ஃபன்றி [Fandry ][फँड्री] [2014] [மராத்தி]



ஃபன்றி திரைப்படம் பற்றி முன்பே எழுத வேண்டும் என்று நினைத்தும், முடியவில்லை,ஃபன்றி திரைப்படம் நிறைய ஆச்சர்யங்களை என்னுள் விட்டுச் சென்றது. அதில் முதன்மையாக சிறுவன் ஜப்யா குடும்பத்தினர் பேசுகிற கைக்காடி மொழிக்கும் தமிழுக்கும் நிறைய சொற்களில் ஒற்றுமை இருந்தது, கைக்காடி மொழியிலும் திருவிழா என்றே திருவிழாவை சொல்லுகின்றனர். பின்னர் பன்றியை ஃபன்றி என்றே சொல்லுகின்றனர்.வாங்க,வாங்க என்றே வரவேற்கின்றனர்,இங்குட்டு அங்குட்டு என்று இடம் சுட்டுகின்றனர்.

கதை மஹாராஷ்ட்ராவின் அஹமத்நகரின் அருகே அமைந்துள்ள ஒரு குக்கிராமமான அகோல்நரில் நடக்கின்றது,அகோல்நார் தொழிநுட்ப வசதியிலும்,வாங்கும் திறனிலும் எத்தனை தான் வளர்ந்திருந்தாலும், ஊராருக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாத வினோத கிராமம்.ஊரார் அதிகாலை,பகல் என லஜ்ஜையேயின்றி வெட்டவெளியில் தான் மலம் கழிக்கின்றனர்,எல்லோர் கையிலும் அவரவர் வசதிக்கேற்ப பித்தளையிலோ, இரும்பிலோ, ப்ளாஸ்டிக்கிலோ கழுவ நீ அடங்கிய கோப்பையை எடுத்துச் செல்கின்றனர்,

ஊரில் வெட்ட வெளியில் கழிக்கப்படும் மலத்தை தின்பதற்கென்றே எங்கிருந்தோ வந்து குடியேறிய பன்றிகள்,இரண்டு நூறாகி பல்கிப் பெருகியிருக்கின்றன.ஊரார் மலத்தை உண்டு சுத்தம் செய்யும் பன்றிகளை, நன்றியுடன் பாராமல்,அதை அருவருத்து ஒதுக்குவது அங்கும் வழக்கத்தில் இருக்கும் செயல்,ஒருவர் மீது பன்றி பட்டுவிட்டால்,அவர் வீடு சென்று குளித்து பசுமாட்டின் கோமியம் தெளித்து சுத்தியாவது வரை அவரும் தீட்டுப்பட்டவர்கள் தாம் என்கின்றனர். ஊரில் திரியும் பன்றிகளால் ஊராரால் நிம்மதியாக சென்று மலம் கழிக்க முடிவதில்லை,அவைகள் புட்டத்துக்கு பின்னர் காத்திருப்பது ஊராருக்கு குருகுருவென்றிருக்கிறது.

இங்கே தான் ஊரே ஜப்யாவின் குடும்பத்தை நம்பியிருக்கிறது, அவர்களை ஊரார் வறட்டு அதிகாரத்துடன் ஹே பரையா என்றே அழைக்கின்றனர்,இந்தச் சொல் பெரியார் புண்ணியத்தில் தமிழகத்தில் அதிகம் வழக்கொழிந்து போனாலும் , மஹாராஷ்டிரம் உள்ளிட்ட ஏனைய மாநிலங்களில் இச்சொல் மிகவும் சர்வ சாதாரணமாக இன்றும் கையாளப்படுவது கண்கூடு.

ஜப்யா 12 வயது சிறுவன்,ஏழாம் வகுப்பு படிக்கிறான்,தாழ்த்தப்பட்ட மானே சமூகத்தைச் சேர்ந்தவன்,வாழாவெட்டி அக்கா கைக்குழந்தையுடன் வீட்டில் இருக்க, மற்றொரு அக்காவுக்கு வரன் பார்க்கிறார் ஜப்யாவின் அப்பா, ஜப்யாவின் அப்பாவுக்கு நிரந்தர தொழிலோ வருமானமோ கிடையாது, அவருக்கு ஊர் தலைவர் காலால் இடும் வேலையை தலையால் செய்யும் கட்டாயம் இருக்கிறது, ஊரில் சாதி வெறி அப்பட்டமாக தலைவிரித்தாடுவதைக் காண முடியும். ஜப்யாவுக்கு உயிர் தோழன் பிர்யா, அவனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்,அவன் பாடாவது தேவலாம்,

