தப்புத் தாளங்கள் [1978] இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகங்கள்-பாகம்-2




தப்புத்தாளங்கள் 1978 என்னும் தலைப்பிலேயெ  என்ன ஒரு கவிதை பாருங்கள்?. சிறு சிறு குற்றவேல் புரிந்து உய்க்கும் சில விளிம்பு நிலை மாந்தர்கள்  கால ஓட்டத்தில் அவர்கள் திருந்தி வாழ  நினைத்தாலும் அவர்களை திருந்த விடாத இச்சமூகம்.இது தான் இயக்குனர் கே.பாலச்சந்தரின் தப்புத்தாளங்களாக ஒலித்தது.

நவீன இலக்கியம் மற்றும் சினிமாவில் பெண் தரகன் கதாபாத்திரத்தை தத்ரூபமாக நிறுவிய படைப்புகள் நிறைய உண்டு, அதில் இந்த தப்புத் தாளங்கள் திரைப்படத்தின் பெண் தரகன் [பிம்ப்]  வீரமணி கதாபாத்திரம் முக்கியமானது, இந்த கதாபாத்திரத்தில் சாந்தாராம் என்பவரை இயக்குனர் தமிழ் கன்னடம் இரண்டு மொழிகளிலும் அறிமுகம் செய்தார்.

இவரது மனைவி கதாபாத்திரத்தில் இந்திராணி என்னும் நடிகையையும்,இவரது மகள் கதாபாத்திரத்தில் ராஷ்மி என்னும் நடிகையையும் தமிழ் கன்னடம் இரண்டு மொழிகளிலும் அறிமுகம் செய்தார்.
சாந்தாராம் மற்றும் இவர்கள் அதன் பின்னர் சினிமாவில் என்ன கதாபாத்திரம் செய்தார்கள்? என்ன ஆனார்கள் ?என்ற விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.சாந்தாராமை கொஞ்சம் அரைக் கண்னால் பார்த்தால் எனக்கு சுப்ரமண்யபுரம் சசிக்குமார் போல தோன்றுகிறது.

பெண் தரகர் வீரமணியிடம் சரசு [சரிதா]  உள்ளிட்ட விலைமாதர்கள் நிரம்ப பேர் உண்டு. சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் தனியே இறங்கும் பசை கொண்ட வெளியூர் ஆட்களை இந்த வீரமணி போன்ற பிம்ப்கள் அன்றும் இன்றும் வட்டமிட்டு,தங்குவதற்கு ஹோட்டல் அறை முதல் சுகிக்க பெண்கள் வரை சகலமும் தருவித்துத் தருவர்.
Add caption

சென்னையில் சைக்கிள் ரிக்‌ஷாகாரர்களும் இதை தொன்று தொட்டு செய்து வந்ததாக கவிஞர் கண்ணதாசன் தன் வனவாசம் நூலில் பதிவு செய்திருக்கிறார்.[அதில் நல்ல நியாயஸ்தர்களும் உண்டு,வழிப்பறி ஏமாற்றுக்காரர்களும் உண்டு] இந்த வீரமணி நியாயஸ்தர்.

இவர் நகர வீதியில் நின்று தனக்கு வந்த கமிஷனை எண்ணிப் பார்க்கையில் கேமரா அங்கே உயரே சென்று வருமான வரித்துறையினர் வைத்த “ HAVE YOU PAID YOUR INCOME TAX"என்னும் பகாசுர விளம்பரத்தை சர்காஸிசமாக கிண்டலடிப்பதைப் பாருங்கள்.இது போன்ற நயமான நகை முரண் கேலிகள் படத்தில் நிரம்ப உண்டு.
வீரமணி தன் கல்லூரியில் படிக்கும் மகளுக்குத் தெரியாமல் இந்த தரகர் தொழிலை மனைவியின் புரிதலுடன் செய்து வருகிறார், வாடிக்கையாளரை ரிக்‌ஷாவில் ஏற்றி இவர் சைக்கிளில் முன்னே சென்று இடம் சுட்டி ரேட் பேசி,தன் கமிஷன் வாங்கிக் கொண்டு கிளம்பிவிடுவார். இவர் கூட்டி விடும் பெண்கள் அடிக்கடி உடல்பரிசோதனைகள் செய்து கொண்டு,சுத்தமாகவும் இருப்பர்.என்பதால் இவருக்கு தொழிலில் நல்ல பெயர்.

இவர் கொஞ்சம் பணமும் நகையும் சேர்த்து மகள் கல்லூரி முடித்ததும்   நல்ல கௌரவமான இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டால் ,இத் தொழிலை விட்டு விடலாம் என்பது தான்  எண்ணமாக இருக்கிறது,இப்படித்தான் மனைவியை சப்பைக்கட்டு கட்டி சமாதானம் செய்து  வருகிறார்.

