தப்புத்தாளங்கள் [1978]படத்தின் அறிமுகங்கள் தொடர்ச்சி 3

புதுவாழ்வுக்கு தயாராகும் தேவு மற்றும் சரசு

தப்புத்தாளங்கள் படத்தில் தரமான சிறுகதை போல ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவர்கள் தொடர்பான காட்சிகளும் இருக்கும்,அனந்து அவர்களின் கைவண்ணம் இயக்குனர் பாலசந்தருடன் இணைந்து இப்படத்திலும் நுணுக்கமாக வெளிப்பட்டிருக்கும்.

இதில் தேவு [ரஜினி]  விலைமங்கை சரசுவை [சரிதா] திருமணம் செய்த பின்னர் அடிதடி தொழிலை விட்டு விடுவார், எழுத்தறிவும் , படிப்பறிவில்லாததால் கௌரவமான எடுபிடி வேலை தேடுவார், சரசுவும் தன் தொழிலுக்கு முழுக்கு போட்டு விடுவார். ரஜினியின் குழந்தையை வயிற்றில் சுமப்பார்.

இந்நிலையில் ரஜினி முன்பு காசுக்காக மரண அடி அடித்த தொழிற்சங்கத் தலைவரிடமே சென்று தன்நிலையைச் சொல்லி வேலை கேட்பார்,அவர் இவரின்  நிலையை  நன்கு புரிந்து கொண்டவர்,தனக்கு தெரிந்த நிறுவனத்தில் ஸ்டோர் ரூம் அட்டெண்டர் வேலை இருப்பதாகவும்,அதற்கு பணம் 2000 ரூபாய் டெப்பாசிட் கட்டவேண்டும் என்றும் சொல்வார்.

சரசு பணத்துக்காக யார் யாரிடமோ கேட்பார்,எங்கும் தகையாது,தன் சக தொழில் செய்து இப்போது தன் இயக்குனர்-காதலரை வைத்து சினிமா எடுக்கும் ஒரு பெண்ணைச் சென்று சந்தித்து பணம் கேட்பார்,
சரிதா மற்றும் சுதா சிந்தூர்

அவர் சினிமாத் தொழில் ஒரு நாய் படாத பாடு,வேசியாக இருக்கையில் சிரித்தால் மட்டும் போதும் பணம் கொட்டும் ,இங்கே சிரிக்கவும் வேண்டியிருக்கிறது பணமும் கொட்டி அழுதாலும் வேலை நடக்க மாட்டேன் என்கிறது என்று அலுத்துக் கொள்வார்.

என் பணம் அனைத்தையுமே இப்படத்தில் முடக்கிவிட்டேன்,அதனால் பணம் தர இயலாது,ஆனால் அவரிடம் சொல்லி சரசுவுக்கு வேஷம் வாங்கித்தர முடியும், அதில் 50 100 கிடைக்கும் என்கிறாள். சரசு மறுத்து விட்டு கிளம்ப எத்தனிக்க.

வந்தது தான்  வந்தாய் ,எங்கள் படத்தின் போட்டோ ஆல்பத்தை பார்த்துவிட்டுப் போ என்கிறாள்,சரசு நான் தியேட்டரிலேயே பார்த்துக் கொள்கிறேன் என எழுந்திருக்க,

இவள் அவளை அழுத்தி அமரவைத்து விட்டு இல்லை இந்தப் படம் தியேட்டருக்கு வராது!!! என்று அர்த்தத்துடன் அவளை ஊடுறுவிப்  பார்த்து விட்டு காட்சியை முடித்து வைப்பாள்.

ஆயிரம் கதை சொல்லும் கதாபாத்திரம் அது ,அக்கதாபாத்திரம் செய்த நடிகை சுதா ஸிந்தூர் என்பவரையும் கே.பாலசந்தர் தமிழ்,கன்னடம் என இப்படம் மூலம் அறிமுகம் செய்தார்.

அதன் பின்னர் இவர் என்ன படம் செய்தார் என்ன ஆனார் என்று ஒரு விபரமும் தெரியவில்லை.

இயக்குனர் கே.பாலசந்தர் தன் படைப்புகளில் சினிமாவில் தோற்றவர்கள் ,சோரம் போனவர்கள் கதையை வாய்ப்பு கிடைக்கையில் நிறைய பதிவு செய்திருக்கிறார்,நூல்வேலி படத்திலும் இதே போல சினிமாவில் தோற்றுபோன ஒரு முன்னாள் நடிகை இனிஷியல் இல்லாத தன் பதின்ம வயது மகளுடன் [சரிதா] தனியே வசித்து இன்னலுறுவதை காட்டியிருப்பார்.

கன்னடத்தின்  பிரபல நாடக நடிகரும், ஆசிரியரும்,இயக்குனருமான B.V.Karanth [http://en.wikipedia.org/wiki/B._V._Karanth]  அவர்களின் குழுவில் நடித்து வந்த  நல்ல திறமையான கன்னட நாடக நடிகர்களை இப்படத்தின் மூலம் அறிமுகம் செய்திருந்தார் இயக்குனர்.அதில் சுந்தர் ராஜ்,பிரமிளா ஜோஷாய் போன்றவர்கள் மட்டும் வெற்றி பெற முடிந்தது,ஏனையோர் சினிமாவில் கால ஓட்டத்தில் காணாமல் போயினர்.