அபூர்வ ராகங்கள் [1975] கேள்வியின் நாயகனே மற்றும் Ek Nayi Paheli [1984] Yeh Preet Aisi Paheli ஒப்பீடுகள்


அபூர்வ ராகங்கள் திரைப்படம் தான் எழுதி வெளியான கதை என்று வழக்கு நடந்து அதை தொடுத்த எழுத்தாளர் எ.ஆர்.தாசன் வழக்கில் ஜெயித்து 1000 ரூபாய் நஷ்ட ஈடும் பெற்றார் , என்பதெல்லாம் ஒரு புறமிருந்தாலும், அது 1973 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான 40 கேரட்ஸைத் தழுவி தமிழில் புனையப்பட்ட வெற்றிப் படைப்பு என்னும் கருத்தும் நிலவுகிறது. http://en.wikipedia.org/wiki/40_Carats_%28film%29 ஆனால் கே.பாலச்சந்தர் இவற்றை மறுக்கிறார்.அபூர்வ ராகங்கள் பற்றி அவர் நினைவு கூர்ந்ததைப் பாருங்கள்.

அபூர்வ ராகங்கள்' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும். அதில் ஒரு விடுகதை:-

'தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.

அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த இரு பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.

அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.

வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்தே, அபூர்வராகங்கள் கதையை பின்னி இழைத்தேன்.

இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.

மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.

ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.

மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!

கத்திமேல் நடப்பது போன்ற கதை.

கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவனும் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!

கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம் அவருடையது! தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த். 'யார் இந்தப் புதுமுகம்?' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.

பெங்களூரைச் சேர்ந்த சிவாஜிராவ்,சென்னை நடிப்புக் கல்லூரி மாணவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை உணர்ந்து அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினேன். 'ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்' என்று கூறுகிறார், பாலசந்தர்.


1984ல்  அபூர்வ ராகங்கள் [1975] படத்தை ஹிந்தியில் ஏக் நய் பெஹலி என்று ரீமேக் செய்தார் பாலச்சந்தர், கமல் செய்த பிரசன்னா கதாபாத்திரம் கமலே செய்தார்,

ஸ்ரீவித்யா செய்த பைரவி கதாபாத்திரத்தில் ஹேமமாலினி,கமலுக்கு எத்தனை அதிர்ஷ்டம் பாருங்கள்? அவர் மனம் கவர்ந்த அழகிய மூத்த நாயகிகளுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு எத்தனை முறை அமைந்தது என்று ஒரு தனிக் கட்டுரையே எழுத வேண்டும்.  கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஸ்ரீவித்யா, ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா, வாணி கணபதி, ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

ரஜினி செய்த பாண்டியன் என்னும் குடிகார கணவன் கதாபாத்திரத்தில் இதில் இந்திக்காக சுரேஷ் ஓப்ராய்,

பைரவியின் மகளான ஜெயசுதா கதாபாத்திரத்தில் பத்மினி கோலாபுரி,

பிரசன்னாவின் [கமல்] தந்தை மேஜர் சுந்தர்ராஜனின் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ராஜ்குமார்.

நாகேஷின் டாக்டர் சூரி கதாபாத்திரத்தில் மெஹ்மூத்.[தமிழில் நாகேஷ் செய்த எல்லா கதாபாத்திரங்களையும் ஹிந்தியில் விரும்பி செய்தவர்]அனுபவி ராஜா அனுபவியில் கவிஞர் எழுதிய முத்துக்குளிக்க வாரீகளாவை இந்தியில் மெட்டமைக்க முயன்று தோற்று,அதை அப்படியே பயன்படுத்தியவர்.

அபூர்வ ராகங்கள் வெளியாகி 9 ஆண்டுகள் கழித்தே ஏக் நய் பெஹலி  வெளியானது. அபூர்வ ராகங்கள் கருப்பு வெள்ளை படம்,ஏக் நய் பெஹலி  வண்ணப்படம், ஆனால் ஸ்ரீவித்யாவின் சாமுத்ரிகா லட்சணமும் தேஜஸும் கருப்பு வெள்ளையில் கூட  அத்தனை அழகாக பைரவி கதா பாத்திரத்தில் வெளிப்பட்டிருக்கும். இங்கே இந்தியில் வண்ணம் என்றாலும் ஹேமமாலினியால் அப்பாத்திரத்துக்கு உறை போடக்கூட முடியாத படி அவரின்  நடிப்பு அமைந்திருக்கும். ஒரு சாயலில் பார்க்க கல்கி திரைப்படத்தின் நடிகை கீதா போலவும் அவர் தோன்றுவார்.

