பரதேசி [Paradesi ] [2013] [இந்தியா]


தொடர்ந்து தமிழின் நம்பிக்கை இயக்குனர்கள் காலிபெருங்காய டப்பாக்களாக மாறிவரும் காலகட்டத்தில் பாலா அவன் இவனில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் , அவன் இவனில் வாழ்ந்துகெட்ட ஜமீன்,அம்பிகா, அவரின் சக்களத்தி என அந்த  சில பாத்திரங்கள் மட்டும் நிஜமானதாக இருக்கும், ஆனால் மற்ற பாத்திரங்கள் மிகுந்த செயற்கையாக இருக்கும் அதனாலேயே அப்படம் பாலாவின் படமாக இல்லை , தமிழ் சினிமா வரலாற்றின் முக்கிய முயற்சியுடன் பாலா குறைந்த நாட்களில் ,சொந்தத் தயாரிப்பில் பரதேசியை உலக சினிமாவாகத் தந்திருக்கிறார் .

தமிழர்கள் எவ்வளவு இம்பீரியலிஸ்டாக வாழ்ந்திருக்கிறார்கள் என நாலடியார் பாடலை மேற்கோள் காட்டி , தமிழன் தென் கிழக்கே ஜாவா, கம்போடியா, இண்டோநேசியா,பாலி என எல்லை தாண்டி சென்று நாடுபிடித்ததை சாரு அகம் புறம் என்னும் இக்கட்டுரையில் எழுதியிருந்தார், அதன் பின்னர் சுமார் 600 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழனுக்கு என்ன நேர்ந்தது?!!! , எப்படிப் பொறுக்கி பரங்கியப் பயல்கள் நம்மை வீட்டு விலங்குகளாக அடிமைத்தளையில் சிக்க வைத்திருக்க முடியும்?!!!, என்ன ஒரு முரண் பாருங்கள்? 

பரங்கியப்பயல்கள் உப்புக்கு விதித்த கட்டுப்பாட்டால் செத்து மடிந்த ஒரு தலைமுறையை வைத்து நூறு படம் இயக்க முடியும், 1803முதல் 1930கள் வரையான மேற்கே பஞ்சாப் துவங்கி ஒரிஸ்ஸா வரை 4000 கிலோமீட்டருக்கு உப்பு வேலி அமைத்து தங்கத்தின் மீதான இறக்குமதி வரி வாட் வரி போல  இந்தியர் வாழ்வின் இன்றியமையாத உப்புக்கும் வரி போட்டு, கடும் உழைப்பால் வெளியேறும் வியர்வையால் அனுதினம் அயோடின் இழக்கும் உழைப்பாளிகள், உப்பு வாங்கிட வக்கின்றி செத்து மடிந்த துயரக்கதைகள் எத்தனை எத்தனை?!!!

அதுபோன்றே இன்னொரு துயரவரலாறான தேயிலை தோட்ட அடிமைத்தளையை உலகுக்குச் சொன்ன இப்படத்தை தமிழ் சினிமாவில் பதிவு செய்தமைக்கும், தமிழ் சினிமாவின் அரிய பாங்கான இலக்கியத்தை அடுத்தடுத்து சினிமாவா எடுத்து வருவதற்கும் பாலாவுக்கு சிறப்பு நன்றிகள்.

படம்  பி.ஹெச்.டேனியல் எழுதிய ரெட் டீ [தமிழில்-எரியும் பனிக்காடு] என்னும் நாவலையும் எடலக்குடி ராசா என்னும் நாஞ்சில் நாடனின் சிறுகதையையும் வைத்து உருவாக்கப்பட்டதாக படித்தேன்.உலகத்தரமான டார்க்ஹ்யூமர் வசனங்கள் நாஞ்சில் நாடன் எழுதியவை,ஆனால் படத்தில் வரும் ஆங்கில துரை,கங்கானி பாத்திரம்  கிருத்துவ மத மாற்றம் மற்றும் பகடிக்காட்சிகள் போன்றவை ஜெமோவின் ஊமைச்செந்நாய் ,காடு நாவல் எல்லாம் சேர்த்து கலந்து செய்யப்பட்டிருக்கிறது.

