG=MIDDLE INCOME GROUP] [HIG=HIGH INCOME GROUP]ஹவுசிங்குகள் கேள்விப்பட்டிருப்பீர்கள், 

இதில் LIG என்றாலே அதில் தலித் மக்கள்  அநேகம் பேர் இருப்பார்கள்.இது கண்கூடு.அங்கே இயல்பாகவே மின் தட்டுப்பாடு அதிகமிருக்கும்,ரேஷனில் சரக்குகள் முன்னரே தீர்ந்துவிடும்.குடிநீருக்கு எப்போதும் அக்கப்போர் தான்,தண்ணீர் லாரி வரும் ஆனால் வராது கதைதான், கழிவு நீர் வெளியேற்றம், கட்டிட மராமத்து,என சுத்தமாக எதுவுமே இருக்காது,நிறைய கட்டிடங்கள் கட்டி 30 வருடங்களுக்கு மேல் இருக்கும்,பலசமயம் பால்கனிகள் ஸ்லாப் கம்பிகள் துருத்தித் தெரியும்.

அங்கே ஒரு கொட்டடியில் இலவச ட்யூஷன் பெரிய மாணவர்கள் சிறிய மாணவர்களுக்கு எடுத்துக்கொண்டிருப்பார்கள்,இலவச கம்ப்யூட்டர் மையமும் இருக்கும். ஒரு சாரார் கால்பந்து,உடம்பை பேணுதல், ஓட்டப்பயிற்சி, என்றிருப்பர், ஒருசாரார் கஞ்சா,போதை,சிகரட் பீடியுடன் ஜமாவில் இருப்பர், சாலையி நடைபாதையிலேயே மிகக் குறைந்த விலையில் இட்லி விற்கும் பாட்டியை அல்லது விதவைப் பெண்மணியை நாம் பார்க்கக் கூடும்.இவை கொண்ட ஒரு யதார்த்தமான சூழலைத் தானே மெட்ராஸ் படம் தன்னுள் கொண்டிருந்தது.இதை நுட்பமாக சித்தரித்ததில் தான் இயக்குனர் ரஞ்சித் வெற்றி பெற்றிருக்கிறார். தலித்தியத்தை வணிகரீதியான தமிழ்சினிமாவில் பதிவு செய்து வெற்றி பெற்ற ரஞ்சித்தை எத்தனை பாராட்டினாலும் தகும்.

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா போன்றவர்கள் வழமையாக தயாரிப்பது திராபைகளும் குப்பைகளுமே,அது போன்ற முதலை தயாரிப்பாளர்களை கதை விவாதத்தில் சமாளித்து தன் கதையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் படம் செய்வது எளிதல்ல.அட்டைக்கத்தி படத்துக்கும் இதே தயாரிப்பாளர் என்பதால் அதில் இவர் கற்ற பாடங்களும்,இவரின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையுமே இவருக்கு தனித்து இயங்க சுதந்திரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது,ஸ்டுடியோ க்ரீன் இவருக்கு தக்க சம்பளம் கொடுத்தார்களா? என்பதே என் கவலையாக இருக்கிறது,இப்படத்தையும் , போட்டோ ஷூட் மட்டுமே முடிந்திருக்கும் கருப்பர் நகரம் படத்தையும் இணைத்து ,இது திருட்டுக் கதை என்று கதை கட்டுகின்றனர், அப்படி சீன் பை சீன் காப்பியடிக்கும் சல்லித்தனமான இயக்குனர்களால் ரத்தமும் சதையுமான எந்தப் படைப்பையுமே நேர்மையாக தரமுடியாது என்பது தான் உண்மை, ரஞ்சித் என் பார்வையில் நேர்மையான படைப்பாளியாகத் தான் தெரிகிறார்.

நான் 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படித்தது பஞ்சாயத் யூனியன் துவக்கப்பள்ளி, 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தான்,எனக்கு மெட்ராஸ் படத்தில் வருவது போன்ற  மாந்தர்களை நன்கு பரிச்சயமானது அங்கே தான்.என்ன ஒன்று? மெட்ராஸ் படத்தில் வருவது வடசென்னை,

நான் வளர்ந்தது தென்சென்னை,ஆனால் இவர்களும் மெட்ராஸின் மாந்தர்கள் தாம். அப்போதே காளியைப் போல படிப்பிலும் கால்பந்தாட்டத்திலும் மிகத் துடிப்பாக இருந்து எஸ் ஐ செலக்‌ஷனுக்கும், ஹார்பரில் அதிகாரி பணிகளுக்கும், bhel போன்ற நிறுவனங்களிலும் நுழைவுத் தேர்வெழுதி பணியில் சேர்ந்து இன்று உயர்ந்த நிலையில் இருக்கும் மாந்தர்களை எனக்கு  நன்கு தெரியும்.அப்போதே தீவிரமாக ஜெய்பீம் இயக்கத்தின் காம்ரேடுகள் இயங்கி வந்ததைப் பார்த்திருக்கிறேன்.


