தண்ணீர் தண்ணீர் [1981] பெருமைமிகு தமிழ் திரையுலகின் உலக சினிமா


1981 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான தண்ணீர் தண்ணீர் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பு, படத்தின் ஆக்கத்துக்கு உறுதுணையாக இருந்த கோவில்பட்டி முக்கிய பிரமுகர்களுக்கும், மஞ்சநாயக்கர் பட்டி, எத்திலப்ப நாயக்கர் பட்டி கிராம மக்களுக்கும், ஆளும் கட்சி எதிர்கட்சி கூட்டணி கட்சி என்று பேதம் இன்றி உதவிய கட்சி அன்பர்கள் அனைவருக்கும் இயக்குனர் டைட்டில் கார்டில் நன்றி சொன்னதைப் பாருங்கள்,இன்று நடக்குமா இந்த அதிசயம்.

இப்படத்தில் உபயோகப்படுத்திய ஊர்களின் பெயர் கற்பனைப் பெயரல்ல,ஒரு சட்டமன்றத் தேர்தலையே புறக்கணிக்கும் கிராமத்தின் பெயர் மஞ்சநாயக்கர் பட்டி என்றே உச்சரிப்பார்கள்.

 எத்தனை நெஞ்சுரம் மிக்க படைப்பு இது?!!!,தொழிற்நுட்பமும் சமூக வலைத்தள ஊடகங்களும் கோலோச்சும் இன்றைய சூழலில் கூட மத்திய மாநில அரசுகளை துணிச்சலாக விமர்சிக்கும் இது போன்றதோர் படத்தை எடுத்து வெளியிடுவது என்பது முடியாத செயல்,

ஆனால் அன்றைய 80 களிலேயே சாதித்துக் காட்டினார் இயக்குனர் கே.பாலச்சந்தர்.அது தான் அவர் முகராசி, கைராசி என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.. அதே 1981 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 9 திரைப்படங்கள் இயக்கி வெளியிட்டுள்ளார்,

அவை பின்வருமாறு

1ஆடவல்லு மீகு ஜோஹர்லு[1981]Aadavallu Meeku Joharlu [தெலுங்கு]
2 எங்க ஊர் கண்ணகி [1981]
3 தொலிக்கொடி கூசிண்டி[1981][Tholikodi Koosindi ][தெலுங்கு]
4 தண்ணீர் தண்ணீர்[1981]
5. 47 நாட்கள்[1981]
6. 47 ரோஜுலு[1981][47 நாட்கள் தெலுங்கு வடிவம்]
7.ஆகலி ராஜ்யம்[1981] வறுமையின் நிறம் சிவப்பு தெலுங்கு வடிவம்
8.தில்லு முல்லு[1981]
9.ஏக் துஜே கேலியே[1981]

கே.பாலச்சந்தர் இப்படத்துக்காக சிறந்த திரைப்படத்துக்கான தேசியவிருதும்,சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருதும்  பெற்றார்.

தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் கவிஞர் கண்ணதாசன் என்று குறிப்பிட்டு விட்டு அவர் பெயருக்கு கீழே கவிப்பேரரசுவுக்கு எந்த பட்டமும் தராமல் வைரமுத்து என்றே குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். :)))

வைகுண்டராஜன் உள்ளிட்ட நிறைய மலை முழங்கி மகாதேவன்கள் நம் சமூகத்தில் உண்டு, அதை தட்டிக்கேட்கும் சகாயம் போன்ற ஆட்சித்துறை அலுவலர்கள்,ட்ராபிக் ராமசாமி போன்ற சமூக ஆரவலர்கள்,உண்டு கண் எதிரே வன்புணர்ந்து பள்ளமாக போடப்பட்ட பாறை நிலம் உண்டு,எந்த முதுகெலும்பு கொண்ட இயக்குனராவது சமகாலத்தின் முக்கிய பிரச்சனையான இதை படமாக எடுக்க முன்வருவாரா?எடுத்துக் காட்டி சாதிப்பாரா?!!!