 அல்லது எனக்கு படம் பார்க்கையில் அதன் தாக்கம் உணர முடிந்தது, வழமையான பாலாவின் க்ளிஷே இல்லாமலும் இல்லை, இசைஞானி இல்லாத பாலா இனி அரைக்கிணறு தான், ஊனை உருக்கும் இசையை வேறு யாரால் தரமுடியும், என்பதை இந்நேரம் பாலா உணர்ந்திருப்பார். இசைஞானியின் குரலில் இளவல் கங்கை அமரன் ஒரு பாடலை பாடி தன்னளவில் முயன்றிருக்கிறார், ஆயினும் அந்த காந்தக்குரலுக்கு மாற்று ஏது?!!! பாலா அமைத்திருந்த இப்படத்தின்  க்ளைமாக்ஸ் அவர் ரசிகர்களுக்கு புதியது. 

இரண்டாம் உலகப்போர் துவங்கி முடியும் ஆண்டு வரையான டைம்லைன். ஆனால் எங்கும் போரின் சுவடே இல்லை என்பது குறை, வசனங்களூடாகவேனும் உணர்த்தியிருந்தால் படம் டீடெய்லிங்கில் ஒரு படி உயர்ந்திருக்கும். ஆனால் படத்தில் விஷக்காய்ச்சல் தீவிரம் மட்டும் சற்று உணர்ந்தேன்.  கிராம மக்கள் விவசாயமின்றி வாடுவதாக வசனத்தில் மட்டுமே வருகிறது,காட்சிப்படுத்தியிருந்தால் இவர்கள் பஞ்சம் பிழைக்க போவதை ஏற்றுக்கொண்டிருக்கலாம். காடு நாவலில் விஷக்காய்ச்சல் தீவிரம் உணர்த்தப்பட்டிருக்கும்,படிக்கையில் நாமும் அங்கே விஷக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருப்போம், அதர்வா ராசாவாக மிக நன்றாக நடித்திருக்கிறார், இவரின் தலைமுறை இனி இவரை வியந்து பார்க்கும்,பாலா படத்தில் எக்ஸ்ட்ராடினரி ஹீரோயிசம் தரப்படாத ஒரே நடிகர் அதர்வாவாகத்தான் இருப்பார்.

படத்தில் இவர் தப்பித்து செல்லும் காட்சிகளில் இயக்குனர் பாலாவுக்கு திருப்தியாக வரும் வரை சுமார் 20 முறையேனும் விழுந்திருப்பார் போல, அதிலும் படத்தின் கடைசிக்காட்சியில் விழுந்தபின்னர் புறப்படும் அந்த அழுகை எல்லாம் உண்மையிலேயே உடம்பில் அப்படி அடிபட்டால் மட்டுமே அப்படி வேதனையில் கேவமுடியும். இவருக்கு பாலிடிக்ஸ் ஏதும் இல்லாவிட்டால் தேசிய விருது கிடைக்க வாய்ப்புகள் பிரகாசம். படத்தில் துவக்க காட்சியில் இவர் தோன்றும் அந்த தண்டோரா காட்சி சுமார் 15 நிமிடம் நீளுகிறது, அதிலேயே அந்த கிராமத்தின் சூழலும், இவரின் உறவுகளும் நமக்கு அறிமுகமாகின்றனர். அவரின் அப்பா முரளி போல நல்ல நடிகராக வருவார். 

படத்தின் கதையை நான் சொல்ல விரும்பவில்லை, அது படம் பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு ஸ்பாய்லராக இருக்கும். போலி டாக்டர் குரிசுவாக வரும் சுப்ரமணியபுரத்தின் சவுண்ட் சர்வீஸ் சித்தன் தூளாக செய்திருக்கிறார், அதர்வாவின் பாட்டி தூள், ஒருசில காட்சிகளில் நல்ல டார்க் ஹ்யூமர் வசனங்களும் உண்டு,படம் ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்,ஆனால்ரொம்ப எதிர்ப்பார்ப்பும் கூடாது, அரவான் வசந்தபாலனின் டீடெய்லிங் லெவலில் படம் இல்லாதது எனக்கு குறையே. லைட் ஹார்ட்டட் கார்பொரேட் ரசிகளுக்கு இப்படம் பிடிக்குமா? என்றால் டவுட் தான். ஆனால் உலகசினிமா ரசிகர்கள் நிச்சயம் குறைகளை மறந்து எற்றுக்கொள்வார்கள்.