என் உயிர் தோழன் திரைப்படம் பற்றி இங்கே சொல்லவேண்டும்,அப்படம் அரசியல் பேசும் சினிமாக்களின் அகராதியாக இருந்தாலும் நுட்பமான  டீடெய்லிங்கில் அது காலத்தை வெல்லவில்லை, ஏனென்றால் ஒரு ஆதிக்க சாதியில் இருந்து வந்த பாரதிராஜா என்னும் படைப்பாளியால் ஒடுக்கப்பட்ட மாந்தர்களின் அசல் வாழ்வை சித்தரிப்பதில் பல சமரசங்கள் செய்யப்பட்டிருக்கும். அதில் வரும் கிழவர் கதாபாத்திரத்தில் உண்மையில்லை,

அதிக ஒப்பனை தான் தென்பட்டது,வசனமும் அவர் பட்டினத்தார் பேசுவது போல பொடி வைத்துப் பேசினார், மெட்ராஸ் திரைப்படத்தின் ஜானி பலகாலம் ரவுடியாக இருந்து கஞ்சா,குடியாலும் தொடர்ந்த லாக்கப் விசாரணைகளாலும் உடல் பலம் , பேச்சுத் திறன் குன்றி  ஆனாலும் பழைய தவ்லத்தனத்தை கஷ்டப்பட்டு முன்னிருத்தும் ஒரு பாத்திரம். படம் இன்னொரு முறை பார்த்தால் மட்டுமே இதில் வரும் நுட்பமான வசனங்களில் பொதிந்துள்ள பொருளை ஒருவர் விளங்கிக் கொள்ள முடியும்.

படத்தில் இன்னுமொரு ஆச்சர்யம், டாஸ்மாக் சூழலை காட்சிப்படுத்தாமல் தவிர்த்தது, கட்டப் பஞ்சாயத்துகளை ஆனவரை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியது. பின்னர் ஓத்தா,ஒம்மாள போன்ற சென்னையின் மிகச் சாதாரணமான கலைச் சொற்களின் புழங்கல்களை தவிர்த்தது.என சொல்லிக்கொண்டே போகலாம்.

கலையரசியாக வந்த காதரின் தெரசாவின் நடிப்பு உடல்மொழி சமகால மாநகரின் நவீன நங்கையர்களை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது,தலித்களில் நல்ல நிறமுள்ளவர்களை நான் பார்த்திருக்கிறேன்.அதை நிரூபிப்பதற்காக ரஞ்சித் கலையரசியின் அம்மாவையும் நல்ல சிவப்பான பெண்மணியாக காட்டியிருந்தார்.மாரியைப் போன்றே நம் ஏரியாவுக்குள் உலாவரும் வட்டம் மாவட்டங்களை நாம் பார்த்திருப்போம்,

ஒவ்வொரு கதாபாத்திரமும் ,நம்முள் அக்கம்பக்கத்தவர் போல பதிந்தது தான் படத்தின் பலம்.தவிர எல்லா ஃப்ரேம்களிலுமே நாம் காண்பது இயல்பான சூழல் தான்,உதாரணத்துக்கு காளியின் வீடு ஒரு LIG ஒரு படுக்கை அறை வீடு,காளியின் அப்பா ஹாலின் சோஃபாவிலேயே தூங்கி எழுவதை நாம் பார்ப்போம்,ஆர்ட் டைரக்‌ஷன் கூட கதையின் போக்கில் சரியான படிக்கு இயங்கியிருப்பதற்கு அக்காட்சி ஒரு சான்று.  