இப்போதைய அரசியல் சூழலில் இது போல படைப்புகள் வரும் என்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சமும் இல்லை,அன்றைய தலையாய பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை துணிந்து பேசிய  முக்கியமான படம் இது , இது போன்ற படங்களைப் பார்த்து ஆற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியுமில்லை

சிட்டிசன் என்றொரு படம் வந்தது அதிலும் அத்திப்பட்டி என்று அந்த ஊருக்குப் பெயர் வைத்து தண்ணீர் தண்ணீரில் வரும் அத்திப்பட்டிக்கு ட்ரிப்யூட் செய்திருப்பார்,சிட்டிசன் பட இயக்குனர் ச.சுப்பையா.

அத்திப்பட்டி பள்ளி  வாத்தியாரான கோமல் ஸ்வாமிநாதன் ஒரு பத்திரிக்கையாளருக்கு பேட்டியளிக்கையில் அரசு எந்திரத்தின் செயல்பாடு பற்றி  ஒரு ஸர்காஸ்டிக் வசனம் பேசும் நீண்ட காட்சியை இங்கே பாருங்கள். 

http://www.youtube.com/watch?v=BjENolc39pk&spfreload=10

 
பாடலாசிரிய வைரமுத்து எழுதிய இந்த நாட்டுப்புறச் சிந்து பாடலை பாருங்கள்,அதில் இடையே வரும் இன்றைய இரட்டைக்குவளை முறை அவலத்துக்கும் பொருந்தும் யதார்த்தமான வசன வரிகளை உற்று கவனியுங்கள்.
http://www.youtube.com/watch?v=NLBrluuwU2Q



மா(வா)னத்திலே மீன் இருக்க
மதுரையிலே நீ இருக்க
சேலத்திலே நான் இருக்க
சேருவது எக் காலம்?

அத்து வானக் காட்டுக்கள்ளே
ஆயக் குழல் ஊதையிலே
சாடை சொல்லி ஊதினாலும்
சாடையிலே நான் வருவேன்
சேரிப் பொண்ணு:- என் பாட்டு ஒங்க காதைத் தீண்டிருச்சே? தப்பில்ல?
நாயக்கர் சாதி இளைஞன்:- காதை வுடு புள்ள; மனசையும்-ல்ல தீண்டிருச்சி?

நாயக்கர் சாதி இளைஞன்:-ஏய் புள்ள, மீதித் தூரத்துக்குச் சொமையை எப்புடித் தூக்குவேன்?
சேரிப் பொண்ணு:- உம்ம்..எம் பாட்டு ஒம்ம கூடவே வரும்..போங்க..
 ===000===
இப்படம் பற்றி எத்தனை கட்டுரை எழுதினாலும் போதாது,எனவே இன்னும் வரும். 

இப்படம் பற்றி கே.பாலசந்தர் மாலைமலருக்கு அளித்த முக்கியமான பேட்டி இங்கே.

அப்போது (1981) தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருந்தது. அதை மையமாக வைத்து கோமல்சுவாமி நாதன் கதை- வசனம் எழுதி, நாடகமாக நடத்தியதுதான் 'தண்ணீர் தண்ணீர்.' அதற்கு திரைக்கதை எழுதி, டைரக்ட் செய்தேன். படத்தின் கதாநாயகி சரிதா. பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்தனர்.

அப்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார். தண்ணீர் பிரச்சினை என்பதால், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும், வசனங்களும் அரசாங்கத்தை தாக்குவது போல் இருப்பதாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கருதினார்கள்.