பிர்யா தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்தாலும் ஜப்யா போல ஏழ்மை நிலை இல்லை,வீட்டுக்கு ஒரே மகன். ஜப்யா பணிக்குச் செல்ல பள்ளிக்கு விடுப்பு எடுக்கிறான்,பிர்யா உடம்புக்கு ஜுரம் என்று விடுப்பு எடுக்கிறான்.நண்பன் பிர்யா ஜப்யாவுடனே திரிகிறான், ஜப்யாவுக்காக பொய்கள் சொல்கிறான், அவன் ஹீரொக்கணக்காக அழகாயிருப்பதாகவும், சக மாணவி ஷாலு அவனையே பார்ப்பதாகவும் ஜப்யாவின் காதல் பித்துக்கு கொம்பு சீவி விடுபவன், அவனும் கருங்குயிலின் இறகுக்கும்,அதன் சாம்பலுக்கும் ஜப்யாவின் கூடவே அலைகிறான்.கருங்குயிலின் இறகு வேறு ஒரு தனிக்கதை,மேலும் படியுங்கள்.

ஜப்யாவின் ஆதர்சமான சைக்கிள்கடை சாங்யா ஒருமுறை விளையாட்டாக சொன்னாரோ?வினையாகச் சொன்னாரோ? தெரியாது, என்னை எப்படி அந்த பணக்காரப் பெண் காதலித்து என்னுடன் ஓடி வந்தாள் என்கிறாய்?!!!எல்லாம் ராஜ வசியம் தான்,கருங்குயிலை எரித்து அதன் சாம்பலை அவள் மீது ஊதி விட,ராஜ வசியம் சித்திக்கும் என்று சொல்ல,

அன்று முதல் விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி என்று அந்த பீக்காட்டுக்குள்ளேயே திரிகின்றனர் ஜப்யாவும் பிர்யாவும்,இவன் பறவை பிடிக்கப் போகும் இடத்தில் நடக்கும் கூத்துக்கள் ஒன்றா இரண்டா?எத்தனை ஏச்சுப் பேச்சு,ஒரு கிழவி ஜப்யாவிடம்,நீ மரமேறி,பறவைக்குஞ்சுகளை தொடுவதை தாய்ப்பறவை பார்த்தால் அந்த உயர்ந்த சாதிப்பறவைகள் தீட்டுப்பட்ட தன் குஞ்சுகளை கூட்டில் சேர்க்காது விரட்டிவிடும் என்கிறாள் , புண்ணியவதி.

ஜப்யா வீட்டில் எல்லோரும் வேலை செய்தால் தான் மூன்று வேளை அடுப்பெரியக்கூடிய நிலை,ஜப்யாவின் 80 வயது தாத்தா கூட கூடை முடைகிறார், ஜப்யா பெற்றோரால் வலுக்கட்டாயமாக பள்ளிக்கு விடுப்பு எடுக்க வைக்கப்பட்டு கட்டிட வேலைக்கு கூட்டிச் செல்லப்படுகிறான்,சினிமா என்பது காட்சிகளின் மீடியம் என்னும் கூற்றுக்கேற்ப ஃபன்றி நம்மை அதன் நேர்த்தியான காட்சியமைப்புகளால் கட்டிப்போட்டு, நம்மை உள்ளே இழுத்து விடுகிறது. படத்தின் துவக்கமே இனிமையான கிடார் இசை ஒலிக்க, பெற்றோரால் பணிக்கு அனுப்பப்பட்ட சிறுவன் ஜப்யா அங்கே டிமிக்கி கொடுத்துவிட்டு ஒரு இரட்டை வால் கொண்ட கருங்குயிலின் பின்னே ஓடி அதைத் தம் உண்டிக்கோலால் வீழ்த்த எத்தனிக்கும் படலத்தில் தான் துவங்குகிறது.

ஜப்யாவின் அப்பா சாராயம் குடித்தாலும் கூட சலம்புவதில்லை,அவர் போதையினூடாயேனும் சற்று சந்தோஷம் கொள்வதை ஊரின் சக குடிகாரர்கள் விரும்புவதில்லை, அருகே வரவழைத்தோ,அருகே சென்றோ ,வலிக்கும் வரை வார்த்தையால் குத்துகின்றனர், இதற்கு ஜப்யா,அவன் அம்மா,அக்காள்கள்,தாத்தா என யாரும் விதிவிலக்கல்ல, ஜப்யாவையேனும் படிக்க வைப்போம் என்று அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர்.ஆனால் அவனை ஒழுங்காக பள்ளிக்கு அனுப்பவாவது விடுகிறதா?வீட்டின் வருமை!!!
ஜப்யா தன் ஊரில் இருக்கும் ஒரே பள்ளியில் தன்னார்வத்துடன் படிக்கிறான்,பள்ளியில் அம்பேத்கர் படங்கள் விஸ்தாரமாக வரைந்து வைக்கப்பட்டிருந்தாலும், இரட்டைக்குவளை முறைக்கு ஈடான தீண்டாமை வகுப்புக்குள்ளே புழங்குவதைப் பார்க்கிறோம்,அங்கே ஒரு உயர் சாதி மாணவனின் அருகே அமர்ந்திருக்கும் மாணவன் பிர்யா,இவன் மீது நான் தொட்டாலோ பட்டாலோ இவன் என்னை திட்டுவான் அடிப்பான் என்று ஆசிரியரிடம்,சொல்லிவிட்டு,தம் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் அமர்ந்திருக்கும் பின் பெஞ்சில் சென்று அமர்வதை நாம் பார்க்கிறோம்.

 ஜப்யா வகுப்பில் சகமாணவி , உயர் குடியைச் சேர்ந்த ஷாலுவை நேசிக்கிறான், அவளோ இவனை ஒரு மார்க்கமாகத் தான் பார்க்கிறாள், இளப்பமாகத்தான் நினைக்கிறாள்,அவளுக்கு தன் வீட்டின் அண்டை வீட்டு ஊர் பெரியவரின் மகனான சக மாணவன் மீது தான் ஒரு கண் இருக்கிறது, ஜப்யா அதை பொருட்படுத்துவதில்லை, ஆனால் அந்த பணக்கார மாணவன் ஜப்யாவை பார்வையாலேயே உருட்டி மிரட்டுகிறான். தான் தன் டிஸ்கவர் பைக்கில் பள்ளிக்கு விரைகையில் எதிப்படும் ஜப்யாவை புழுவைப் பார்ப்பது போலப் பார்க்கிறான்.அவனை தாக்க தருணம் பார்க்கிறான்.

 ஜப்யாவுக்கு ஷாலுவின் மீது இருப்பது இளம் பருவத்தில் வரும் பிஞ்சுக்காதல் தான், தன் விடாப்பிடியான வறுமையின் வடிகாலாக அவன் காதலை நினைக்கத் துவங்கிவிட்டான், பெற்றோர் எத்தனை சொன்னாலும் அது அவன் செவிகளில் ஏறுவதில்லை, காதல் எந்த நேரத்தில் யாருக்கு யார் மேல் வரும் என்று சொல்ல முடியாது, எத்தனையோ விடலைப் பருவத்து காதல்களை நாம் திரையில் கண்டும், வாழ்வில் பல சமயங்களில் கண்டு கேட்டு இருந்தாலும் ஜப்யாவின் காதல் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது, அத்தனை நேர்த்தியாக படைக்கப்பட்டிருந்தது சிறுவன் ஜப்யாவின் கதாபாத்திரம்.

ஜப்யாவுக்கு சாதி அடக்குமுறைக்கு குனிந்து போகப் பிடிப்பதில்லை,அந்த உள்ளக் கிடக்கையே ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஷாலுவை தீவிரமாக காதலிக்கத் தூண்டுகிறது, அவளைப் பார்க்க தினசரி அவன் மனதுக்கு நெருக்கமான சாங்யா [நாகராஜ் மஞ்சுளே] அண்ணன் கடையில் சென்று அமருவதை வழக்கமாக வைத்திருக்கிறான், சாங்யா பற்றி சொல்ல நிறைய விஷயமுண்டு, சாங்யாவை நான் எங்கள் தெருவில் பார்த்திருக்கிறேன், நீங்கள் கூட உங்கள் தெருவில் ஒரு சைக்கிள் கடையிலோ,மளிகைக் கடையிலோ,தையல் கடையிலோ,அல்லது ஒரு ஃபேன்ஸி ஸ்டோரிலோ பார்த்திருக்க முடியும். இப்படித்தான் சாங்க்யா பாத்திரம் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.

நான் இருந்த பல்லாவரம் சாவடித் தெருவில் ஒரு ராமசாமி டெய்லர் இருந்தார்,பள்ளியில் எட்டிக்காய் போல கசக்கும் கணக்குப் பாடம்,வீட்டுப் பாடம் எழுதாமல் தண்டனை அடையும் கால இடைவேளைகளை நான் அங்கே தான் கழிப்பேன், அங்கே தான் எடுபிடி வேலை செய்து கொண்டு, இளையராஜா பாடல்களை அவரின் அசெம்பிள் செட்டில் அட்டகாசமான ஆம்ப்ளிஃபையரில் ,மண் பானை மீது அமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களுடன் கழித்திருக்கிறேன்,

அவரும் இதே நாகராஜ் மஞ்சுளே போன்ற பிச்சிக்கட்டி கருப்பு,ஆதிதிராவிடர் தான், ஆனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த, எதிர் வீட்டுப் பெண்ணை அட்டகாசமாக உஷார் செய்து , அப்பெண் ட்யூஷனுக்கு சென்றிருந்த போது கூட்டிப்போய் தாலி கட்டி சிதம்பரம் சேத்தியாதோப்புக்கு கூட்டிச் சென்று சிலமாதம் குடித்தனம் நடத்திவிட்டு,சண்டை சச்சரவுகள் போலீஸ் கேஸ், முழுக்க தீர்ந்தபின்னர் தான் இங்கே வந்தார், பெண்வீட்டாரை சமாதானம் செய்து இப்போது சமூகத்தில் மதிப்பும் மரியாதையுடன் இருக்கிறார்.

இது சென்னையில் நடக்கும், ஆனால் தர்மபுரியில் நடக்காது,பெருநகர சூழலில் சாதி பலசமயம் இப்படிக் குளிர்விட்டுப் போகிறது,ஆனால் ஃபன்றி படத்தின் சாங்யாவுக்கு அப்படி நிகழவில்லை, சாங்யா பக்கத்து சிற்றூரில் சைக்கிள் கடை வைத்திருந்தவர், ஆதிக்க சாதிப் பெண்ணை காதலித்து மணக்கிறார், அப்பெண்ணும் சாங்க்யாவின் மீது மிகுந்த நம்பிக்கையும், காதலுடனும் வாழ்ந்தால் இவருடன் தான் என்று பிடிவாதமாக வந்து வாழத்துவங்கியவளை,ஒரு இரவு பெரிய காட்டுக்கும்பல் ,கத்தி கடப்பாரையுடன் வந்து சாங்யாவை அடித்து குத்துயிராகக் கிடத்திவிட்டு அவளை மீட்டுச் சென்று விடுகிறது.
[இவை காட்சியாக வராது,ஆனால் சில நொடிகளில் கடக்கும் வசனமாக வரும்] அதிலிருந்தே ஊராருக்கு சாங்யா மீது ஒரு வெறுப்பு கலந்த பயம் இருக்கிறது,சாங்யாவின் கடையின் சூழலே ஒரு வித்தியாசமானது,அவர் கடையின் பெயர் லவ் சைக்கிள் மார்ட் அண்ட் கேரம் ஹவுஸ்,அங்கே பூஜை மாடத்தில் வசியத்துக்கு பெயர் போன பகவதி ,வாக்தேவி உள்ளிட்ட தெய்வங்களின் படங்களை நாம் பார்க்கிறோம், லோக்கல் மராட்டா கதாநாயகனின் போஸ்டரும் இருக்கிறது,பூஜை மாடத்தில் ஒரு கருப்பு பொம்மை தலை கீழாக ஒற்றைக்காலில் கட்டி தொங்கவிடப்பட்டு காற்றில் ஆடும் ஒரு வினோதமான சூழல்.

ஊரார் சாங்யாவை மறை கழன்ற கேஸ் என்றே ஒதுக்கியும் ஒதுங்கியும் இருக்கின்றனர். எதிர் வீட்டில் இருக்கும் ஷாலுவின் தகப்பனும் ஒரு ஊர் பெரிய மனிதன், ஒரு நாள் அவர்கள் வீட்டு நல்ல தண்ணீர் குழாய் தொட்டியில் ஒரு குட்டிப் பன்றி விழுந்து வெளியேற முடியாமல் தவிக்க, அவர் ஜப்யா சைக்கிள் கடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தவர் அதட்டி அழைத்து, பன்றியை வெளியேற்றச் சொல்கிறார்,ஜப்யா முடியாது என்று துணிவாக கூறிவிட்டு அகல்கிறான்,ஜப்யாவின் அப்பாவுக்கு விஷயம் போய் அவர் அங்கே அந்தக் குழிக்குள் இறங்கி பன்றிக்குட்டியை வெளியேற்றியவரைப் பார்த்து ஷாலுவின் தாய்,அந்த தொட்டியில் எஞ்சியுள்ள் நீர் தீட்டுப்பட்டுவிட்டது,அதையும் சுத்தம் செய்,என்கிறாள்,அவர் செய்துவிட்டு பன்றிக்குட்டியை வீட்டுக்கு எடுத்துச்சென்று அறுத்து கழுவி சமைக்கிறார்,
ஊரில் பன்றிகள் அட்டகாசம் அதிகமாகிவிட்டது,ஜப்யாவின் அப்பா ஊருக்குள் நடக்கையில் அவர் தான் பன்றிகளை வளர்த்து மேய விடுவது போல ஊரார் அவரை கேலி செய்து நோகடிக்கின்றனர்,அவருக்கோ பன்றியின் பின்னே ஓடிச் சென்று சுருக்கிட்டு பிடிக்கமுடியாத முதுமை,சிறிது காலமாக மூட்டு வலியும் வேறு சேர்ந்து கொண்டது,இந்நிலையில் தான் ஜப்யாவின் இளைய சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகிறது,அதற்கு அவர்கள் சாதி வரன் ஒருவர் ஐம்பதாயிரம் ரொக்கமும்,ஒரு சவரன் மோதிரமும் கேட்கிறான்,ஜப்யாவின் தந்தை கையைப் பிசைய,இருவருக்கும் பொதுவாக அமர்ந்திருக்கும் தரகர் மத்தியஸ்தம் செய்து,இருவரும் கொஞ்சம் இறங்கி வாருங்கள்,20ஆயிரம் ரொக்கம் ஒரு சவரன் மோதிரம் என்கிறார்,

அப்போதும் ஜப்யாவின் அப்பா சங்கடப்பட்டு என்னால் இருக்கும் வருமையில் அத்தனையெல்லாம் முடியவே முடியாது என கூசிக்குறுகிச் சொல்ல,சரிப்பா ஐயாயிரம் ரொக்கம் என்று அவரே நடுநாயகமாக பேசி முடிக்கிறார்,அக்காட்சி எத்தனை இயல்பாக எடுக்கப்பட்டிருக்கும்?இதை உலகசினிமா என்று சொல்லாமல் எதைச் சொல்வது?நிச்சயம் பேசியதும் குடிசை வீட்டின் உள்ளே இருந்து எவர்சில்வர் தட்டில் பல வடிவங்களில் அக்கம்பக்கத்து வீடுகளில் கடன் வாங்கப்பட்ட குட்டையான உயரமான,பூப்போட்ட பூப்போடாத பீங்கான் கோப்பைகளில் தேநீர் வரும்,அதைப் பல கைகள் எடுத்து தாகசாந்தி செய்து கொள்ளும் ஒரு அரிய காட்சி.அது இயக்குனர் நாகராஜ் மஞ்சுளேவைக் கொண்டாட வைக்கும்.

ஊரில் திருவிழாவும் நெருங்குகிறது,ஜப்யாவின் சகோதரிக்கும் திருமண முஹூர்த்த நாள் நெருங்குகிறது,பணம் தேர்த்த முடியவேயில்லை,முடைந்து வைத்த கூடைகளை விற்கின்றனர். ஜப்யாவின் அப்பா மராமத்து பணிக்கும்,வெள்ளையடிக்கும் வேலைக்கும்,அவர் குடும்பத்தார் குப்பை வாரும் வேலைக்கும் சென்று வந்தும் பணம் பெயரவில்லை.
இது இப்படி இருக்கையில் ஜப்யாவும் பிர்யாவும் ஒருவாரம் நடக்கும் திருவிழாவில் பெப்சிக்கோலா விற்கின்றனர்,அதற்கு சைக்கிளை ஜப்யாவுக்கு சாங்யா அண்ணனே வாடகைக்குத் தருகிறார்.அண்ணனிடம் திருவிழா முடிந்து சைக்கிள் வாடகையைத் தருவதாக சொல்கிறான் ஜப்யா.ஆனால் அவன் எதிர்பாராத அந்த சம்பவம் அன்று நடந்து விடுகிறது,அன்று வழக்கம் போல அஹமத் நகர் சென்று,பெப்சிக்கோலாவை தெர்மக்கோல் பெட்டியில் ஏற்றி கேரியரில் வைத்துக் கொண்டு விற்க விரைகையில், ஒரு அக்வாரியம் கூடிய ஃப்ளோரா ஃபன்னா கடையைப் பார்க்கிறார்கள் ஜப்யாவும் பிர்யாவும்,ஜப்யா தன் சைக்கிளை ஒரு சரக்கு லாரிக்குப் பின்னே அசட்டையாக நிறுத்திவிட்டு,அந்த பறவைகள் விற்கும் கடைக்குச் சென்று கருங்குயில் விற்பனைக்கு இருக்கிறதா? என ஆவலுடன் கேட்க,இல்லை இங்கே லவ் பேர்ட்ஸ் மற்றும்,கிளி மட்டும் இருக்கிறது,என்கிறார் கடைக்காரர்

அப்படி அவன் வாயடித்துக் கொண்டிருக்கும் போதே சரக்கு லாரி ரிவர்ஸில் வந்து ஜப்யாவின் சைக்கிளையும் ஐஸ் பெட்டி சரக்கையும் நசுக்கிவிட்டுச் சென்றுவிடுகிறது,இப்போது தான் ஐஸ் விற்று வாங்க நினைத்த கில்லர் ப்ராண்ட் ஜீன்ஸ் விற்கும் கடையை ஏக்கத்துடன் நசுங்கிய சைக்கிளை பிர்யாவின் சைக்கிளில் பின்னே சுமந்து கொண்டு செல்லுகிற வழியில் பார்க்கிறான் ஜப்யா.

பிர்யா தான் பெப்சி கோலா விற்ற காசையும் ஜப்யாவிடம் தர அதைக்கொண்டு சென்று பெப்ஸிக்கோலா கம்பெனியில் கொடுத்து,மீதம் உள்ள பணத்தை அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு வருகிறான் ஜப்யா.பின்னர் சாங்யா அண்ணாவிடம் சென்று சைக்கிளுக்கு வாடகை எத்தனை என்று கேட்க,அதைவிடுடா!!!150 ரூபாய் வரும், ஏன் அழுகிறாய்,என்று அவர் கேட்க,சைக்கிள் நசுங்கியதைச் சொல்கிறான்,சரி விடு,சந்தோஷமாயிரு,நாளை திருவிழாவில் நாம் கலக்க வேண்டும்,உன் பறை மேளத்தை நன்றாக தயார் செய் என்று ஊக்கமளித்து அனுப்புகிறார் சாங்யா.

மறுநாள் பகல் முழுக்க திருவிழாவில் பிர்யாவுடன் இன்பமாகக் கழிக்கிறான்,ஷாலுவை பல கோணங்களில் வெறிக்கிறான்,உடன் அலைவதைப் பார்த்த அந்த பணக்காரச் சிறுவன் ஜப்யாவை மிரட்டி விரட்டுகிறான். சாங்யாவின் அப்பாவிற்கோ ஜப்யாவுக்கு திருவிழாவின் போது புதுத்துணி வாங்கித்தரமுடியாத குற்ற உணர்வு பீரிட,அவனை அழைத்துப் போய் கடைக்காரன் கிண்டல் செய்வதையும் பொருட்படுத்தாமல் ஜப்யாவுக்கு 100 ரூபாயில் கடையிலேயே மிக மலிவான சட்டை எடுத்து அணிவிக்கிறார்,ஜப்யாவுக்கு ஆத்திரமும் அவமானமும் பீரிடுகிறது.

சாங்யா அண்ணனை திருவிழாவில் பார்த்தவன் பறையைக் கொண்டு போய் அடித்துக்காட்டுகிறான்,உற்சாகம் கொண்டவர்,இன்று இரவு நடக்கும் சாமி ஊர்வலத்தில் பட்டையைக் கிளப்புவோமடா,என்று முழங்கிவிட்டு, சாராயக்கடைக்குள் நுழைகிறார். சிறிது நேரம் கழித்து இரண்டு ஆள் பலத்துடன் வெளியே வந்த சாங்யா,திருவிழா ஊர்வலத்தில் அதீத உற்சாகத்துடன் ஜப்யா பறையடிக்க,சாங்யா குத்தாட்டம் ஆடுகிறார்,ஊரே மிகுந்த உற்சாகத்துடன் வேடிக்கைப் பார்க்கிறது, ஷாலுவும் மகிழ்ந்து ஜப்யாவைக் கண்விடுவதைக் கண்ட சாங்யா ,யாரும் எதிர்பாராத போது பறையடித்துக் கொண்டிருக்கும் ஜப்யாவை அலேக்காக தன் தலைக்கு மேல் தூக்கி தன் தோள் மீது அமர வைத்தபடி ஆடுகிறார்,இது ஜப்யாவின் அப்பாவுக்கு பயத்தையும் வெறுப்பையும் உண்டாக்குகிறது.

அங்கே உயரத்தில் ஆதிக்க சாதிகளின் தலைக்கும் மேலே மிஞ்சி விடுகிறான் ஜப்யா, அவன் பிறந்ததிலிருந்து என்றுமே இத்தனை மகிழ்ச்சி கொண்டதில்லை, அப்படி சுழன்று ஆடுகிறார் சாங்யா. எதிரே ஊர்மக்கள் இதைப் பொருக்காது, ஜப்யாவின் அப்பாவைக் கூப்பிட்டு பெட்ரோ மேக்ஸ் விளக்கை நன்கு தூக்கிப் பிடிக்குமாறு கட்டளை இட,அவர் இவனை திட்டி கீழே இறக்கியவர்,அவன் தலை மீது ஒரு பெட்ரோ மேக்ஸ் விளக்கும் தன் தலைமீது ஒரு பெட்ரோ மேக்ஸ் விளக்கையும் ஏற்றிய படி கூட்டத்துக்கு விளக்கு பிடிக்கிறார்.அப்போது கேதார்நாதரின் மூலவர் விக்ரஹம் பல்லக்கில் கொண்டு வரப்படுகிறது,எல்லோரும் ஆரத்தி எடுக்க,ஜப்யாவுக்கு அழுகை பீறிடுகிறது,பிஞ்சு உள்ளத்தின் தலையிலும் மனதிலும் பாரம். அப்போது கூட்டம் ஓலமிட,மின்சாரமும் தடைபடுகிறது, அங்கே அந்த பட்டாசுச் சத்தத்தில் மிரண்ட பன்றிகள் கூட்டத்துக்குள் புகுந்து பல்லக்கு சுமந்தவர்களின் மீது உரசிச் செல்ல,அவர்கள் பன்றி மேலே பட்டவுடன் பல்லக்கையே அந்தரத்தில் விட்டுவிட்டு ஓட,திருவிழா தடைபடுகிறது,

இரவே ஊர் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு ஜப்யாவின் அப்பா முன்நிறுத்தப்பட்டு கண்டிக்கப்படுகிறார்,இந்தா நீ கேட்ட பணம்,இதை வைத்துக்கொண்டு என்ன செய்வாயோ?நாளை பன்றிகளை இவ்வூரை விட்டு நீ அகற்றியிருக்க வேண்டும்,சின்ன பன்றிக்குட்டு கூட மிஞ்சக்கூடாது,கொல்லுவாயோ,பிடித்து விற்பாயோ தெரியாது,எத்தனை பேரை வேண்டுமானாலும் கூட்டிக்கொள்,ஆனால் காரியம் நடக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். ஊரார் சொல்லையும் தட்ட முடிவதில்லை.பன்றியை பிடிக்கும் சாமர்த்தியமும் இல்லை,என்ன செய்வது என்று திகைக்கிறார் ஜப்யாவின் தந்தை,

விடிகையில் மனைவி,மகள்கள்,ஜப்யா என எல்லோரையும் எழுப்பி கூட்டிச் சென்றவர்,பன்றி பிடிக்கும் படலத்தை துவக்குகிறார்,அதுவோ ஊரார் மலம் கழிக்கும் பிரம்ம முஹூர்த்த நேரம்,அத்தனை பேர் புட்டத்தையும் இவர்கள் பார்க்க வேண்டியிருக்கிறது,ஊராரில் சிலர் ஜப்யாவின் சகோதரிகளையும் தாயையும் கூட கிண்டல் செய்கின்றனர்,ஜப்யாவோ அப்பாவுக்கு உதவாமல் அவமானத்தால் தொலைவில் சென்று ஒளிந்து கொள்கிறான்,பள்ளி துவங்கும் நேரம் வருகிறது,இப்பொது பள்ளியில் கடவுள் வாழ்த்து பாடப்படுகிறது,கொஞ்சம் நிம்மதி அடைகிறான் ஜப்யா.
 
ஊரும் சக மாணவர்களும் கூடி இவர்கள் குடும்பம் பன்றிகளின் பின்னே ஓடுவதைப் பார்த்து கைகொட்டி சிரிக்கின்றனர்,ஜப்யாவின் அப்பாவுக்கோ மகன் எங்கோ அவமானம் கருதி ஒளிந்து கொண்டதைத் தாங்கமுடிவதில்லை, அவனை கற்களாலேயே அடித்து இழுத்து வந்து பன்றி பிடிக்க வைத்திருந்த சுருக்கை வலியத்திணிக்கிறார்,   கூசிக்குறுகியவன் உடைந்து அழுகிறான், ஆனாலும் ரோஷ ,அவமானத்தாலும் இளம் கன்று  ஆதலாலும்,ஒரு பெரிய தாய்ப் பன்றியையே சுருக்கு வீசிப் பிடித்தும் விடுகிறான்.அதற்குள் மதிய உணவு வேளையும் வந்து விடுகிறது,மீண்டும் மாணவர் படையெடுக்கின்றனர்.