இதே போன்றே மேரியாக வந்த ரித்விகா,மேக்கப்பே இன்றி நிஜமான அடித்தட்டு சமூகத்தின்  இளம் மனைவி கதாபாத்திரத்தில் அப்படிப் பொருந்திப் போயிருந்தார்,படத்தில் அவர் வேலைக்குப் போவதில்லை என்றாலும், அடித்தட்டு மாந்தர்கள் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போனால் தான் அந்த மாதத்தை கடன் வாங்காமல் ஓட்ட முடியும். பல்லாவரம்,குரோம்பேட்டை,நாகல்கேனி,மெப்ஸ் போன்ற பகுதிகளில் இயங்கும் ஏற்றுமதி நிறுவங்களில் வேலை விட்டதும் ஆயிரக்கணக்கில் மேரிக்கள் கூடு திரும்ப விரைவதைப் பார்க்கலாம்.ரஞ்சித் அன்பு மேரி மாரி காளி போன்ற நுட்பமான கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்ததில் இருந்தே தனக்கு காஸ்டிங் சென்ஸில் இருக்கும் அதீத தன்னம்பிக்கையை நிரூபித்திருக்கிறார்.

படத்தில் வரும் சாவுப் புறப்பாடு பாடலில் மேளம் அடிப்பவர்கள், உடனாடுபவர்கள் அவர்கள் மது அருந்துவதை இயக்குனர் திணித்திருக்கலாம், அவர் அதைச் செய்யவில்லை. அதே போல நாயகனுக்கு முதல் காட்சியிலேயே அறிமுகம் குத்துப் பாடல் வைத்திருக்கலாம், செய்யவில்லை,முதலில் நாயகனின் தோழன் அன்புவைத் தான் நாம் அறிய வருகிறோம்,இது கனவா? நனவா? என கிள்ளிப் பார்த்த இடம் அது,

ஆல் இன் ஆல் அழகுராஜா என்னும் ஒரு திராபையில் இதே கார்த்திக் சிவகுமாரை அவர் நண்பர் சந்தானம் வாங்க போங்க என்று மிகவும் செயற்கையாக அழைக்கும் படி காட்சி வைத்திருந்தார் இயக்குனர் ராஜேஷ், இதில் அதே கார்த்திக், அன்புவைப் பார்த்து கட்சி செயலாளர் என்றால் சும்மாவா? என்று நட்பும் பாமரத்தனமுமாக கலாய்ப்பார்,

என்ன ஒரு மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் அது ?கார்த்திக் எப்படி ஒரு டைரக்டர் டார்லிங்காக மாறிப்போனார்,அல்லக்கை இயக்குனர்களை இனம் கண்டு கத்தரித்து விட்டு ஒரு அசல் இயக்குனர் சொல்படி கேட்டு இப்படி காளி பாத்திரம் செய்தார் ,என வியக்கிறேன்.

குறிப்பு:- நேற்று ஒரு இணைய மொன்னை,மெட்ராஸ் படம் தலித்தியம் பேசவில்லை என்று தி இந்துவில் கட்டுரை எழுதி தன் பாமரத்தனத்தை பிரஸ்தாபித்திருந்தது. இயக்குனரின் பேட்டியைப் படித்த பின்னாவது தெளிவடையட்டும்,அது போன்ற பிற்போக்கு ஆட்கள்.

இனி வருவது இயக்குனர் ரஞ்சித் தி இந்து தினசரிக்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம்:- 

தலித் அரசியலை வெளிப்படையாகவே பேசுகிறது 'மெட்ராஸ்'- இயக்குநர் ரஞ்சித் சிறப்புப் பேட்டி


