புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு அழகன் திரைப்படத்தில் கே.பாலசந்தர் செய்த மரியாதை

அழகன் [1991] திரைப் படத்தில் நடிகர்  மம்மூட்டி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு கவிதைத் தொகுப்பில் இருந்து குடும்ப விளக்கு என்னும் அத்தியாயத்தில் வரும் இந்த கவிதை வரிகளை அவர் படிக்கும் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியர் கீதா முன்பாக சரளமாக பேசுவார்.

அது மிகவும் அருமையான காட்சி, இயக்குனர் கே.பாலசந்தர் கலை,மற்றும் இலக்கியத்தில் தான் சிலாகித்தவற்றை அழகாக  தன் படைப்புகளுக்குள்ளாக வைத்து மரியாதை செய்யும் கலை கைநிரம்பப் பெற்றவர். பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த ட்ரிப்யூட்டை வைத்தார். அவரின் கவிதைகளை ஆங்கிலக் கவிஞர் கீட்ஸின் [John Keats] கவிதைகளுக்கு நிகரானது என்னும் வசனமும் வைத்தார். http://en.wikipedia.org/wiki/John_Keats

இக்காட்சியில் மலையாள நடிகரான மம்மூட்டிக்கு அப்படி அழகாக லிப் சிங்க் ஒத்து வந்திருக்கும்.அவருக்கு படத்தில் பல காட்சிகளில் டைட் க்ளோஸப்பும் ”அனாயசமான” போன்ற கடினமான வசன உச்சரிப்புகளும் வசனமாகத் தரப்பட்டிருக்கும்,அதை மிக அழகாக பேசி ஸ்கோர் செய்திருப்பார் மம்மூக்கா.

படத்தில் அவர் பேசும் அந்த கவிதை வரிகள்  இங்கே

உவப்பின் நடுவிலே,"ஓர்
கசப்பான சேதியுண்டு கேட்பீர்"

"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த

மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;
அதுபோலத் தானேடி! அதனாலென்ன?
அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்;
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.

"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
எப்போது தமிழினுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;
அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"
 
கே.பாலசந்தரின் அழகன் [1991] திரைப்படத்துக்கு இசைஞானி தான் இசை அமைக்க வேண்டும் என்று பாலசந்தர் விரும்பினார், அவரை எப்படியாவது சமாதானம் செய்து விட அனந்து, வி.நடராஜன் [நடிகர்][பாலசந்தரின் ஆஸ்தான தயாரிப்பு நிர்வாகி] மூலமாக முயற்சிகள் நடந்தன, பின்னர் அண்ணாமலைப் படத்துக்கு ரஜினி, சுரேஷ் கிருஷ்ணா,மூலமாக திரும்பவும் முயற்சிகள் நடந்தன ,

இசையமைப்பாளர் கீரவாணி AKA மரகதமணி
ஆயினும் அது கைகூடவில்லை, அழகன் படத்தில் தெலுங்கு சினிமாவின் நிரூபனமான இசையமைப்பாளர் கீரவாணி மரகதமணி என்ற பெயரில் இசைவானில் ஒரு புதிய நம்பிக்கை நட்சத்திரம் என்று டைட்டில் கார்ட் போட்டு அறிமுகப்படுத்தப்பட்டார்,


 பின்னாளில் பாலசந்தரின் வானமே எல்லை ,ஜாதிமல்லி உள்ளிட்ட படங்களுக்கும் மரகதமணி இசையமைத்தார்.
அதே சமயத்தில் பாலசந்தரின் தயாரிப்பான அண்ணாமலைக்கு இசையமைப்பாளர் தேவா ஒப்பந்தம் செய்யப்பட்டு,பின்னர் கல்கி படத்துக்கும் தேவாவே இசையமைத்தார்.

புலவர்.புலமைப்பித்தன்
ஒருவேளை அழகன் படத்தில் இசைஞானி கடைசி நேரத்தில் சம்மதிக்கூடும் என இயக்குனர் நினைத்ததால் இதில் கவிஞர் வைரமுத்து ஒப்பந்தம் செய்யப்படவில்லை,

அப்போது இசைஞானியுடன் அதிக படங்கள் பணியாற்றிய புலவர்.புலமைப்பித்தன் தான் அழகன் படத்தின் எல்லாப் பாடல்களையும் சிறப்புற இயற்றினார்.

 இதில் அகரமுதல எழுத்தெல்லாம் என்று கவிதாலயாவின் பெயர் போடுகையில் வரும் திருக்குறள் வடிவத்தை , சிந்து பைரவி[1985] படத்துக்கு என்று இசைஞானி பாடியதை மாற்றாமல் அப்படியே வைத்திருப்பார்,

பார்த்தாலே பரவசம்,டூயட் படங்களிலும் அதே இசைஞானியின் குரல் தான் முதன்மையாக ஒலித்தது, அது பாலசந்தரின் கடைசி படமான பொய் வரை தொடர்ந்தது.

பாலசந்தரின் 70களின் படங்கள் துவங்கி கல்யாண அகதிகள்  வரை எம் எஸ்வி அவர்களின் குரலில் வரும் குறள் தான் முதன்மையாக ஒலித்தது.

இசைஞானி நெற்றிக்கண் [1981] படத்தின் போதே கவிதாலயத்துடன் இணைந்துவிட்டாலும் அதில் பயன் படுத்தப்பட்ட அகரமுதல் எழுத்தெல்லாம் குறள் வடிவம் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினரின் குரலில் ஒலிக்கிறது,அதை அடுத்த புதுக்கவிதை [1982] படத்திலும்  சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினரின் குரலில் தான் ஒலிக்கிறது,


பாரதி தாசன் வரிகளுக்கு தன் படைப்பில் மரியாதை செய்ய, பாரதிதாசனின் மானசீக சீடரான புலமைப்பித்தனை வைத்தே சாதி மல்லை பூச்சரமே பாடலை இயற்ற வைத்தார். அப்பாடல் வரிகளை கவனியுங்கள்.

சாதிமல்லி பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி
என்னன்னு முன்னேவந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம்
இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
சாதிமல்லிப் பூச்சரமே ...

எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல
ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும்
ஒன்றுதான்
கடுகுபோல் உன்மனம் இருக்கக்கூடாது
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோணும்
அதில் இன்பத்தைத் தேடோணும்
சாதிமல்லி பூச்சரமே

உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு
சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன்
சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ்நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

என்று முடித்திருப்பார்.

இக்காட்சியில் உதவி இயக்குனர் சரவணன் என்ற சரண் [அமர்க்களம்],மம்மூக்காவின் அருகே நீல அட்டை அணிந்து அமர்ந்திருப்பார் பாதி கையை மட்டும் தூக்குவார், ஏனென்றால் அவர் பாரதி தாசனின் பாதி கவிதைத் தொகுப்பை தான் படித்திருப்பார்.

இப்படத்தில் அஷோக் லோகநாத் என்பவரும் உதவி இயக்குனர்,அவர் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் அவர்களின் மகனுமாவார்.அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என தெரியவில்லை.

கலை அழியாமல் பாதுக்காக்க வேண்டுமென்றால் முன்னோரின் படைப்புகள் அழியாவண்ணம் அவற்றை இது போல நவீன படைப்புகளுக்குள்ளே வைத்து  மரியாதை செய்ய வேண்டும் என்று சொல்லியும் இயங்கியும் வந்தவர் இயக்குனர் கே.பாலசந்தர்.

அந்த அழகின் சிரிப்பு கவிதை வரிகளின் வீடியோ இங்கே
https://www.youtube.com/watch?v=9G8e0uaWzLw