கே.பாலசந்தரின் எதிரொலி [1970]



இயக்குனர் கே.பாலசந்தரின் எதிரொலி திரைப்படம் கே.பாலசந்தரின் திரைவரலாற்றில் முக்கியமான படைப்பு, ஏனெனில் பெரிய நடிகரை வைத்து இயக்கி படத்தின் திரைக்கதையில் இனி சமரசம் செய்ய மாட்டேன் என்னும் அனுபவ பாடத்தை இப்படத்தின் மூலம் தான் அதிகமாகப் பெற்றார், 

எதிரொலி தமிழின் ஒரு நுவார் திரைப்படம் [noir], சிவாஜி  வழக்கறிஞராகவும் மனசாட்சிக்கு பயந்த ஒரு மனிதனாகவும் சந்தர்ப்ப வசத்தால் திருடிவிட்டு அதை மறைக்க மேலும் மேலும் பொய்களைச் சொல்லி அந்த மாயவலையில் அகப்படுபவராக தன்னை முழுமையாக ஒப்படைத்ததை சிவாஜி யார் என்றே தெரியாத ஒருவரால் கூட உணர முடியும், எழுத்தாளர் கே.வி.ஆர். ஆச்சார்யாவின் கதையை உரிமை வாங்கி திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார்.பாலசந்தர்.இப்படத்தின் இசை கே.வி.மகாதேவன். இப்படத்தில் ஒளிக்கவிஞர் பி.எஸ்.லோகநாத் அவர்கள் பணிபுரியவில்லை, இப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்.பாலகிருஷ்ணன்,


பாலசந்தர் கதை வசனங்களில் கவனம் செலுத்தி நம்மை கட்டிப் போட்டாலும் பெரிய நடிகருக்கு படம் செய்கிறோமே என்று திரைக்கதையில் நிறைய சமரசம் செய்தது படம் பார்க்கையில் உணர முடியும்.

படத்தில் இவரது மனைவி கே.ஆர்.விஜயா, மிகுந்த மனசாட்சி கொண்ட ஒரு இல்லத்தரசி, மேஜர் சுந்தர்ராஜன் ஒரு டாக்ஸி டிரைவர்,நாகேஷ் இவரின் பள்ளித்தோழர். படிப்பை தொடராததால் ஹெட் கான்ஸ்டபிளாகவே நின்று விடுவார்.இதில் நாகேஷுக்கு நகைச்சுவையுடன் கூடிய குணசித்திர வேடம். சிவாஜியின் பள்ளித் தோழரான வி.எஸ்.ராகவனும் ஒரு அரசு வழக்கறிஞர்,சிவாஜியின் சக போட்டியாளர்,தகுதி அடிப்படையில் சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய நீதிபதி பதவி உயர்வு இவருக்கு முதலில் கிடைத்து விடும்.படத்தின் பாலையாவின் காணாமல் போன பணப்பெட்டியை துப்பறியும் இன்ஸ்பெக்டராக ஓ.ஏ.கே.தேவர் தோன்றியிருப்பார்.

சிவாஜியின் தம்பியான எ.எஸ்.ஆரும் ஒரு வழக்கறிஞரே அண்ணனிடம் மிகவும் பயபக்தி கொண்டவர், சிவாஜியின் தங்கையான லட்சுமி அண்ணன் மேல் உயிரையே வைத்திருக்கும் தங்கை.அவரது காதலன் சிவகுமார்,இவர்கள் காதலை ஏற்று மணமுடித்துத் தருவார் சிவாஜி , கே.ஆர்.விஜயா தம்பதிகள்.


சிவாஜி 80000 ரூபாய் பணத்தை கையாடல் செய்து விட்டு அவஸ்தைப் படும் தருணத்தில் பார்வையாளர் வயிற்றில் பய உருளையை நிஜமாக உருள விட்டிருப்பார் , அதுதான் ஒரு அப்பட்டமான நுவாருக்கான அடிப்படை தகுதியே.அக்குற்றவாளியாகவே படம் பார்க்கும் பார்வையாளரை மாற்ற வேண்டும் ஒரு நுவார் பாணி படம்.
நுவார் பற்றி இங்கே விரிவாக படியுங்கள்

