காயத்ரி நாவல் [1976] மற்றும் சினிமா [1977]


ழுத்தாளர் சுஜாதாவின் காயத்ரி நாவல் படித்தேன், படம் முன்பே அதன் காண்ட்ராவர்ஸியான கன்டன்டுக்காக 2 முறைக்கும் மேல் பார்த்திருக்கிறேன், 77 பக்கங்கள் கொண்ட குறுநாவல்,நல்ல விறுவிறுப்பான பாணி எழுத்து நடை, இன்று எழுதியது போல இருந்தது என்றால் அது க்ளிஷே 

1976 ஆம் வருடம் தினமணிக்கதிரில் இதை சுமார் 15வாரங்கள் எழுதியிருக்கிறார் வாத்தியார்.அதை இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் உரிமை வாங்கி சுடச்சுட கொத்துக்கறி போட்டிருக்கிறார்.இயக்கம் ஆர்.பட்டாபிராமன்,இசை இசைஞானி இளையராஜா,பாடல்களை பஞ்சு அருணாச்சலமே எழுதியிருக்கிறார்.

நாவலில் காயத்ரி மிகவும் நளினமான நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் கதாபாத்திரம் ,ஆனால் படத்தில் ஒரு பயந்த வெகுளியான பத்தாம்பசலியான ஸ்ரீதேவியாக உருகுலைக்கப்பட்டது.

நாவலில் இவர் ஊர் கோயமுத்தூர் என்றால் சினிமாவில் திருச்சி.நாவலில் காய்த்ரியின் கணவரான ராஜரத்னம் கதாபாத்திரம் செக்கச்செவேல் என்று ,கருகரு தலைமுடியுடன் பொலிகாளையைப் போல இருப்பதால்,அதை மேட்ச் செய்ய வேண்டி ரஜினிக்கு பஃப்ஃபென்று டிஃபன் பாக்ஸ் க்ராப்  வைத்து 1 இஞ்ச் கனத்துக்கு அரிதாரம் பூசி மெழுகியிருந்தனர். இதை மட்டும் அவருக்கு மாற்ற மனமில்லை ,ஏன் எனத் தெரியவில்லை?.

காயத்ரி நாவல் , மூர் மார்கெட்டுக்கு தன் சிறுகதைத் தொகுப்பில் விடுபட்ட ஆனந்த விகடனில் வெளியான ஒரு பழைய பிரதியைத் தேடி வந்து,அங்கே ஒரு பாய் கடையை சல்லடை போட்டு துழாவும் எழுத்தாளர் சுஜாதாவின் கண்ணோட்டத்தில் விரிகிறது.

ஆனால் படத்தில் சுஜாதாவின் கதாபாத்திரம் இருக்காது.கணேஷின் கதாபாத்திரத்தில் ஜெய்ஷங்கர்,வஸந்தின் கதாபாத்திரத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி [இதெல்லாம் அடுக்குமா?] என சுஜாதாவை கதற விட்டிருந்தார் பஞ்சு அருணாச்சலம், இது வாத்தியாரின் முதல் சினிமா பிரவேசம் என்பதால் வேறு வழியின்றி ஙப் போல் வளைந்திருப்பார்.

படத்தில் ராஜரத்தினத்தின் அக்கா சரசுவாக ராஜசுலோசனா நடித்திருப்பார்,சமையல் கார ஐயர் கதாபாத்திரத்தில் அசோகன்,சுஜாதாவின் எல்லா நாவல்களுமே   subtle ஆன செக்ஸைக் கொண்டிருக்கும்,இதுவும் விதிவிலக்கல்ல,நாவலில் கையாளப்பட்ட ஆங்கில சொற்றொடர்களுக்கு எத்தனை பேருக்கு? அப்போது அர்த்தம் தெரிந்தது எனத் தெரியவில்லை.
உதாரணத்துக்கு: முதல் அத்தியாயமே இப்படித்தான் ஆரம்பிக்கிறது, intensely personnel ,Bought in Bangalore on the day i lost my virginity .

