காலம் சென்ற இயக்குனர் ஏ.பி.நாகராஜன் பற்றிய நினைவுகூறல்



காலம் சென்ற ஏ.பி.நாகராஜன் அவர்கள் என் மனம் கவர்ந்த இயக்குனர்,இவர் முன்னே இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டம் அழகியல் எல்லாம் தூசு தான். இதில் கொஞ்சம் கூட மிகையில்லை, இவரின் புராண படங்களில் நாம் பார்ப்பது நேர்த்தி, பிரம்மாண்டம் அழகியல் , அருமையான வசனம், நடிப்பு. இசை.இவை அனைத்தும் நம்மை அப்படியே ஆட்கொண்டுவிடும் , ஏபிஎன் தன் 49ஆம்  வயதிலேயே மரணமடைந்துவிட்டார்[1928–1977]. கடுமையான உழைப்பாளி. ஏ. பி. நாகராஜன் மன்னார்குடியில் ஓர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.இவரின் முழுப்பெயர்  அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராஜன்

தனது ஏழாவது வயதிலேயே டிகேஎஸ் சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றார். அக்குழுவில் பல சிறப்பான வேடங்களிலும் நடித்து வந்தார். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தார். இவர் மட்டும் நேர்த்தியாக புராணப் படங்களை இயக்கா விட்டால் நமக்கு இந்தி சினிமா, தெலுங்கு சினிமா புராணப் படங்கள் தான் சாஸ்வதமாக இருந்திருக்கும்.

