காவியத்தலைவன்

காவியத்தலைவன் பற்றி இப்படி ஈவு இரக்கமின்றி விமர்சிக்கிறாரே?!!! என்று சாரு மேல் முதலில் மிகவும் கோபமாக இருந்தேன், நான் காவியத்தலைவன் படம் பார்த்தேன், என்னாலேயே அரை மணி நேரம் கூட படத்தை ஒன்றிப் பார்க்க முடியவில்லை, என் தளத்தில் பிடித்த படம் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்னும் கொள்கை வைத்திருந்தாலும் சில சமயம் அதை மீறவேண்டியுள்ளது.

இருந்தும் நல்லதை உடனே சொல்ல வேண்டும்,கெட்டதை காலம் நேரம் பார்த்து சுட்டிக்காட்ட வேண்டும் என்பதால் படம் தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்ட பின் இங்கே இதை எழுதுகிறேன்.
தயாரிப்பாளரையும் தன்னையும் வசந்தபாலன் ஏமாற்றியிருக்கிறார் என்றால், இயக்குனர் வசந்தபாலனை ஏ.ஆர்.ரஹ்மான்,ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. உதவி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என ஒட்டு மொத்தமாக ஏமாற்றியிருக்கின்றனர். இந்த நவீன யுகத்தில் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் இந்தி டப்பிங் சீரியலான சிந்து பைரவி கூட நல்ல லிப் ஸிங்கிங்கை கொண்டிருக்கிறது.

 ஆனால் காவியத்தலைவனில் லிப்ஸிங்கிங்கில் பெரும் ஊழலே நடைபெற்றிருக்கிறது, அதுவும் அந்த இரு நாயகிகள் தோன்றும் க்ளோஸ் அப்  காட்சிகளை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் .நான் அழகு பற்றியோ நிறம் பற்றியோ அலட்டிக்கொள்ளாதவன். எனக்கே திரைப்படத்தின் நாயகிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அழகும் சாமுத்ரிகா லட்சணமும் இவர்களுக்கு இல்லாதது கண்டு பற்றிக் கொண்டு வருகிறது. 
 வசந்த பாலன் இனி அவருடைய பவ்யம் , பணிவு, தன்னடக்கம் போன்றவற்றை ஏறக்கட்டிவிட்டு  உடனே கற்க வேண்டியது நெறியாள்கை நிர்வாகம், சக தொழிற்நுட்பக் கலைஞர்களிடன் மிகக் கறாராக வேலை வாங்குகிற திறன், நேர்த்தி, மற்றும் காஸ்டிங் அறிவு. இவரின் காஸ்டிங் அறிவு பூச்சியமாகிவிட்டதோ? என்று சந்தேகமே வந்து விட்டது.படத்தின் இரண்டு நாயகிகளுமே eye sore. கண்ணுக்கு நன்றாக ஒரு நாயகியுமே அமையவில்லையா? அல்லது நீரவ்ஷா படத்துக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்க வராமலே போனாரா?!!! எப்படி 2 கமலா காமேஷ்களை இவரால் படத்தில் துணிந்து நாயகிகளாகக் காட்ட முடிந்தது?!!!
 
இவரின் வெயில் படத்தில் உருகுதே மருகுதே பாடலில் வந்த நடிகர் பசுபதிக்கும் பிரியங்கா நாயருக்கும் வரும் காதலும் சரசமும் எத்தனை நம்பும்படியாக இருக்கும்? அங்கே பரத்துக்கும் பாவனாவுக்கும் வரும் காதல் , அந்த ஜோடிப்பொருத்தம் எத்தனை நிஜமாக இருக்கும்? அங்காடி தெருவில் அஞ்சலிக்கும் மகேஷுக்கும் அமைந்த பொருத்தம் எப்படியிருக்கும்?!!! அந்த  வசந்த பாலன் என்ன ஆனார்? என்னும் கோபத்தில் தான் இப்படி எழுத வேண்டியிருக்கிறது, இதே படத்தை ஆல் இன் ஆல் அழகுராஜா புகழ் ராஜேஷ் எடுத்திருந்தால் யாரும் எதுவும் கேட்டிருக்கப்போவதில்லை, இது வசந்தபாலன் என்பதால் தான் கேட்கிறோம்.
தமிழ் சினிமாவில் முக்கியமான முயற்சிகள் தேவை தான் ஆனால் அவை சிரத்தையுடன் இருக்க வேண்டும். கமலின் ஹேராம், சேரனின் பொக்கிஷம்  கடந்த காலத்தை தமிழ் சினிமாவில் மிக அழகாக தத்ரூபமாகச் சொன்ன படம். படைப்பாக்கத்தில் ஒரு குறையுமே இல்லாத படங்கள் அவை. அவை வணிகரீதியாக தோல்வியடைந்திருந்தாலும், அது தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சிக்காக என்றும் பேசப்படும்.