ஊரே பன்றி பிடிப்பதை கூடி நின்று பார்த்து கோஷம் போட,இவன் நேசிக்கும் ஷாலுவும்,அதைக்கண்டு அப்படி இல்லாத மார்பு குலுங்க சிரிக்கிறாள்,இவனுக்கு வேதனை அதிகமாகிறது,ஊரின் அந்தப் பணக்காரச் சிறுவன் தன் புதிய ஸ்மார்ட் போனில் அதை வீடியோ எடுத்து யூட்யூபில் தரவேற்றியும் ,mms அனுப்பியும் தன் சக ஆதிக்க சாதி வெறியர்களிடம் காட்டிச் சிரிக்கிறான்.

இப்போது அந்தப் பன்றி சுமார் 100 கிலோ இருப்பதை ஒரு பெரிய கழியில் தலை கீழாக கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் இரு சகோதரிகளும் பின்னே சுமந்துச் வர, முன்னே ஜப்யா தூக்கிச் செல்கிறான்,அவர்கள் பின்னே நிழலாகத் தொடர்ந்த அந்த ஆதிக்க சாதி வெறியன் பலவாறு கிண்டல் செய்கிறான், அங்கே பொருத்தது போதும் என்று பொங்கி எழும் ஜப்யா ஒரு கருங்கல்லைப் பொருக்கி எடுத்து அந்த ஆதிக்க சாதி முட்டாளின் நெற்றியை நோக்கி எரிகிறான்,கல் குறி தவறாது அவனின் நெற்றியை பெயர்த்து உடைப்பதுடன் படம் முடிகிறது. நம் உள்ளம் துள்ளுகிறது,அந்த நொடியில் நாம் ஜப்யாவாகவே மாறி விடுகிறோம்.

  • அதன் பின்னர் ஜப்யா கொல்லப்பட்டிருக்கலாம்.
  • அதன் பின்னர் ஜப்யாவின் தாய் தமக்கைகள் ஊராரால் வன்புணர்வு செய்து பெண்டாளப்பட்டிருக்கலாம்.
  • அதன் பின்னர் ஜப்யாவின் அப்பாவின் வாயில் அந்த ஊர் தடியர்கள் சேர்ந்து மலக்கரைசலை ஊற்றியிருக்கலாம்.
  • அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காமல் அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம்
ஆனால் க்ளிஷேவான மேற்சொன்னவை  எதுவும் நிகழாத படி ஒரு தலித் வெற்றி சூடுவது போன்றும்,ஆதிக்க வெறி மண்ணில் வீழ்வது போன்றும் சினிமாவில் முதன் முதலில் அங்கே காட்டப்பட்டது மிகத்துணிச்சலான கட்டுடைத்தல் ஆகும்,இந்த ஆலம் விதை நாளை பெரிய மரமாகி வேர்விடும் என்ற நம்பிக்கை நம்முள் துளிர் விடுகிறது,இதற்குத்தான் நாம் நாகராஜ் மஞ்சுளேவைப் போற்றுகின்றோமே தவிர அவர் சில குசும்பு பிடித்த கட்டுரையாளர்கள் சொல்வது போல ஓவர் ரேட்டடாக புகழப்படவேயில்லை.

இப்படத்தை எல்லா பள்ளி கல்லூரிகளிலும் அரசு செலவிலேயே திரையிட்டு தீண்டாமையையும்,அடக்குமுறையையும் வேரறுக்கும் பணியை முன்னெடுக்க வேண்டும்.தீண்டாமை அறவே ஒழிகையில் தான் நாம் சுதந்திர தினமோ,குடியரசு தினமோ கொண்டாடுவதில் முழு அர்த்தம் இருக்கும்.

இப்படத்தினை விரிவாக எழுதுவதற்குக் காரணம் நான் இணையத்தில் படித்த கட்டுரைகளே, ஏனையவை, நிறைய தகவல் பிழைகளையும் கொண்டிருந்தது, ஒருவர் தி இந்துவில் ஜப்யா வீட்டாரே பன்றிகளை வளர்ப்பதாக எழுதியிருந்தார், விக்கியிலும் தமிழில் எழுதியவர் அப்படியே எழுதியிருந்தார். எல்லாவற்றுக்கும் காரணம் அவசரம் தான்,படத்தை கவனமாக அணுகி எழுதாத செயல் தான்.

ஃபன்றி திரைப்படம் யூட்யூபில் நல்ல தரத்துடன் சப்டைட்டிலுடன் பார்க்கக் கிடைக்கிறது.அவசியம் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=1a8VQa8gFYs