நடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி இயக்குனர் கே.பாலசந்தரின் முக்கியமான குணச்சித்திர நடிகர்



காலஞ்சென்ற நடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வைரம் நாடகசபாவில் தன் நாடக வாழ்க்கையைத் துவங்கியதால் வைரம் கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்பட்டார்,இவர் குலதெய்வம் ராஜகோபால், உள்ளிட்டோர் சேர்ந்து நடத்திய கலைமணி நாடக சபாவில்  மனோரமா தான் கதாநாயகி.1960களில் வீரபாண்டிய கட்டபொம்மன்,சபாஷ் மாப்பிளே உள்ளிட்ட  நிறைய படங்களில் குணச்சித்திரம் வேடங்கள் செய்திருந்தாலும்.இவரை இயக்குனர் மீள் அறிமுகம் செய்த திரைப்படங்களில் வந்த கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவை.அதில் மூன்றை இங்கே குறிப்பிடுகிறேன்,வேறு சிலவற்றை தேடி தொகுத்து எழுதுகிறேன்.


அச்சமில்லை அச்சமில்லை [1984]படத்தில் இவர் பெயர் உமையோர் பாகம்,சரிதாவின் தந்தை,இவருக்கு சுதந்திரத்துக்கு முன்னர் போன கண் பார்வை 1980 களில் தான் இவரின் எம் எல் ஏ மருமகன் ராஜேஷ் செய்த மருத்துவ உதவியால் திரும்பக் கிடைக்கும்,இவரது நண்பர் கோமல் ஸ்வாமிநாதன் இவரிடம் பேசும் வசனங்கள் மிக முக்கியமானவை.கண் பார்வை கிடைத்த உடன் இவர் பார்க்கும் சுதந்திர இந்தியாவில் எச்சில் இலைக்கு மக்கள் அடித்துக் கொள்வர்,அதைக்கண்டு இவர் இதற்கு கண் பார்வையின்றியே போயிருக்கலாமே என வருந்துவார்.

மகளால் கொலை செய்யப்பட்ட மருமகன் ராஜேஷின் போஸ்டரின் மேல் அடித்த சாணியை கோமல் ஸ்வாமிநாதன் கழுவிவிட்டு இவருக்கு அவரின் முகத்தை அறிமுகம் செய்யும் காட்சியில் ரத்தக்கண்ணீர் விடுவார்.

சிந்து பைரவி [1985] படத்தில் இவர் பென்ஷன் தாத்தா,மருமகன் ஜேகேபி இவர் பென்ஷன் வாங்க வெளியே கிளம்புவதைப் பார்த்து அன்று 1ஆம் தேதி என உறுதி செய்வார்.பின்னொரு சமயம் இவரின் சொத்தான தகரப்பெட்டியை உடைத்து அழிவின் விளிம்பிலிருக்கும் ஜேகேபி குடிக்க பணம் திருடிவிடுவார்,குடித்து விட்டு வந்தால் வீட்டின் வாசலில் செருப்புகளாக இருக்கும்,மனிதர்களாக இருப்பர்,தாத்தா இறந்து விட்டிருப்பார்.மிக அற்புதமான கதாபாத்திரம் அது.

உன்னால் முடியும் தம்பி[1988] படத்தில் இவர் சமையல்காரரான ரங்கூன் தாத்தா,சமையல் முடிந்த உடன் ஓய்வு வேளைகளில் அனு தினமும் இரு மரக்கன்றுகளையேனும் ஊருக்குள் கரட்டிலும் முரட்டிலும் சென்று நட்டு வைத்துவிட்டு திரும்புவதை வழக்கமாக வைத்திருப்பார்,இல்லாவிடில் தூக்கம் வராது,அவர் வளர்த்த மரக்கன்றுகள் பெரிய மரமாகி பூத்துக் குலுங்குவதைப் பார்த்து ஆனந்தப்படுவார்.

படத்தில் கமல்ஹாசனுக்கு 2 முறை மூன்றாம் மனிதர் வாயிலாக தன்னலம் களைய சமூக சிந்தனை போதிக்கப்படும்.ஒன்று அக்கம்பக்கம் பாரடா சின்னராசா பாடலுக்கு முன்னே படித்துறையில் , அங்கே இவரிடம் ஒரு தலையாரி இவரை நிறுத்துவார்,


சிறுவன் கமல் அங்கே படித்துறையில் பார்வையில்லாத மூதாட்டிக்கு உதவாமல் தன்னலத்துடன் காக்க காக்க கனகவேல் காக்க என்று மந்திரம் உச்சரிப்பதை மெல்லிய கேலியுடன் சுட்டிக்காட்டி.கடவுள் மனிதனுக்கு இரு கைகள் கொடுத்தது ஒன்று நமக்கு,மற்றொன்று இயலாதோருக்கு உதவத்தான் என்பார்.அற்புதமான காட்சியாக்கம் அது.

அதே போல ரங்கூன் தாத்தா மரக்கன்றுகளுடன் வெளியே கிளம்புவதை கேலி செய்யும் சக வேலைக்காரனுக்கு சொல்லும் பதிலை கமல் பால்கனியிலிருந்து கேட்டு சமூக  மாற்றம் கொண்டுவரும் உத்வேகம் பெறுவார்.அதுவும் அற்புதமான காட்சியாக்கம் 

இயக்குனர் கே.பாலசந்தர் இவருக்கு கொடுத்த கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா வரலாற்றில்  மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.