  • இயக்குநர் ரஞ்சித்
    இயக்குநர் ரஞ்சித்
தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சினைகள் மீதான அணுகுமுறை, தலித் மக்களின் வாழ்வியல் பதிவு உள்ளிட்ட விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது, 'மெட்ராஸ்'. இப்படம் குறித்து இயக்குநர் ரஞ்சித்திடம் விரிவாகப் பேசியதில் இருந்து...
தமிழ் சினிமா வரலாற்றில் திரை விமர்சகர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் கவனிக்கப்பட்ட வேண்டிய திரைப்படமாக 'மெட்ராஸ்' வேறொரு தளத்துக்கு கொண்டுசெல்லப்படிருக்கிறதே... இதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
'மெட்ராஸ்' தலித்துகளைப் பற்றிய, அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றிய திரைப்படம். தலித்துகளின் கலாச்சாரம், வாழ்க்கையைப் பற்றி தமிழ் சினிமாவில் இதுவரை சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. வட சென்னை மக்கள் உயர்ந்த சிந்தனைகள் இல்லாதவர்களாகவும், வன்முறையாளர்களாகவும்தான் இதுவரை சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அங்குள்ள இளைஞர்களுக்கு ஹிப் ஹாப் இசை பிடிக்கும், மைக்கல் ஜாக்சன், கால்பந்து, பாப் மார்லி எல்லாமே தெரியும்.
அமெரிக்காவில் கருப்பர்களின் கலாச்சாரம் மாதிரி வட சென்னையிலும் பரவியிருக்கிறது. பெரும்பான்மையான இளைஞர்கள் நன்றாகப் படித்து, கடுமையாக உழைத்து, வாழ்க்கையில் நல்ல உயரங்களை தொடுகிறார்கள். வட சென்னையின் பரபரப்பான, துடிப்பான வாழ்க்கையை கொண்டாடுவதால்தான் ரசிகர்கள் இந்தப் படத்தை விரும்புகிறார்கள் என்று நினைக்கறேன்.
வட சென்னை மக்களைப் பற்றிய பதிவு, தமிழ் சினிமாவில் எவ்வளவு தூரம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?
உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்டபோது, 'மெட்ராஸ் படத்தில் பேசப்பட்ட தமிழ், வட சென்னை தமிழ் இல்லை' என்று சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்துது. வேற என்ன மாதிரியான தமிழை வடசென்னையில் பேசுவதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள்? சென்னைத் தமிழ் என்று பலர் கருதிக்கொண்டு இருப்பது காலப் போக்கில் எல்லா அம்சங்கள் மாதிரியே மாறியிருக்கிறது. ஆனால், தமிழ் சினிமாவை பார்க்கிறவர்களுக்கு இருக்கிற புரிதல் வேறு.
வட சென்னை மக்களின் மொழி, அவர்களின் கல்வி அறிவு, விளையாட்டுத் துறையில் அவர்களிடம் உள்ள ஆர்வம்... இப்படி பல வருடங்களாக பொதுவில் ஏற்பட்டிருக்கும் கலாச்சார மாற்றங்கள் எதையுமே தமிழ்ப் படங்கள் பிரதிபலிக்கவில்லை. தமிழ் சினிமாவில் பிரபலமான கானா பாடல்கள்கூட குத்தாட்டப் பாடல்களாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மக்கள் எல்லா விதமான சூழலுக்கும் கானா பாடுவார்கள். அதனால்தான் என் படங்களில் கானாவை காதல் பாடலாகப் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்.
இந்தப் படம் பற்றி தெரியாதவர்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?
என் பார்வையில், வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட இரண்டு பேரை பற்றிய படம்தான் 'மெட்ராஸ்'. அன்பு என்ற கதாபாத்திரம் அரசியல் அதிகாரத்தால் சமுதாய அமைப்பில் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்யலாம் என நினைக்கிறான். ஆனால், காளி என்ற கதாபாத்திரம் அரசியலை ஒதுக்கி, கல்விதான் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நினைக்கறான். பிரச்சினைகளின் வேருக்கு போகணும் என்று நம்புகிறான். காளி பகுத்தறிவான, முற்போக்கான ஆள். அதனால், அன்பு சொல்கிற அரசியலுக்குப் பின்னால் அவனால் போக முடியவில்லை. பெரியார் - அம்பேத்கர் சித்தாந்தங்களைச் சார்ந்தது இது.