தமிழின் முக்கியமான முயற்சி இது, எரியும் பனிக்காடு நாவலை நான் இன்னும் படிக்கவில்லை, படம் பார்த்த பின்  நிச்சயம் படிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது, செழியனின் இருள் காட்சிகள் பொன்னோவியம், இதற்கு முன்னர் ஆடுகளம் படத்தில் இதே போல வேல்ராஜ் இருளுக்கு ஒளியமைத்திருந்தார், படத்தின் முற்பாதி முழுக்க சேபியா டோனிலும், பிற்பாதியில் பசுமை கலந்த டோனும்,நேர்த்தியான ஜிம்மி ஜிப் ஷாட்டுகளும் மிக அருமை. ஆர்ட் டைரக்‌ஷன்  டீடெய்லிங் லெவல் பப்படக்கட்டிலும் குரிசுவின் ஒற்றைக்கண்ணாடியிலும்,கங்காணியின் உடை, வெள்ளைக்கார துரை உடையிலும் மட்டுமே உணர முடிந்தது.

இசை அமைத்த ஜிவி பிரகாஷ்குமார் பிண்ணணி சத்தம் தேவையே இல்லாத இடங்களில் கூட ஒரே சத்தம், லிட்ரலாக டேய் நிறுத்துடா என ரசிகர்களை கத்த வைக்கிறார்.  செம கடுப்பான தருணம் அது,  இவருக்கு  சீப் ரேட் ஆதலால், நல்ல பல உலகசினிமா வாய்ப்புகள் இவரிடம் கிடைத்தும் அதை ஓவர் குக்,அல்லது அண்டர் குக்காக சமைத்து வைக்கிறார்  எனத் தெரிகிறது.

இன்னும் மெச்சூரிட்டி லெவல் வேண்டும். அதுவரை இவர் மசாலா படங்களிலேயே கவனம் செலுத்தினால் நமக்கு நல்ல படைப்பானுவம் மிஞ்சும், பழசிராஜா படத்தில் இசைஞானியின் இசையை ஒருவர் அனுபவிக்க வேண்டும், எத்தனை வீர்யம் மிகுந்தது தெரியுமா?  அது படத்தின் ஒவ்வொரு தீமுக்கும் ஏற்றாற் போல வித்தியாசங்கள் கையாளப்பட்டிருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாஸ் ஆடியன்ஸ் வசம் அப்படம் செல்லவில்லை.

பிதாமகனில் அந்த கஞ்சா காட்டை காட்டுகையில் ஒரு தீம், சித்தனுக்கு ஒரு தீம், அநாதைகளின் ஒன்று கூடலுக்கும் மகிழ்ச்சியான காட்சிகளுக்கும் ஒரு தீம். என அப்படி ஒரு அற்பணிப்பை தந்திருப்பார் இசைஞானி.அப்படத்தில் உள்ள கஞ்சா தோப்பும் அதன் வளர்ப்புமுறையும், அதை கடத்தும் பாதையும், அதன் சிரமங்களும் அத்தனை டீடெய்லாக ஆர்ட் டைரக்டரால் கையாளப்பட்டிருக்கும். அந்த வாசுதேவன் செல்லும் டோலி காட்சியும், கழுதைகள் மீது ஏற்றப்பட்ட மூங்கில் பொதிகளுடன் பயணிக்கும் கஞ்சா தோப்பு  பணியாளர்களும், காவலுக்கு ஆற்றின் நீரில் நீந்தி வருகின்ற கோம்பை ரக நாய்கள் என அப்படி ஒரு டீட்டெயிலிங் இருக்கும். இதில் அதெல்லாம் எதிர்பார்த்து போனால்...........

படத்தின் நீளம் 2மணிநேரம் தான், ஏன் பாலா இப்படி நகம் வெட்டுவது போல வெட்டி எடிட்டிங் செய்தார் எனப் புரியவில்லை, வைரமுத்துவின் ரத்தத்தால் எழுதிய வரிகள் மிக அருமை, இசையும் குரலும் அதற்கு இடையூறாக இருந்தது சத்தியம். இடைவேளைக்கு பின்னர் தான் படத்தின் ஜீவனான தேயிலை தோட்டத்துக்குள்ளேயே நாம் நுழைகிறோம்,வேதிகா சொல்ல ஒன்றுமில்லை, தனிஷ்கா டல்மேக்கப்பிலும் மிளிர்கிறார், நல்ல பெர்ஃபார்மன்ஸ், இருவருக்கும் உள்ளே பிதாமகன் சித்தனுக்கும் கஞ்சா கோமதிக்கும் நிகழுமே அந்த பாசப் பிணைப்பு அதை உணர்ந்தேன், அது இன்னும் கூட நீண்டிருக்கலாம், கடல்,டேவிட்,தொடர்ந்து இந்தப் படத்தில் கிருஸ்துவர்கள் மீதான் பகடி தொடர்கிறது, இது அகஸ்மாத்தாக நிகழ்ந்ததா?,காடு கதையில் வருவதால் அதுபோலவே இப்படத்திலும் வலிய திணிக்கப்பட்டதா? தெரியவில்லை!!!. 

காடு நாவலில் இதுபோல பைபிளையும், போதனையும், மதமாற்றத்தையும் குறிவைத்து பொட்டில் அடித்தால் போல பகடி இருக்கும், அதே போல இங்கும் ரோம் நகரமே பற்றி எரிகையில் நீரோ பிடில் வாசித்ததற்கு இணையாக வரும் அந்த டாக்டர் பரிசுத்தம் பாடும் தன்னைத்தானே என்னும் பாடல் உண்டு, ஆனால் அந்த பாடல் படமாக்கியது செயற்கையாக உள்ளதை உணர்ந்தேன். 

கங்காணிக்கும் துரைக்கும் நிகழும் அந்த ஆண்டான் அடிமை கெமிஸ்ட்ரியை நான் ஊமைச்செந்நாயில் படித்திருக்கிறேன், எங்குமே விலைபோகாத மூளையை கொண்டிருக்கும் அற்ப துரைமார்கள் தான் இங்கே இந்தியாவுக்கு கம்பெனி ஆட்களாக வந்தனர் என நான் படித்திருக்கிறேன், இதில் ஒரு வசனமாக துரையம்மாவின் உடம்பு சூட்டுக்கு நீயெல்லாம் தாக்கு பிடிப்பாயா? என ஒரு பகடி உண்டு, ஆக துரைகள் இங்கே வந்த இடத்தில் கிடைத்த கொத்தடிமைகளை புணர்ந்தால், துரையம்மாக்கள் அவர்கள் பங்குக்கு அடிமைகளைக் கூடியதை உணரமுடிகிறது,

ராசாவின் பெரியப்பாவாக வரும் விக்ரமாதித்யனுக்கு எத்தனை மனைவி என்று அவருக்கே தெரியாதாம், அவளுடன் இப்போது குடும்பம் நடத்துபவளுக்கும் தெரியாதாம், ஆனால் அவரின் புடுக்கு [மந்திரி] மட்டுமே அறியும் என்னும் லஜ்ஜையில்லாத வசனங்கள் தமிழ் சினிமாவில் முதல் முயற்சி, கிராவின் எழுத்துச் சாயல் கிராமவாசிகளின் வெள்ளந்தி விகல்பமில்லாத வசனங்களில் நன்கு தெரிகிறது.ஆக இலக்கியவாதிகளின் கலம்பமாக இப்படம் மிளிர்கிறது.

அடிமை மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கூலி தரும் ஒரு சம்பவம் படத்தில் வரும்,நிச்சயம் நாடி நரம்புகளை முறுக்கேற்றி வீறு கொண்டெழ வைக்கும் காட்சி அது,அடிமையாக இருப்பவன் அவன் உடம்பில் உழைக்கும் வலு இருக்கும் வரை ஒரு போதும் தன் ஊர் திரும்ப இயலாது என்பதை உணர்த்தியிருப்பர்,அடிமைகளின் நம்பிக்கைக்கு ஏற்றார் போல நோய்க்கு மருந்து தர ஒருவன்,மந்திரித்து தாயத்து கட்ட ஒருவன்,ஆக இரண்டு வித வைத்தியத்துக்கும் காசு அவனின் கணக்கிலேயே அடித்துப் பிடுங்கப்படுவதை நாம் கண்ணுறுகிறோம்.

கங்காணியாக புதுமுகம் ஜெர்ரி, பிதாமகன் வாசுதேவன் போல இவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு, இவர் தேயிலை தோட்ட கொத்தடிமையின் மனைவி ஒருத்திக்கு மிகுந்த மன உளைச்சலையும் மூளைச்சலவையையும் தந்து அவளை துரைக்கு கூட்டிக்கொடுக்கும் காட்சிகள் ஜெமோவின் ஊமைச்செந்நாய் நாவலை எனக்கு நினைவூட்டியது, அதில் கொத்தடிமைப் பெண்களின் வாழ்வியல் மிகுந்த வலியுடன் சொல்லப்பட்டிருக்கும். 

எயிட்ஸ் நோய் என்று ஆங்கிலப் பெயரிடப்படாத அந்த காலக்கட்டத்தில் இது போல பொறுக்கி துரைமார்களால் பெண்டாளப்பட்டு ஏப்பு நோய்க்கும், மேக நோய்க்கும் ஆளான கதையின் வலிகள், அத்தனை வீர்யமாக இதில் சொல்லப்படவில்லை, இதில் ஒரு காட்சியில் துரை எப்போது வருவான்? என அங்கே நன்கு சீசன் செய்யப்பட்ட துரையின் வைப்பிடம், கங்காணியும் அவனது ஆட்களும் கேட்டு தெரிந்துகொள்கின்றனர், மானை சிங்கம் சாப்பிடும், பின்னர் ஓநாய் ,பின்னர் நரிகள்,போன்றே அடிமைப்பெண்கள் பெண்டாளப்பட்டனர், காடு நாவலில் இதுபோல கண்க்காணிகளின் அடக்குமுறை வீர்யம் இருக்காது, ஆனால் விஷக்காய்ச்சல் தீவிரம் உணர்த்தப்பட்டிருக்கும், மருந்து இல்லா திண்டாட்டம் உணரத்தப்பட்டிருக்கும்.

படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் மிக அருமையான சார்க்கோல் ரெண்டரிங்  ஸ்டோரி போர்டுகள் தயாரிக்கப்பட்டு படமாக்கியிருக்கின்றனர், அவை படத்தின் பெயர் போடும் காட்சியில் பிண்ணணியில் வருகின்றன.  மிக அருமையான டீடெய்ல்டு ஸ்டோரி போர்டுகள் அவை.

பாலாவின் டைஹார்ட் ரசிகர்களை ஏமாற்றாத படம்.படத்துக்கு பட்ஜெட் 36.5 கோடி என சொல்வது நம்புவது போல இல்லை,ஒருவேளை பாலா அந்த 5 ஏக்கர் டீஎஸ்டேட்டையே விலைக்கு வாங்கி படமெடுத்தார்  என ஸ்கூப் நியூஸில் படித்தேன், அந்த விலையையும் சேர்த்தா? 36.5கோடிகள்? யார் விளக்குவார்?!!!
பரதேசி படத்தின் டீசரில் டம்மி கொம்பால் அடிமைகளை அடித்து வெளுத்து வாங்கும் பாலாவின் மீது நான் முன் வைத்த கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை. அது உண்மையாக இருந்தால் சிக்.நிச்சயம் கண்டிக்கத்தகுந்தது.

படத்தின் படமாக்கத்தின் போதான டீசர் காணொளி (நன்றி விக்கீப்பீடியா, யூட்யூப், கூகுள்)