பாலசந்தர் படத்தை சுபமாக முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் சில பல சமரசங்கள் செய்து விட்டார் , அவை மட்டும் இல்லா விட்டால் இது தமிழின் மிக முக்கியமான நுவார் பாணி உதாரணப் படமாக மிளிர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை . இதில் முக்கியமான திரைக்கதை பிழையாக பார்த்தால், கோர்ட்டில் சிவாஜிக்கு எதிராக கொலைக்குற்றம் சாட்டப்படும்,


 கொலையான டாக்ஸி டிரைவர் மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜியை தொடர்ந்து பிளாக் மெயில் செய்தார் ,அதனால் சிவாஜி அவரை சுட்டுக் கொன்றார் என அரசு தரப்பு வக்கிலும் அவரது தம்பியும் ஆன எஸ் எஸ் ஆர் எதிர் வாதம் புரிவார் [சிவாஜியின் ஆசியுடன்] , அப்போதெல்லாம் ஒரு கொலை செய்தாலே தூக்கு என இயக்குனர்கள் பயமுறுத்தி வந்துள்ளனர்,இங்கிலாந்தில் 1950களின் இறுதி வரை பெண்களைக் கூட தூக்கில் ஏற்றி வந்துள்ளனர்.

நம்முடையது அவர்களைப் பின் பற்றி இயற்றப்பட்ட சட்டம் என்பதால், அப்போதெல்லாம் தூக்கு தண்டனை சர்வ சாதாரணம்,ஜீவகாருண்யர்கள் சமூகத்தில் ஈனஸ்வரத்தில் தான் முனக முடிந்தது. இதை 90களின் திரைப்படங்கள் வரை இந்திய சினிமா கதாசிரியர்கள் தத்தம் திரைக்கதையில் தேய தேய உபயோகித்தனர்.

ஆனால் முடிவில் சிவாஜியின் குழந்தை சொல்லும் முக்கியமான சாட்சி, அக்கொலையை சிவாஜி செய்யவில்லை, சிவாஜிக்கு நன்றிக்கடன் பட்ட ஒரு ஏழைப்பெண் தான் கொலையைச் செய்தார் ,என ருசுவாக்கப்பட்டு கடைசி நிமிடத்தில் அந்த தலைமறைவான அப்பெண் விஜயலட்சுமி நாகேஷால் [போலீஸ்] பிடித்து வரப்பட்டு கோர்டில் நிறுத்தப்படுவார்.

இப்போது சிவாஜி கொலை செய்யவில்லை என நிரூபனமாயிற்று, 
  • ஆனால் டாக்ஸி டிரைவர் ஏன் சிவாஜியை ப்ளாக் மெயில் செய்தான்? 
  • ஏன் சிவாஜி அவனுக்கு பயந்து சுமார் 7000 ரூபாய் பணம்,வைர நெக்லஸ் போன்றவற்றைக் கொடுத்தார்? 
  • ஏன் சிவாஜியின் மகள் இருவரும் பேசியதை ரெகார்ட் செய்து நாகேஷிடம் தந்தார், 
  • ஏன்? சிவாஜியின் மகள் [8வயது சிறுமி ]அப்பாவை அவன் ப்ளாக்மெயில் செய்கிறானே? என மிகவும் ஆத்திரப்பட்டு சிவாஜியின் ரிவால்வரை தூக்கிக் கொண்டு , டாக்ஸி டிரைவரின் காரின் டிக்கியில் பயணித்து அவன் வீட்டுக்கு போக வேண்டி வந்தது?
  • அங்கே ஏன் அந்த நன்றிக்கடன் பட்ட பெண் வந்தார்?கொலை செய்தார்? என எந்த வக்கீலும், எந்த குறுக்கு விசாரணையுமே செய்யவில்லை
நீதிபதி வி.எஸ்.ராகவன் கூட படம் விட்டு சுபம் போட்டாக வேண்டிய அவசரத்தில் சிவாஜியை விடுதலையும் செய்து விடுகிறார்.இங்கே தான் பாலச்சந்தர் சறுக்கினார்,தன் எல்லா படங்களிலுமே கதாபாத்திரத்துக்கு வேண்டி எந்த ஒரு சமரசமும் செய்துகொள்ளாதவர் சிவாஜியை ஆகவரை நல்லவராக காட்ட வேண்டி முக்கியமான வாதங்களை காட்டாமல் ஜீவனான திரைக்கதையில் சமரசம் செய்து கொண்டுவிட்டார். 