அதே போன்றே பாடலும் இசையும் நடிகர்களின் பங்களிப்பும் தமிழில் உச்சம் தொட்டிருக்கும், அவை மிகவும் ஜீவனுடன் எம் எஸ் வியின் இசை, கவிஞரின் பலமான அர்த்தபுஷ்டியான பாடல்வரிகள்,வாணி ஜெயராமின் குரல் ,மகள் பாடுகையில் சசிரேகா குரல் ஒலிக்கும், ஸ்ரீவித்யா ,கமல்ஹாசன், ஜெயசுதா, மேஜர் சுந்தர்ராஜன், ரஜினி மற்றும் பக்கவாத்தியக்காரர்களின் இயல்பான நடிப்பு ,  பி.எஸ்.லோகநாத்தின் கட் ஷாட்ஸ் ஒளிப்பதிவின் நிபுனத்துவம் இவை அத்தனையும் போட்டி போட்டு அப்பாடலில் சங்கமித்திருப்பதை ஒருவர் உணரமுடியும்.  சிச்சுவேஷன் பாடல் இயற்றுவதில் கவிஞருக்கு நிகர் கவிஞரே. என்ன வரிகள் அவை?!!,

 Yeh Preet Aisi Paheli 
என்னும் இதன் இந்தி வடிவத்துக்கு லஷ்மிகாந்த் ப்யாரிலால் இசையமைத்திருப்பார், பாடலை ஆனந்த் பக்‌ஷி எழுதியிருப்பார், பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார். பி.எஸ்.லோகநாத்தின் கட் ஷாட்ஸ் ஒளிப்பதிவின் நிபுனத்துவம் அபூர்வ ராகங்களைத் தொடர்ந்து இதிலும்  மிக அருமையாக வெளிப்படிருக்கும். இப்படத்திற்கு சுரேஷ் கிருஷ்ணா உதவி இயக்குனர்.


கேள்வியின் நாயகனே!!! என்னும் தமிழ் பாடலின் சிச்சுவேஷனை எத்தனை அழகாக கவிஞர் மற்றும் மெல்லிசை மன்னருடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் என்று பாருங்கள்?!!!

மேடையில் பாடிக்கொண்டிருக்கும் பைரவி வயதில் இளையவரான பிரசன்னா தன்னை மணக்க நினைப்பது வெட்கம் கெட்ட செயல் என்பதை பலம் பொருந்திய வார்த்தைகளில் விளக்குவதைப் பாருங்கள்.

பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று
பாலருந்தும் போதா காளை வரும்?
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு   பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலுமொரு தாலி உண்டா?
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா?
கதை எப்படி? அதன் முடிவெப்படி?


இப்படி பைரவியின் முடிவைக் கேட்டதும்   மேடையில் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த   பிரசன்னா சினத்துடன் பாதிப்பாடலில் எழுந்து போய் மறைவில் நின்று கொள்வார்,


இப்போது  பல வருடங்களாக பைரவியை நிர்கதியாக தவிக்க விட்டுப்போன ரஜினி அங்கே அரங்கத்தின் பால்கனியில் வெளிப்படுவார், ”உன்னை ஏமாற்றிச் சென்றவன் இங்கு வந்திருக்கிறேன், உன் தரிசனம் தேடி,உன் மன்னிப்பை நாடி _பாண்டியன் என்று சீட்டு எழுதி ஒரு சிறுமியிடம் தந்து விடுவார்.

பைரவி அதைப் படித்தவுடன் வெளிப்படும் கவிஞரின் வைர வரிகளைப் பாருங்கள்.

தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
தரும தரிசனத்தை தேடுகின்றான்,தேடுகின்றான்,தேடுகின்றான்,

அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
செல்வாளோ? செல்வாளோ?
என்று உணர்ச்சிவசப்பட்டு உடைவார் பைரவி.


 பாண்டியன் செய்த தவற்றையெல்லாம் சடுதியில் மன்னித்தவர் ,அவரைக் காண மிகுந்த ஆவல் கொள்வதை பாடல் வரிகளில் இதை விட அழகாக வெளிப்படுத்த முடியுமா?