'படம் வெற்றிகரமாக ஓடியது. படத்தில் அரசை தாறுமாறாக தாக்கி இருப்பதாக, எம்.ஜி.ஆருக்கு தகவல் போயிற்று. 'இந்தப் படத்துக்கு சென்சாரில் எப்படி அனுமதி கொடுத்தார்கள்?' என்று எம்.ஜி.ஆர். கூறியதாக எனக்கு தெரியவந்தது. 'படத்தின் முடிவில், எல்லோரும் துப்பாக்கி எடுத்துக்கொண்டு வன்முறை பக்கம் திரும்புவதாக காட்டப்பட்டிருக்கிறது' என்று பலர் குற்றம் சாட்டினார்கள்.

ஒரு புரட்சிக்காரன் எப்படி உருவாக்கப்படுகிறான் என்பதை காட்டுவதற்காக எடுக்கப்பட்ட காட்சி அது. எல்லோரும் தீவிரவாதியாக மாறவேண்டும் என்று சொன்ன காட்சி அல்ல. அரசு பற்றிய விமர்சனங்களும் அதில் நாசூக்காக இருக்கும்.

படத்தைப்பற்றி வாதப்பிரதி வாதங்கள் நடந்தன. 'துப்பாக்கி தூக்கச் சொல்கிறார், பாலசந்தர்' என்று முணுமுணுக்கப்பட்டதாலும், தணிக்கைக் குழுவுக்கு அரசு சென்றதாலும், அந்தக் கடைசி காட்சியில் சில மாறுதல்கள் செய்தேன். அந்த ஆண்டு விருதுக்காக, மத்திய மாநில அரசுகளுக்கு 'தண்ணீர் தண்ணீர்' அனுப்பப்பட்டது.

மாநில அரசின் விருது கிடைக்கவில்லை. ஆனால், சிறந்த மாநில மொழிப்படம் என்றும், தேசிய அளவிலான சிறந்த திரைக்கதை என்றும் இரண்டு பரிசுகளை மத்திய அரசு வழங்கியது. 'தண்ணீர் தண்ணீர்' படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருதும் (சரிதாவுக்கு) வழங்க மாநில தேர்வுக்குழு முடிவு செய்திருப்பதாக, ஆரம்பத்தில் எனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்தன. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானபோது, எந்த பரிசும் கிடைக்கவில்லை.

ஆனால், 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்துக்கு மாநில அரசின் விருது கிடைத்தது. பரிசளிப்பு விழா எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது.

விருது வழங்கும் விழாவில், எம்.ஜி.ஆர். முன்னிலையில் நான் பேசியது, இன்றும் நினைவில் இருக்கிறது. 'என் மீது அரசுக்கு கோபம் இருக்கலாம். தண்ணீர் தண்ணீர் படத்தால் ஏற்பட்ட அந்தக் கோபத்தின் காரணமாக, இந்தப் படத்துக்கும் விருது தரப்படமாட்டாது என்று எண்ணினேன். அதற்கு மாறாக, எம்.ஜி.ஆர். கையால் இப்போது விருது வாங்கி இருக்கிறேன். இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டேன்.

எம்.ஜி.ஆர். பேசும்போது, என் பேச்சுக்கு பதிலளித்தார். 'அந்தந்த நேரத்தில் எது நல்ல படம் என்று எண்ணுகிறோமோ, அதைத்தான் தேர்வு செய்வோமே தவிர, ஏதோ ஒரு காரணத்துக்காக பழி வாங்கும் எண்ணமோ, திறமையானவர்களை ஒதுக்கி வைத்து விடும் எண்ணமோ கிடையாது' என்று குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆரின் 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம்தான் திரை உலகுக்கு வந்தேன். 'எம்.ஜி.ஆர். படத்துக்கு பாலசந்தர் வசனம் எழுதுகிறார்' என்ற மதிப்பும், மரியாதையும் திரை உலகில் எனக்கு ஏற்பட காரணமாக இருந்தவர் அவர். தனது அரசாங்கத்தை விமர்சித்து படம் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் என்னை வாழ்த்தியது கண்டு நெகிழ்ந்து போனேன்.'

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.