முக்கியமான முடிச்சுகளை அவிழ்ப்பதில் கூட அது எங்கே சிவாஜியை குற்றவாளி ஆக்கி சிறைக்கு அனுப்பி விடுமோ என்று அதை தவிர்க்க வேண்டி சுணங்கிவிட்டார், 

எடிட்டர் கிட்டுவும்  கூட இதை கமுக்கமாக தன்னளவில் முடிந்த வரை ஒப்பேற்றி உதவியிருப்பார். தவிர அந்தப் பணப் பெட்டி சிவாஜியின் சம்மந்தி பாலையாவுக்கு [தம்பியின் மாமனார்] சொந்தமானது என தெளிவாக தெரிந்த பின்னரும் சிவாஜி மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே போவார்,

 திடீரென அவரது மனைவி கே ஆர் விஜயா மீதமுள்ள பணத்தையும் நகையையும் பாலையாவுக்கு சொந்தமானது எனத் தெரியாமலேயே [மைத்துனர் எஸ் எஸ் ஆரின்  வருங்கால மாமனார் ] நாங்கள் யாருடைய பணத்தையோ கையாடல் செய்து விட்டு தவியாய் தவிக்கிறோம்,அதை தயவு செய்து உரியவரை கண்டுபிடித்து நீங்களே ஒப்படைத்து விடுங்கள், எனச் சொல்லிவிட்டு பெட்டியை கொடுத்து விட்டு வருவார். 

பெட்டியின் உரிமை தாரர் அட்ரஸ் கூட தர மாட்டார் [பெட்டி அங்கே போனது சிவாஜிக்கு தெரியாது,பணம் பாலையாவுடையது என கே ஆர் விஜயாவுக்கு தெரியாது, இதெப்படியிருக்கு பாருங்கள்?] மேலும் இன்னொரு பூச்சு மெழுகலாக, பாலையாவுடைய காணாமல் போன மூன்று பூட்டு போட்ட பெட்டிக்கு படத்தில் தீர்வே சொல்லப்பட்டிருக்காது,

 பாலையா சிவாஜியை மனமாற மன்னிப்பதையும் காட்டவில்லை, சிவாஜி தன் சம்மந்தி பாலையாவிடம் பாவ மன்னிப்பு கேட்பதையும் காட்டவில்லை, உடையவனிடம் மன்னிப்பு கேட்காமல் ஒருவன் எத்தனை திருந்தினாலும், எப்படி திருந்தியதாக ஏற்கப்படும்?!!! இதற்கு வசதியாக கடைசி ரீல்களில் பாலையா வெளியூருக்கும் சென்று விடுகிறார்

ஏனென்றால் சிவாஜி என்னும் நடிகருக்கு மேலும் களங்கம் செய்வதை நடிகர் பாலையாவோ இயக்குனரோ விரும்பவில்லை போல,அப்படி இக்கட்டான சூழலில் பெரிய நடிகருக்கு படம் செய்கையில் அந்நாட்களில் இது போல சூழல் இருந்தது. இது போல சில பல தருக்கப் பிழைகள் இருப்பதால் தான் இப்படம் சோபை இழந்து, சினிமா ஆர்வலர்களாலும் கைவிடப்பட்டு, வெகுஜன ரசிகர்களாலும் கைவிடபட்டது என நினைக்கிறேன்.

மேலும் ஒரு முக்கியமான தருக்கப் பிழையும் உண்டு,சிவாஜி விடுதலை ஆனவுடனே அவருக்கு மதுரை கோர்ட்டில் நீதிபதியாக பதவி உயர்வு கிடைக்கிறது. ஒரு தனியார் கிரிமினல் வக்கில் தன் வாழ்நாளில் நீதிபதி ஆவது சாத்தியமா?!!! எனக்குத் தெரிந்த வரை அரசு தரப்பு வக்கில் தானே நீதிபதி ஆக பதவி உயர்வு பெற முடியும், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அந்த பதவி உயர்வை கதைக்குள் கொண்டு வந்து சிவாஜி ரசிகர்களை மகிழ்விக்க வேண்டிய கட்டாயத்தில் தான் மேற்சொன்ன திரைக்கதை சமரசங்கள் நிகழ்ந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.