இப்போது உடைந்து குரல் பிசகும் பைரவியின் மகள் வந்து அப்பாடலை தொடர்வதைப் பாருங்கள்.இப்போது பாடலின் டெம்போ எதிர்பாராத திசையில் மாற்றம் பெறுவதைப் பாருங்கள்,அதன் பாடல் வரிகளைக் கவனியுங்கள்.ஆறு மாதம் காணாத தாய் மகளின் சம்பாஷனையைக் கேளுங்கள்,

ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்...அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை
இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?
பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே

கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன?

உடல் எப்படி?
முன்பு இருந்தாற்படி...
மனம் எப்படி?
நீ விரும்பும்படி...


இப்போது பால்கனியில் நிற்கும் பாண்டியனுக்கு தாய் மகளின் தரிசனமும் கிடைத்தாயிற்று, பிடிவாதக்கார மகள் தன் மாற்றுக்கருத்து கொண்ட தாயிடமும் இணைந்தாயிற்று, இப்போது மேஜரின் அருகே இருக்கும் இருக்கை ஜெயசுதா மேடையில் சென்று அமர்ந்ததால் காலியாக இருக்கிறது. இப்போது பாடலின் மந்திர வரிகளால் அங்கே மேஜரின் மகன் பிரசன்னா மேடையிலிருந்து இறங்கிச் சென்று அங்கே அந்த இருக்கையில் அமரும் அதிசயத்தைப் பாருங்கள்.

பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா
திருமுருகா...திருமுருகா...


இவ்வரியைக் கேட்டபின்னர் கமல் மேடைப் படியிறங்கி வந்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கும் அப்பாவின் அருகே கடக்க எண்ணி முடியாமல் அப்பா அன்புக்குக் கட்டுப்பட்டு  அமரும் அதிசயத்தைப் பாருங்கள். அங்கே தந்தை மகனுடன் கைகோர்த்து ஆனந்தப்படுவதுடன் பாடல் முடிவடையும். என்ன ஒரு பாடல்?!!! இந்தப் பாடலுக்கு யாரேனும் சிகரட் பிடிக்க எழுந்து போயிருப்பரா? என்பது சந்தேகமே!!!

இப்படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.அவை
சிறந்த படத்துக்கான விருது [இதன் தயாரிப்பாளர்கள் D.ஜெயலட்சுமி, G.விஜயலட்சுமி,கே.பாலச்சந்தர்]
சிறந்த ஒளிப்பதிவாளர்.பி.எஸ்.லோகநாத்.
சிறந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்.

இப்பாடலை சூப்பர் சிங்கர் போட்டியில் மேடையில் பாடிய சுகன்யா முழுமையாக பாடவில்லை, அவர் தாயும் மகளும் சேரும் வரை மட்டுமே [ஐந்து நிமிடம்] பாடியிருந்தார் [தந்தையும் மகனும் சேரும் மீதம் இரண்டு நிமிடம் அதில் பாடவில்லை] ஒரு வேளை ஐந்து நிமிடம் தான் பாட வேண்டும் என்னும் கட்டாயமாகக் கூட இருக்கும்.
இதை கேட்டுக்கொண்டிருக்கையில் உணர்ச்சிவசப்பட்டு கடந்த காலத்துக்கே டைம் மெஷினில் போய்வந்த கமல்ஹாசன் இப்பாடலை மனம் இளகும் ஒரு ரெண்டரிங்,எக்காலத்திற்கும் நிலைத்திருக்க வேண்டும் என்று திட்டமிட்டு கே.பாலச்சந்தர் ,எம் எஸ்வி,மற்றும் கவிஞர் உருவாக்கிய பாடல்,அப்போது தானும் உடனிருந்தது தன் பாக்கியம் என்றார்.

இப்பாடலுக்காக பக்கவாத்தியம் வாசிக்கும் பிரசன்னா கதாபாத்திரத்துக்கு பின்னணியில் சீனாக்குட்டி ஐயா என்பவர் மிருதங்கம் வாசித்ததை நினைவு கூர்ந்தார். இப்பாடலுக்கு வாசிக்க தான் தத்ரூபமாக வர வேண்டும் என்று ஒரு மாதம் தன் விரல்நுனிகளில் வெடிப்பு வரும் வரை மிருதங்கம் பயின்றதையும், ஸ்ரீவித்யாவின் மீதான தன்னுடைய அபிலாஷையை அவர் அங்கே  அவர் இயல்பாக வெளிப்படுத்தியதையும்  பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=VLxBQWL37K8


அபூர்வ ராகங்கள் படத்தின் கேள்வியின் நாயகனே அசல் வடிவ பாடலை இங்கே பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=ys9IuzHoW5U