அவரின் ஒப்பற்ற சில திரைப்படைப்புகள் இங்கே


  1.     ஸ்ரீ கிருஷ்ண லீலா (1977)
  2.     ஜெய் பாலாஜி (1976)
  3.     காரைக்கால் அம்மையார் (1973)
  4.     ராஜராஜ சோழன் (1973)
  5.     திருமலை தெய்வம் (1973)
  6.     அகத்தியர் (1972)
  7.     திருப்பதி கன்னியாகுமாரி யாத்ரா (1972)
  8.     பாலராஜு கதா (1970)
  9.     திருமலை தென்குமரி (1970)
  10.     விளையாட்டுப் பிள்ளை (1970)
  11.     குருதட்சணை (1969)
  12.     தில்லானா மோகனாம்பாள் (1968)
  13.     திருமால் பெருமை (1968)
  14.     கந்தன் கருணை (1967)
  15.     சீதா (1967)
  16.     திருவருட்செல்வர் (1967)
  17.     சரஸ்வதி சபதம் (1966)
  18.     திருவிளையாடல் (திரைப்படம்) (1965)
  19.     நவராத்திரி (1964)
  20.     குலமகள் ராதை (1963)
லூயி மாலி இயக்கிய பேந்தம் இந்தியா வண்ண ஆவணப்படத்தில் சென்னையைப் பற்றி காட்டுகையில் அன்றைய ஜெமினி ஸ்டுடியோவும் இடம்பெறும், அங்கே தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் படப்பிடிப்பும் வரும்,1960களுக்கு போனது போல் இருக்கும்,அந்த காணொளியை இங்கே பாருங்கள்.  சரியாக 1நிமிடம் கழித்து துவங்கும். ஆனால் லூயி மாலி தமிழ் சினிமாவை,கண்ட உடன் காதல் வருவதை, அதன் நாடகத் தன்மையான உருவாக்கத்தை,கற்பனையான பாடல்களை,கற்பனை வறட்சியான காட்சிகளை அங்கே கிண்டல் அடித்திருப்பார்.ஆனாலும் இந்த ஃபுட்டேஜ் மிகவும் முக்கியமானது. அங்கே வேஷ்டியும் சட்டையும் மேல்துண்டும் அணிந்திருக்கும் மிக எளிமையான மனிதரான  இயக்குனர் ஏ.பி.நாகராஜனின் உழைப்பைப் பாருங்கள், அவர் செட்டில் கைதேர்ந்த நடிகர்களான  சிவாஜி, ஏவிஎம் ராஜன், பாலையா ,பத்மினி, டி.ஆர்.ராமசந்திரன் போன்றோரை லாவகமாக இயக்கும் அழகைப் பாருங்கள். 
ஏ.பி.நாகராஜன் தயாரித்த மகத்தான படமான "தில்லானா மோகனாம்பாள்" திரைப்படமாகியதில் ஒரு சுவையான கதையே இருக்கிறது. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "தில்லானா மோகனாம்பாள்" ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்து கொண்டிருந்தபோதே அதை ஆவலுடன் ஏ.பி.நாகராஜன் படித்து வந்தார். அதை படமாக்க விரும்பினார்.
கதை உரிமை, ஆனந்த விகடன் ஆசிரியரும், ஜெமினி அதிபருமான எஸ்.எஸ்.வாசனிடம் இருந்தது. அவரை ஏ.பி.நாகராஜன் சந்தித்தார். தில்லானா மோகனாம்பாளை படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தார். "இக்கதையை நாம் கூட்டாக சேர்ந்து எடுப்போம். உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. படம் எடுக்கும்போது நான் தலையிடமாட்டேன்" என்றார், வாசன். ஆனால் ஏ.பி.நாகராஜன் இதற்கு சம்மதிக்கவில்லை.
"லாபமோ, நஷ்டமோ எதுவானாலும் அது என்னையே சேரட்டும். இதுதான் நான் கடைப்பிடித்து வரும் கொள்கை" என்றார், நாகராஜன். வாசன் சிரித்துக்கொண்டே, "நாகராஜன்! தில்லானாவை நீங்களே படமாக எடுங்கள். ஆனந்த விகடனில் வந்த இந்தக் கதையை நீங்கள் அதன் தரம் குறையாமல் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களுடைய திருவிளையாடல் படத்தைப் பார்த்த பிறகு எனக்கு ஏற்பட்டிருக்கிறது" என்றார்.
கதைக்கு கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்று கேட்டார், நாகராஜன். "ரூ.25 ஆயிரம் கொடுங்கள் போதும்" என்றார், வாசன். உடனே "செக்" எழுதி கொடுத்துவிட்டார், ஏ.பி.என்.   கதை உரிமைக்காக வாசன் ரூ.50 ஆயிரமாவது கேட்பார் என்று நாகராஜன் நினைத்துக்கொண்டிருந்தார். வெறும் 25 ஆயிரத்தை சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். கதைக்கு ரூ.50 ஆயிரமாவது தரவேண்டும் என்பது அவர் விருப்பம். எனவே, மீதி ரூ.25 ஆயிரத்தை கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்புவிடம் கொடுத்து விட தீர்மானித்தார்.
இந்த சம்பவம் நடந்தபோது, கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு, கண் சிகிச்சைக்காக எழும்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏ.பி.நாகராஜன் ஆஸ்பத்திரிக்குச் சென்று, அவரை சந்தித்தார். வாசனிடம் கதை உரிமையைப் பெற்ற செய்தியை சொல்லிவிட்டு, "கதை எழுதிய உங்களுக்கு என் சொந்த முறையில் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன்" என்றார்.
"சற்று நேரத்துக்கு முன் வாசன் இங்கு வந்திருந்தார். நீங்கள் அவரிடம் கொடுத்த ரூ.25 ஆயிரத்தை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்" என்றார், கொத்தமங்கலம் சுப்பு! இதைக்கேட்டு திகைத்துப்போன நாகராஜன், தான் கொண்டு போயிருந்த ரூ.25 ஆயிரத்தையும் சுப்புவிடம் கொடுத்தார்.
இந்த மாலைமலரின் முக்கியமான இயக்குனர் ஏ.பி.என் பற்றிய கட்டுரையை மேலும் படிக்க இங்கே செல்லவும்