முக்கியமான பத்திரிகையாளர்கள் 'மெட்ராஸ்' படத்தின் அரசியல் குறியீடுகளை ஏன் தவறவிட்டார்கள் என்று நினைக்கிறீர்கள்?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு அதுபற்றி தெரியவில்லை. இந்தப் படம் மிகவும் வெளிப்படையாகவே தலித் அரசியலைப் பேசுகிறது. உதராணத்துக்கு பார்த்தீர்கள் என்றால், காளி 'தீண்டாத வசந்தம்' நூலை படிக்கறான். அது தலித் இலக்கியத்தில் முக்கியமான படைப்பு. டாக்டர் அம்பேத்கரின் புத்தகங்களை நாயகனின் வீட்டிலும், மற்ற கதாபாத்திரங்களின் வீடுகளிலும் பார்க்கலாம். நாயகியின் தந்தை குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். தலித் அரசியலுடன் தொடர்புப்படுத்தக்கூடிய நீல நிறம், படம் முழுக்க நிறைந்திருக்கிறது.
எப்படி ஒரு விமர்சகர், 'எனக்கு தலித் அரசியல் தெரியாது என்றும், வட சென்னை மக்களின் வாழ்க்கை தெரியாது என்றும் சொல்லலாம் என எனக்குப் புரியவில்லை. மறைமுகமாக எதுவுமே படத்தில் இல்லை. எல்லாரும் பார்த்து புரிந்துகொள்கிற மாதிரிதான் இருக்கின்றன.
இது ஒரு சாதாரண பழிவாங்கல் கதை என்று முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி?
பிரச்சினைகளின் ஓர் அடையாளம்தான் அந்தச் சுவர். அந்தச் சுவரைச் சுற்றி நடக்கும் அதிகார மோதல் முடிவுக்கு வந்தால் மட்டுமே சமுதாயப் பிரச்சினைகள் முடிந்ததாகச் சொல்லவில்லை. அடக்குமுறை எப்போதும் காணப்படுகிறது. அதை காளி மாதிரியான ஆட்கள் சரியாகப் பகுத்தறிந்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் இந்தப் படம் கொண்டாடுகிறது எனச் சொல்லப்படும் விமர்சனங்கள் பற்றி?
இது அப்படிப்பட்ட படம் இல்லை. குறிப்பிட்ட சாதிகளை மட்டுமே உயர்த்திக் காட்டுகின்ற படங்கள் அனைத்துமே என் பார்வைக்குத் தவறானவைதான். சாதிகளும் பாகுபாடுகளும் ஒழிய வேண்டும் என்றுதான் இந்தப் படம் சொல்கிறது.
சாதி ரீதியான பிரச்சினைகளைப் படத்திக் காட்டும்போது, ஓர் இயக்குநரின் கடமை என்ன?
சாதி என்பது இந்திய சமுதாயத்தில் நிறைந்திருக்கும் யதார்த்தமான விஷயம். என்னைப் பொருத்தவரை, சாதிகளைப் பேசும் படங்கள், அந்தஸ்து, பாகுபாடு, சாதிய ஏற்றத்தாழ்வை திரும்பவும் திணிக்க முற்படும் சாதிய அமைப்புகளைப் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இந்த விஷயத்தில் இரானிய இயக்குநர்களை நான் ரசிக்கறேன். தங்கள் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் பழமைவாத சித்தாந்தங்களை, அங்கு இருக்கும் கடுமையான சென்சார் விதிகளையும் மீறி விமர்சிக்கிறார்கள். இந்தியாவில் அப்படிப்பட்ட சென்சார் இல்லை. இங்கு இருக்கும் இயக்குநர்கள் அந்தச் சுதந்திரத்தைக் காப்பாற்றி, அதேசமயத்தில் பொறுப்பான படங்களையும் எடுக்க வேண்டும். தமிழில் 'வழக்கு எண்' படம் யதார்த்தத்தை வலிமையாகச் சொன்ன படமாக எனக்குத் தெரிகிறது. அமைப்பில் இருக்கற பிரச்சினைகளை மக்கள் முன்பு சொல்லும்போது, அதை எப்படி தீர்க்கலாம் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.
சாதிய வேறுபாடுகளைப் பற்றி பேசுகின்ற படங்கள் ஏன் தமிழ் சினிமாவில் அரிதாகவே இருக்கின்றன?
ஒரு குறிப்பிட்ட சாதியை, சமூகத்தைச் சேர்ந்த மக்களை தூக்கிப் பிடிக்கற படங்களுக்கு இங்கே தனி வியாபாரம் இருக்கிறது. ஆனால், தலித்துகளின் வாழ்க்கை, கலாச்சாரத்தை சொல்லும் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. ஏனென்றால், அதற்குச் சந்தை இல்லை, வியாபாரம் இல்லை. அப்படிப்பட்ட தனி வியாபரம் இல்லை அல்லது உருவாக்கப்படவில்லை என்ற காரணத்தினாலயே, அந்த சமூகத்தில் இருந்து வந்து, வெற்றி அடைந்த நடிகர்களும் இயக்குநர்களும் இருந்தும்கூட, தலித் கதாபாத்திரங்களும், கலாச்சாரமும் உள்ளடக்கியப் படங்கள் எடுக்கப்படுவதில்லை.
நாமதான் அந்தச் சந்தையை உருவாக்க வேண்டும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 'மெட்ராஸ்' சரியா ஓடாது என்று பலர் கணித்தார்கள். ஆனால், அவர்களின் கணிப்பு இப்போது பொய்யாகிவிட்டது.
© 'தி இந்து' ஆங்கிலம்
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா