பாபி[1973]செம்பருத்தி[1992] திரைப்படங்களின் ஒற்றுமைகள்


பாபி[1973] என்னும் ட்ரெண்ட் செட்டர் படத்துக்கு கோவைத்தம்பியோ, ஆர்.கே.செல்வமணியோ  ட்ரிப்யூட் செய்தார்களா? அல்லது அப்பட்டமாக காப்பியடித்தார்களா? அல்லது முறையாக உரிமை வாங்கி ரீமேக் செய்தனரா? எனத் தெரியாது,

அப்படம் வந்து 19 வருடம் கழித்து வெளியான செம்பருத்தி படத்திலும் அதே கதை,அதே மீனவர் குப்பம் செட், அதே மலைக்கும் மடுவுக்குமான  அந்தஸ்தையும் ,சாதி,மத ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட இளஞ்சோடிகளின் காதல் கதை, பாபியைப் போன்றே செம கல்லாக் கட்டிய படம் இது.

பாபி படத்துக்கு திரைக்கதை எழுதிய கே.ஏ.அப்பாஸும் திறம்பட மிக மிக ரிச் அண்ட் ஸ்டைலாக இயக்கிய ராஜ்கபூரும் நினைத்திருப்பாரா? இப்படம் அடுத்தடுத்து எத்தனையோ ஏழைப்பணக்கார காதல் கதைகளை தோற்றுவிக்கப்போகிறது என்று?!!!

பாபி படம் மும்பை மற்றும் கோவா கடற்கரைப் பகுதியில் படமாக்கப்பட்டிருக்கும்,செம்பருத்தி விசாகப்பட்டினத்தில், அதிலும் ரிஷிகபூருக்கு ஒரு முறைப்பெண்ணை கட்டாயப்படுத்தி மணம் முடிக்கப் பார்ப்பார்கள், இதிலும் பிரஷாந்துக்கு வாசவி முறைப் பெண்ணாக இருப்பார், அவருடன் பட்டுப்பூவே பாடல் உண்டு. பிரஷாந்தின் மாமாவாக நாசர் இதில் வில்லன் கூடவே மன்சூரும்,http://www.youtube.com/watch?v=1DIfAjseARw

பாபியில் ஜூட்டு போலே கவ்வா காத்தே[பொய் சொன்னால் காக்காய் கொத்தும்] என்னும் மீனவர் குப்பத்தின் பிண்ணனியில் திருமண நிச்சயப்பாடலை இங்கே பாருங்கள்
 http://www.youtube.com/watch?v=KfTC5cJpmwA,

அதில் நடிகை டிம்பிள் கபாடியாவின் அலங்காரத்தையும் ரோஜாவின் செம்பருத்தி பூவு பாடலின்  அலங்காரத்தையும் பாருங்கள்,எத்தனை ஒற்றுமை?ஒரே வித்தியாசம் பாபியில் அவர் கருப்பு டூபீஸ்,ரோஜாவுக்கு செம்பருத்தியில் வெள்ளை டூபீஸ் அவ்வளவு தான். http://www.youtube.com/watch?v=JBZm4oMhjO8

 பாபி படத்தின் ரிஷி கபூரின் பெயரும்,ராஜா,செம்பருத்தியில் பிரஷாந்தின் பெயரும் ராஜா தான்,செம்பருத்தி படத்தில் வேலைக்காரி ரோஜாவின் உடைகள்,1973ல் டிம்பிள் கபாடியாவின் உடைகளை பின்பற்றியே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இரு படங்களிலும் பாட்டிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும்,பாபி படத்தில் மூத்த நடிகை Durga Khote ப்ரிஹான்ஸாவாக நடித்திருப்பார்,இங்கே பானுமதி ராமக்ரிஷ்ணா.

படத்தில் ப்ரேம்நாத் செய்த டிம்பிளின் குடிகார அப்பா கதாபாத்திரத்தை,இங்கே குடிகார அண்ணன் கதாபாத்திரமாக மாற்றி ராதாரவி செய்தார்,இங்கே மன்சூரலிகான் போல அங்கே யாரும் வில்லன் இல்லை,ஆனால் அதற்குப் பதிலாக பணவெறியும் சாதி வெறியும் கொண்ட ரிஷிகபூரின் அப்பா கதாபாத்திரம் உண்டு,அதை பழம்பெரும் நடிகர் ப்ரான் செய்திருப்பார்,

போர்சுகீசிய கிருத்துவ மதத்தைச் சேர்ந்த மீனவத் தந்தையான ஜாக் பிரிகேன்சா பாத்திரத்தில் ப்ரேம்நாத் ப்ரானுக்கு ஈடு கொடுத்து மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தாருக்கும் அந்தஸ்து மோதல் முற்றி மகள் டிம்பிளை கோவாவுக்கு தன் அம்மா வீட்டுக்கு பேக்கப் செய்து விடுவார் ப்ரேம்நாத்,

இதே செக்மெண்டை ஒரு சாயலில் தழுவி இயக்குனர் ஷங்கரும் தன் காதலன் படத்தின் ஆந்திரா செக்மெண்டை எடுத்திருப்பார்.பாபி படத்திலும் நாயகிக்கு பாட்டி உண்டு, காதலனில் மனோரமா பாட்டியாக வருவார்,பாபியிலும் நாயகியை கோவாவில் கொண்டு அப்பா ப்ரேம்நாத் சிறை வைத்துவிடுவார்,காதலனிலும் அது உண்டு,இந்த மூன்று படங்களிலுமே சின்னஞ்சிறுசுகளின் காதலுக்கு பாட்டிகள் உதவுவார்கள்.

பாபி படத்தில் நாயகியின் பாட்டி ரிஷிகபூரின் வீட்டில் ஆயாவாக இருந்தால்,செம்பருத்தி படத்தில் பாட்டி பானுமதிக்கு ரோஜா வேலைக்காரியாக வருவார்.[எப்படியெல்லாம் கதையை மிரர் செய்கின்றனர் பாருங்கள்?]

இரண்டு படங்களிலுமே பாஸிடிவ் எண்டிங் தான்,அதுவும் க்ளைமேக்ஸ் கூட நீருக்குள் தான்,பாபியில் நீர்வீழ்ச்சியில் என்றால்,செம்பருத்தியில் நடுக்கடலுக்குள் ஸ்டீமருக்குள்.

இப்படித்தான் நன்றாக ரீல் அறுகும் வரை ஓடிய ட்ரெண்ட் செட்டர் படங்களில் இருந்து புதிது புதிதாக நம் உதவி இயக்குனர்கள் சீன் சொல்லுகிறார்கள்,இயக்குனர்கள் அவற்றை தம் பெயரில் படைக்கிறார்கள், இவர்கள் ஒரிஜினலுக்கு மரியாதை செய்யும் வரை மோசமில்லை, ஒரிஜினலை அசிங்கப்படுத்துவது போல படைப்புகள் வரும் போது தான் உண்மையான கலாரசிகர்களுக்கு பற்றிக்கொண்டு வருகிறது.

பாபி படத்தில் இருந்து செம்பருத்தி படத்தில் செய்த முக்கியமான மாற்றத்தில் முதன்மையானது இசைதான்,பாபி படத்தின்  சாயல் கொஞ்சமும் இல்லாது இசைஞானி வழக்கம் போல  வள்ளலாக எட்டுப்பாடல்களை வாரித் தந்திருப்பார்.எல்லாமே புத்தம் புதிய முயற்சிகள்,இன்று கேட்டாலும் ஃப்ரெஷ்ஷான துள்ளலான பாடல்கள் அவை.

அதில் மிகச்சிறப்பாக கடலுல எழும்புற பாடலை இசைஞானி துவக்க, ஹனீஃபா அதை மேட்ச் செய்வது போல கடலிலே தனிமையில் போனாலும் என்று பிரமாதப்படுத்தியிருப்பார்,இது தவிர சாக்லேட் நம்பர்களான நிலாக்காயும் நேரம்,சலக்கு சலக்குச் சேல,பட்டுப்பூவே,ஹைக்கூ நம்பரான வஞ்சிரம் வவ்வாலு,பானுமதி பாடி முடிக்கும் செம்பருத்திப் பூவு என அத்தனை பாடலுமே ஆல்டைம் ஃபேவரிட் வகை. மங்காப்புகழைக் கொண்டிருப்பவை,பாபி படத்தின் லஷ்மிகாந்த்  ப்யாரிலால் இசையமைத்த பாடல்களும் அப்படியே.

இப்போது ஆள் ஆளுக்கு இட்லி,வடை,போண்டா என்று தமிழ் சினிமாவில் உவமை சொல்லுவது தானே ஃபேஷன்?, எனவே நானும் ட்ரெண்ட் செட்டர் படங்கள் கூட புரை மோர் போலத்தான்,அதைக்கொண்டு தான் புதிதாக காய்ச்சி ஆறிய பாலை உறை குத்துகின்றனர்.என்னும் உவமையைச் சொல்லி முத்தாய்ப்பாக முடிக்கிறேன்.