ஐ ஆம் சாம் என்னும் மூலமும் அதன் பிரதிகளும்!!!

ஐ ஆம் சாம் [I Am Sam][2001]. ஹாலிவுட்டின் ஐ ஆம் சாம் என்னும் சித்திரம், இதுவரை வந்த தந்தை மகள்/மகன் கதைகளை தூக்கி சாப்பிட்டு காண்போர் மனதை நகர்த்தும் தன்மை பொருந்தியது. ஷேன் பென்னின் நடிப்பை பற்றி எழுதுவதற்கு ஒரு கட்டுரை போதாது. மனநிலை பாதிக்கப்பட்ட சாம் என்ற ஒரு முப்பது வயது "சிறுவனுக்கும்" அவனது மகளுக்கும் இடையே நிகழும் சம்பவங்களை மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாய் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிப்பார் இயக்குனர் ஜெஸ்ஸி நெல்சன் [Jessie Nelson]. படத்தில் மனநிலை சரியில்லாத "சாம்" ஆகவே கதைக்குள் தொலைந்து போயிருப்பார்  "ஷேன் பென்" (Sean Penn).  மிச்செல் ஃபீபரும் [Michelle Pfeiffer], படத்தில் சாம்மின் பெண்ணாக நடித்திருந்த டாகோடா ஃபான்னிங்கும் [Dakota Fanning] மனதில் ஆழமாகப் பதிந்து விடுவார்கள். மனதை ஆழமாக ஈர்த்த மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் முடிவு சுபமானதாய் இருந்தாலும்   படம் முடிந்ததும் நம் மனதில் மிகுந்த பாரம் குடிகொள்வதை தடுக்க இயலாது.சாமின் பாத்திரம் பலநாட்களுக்கு  மனதை விட்டு அகலாது.ஆகவே பிரதிகளைப் பார்க்கும் முன்னர் மூலத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.[ஒரு முறை புளித்த மாவு தோசையை தின்றுவிட்டால் எப்படி நல்ல அருமையான சுவையான தோசையை உங்களால் சந்தேகப்படாமல் சாப்பிட முடியாதோ?[என்னா உதாரணம்]அதே போலதான்.மூலத்தை சிதைத்து செய்யப்படும் அலங்கோல முயற்சிகளால் பின்நாளில் காணக்கிடைக்கும் மூலத்தின் அருமையும் பெருமையும் ஒருவருக்கு தெரியாமலே போகிறது.] 

நம் தமிழ்சினிமா வித்தகர்களுக்கு ஒரு பழக்கமிருக்கிறது, எந்த படைப்பு திருட்டையும்   நேரடியாக அரங்கேற்றிவிடமாட்டார்கள். பாலிவுட் பகல்கொள்ளையர்கள் அதை திருடும் வரை காத்திருந்துவிட்டு அதன் பின்னர் இவர்கள் அதைத் திருடுவார்கள். ஒருவேளை மாட்டிக் கொண்டால் அவனை நிறுத்தச்சொல்லு நிறுத்தறேன்!!! என்று வியாக்கியானம் பேசலாம் அல்லவா?!!! பச்சைகிளி முத்துச்சரம் ஒரு உதாரணம். இப்போது இது!!!. இந்த நேரத்தில் தன் படைப்புக்கு உந்துதல் அளித்த மூலத்தின் படைப்பாளிகளுக்கு மரியாதை அளித்து, அவர்களின் பெயர்களை டைட்டில்கார்டில் போடும் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களை எண்ணிப்பார்த்து  நாம் ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது!!!.  வாழ்க படைப்புத் திருட்டு. 

நண்பர் செ.சரவணகுமார் இப்படத்தை உணர்வுபூர்வமாக அணுகி விமர்சனமும் எழுதியிருக்கிறார். அதைப் படிக்க சுட்டவும் :- I am Sam (2001) – அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

  தொடர்புடைய இன்னொரு பதிவு:- பாலிவுட் என்னும் பகல் கொள்ளைக்காரர்கள்!!!

மெய்ன் ஐசா ஹை ஹூன் [Main Aisa Hi Hoon] [2005][ஹிந்தி]

தெய்வத் திருமகன் [Deiva Thirumagan ] [2011][தமிழ்]

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையாக தெய்வத்திருமகன் படம் இருக்கும் என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் படத்தின் நாயகன் விக்ரம்.  [நல்ல வேளையாக உலக சினிமாவில் முதல்முறையாக என்று சொல்லலை அந்த வகையில் லாபம்]
/div>
எப்படிபட்ட கதாபாத்திரத்தையும் ஏற்று அதில் திறம்பட நடிப்பவர் சீயான் விக்ரம். சேது படத்தில் தொடங்கி காசி, பிதாமகன், அந்நியன் என்று வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர். தற்போது விக்ரம் தெய்வத்திருமகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலபால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மதராசப்பட்டினம் படத்தை இயக்கிய டைரக்டர் விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.[எல்லா திருட்டு படங்களுக்கும் பட்டி பார்த்து டிங்கரிங் பார்க்க ஜிவி பிரகாஷுக்கே ப்ரி குவாலிஃபிகேஷன் உண்டு என்பது ஏறகனவே நாம் நன்கறிவோம்]
இப்படத்தின் பத்ரிகையாளர்கள் சந்திப்பு ‌சென்னையில் நேற்று நடந்தது. அதில் பேசிய நடிகர் விக்ரம், இந்தபடத்திலும் எனக்கு வித்யாசமான கதாபாத்திரம். இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை. டைரக்டர் விஜய் அருமையாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். [இவர் ஒரு நல்ல மிக்ஸர்,எல்லா ரக மிக்ஸிங்குமே இவருக்கு கைவந்த கலை என்பதை நாம் மதராஸபட்டணத்திலேயே அறிவோம்]அதேபோல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிக அருமையாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா [பொருத்தமான ஆளு]. ஜி.வி.பிரகாஷின் இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. இவர்கள் தவிர படத்தில் பணியாற்றி இருக்கும் மற்ற கலைஞர்களுக்கும் இப்படம் நிச்சயம் நல்ல பெயர் வாங்கி தரும். இவ்வாறு அவர் பேசினார்.
படத்தின் சூட்டிங் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் ஆடியோவை ஏப்ரல்14ம் தேதியும், படத்தை மே மாதமும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். [சீக்கிரம் ஆடியோவை வெளியிடுங்க, நல்லா இருங்கய்யா, வாழ்க படைப்பு திருட்டு !!! ஆனாலும் பரவாயில்லை பில்டப் கம்மியாத்தான் இருக்கு!!!!, இதே இது ஆழ்வார்பேட்டை ஆண்டவராயிருந்தா, இந்த படத்துக்கு ஆஸ்கார் கொடுக்காவிட்டால் தமிழர்கள் ஆஸ்காரை புறக்கணிக்கவேண்டும் என்று மைக் பிடித்து இருமாந்திருப்பார்]
நன்றி:-http://www.voicetamil.com/?p=29230