நிம்போமேனியாக் வால்யூம்-1 உமா தர்மேனின் மனம் கவர்ந்த காட்சி


பிறன்மனை நோக்கும் கன்னிகைகளுக்கு சமர்ப்பணம்.


லார்ஸ் வான் ட்ரையரின் நிம்போமேனியாக் வால்யூம்-1 மற்றும் வால்யூம்-2 செக்ஸைப் பற்றி மட்டும் பேசும் படைப்பு என்றால் அது அறிவீனம், இப்படைப்புகள் பேசாத விஷயமே இல்லை, இப்படம் பற்றி முழுக்க ஆலசி ஆராய்ந்து எழுத நெடுந்தொடர்கள் எழுத வேண்டும்.இப்போதைக்கு உமா தர்மேன் தோன்றிய இக்கதாபாத்திரம் பற்றி மட்டும் இப்பதிவில் சொல்லியிருக்கிறேன்.
 
இல்லறத் திருட்டு என்பது நாம் சமுதாயத்தில் அனுதினமும் கண்ணுறும் சர்வ சாதாரணமான ஒன்று தான் என்றாலும், அதன் வலி அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

நிம்போமேனியாக் வால்யூம்-1ல் ஜோ என்னும் இளம் பெண்ணிடம் தன் கணவனைப் பறிகொடுத்து விட்டு கணவன் ஜோவின் வீட்டுக்குள் நிரந்தரமாக பெட்டி படுக்கையுடன் சென்ற மறு நிமிடமே, தன் மூன்று மகன்களுடன் அங்கே சென்று இருவருக்கும் புத்தி புகட்டும் மிஸஸ் H என்னும் மிக அருமையான கதாபாத்திரம் செய்திருக்கிறார் உமா தர்மேன்,

வீட்டின் வரவேற்பறை:-

வேண்டா விருந்தாளியாக ஜோவின் வீட்டு வரவேற்பறையின் உள்ளே நுழைந்த உமா தர்மேன் கணவனுக்குப் பிடித்தமான அவனுடைய காரின் சாவியை  வலுக்கட்டாயமாக அவனிடமே திணித்தவர். மகன்களிடம் இனி அப்பா நம்மிடம் வரமாட்டார், நாம் இனி பொது போக்குவரத்தில் தான் போகவேண்டும்,இனி சமூகத்தில் குறைந்த வசதிகளுக்கு நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும் என்பார்.
மூன்று மகன்களில் ஒருவன் கையில் உள்ள சாக்குத் தலையனையைப் பார்த்து அது என்ன? என சக்களத்தி ஜோ கேட்க, அது அவனே செய்து Mrs. H என்று எம்ப்ராய்டரி இட்டு DADDY க்கு பரிசளித்தது ,இதன் அழகு வெளிப்பார்வைக்குத் தெரியாது,ஆனால் உள்ளத்தால் மட்டுமே அந்த அன்பை உணர முடியும் என்றவர், இதை உன் அப்பாவிடம் கொடு என்பார் .மகன்களிடம்  இனி DADDY என்று நீங்கள் அவரைக் கூப்பிட முடியாது, இனி அவரை HIM, HE, THAT MAN என்று தான் அழைக்க வேண்டியிருக்கும் என்கிறாள்.

 உமா தர்மேன் தன் கணவனைக் கவர்ந்த ஜோவிடம் நாங்கள் உங்களுடைய whoring bed ஐ பார்க்கலாமா? என்றவர், அவள் மௌனிக்க, கேவலம் அது வேலைக்காரர்கள் கூட வேலைக்கு வருகையில் பார்க்கும் ஒரு வஸ்து தானே என்றவர்
படுக்கை அறை:-

தன் மகன்களை நோக்கி உங்கள் அப்பாவின் மனம் கவர்ந்த இடத்தைப் நீங்கள் பார்க்க வேண்டாமா? என குதூகலமாகக் கேட்டவர், அவர்கள் ஆவலுடன் தலையசைக்க,  அந்தக் கட்டிலில் சென்று அவர்களுடன் சென்று அமர்ந்து ஆடிப்பார்பார்.

ஜோவையும் கணவனையும் மையமாகப் பார்த்து இங்கு தான் எல்லாம் நடந்தது அல்லவா?!!! இப்படித்தான் அவரை வளைத்தாய் அல்லவா?!!! என்று கேள்வி மேல் கேள்விகள் தொடுப்பார், அங்கே கட்டிலில் மகன்களை ஆதூரமாக அணைத்துத் தேற்றியவர் இந்த அறையை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.