இங்கு நாம் எதிரொலி படம் பற்றி இயக்குனர் கே.பாலசந்தரின் முக்கியமான இந்தப் பேட்டியை நினைவு கூறவேண்டும்.


கேள்வி : சிவாஜியை வைத்து "எதிரொலி' படத்தை இயக்கினீர்கள். உங்களைத் திரையுலகில் அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கவில்லையே ஏன்? 
எம்.ஜி.ஆர். ஒரு இமயம். என்னோடு தோழமையோடு இருக்கிற கமல்ஹாசன், ரஜினிகாந்தை வைத்துக்கூட ஒரு கட்டத்துக்கு மேல் நான் படம் இயக்கவில்லை. ரஜினியைக்கூட எஸ்.பி.முத்துராமனையும் கே.எஸ். ரவிகுமாரையும் வைத்துத்தான் இயக்க வைத்தேன்.ரஜினியிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதை முத்துராமன் செய்வதுதான் சரியாக இருக்கும். என்னிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. நானும் ரஜினியும் சேர்ந்தால் அந்த எதிர்பார்ப்பு வேறு மாதிரி ஆகிவிடும். அது படத்தைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.
"எதிரொலி'யைப் பொறுத்த வரை அந்தக் கதை சிவாஜிக்கு ரொம்ப பிடித்திருந்தது. திரைக்கதையை ரொம்ப ரசித்தார்.கதையில் சிவாஜிகணேசன் ஒரு தவறு செய்துவிடுகிறார். அதற்காக குற்ற உணர்வில் படம் முழுக்க தவிக்கிறார். மனசாட்சியால் கடைசி வரை தொல்லை பட்டுக் கொண்டே இருப்பார். அப்ப சிவாஜி பெரிய இமேஜ் உள்ள ஹீரோ. அவர் போய் தவறு பண்ணிட்டதாக காட்டினால் ஒத்துக் கொள்வார்களா? 
அவரைப் போய் தப்பு பண்ணிட்டதா காட்டிட்டாரேன்னு என்னைக் குற்றம்சாட்டினார்கள். படம் சரியா போகவில்லை. ஆனால் மிகவும் ரசித்து எடுத்த படம் அது. இப்போது பார்த்தாலும் ஆச்சர்யமாக இருக்கும். அதை ஒரு புதுமுகத்தை வைத்து எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. அப்படி எடுத்திருந்தால் அது பாலசந்தர் படமாகியிருக்கும். அது சிவாஜி படமாகிவிட்டது. அதிலிருந்து இமேஜ் ஒரு தடையாக அமைந்துவிட்டது. இமேஜ் இருக்கும் நடிகர்களை வைத்துப் படம் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துவிட்டேன்.
இப்படத்தில் வரும் குங்குமச்சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக்கிடப்பதென்ன பாடலை இங்கே பாருங்கள்
சிவாஜி விஜயலலிதாவை ஒரு செய்யாத குற்றத்திலிருந்து வழக்காடி காப்பாற்றுவார் , சிவாஜியின் மீது அவர் மிகுந்த மரியாதை கொண்டிருப்பார், சிவாஜி ஒரு சமயம் குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு மன அமைதி வேண்டி வருகையில் இவரது வீட்டைக் கடப்பார், அப்போது இவரை மனம் அமைதி கொள்ள வேண்டி அவர் உங்க நல்ல மனசுக்கொரு குறையிமில்லை என்னு அற்புதமான பாடலைப் பாடுவார்,எ.ஆர்.ஈஸ்வரி மிக அழகாக பாடியிருப்பார்,

லட்சுமி திருமணத்தில் எஸ் எஸ் ஆரின் காதலியான ஜோதிலட்சுமி யாருக்கும் தெரியாமல் வந்து கலந்து கொள்வார்,நான் பையன் வீடு பெண் வீடு என்று கேட்பவர்களுக்கேற்ப மாற்றி மாற்றி பொய் சொல்வார்.நாகேஷ் அவரை உண்மை தெரிந்து கலாய்க்க கல்யாணம் கல்யாணம் என்னும் இப்பாடல் அங்கே பிறக்கும்.இதுவும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல்,அதை இங்கே பாருங்கள்