 ஆனால் காவியத் தலைவன்?!!!. ஏதோ இருவர் படத்தை 2014க்கு ரீமேக் செய்தது போலத்தான் அதன் ஆக்கம் இருந்தது.அதைப் போயா இன்ஸ்பிரேஷனுக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்?!!! இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் எதற்கு? மிஸ்கின் போல நல்ல புதிய இசையமைப்பாளரை பிடித்திருந்தால் நீங்கள் முழுச் சுதந்திரத்துடன் இயங்கி வேலை வாங்கியிருக்க முடியுமே?!!! நாங்கள் படம் பார்த்தது  ஏ.ஆர்.ரகுமான் இசைக்காக அல்லவே அல்ல, வசந்தபாலனின் தீஸிஸ் மிகுந்த மேக்கிங்கிற்காக.
 மேலும் தம்பி ராமையா + சிங்கம்  புலி நகைச்சுவை என்ற பெயரால் செய்யும் சேஷ்டைகளை பீரியட் படம் என்றதால் அனுமதித்தீர்களா?!!! இதெல்லாம் அடுக்குமா? ஒரு பீரியட் படம் எப்படி ரிச்சாக எடுக்க வேண்டும்,ஒரு நாயக,நாயகியை எத்தனை அழகாக பார்வையாளர் ரசிக்கும் படி காட்ட வேண்டும் என்பதற்கு உதாரணமாக எத்தனை படங்கள் உண்டு?,இந்திய சினிமாவில்?!!! பீரியட் படம் என்பதால் இந்த சோக்கர் பாலி, ஹரிஸ்சந்த்ராஸ்சி ஃபேக்டரி [2009] இதன் நகைச்சுவை சப் டைட்டில் இன்றியே புரிபவை,அது மராத்தியில் உருவான முதல் சினிமா பற்றி மிக அழகாகச் சொன்ன படம், ரிச்நெஸ்காக தேவ்தாஸ்[2002] ரெய்ன்கோட் போன்ற படங்களையும் இங்கே  குறிப்பிடுகிறேன்,
 மின்சாரமில்லாத காலங்களின் நிஜமான ஒளிப்பதிவை தத்ரூபமாகக் கொண்டு சமகாலத்தில் எத்தனையோ உயர்ந்த படைப்புகள் வந்துள்ளன, வசந்தபாலன் காவியத்தலைவனில் மிகுந்த சிரத்தையாக இருந்திருக்கலாம், 

இதே நடிகர் நாசரை இயக்குனர்[நடிகை] நந்திதா தாஸ் தன் ஃபிராக்[Firaaq] [2008] படத்தில் ஐந்தேநிமிடம் வந்தாலும் எப்படி பயன்படுத்தியிருப்பார்?
நஸ்ரூதீன் ஷாவுக்கு ஈடான நடிகர் நாசர், அவருக்கு போட்ட மேக்கப்பில் எத்தனை போலித்தனம்?!!! சாரு சொன்னது போல அவரின் சிகையை ஒட்டப் பயன்படுத்திய பிஸின் கூட வெளியே தெரிகிறது. அது மிகைப்படுத்திச் சொன்னது என நினைத்தேன்,அது அராஜகமில்லையா?!!! உதவி இயக்குனர்கள் அதை சரிபார்த்திருக்க வேண்டும் தானே?நடிகர் சித்தார்த்தை தீபாமேத்தா தன் மிட்நைட்ஸ் சில்ட்ரனில் எப்படி வேலை வாங்கியிருப்பார்?!!!
உழைத்தோம்,ஆனால் பலன் கிடைக்கவில்லை,என்று புலம்பி என்ன பயன்?இது என்ன குறுகிய கால ப்ராஜக்டா?2 வருடங்கள் எடுத்துக் கொண்ட படம் தானே? அற்பணிப்பில்லாத உழைப்பை போட்டு விட்டு அது எல்லோரின் பாராட்டையும் பெற வேண்டும் என எதிர்பார்த்தால் அது பேராசை தானே?
இப்படத்தை காசு கொடுத்தோ கொடுக்காமலோ பார்த்த யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும். இன்னும் இது குறித்து எழுத நிறைய உள்ளது,நேரம் வாய்க்கையில் நிச்சயம் எழுதுவேன்.