இந்தத் தொழிலிலும் சமீப காலமாக நிறைய போட்டி உள்ளதால்,வீரமணிக்கு மிகவும் நாய்படாத பாடாக இருக்கிறது,அதில் வேறு இவரின் அருமையான தொழில்காரியான சரசு [சரிதா] தேவுவை[ரஜினி] திருமணம் செய்து கொண்டதோடல்லாமல் தொழிலுக்கும்   முழுக்கு போட்டு விட்டாள்.

அதனால் இவர் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஹைக்ளாஸ் ஏரியாவுக்கு தன் ஜாகையை மாற்றிக்கொண்டும் விட்டார்,இப்போது இவர் ஸ்கூட்டரில்  சென்று கூட்டித் தரும் கார்பொரேட் பிம்ப்,

இவர் ஒன்று நினைத்தால் விதி வேரொரு வலை பின்னுகிறது, இவரது மகள் பாக்கெட் மனிக்கு  வேண்டி வேறொரு தரகன் வசம் சிக்கி இத்தொழிலுக்கே வருகிறார்,கல்லூரி முடிந்ததும் வாடிக்கையாளரை கவனித்து விட்டு வீட்டுக்கு எப்போதுமே தாமதமாக  வருகிறாள்.
ஒருநாள் 9 மணி ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசர வாடிக்கையாளர் ஒருவருகு சுகிக்க கொண்டு விட தன் கம்பெனி ஆட்கள்  கிடைக்காததால், வேறொரு சப் பிம்பை அணுகிக் கேட்க,அவர் இவரது மகளையே இவர் சொன்ன ஹோட்டல் அறைக்கு கூட்டி வருகிறார்.இருவருக்கும் பேரதிர்ச்சி.

மறுநாள் மூவர் பிணமும் ஏரிக்கரையில் ஒதுங்குகிறது.

அங்கே வந்த இவரின் சக தொழில் முறைப் போட்டியாளர், சவ காரியங்கள் முடிந்தவுடன் இரவு வீடு வந்து குளித்தபடியே மனைவியிடம் சொல்லுவார்,

வீரமணி அவமானத்துக்காக சாகவில்லை,அவன் தன் மகளிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தான்,அது பொய்த்ததால் மூவரும் உயிர் விட்டனர்,என்று நிறுத்தியவர்,

கெட்டதிலும் ஒரு நல்லதாக,இப்போ பார் அவனுடைய வாடிக்கையாளர், கிராக்கிகள் எல்லாம் இப்போது நம்ம கையில்,ஒரு போட்டி குறைந்தது அல்லவா?!!!இது தானே நம் தொழிலில் சம்பள உயர்வு  என்று ஆசுவாசப்பட,
அங்கே இவனுடைய கல்லூரி விட்டு வந்த மகள் அப்பா நீங்க என்ன தொழில் செய்யறீங்க ? என்று ஆர்வமாகக் கேட்கிறாள்.இவர்கள் திகைப்பர்,

அப்போது ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மகளை நடுவில் வைத்து ஃபோகஸ் செய்து தாய் தந்தையை இடம் வலமாக வைத்து அவுட் ஆஃப் ஃபோகஸ் செய்தும்,பின்னர் அதை வைஸ் வெர்சாவாக மாற்றியும் அக்காட்சியை முடித்து வைப்பார்.
2011ல் மறைந்த ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத்
லோகு என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட காலஞ்சென்ற ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் அவர்களின் பரீட்சார்த்தமான முயற்சிகள்  தப்புத் தாளங்கள் திரைப் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ஒன்ஸ்மோர் பார்க்க வைக்கும்.

அத்தனை அழகியல் ததும்பும் ஃப்ரேம்கள்,கம்போசிஷன்கள் அவை.

அவர் இயக்குனர் பாலச்சந்தருடன் தமிழ்,தெலுங்கு கன்னடம் இந்தி என சுமார் 60 படங்கள் பணிபுரிந்திருக்கிறார்.தான் பணிபுரிந்த ஒவ்வொரு படத்துக்கும் கல்ட் அந்தஸ்தை தன் தன்னிகரற்ற ஒளிப்பதிவின் மூலம் தந்து சென்றிருக்கிறார் இந்த ஒளிபதிவு மேதை.

அவர் பற்றி கமல்ஹாசன் ஒளிப்பதிவை தனக்கு கற்றுத் தந்த குரு என்று   உயர்வாக சொல்லியிருக்கிறார்,இவரின் மாணவரான ரகுநாத ரெட்டியும் கே.பாலச்சந்தர் அவர்களின் ஃப்ரீக்வெண்ட் கொலாபரேட்டர் ஆவார். ஒரு முரண் நகை என்னவென்றால் எத்தனையோ பேரை தன் லென்ஸ் வழியாக கடத்தி  நமக்கு  உணர்ச்சி மிகுந்த கதாபாத்திரங்களாக காட்டிய இவருக்கு கேமராவுடன் இருக்கும் working still எங்கும் இல்லை என்பது தான் அது. அவரின் முதுமைக்காலத்தின் படம் தான் கிடைத்தது அதை இங்கே பதிவிட்டிருக்கிறேன்.