இத் தருணம் உங்கள் மூவர் வாழ்வில் முக்கியமானது, உங்கள் வாழ்வுக்கான படிப்பினையாக இதைக் கருதுங்கள். எந்தப் பெண்ணுக்கும் இந்த வலியைத் தராதீர்கள், எந்தக் குழந்தையும் இந்த வலியை வேதனையை அனுபவிக்கக் காரணமாக அமையாதீர்கள் என்று சொல்லிவிட்டு உடைவாள். இப்படியெல்லாம் பேசுவதற்கு மன்னியுங்கள் என்றவர் தேநீர் அருந்தலாம் என்று சொல்வார்,இதற்கே அங்கே ஆடிப்போயிருப்பார்கள். இவர் முன்னாளும் ஜோவும்,

இப்போது டைனிங் டேபிள்:-
அவரே மூவருக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டு வருவார், ஜோவிடம் மகன்களின் அப்பா குடிக்கும் தேநீரில் எப்போதும் 2 சர்க்கரைக் கட்டிகள் இட வேண்டும் என அறிவுருத்துவார்.

அங்கே கதவு தட்டப்பட, ஜோவை வலுக்கட்டாயமாக அமர்த்திவிட்டு,அவர் போய் கதவை திறக்க அங்கே, ஜோவின் மற்றோர் நண்பன் இவள் அழைப்பின் பேரில் அங்கே டேட் செய்ய பூச்செண்டுகளுடன் வந்திருப்பான், அவனிடமிருந்து பூச்செண்டை வாங்கி முகர்ந்து பார்த்தவர், மகன்களை நோக்கி பசங்களா ஓடி வாங்க, உங்களுக்கு இந்த விஷயம் ஆர்வமூட்டக்கூடும் என்று கலாய்ப்பார். அங்கே இறுக்கம் தளர்ந்து மெல்லிய அவல நகைச்சுவை தாண்டவமாடும்.

அவனை உள்ளே அழைத்து வந்தவர், ஜோவை நீண்ட நாட்களாகத் தெரியுமா? எனக்கேட்க அவன் இல்லை இப்போது தான் பழக ஆரம்பித்துள்ளோம் என்பான். மகன்களிடம் திரும்பி இவரின் கண்களை நன்றாகப் பாருங்கள் என்பார். ஜோவை ஏறிட்டவர் நீ அத்தனை பரந்த மனப்பான்மை கொண்டவளா? என்றவர் கணவனை நோக்கி நான் அத்தனை பரந்த மனப்பான்மை கொண்டவள் இல்லை,அது தான் நான் செய்த பிழை என்பார்.

மகன்களிடம் திரும்பி உங்களுக்கு இந்த இருவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் இப்போதே கேட்டு விடுங்கள் .இது போன்ற குரூர மனம் கொண்ட மனிதர்களை நீங்கள் சந்திப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றவர்,ஜோவை நோக்கி ஒரு நாளைக்கு உன்னால் எத்தனை இதயங்களை நொறுக்கிவிட முடியும் என்று நினைக்கிறாய்?5,50?தன் மூக்கை சிந்தி ஜோவிடம் காகிதத்தை எறிவார். அவள் காதலன் அதை பொருக்கியவன், ஜோவை தேற்றுவான்.

ஜோ நீண்ட மௌனத்துக்குப் பின்னர் வாய் திறந்தவள்,மகன்களை நோக்கி நான் உன் தந்தையை மனதார விரும்பவில்லை என்பாள், உமா தர்மேன் ஜோவை நோக்கி இத்தனை பெரிய பேரிடியை எங்கள் வாழ்க்கையில் இறக்கிவிட்டு எத்தனை எளிதாக உன்னால் இப்படி நகைச்சுவையாகப் பேசமுடிகிறது?!!!  , நீயும் ஒருநாள் இதே போன்ற சூன்யத் தனிமையால் பீடிக்கப்படுவதை என் மனக்கண்ணில் காண்கிறேன் என்றவர் மகன்களை கிளம்ப தயார் செய்வார்.

பொது படிக்கட்டு வராந்தா:-

எல்லாம் முடிந்து வெளியேறுகையில் வீல்ல்ல்ல்ல் என்று தன் துக்கத்தை எல்லாம் வெளியேற்றி கணவனை நோக்கிக்  கத்துவார்  உமா தர்மேன்,  வாசலுக்கு வந்து வழியனுப்ப நிற்கும் தந்தையை தழுவிக்கொள்ள முயலும் ஒவ்வொரு மகனாக பிரித்தவர், நீ உன் தந்தைக்கு குற்ற உணர்வை அளிக்கக்கூடாது என்று படியில் இறங்கச் செய்வார், கடைசியாக கணவனை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு விட்டு விலகுவார் இந்த நடிப்பு ராட்சஸி.

கணவனை வேறு பெண்களிடம் பறிகொடுக்கும் ஏமாளி மனைவியின், பாசமுள்ளத் தாயின் மன வலியை மிகத் தத்ரூபமாக பதிவு செய்திருக்கிறார் உமா தர்மேன். சுமார் 8 நிமிடம் நீளும் இக்காட்சி. உலக சினிமாவின் பெருமையான ஒரு காட்சி.
http://www.filmlinc.com/blog/entry/uma-thurman-lars-von-trier-nymphomaniac-interview

Mrs. H Teaser Trailer for Nymphomaniac on TrailerAddict.