படத்தில் தன் காயத்ரி கதாபாத்திரத்தின் உயிரைக் காப்பாற்ற சுஜாதா பஞ்சு அருணாச்சலம் அண்ட் கோவுடன் ஒரு நாள் முழுக்க போராடிக் களைத்ததாக அவரது பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.ஆனால் சுஜாதாவின் கதையில் இந்த கற்பு நெறி களங்கம் இத்யாதிகளை வாத்தியார் லாவகமாக தாண்டிவிடுகிறார்.

எத்தகைய தீர்க்க தரிசனம்?அல்லது கட்டுடைத்தல்? நாவலை வஸந்த் இப்படித்தான் முடித்து வைப்பார்.

 “நாங்கள் அந்த படத்தை பார்த்துவிட்டோம், அதில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!!!

 பின்னர் காயத்ரியை பத்திரமாக அவர் அப்பாவிடம் கொண்டு சேர்த்து ராஜரத்தினம் அண்ட் கோ மீது பெரிய வழக்கு போட தயாராகும் முஸ்தீபில் காயத்ரி நாவல்  முடியும்.

ஒரு வகையில் இந்த கசப்பான அனுபவமும் அசாத்திய பொருமையும் பின்னாளில் வாத்தியாரது இன்னொரு நாவலான ப்ரியா ,இயக்குனர் பஞ்சு அருணாச்சலத்தால் கொத்துக் கறி போடப்படுகையில் மிகவும் கைகொடுத்ததையும் அவர் சொல்லியிருந்தார்,

மூன்றாம் முறையாக சுஜாதாவின் அனிதா இளம் மனைவி குமுதத்தில் தொடராக வந்ததை ,பஞ்சு அருணாச்சலம் “இது எப்படி இருக்கு” [16 வயதினிலே ரஜினி வசனம்] என்று படமாக எடுத்து அது ஊற்றிக்கொண்ட பின்னர் தான் பஞ்சு அருணாச்சலம்,சுஜாதாவை விட்டே விலகினாராம்.

சுஜாதா தன் காயத்ரி நாவலில் ஒரு Bell & Howell 8mm power zoom அமெச்சூர் கேமரா பற்றி குறிப்பிட்டிருந்தார்,அதன் மேனுவல் இங்கே தேடி இணைத்திருக்கிறேன்,

நாவல் வெளியாகி, 2 வருடம் கழித்து அதே  Bell & Howell  கேமரா, அதே போன்ற மர்மங்கள் நிரம்பிய பங்களா,அதே போன்ற கூர்க்கா,அதே போன்ற கோட் சூட் ,வளர்ப்பு அக்காவுக்குப் பதிலாக வளர்ப்பு அப்பா என கொஞ்சம் கதை திரைக்கதையை மாற்றி சிகப்பு ரோஜாக்கள் என்ற பெயரில் 1978 ஆம் ஆண்டு வெளியானது,அதற்கு ஏன் வாத்தியாருக்கு க்ரெடிட் தரவில்லை எனத் தெரியவில்லை!!![கொடுத்துட்டாலும்]
Bell & Howell 8mm power zoom

சதுரங்க வேட்டை படத்தில் காட்டப்படாத ஃப்ராடு, மணமகள் தேவை / அமெரிக்க மாப்பிள்ளை / பெரிய பிஸ்னஸ் மேன் கான்ஸெப்டில் ஃப்ராடுத்தனம் செய்து மணமகளைத் தேடி சடுதியில் திருமணம் செய்து முடிந்தவரை பெண்ணையும் பெண் வீட்டாரையும் ஏமாற்றுவது,
அதை நாவலில் முதலில் செதுக்கியது  வாத்தியார் தான். இதே ஃப்ராடை பின்பற்றி எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய 47நாட்களும் முக்கியமான அதிர்ச்சியடைய வைத்த படைப்பு.