ஷோலே இந்திய சினிமாவில் ஒரு அழியா காவியம்.
1975 ஆம் ஆண்டு வெளியான 'ஷோலே' திரைப்படம், ரமேஷ் சிப்பி இயக்கத்தில், அவரது தந்தை ஜி.பி.சிப்பி தயாரிப்பில், சலீம்-ஜாவேத் இரட்டை கதாசிரியர்கள் எழுதிய ஒரு பிரம்மாண்டமான அதிரடி சாகசத் திரைப்படம்.
ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான தாக்கூர் பல்தேவ் சிங் என்பவரால், கொடூரமான கொள்ளைக்காரன் கப்பர் சிங் என்பவனைப் பிடிக்க நியமிக்கப்படும் வீரு (தர்மேந்திரா) மற்றும் ஜெய் (அமிதாப் பச்சன்) என்ற இரண்டு வீரம் மிகு பெட்டி கேஸ் குற்றவாளிகளின் கதையைச் சொல்கிறது.
ஹேமமாலினி, வீருவின் காதலி பஸந்தியாகவும்,ஜெய பாதுரி, ஜெய்யின் காதலி ராதாவாகவும் நடித்துள்ளனர். ஆர்.டி. பர்மன் அற்புதமாக இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படம் 1973 ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் கர்நாடகாவின் ராமநகராவின் பாறைகள் நிறைந்த பகுதிகளில் படமாக்கப்பட்டது.
சென்சார் உத்தரவின் பேரில் சில வன்முறைக் காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு, 'ஷோலே' 198 நிமிடங்கள் ஓடும் திரைப்படமாக வெளியானது.
1990 ஆம் ஆண்டு, 204 நிமிடங்கள் கொண்ட அசல் டைரக்டர் கட் பதிப்பு VHS ல் வெளியானது.
முதலில் வெளியான போது ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சனங்களையும், சுமாரான வசூலையும் பெற்ற 'ஷோலே', மக்கள் மத்தியில் ஏற்பட்ட நல்ல வரவேற்பின் காரணமாக ஒரு பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மாறியது.
இந்தியாவில் பல திரையரங்குகளில் தொடர்ந்து ஓடி சாதனை படைத்ததுடன், மும்பையின் மினர்வா திரையரங்கில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஓடியது. ரஷ்யாவில் பெரும் வெற்றியைப் பெற்ற 'ஷோலே', அதுவரை அதிக வசூல் செய்த இந்தியப் படமாக இருந்தது.
1994 ஆம் ஆண்டு 'ஹம் ஆப்கே ஹேன் கௌன்..!' ரஷ்யாவில் வெளியாகும் வரை இந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டது.
'ஷோலே' அனைத்து காலத்திலும் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாக இன்றும் உள்ளது
.
கதைச் சுருக்கம்:
ஜெய் மற்றும் வீரு இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகும் சிறு குற்றவாளிகள். ஒரு ரயில் கொள்ளையிலிருந்து முன்பு அவர்கள் தன்னை வீரதீர செயல் புரிந்து காப்பாற்றியதை நினைவில் வைத்திருந்த , ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் தாக்கூர் பல்தேவ் சிங், 50,000 ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட சம்பல்
பள்ளத்தாக்கின் பிரபல கொள்ளைக்காரனான கப்பர் சிங்கை பிடிக்க அவர்களை நியமிக்கிறார்.
கூடுதலாக 20,000 ரூபாய் வெகுமதியும் தருவதாக வாக்களிக்கிறார். கப்பர் சிங் ராம்பூரில் தங்கியிருந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்ததால், இருவரும் தாக்கூரின் கிராமத்திற்குப் பயணிக்கின்றனர்.
ராம்பூரை அடைந்த பிறகு, வீரு துணிச்சலான, வாயாடியான குதிரை வண்டி ஓட்டும் பெண் பஸந்தியைக் காதலிக்கிறான்.
ஜெய், தாக்கூரின் மருமகளான கைம்பெண் ராதாவைச் சந்தித்து முதல் அவளைக் காதலிக்கிறான், பின்னர் அவளும் அவனது காதலை ஏற்கிறாள்.
ஊருக்குள் பணம் பறிக்க வந்த கப்பர் சிங்கின் கொள்ளையர்களை இருவரும் முறியடிக்கின்றனர்.
ஹோலிப் பண்டிகையின் போது, கப்பார் சிங்கின் கும்பல் கிராம மக்களைத் தாக்குகின்றனர்.
அங்கு அவர்கள் ஜெய் மற்றும் வீருவை சுற்றிவளைக்க, இருவரும் அவர்களைத் தாக்கி கிராமத்திலிருந்து விரட்டியடிக்கின்றனர்.
சண்டையின் போது முன்னாள் போலீஸ் அதிகாரி பல்தேவ் சிங்கின் செயலற்ற தன்மை குறித்து இருவரும் வருத்தமும் கோபமும் அடைகின்றனர்.
சண்டையில், ஜெய் மற்றும் வீரு சுற்றிவளைக்கப்பட்டபோது, தாக்கூர் அருகிலேயே துப்பாக்கியை வைத்திருந்தும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.
இதனால், கப்பார்சிங்கை பிடிக்கும் பணியைக் கைவிட நினைக்கின்றனர். அப்போது பல்தேவ் சிங், சில ஆண்டுகளுக்கு முன்பு கப்பர் சிங் தனது குடும்ப உறுப்பினர்களைக் (ராதா மற்றும் ராம்லால் தவிர) கொன்றதாகவும், தனது இரு கைகளையும் வெட்டியெடுத்த சம்பவத்தையும் வெளிப்படுத்துகிறார்.
அவர் எப்போதும் கம்பளி சால்வை அணிந்து சுற்றி கைகளே தெரியாமல் மறைத்திருந்தார், அதனால்தான் அவரால் துப்பாக்கியைப் தூக்கி சுட முடியவில்லை என்றும் குமுறுகிறார்.
பல்தேவ் சிங் எவ்வளவு துன்பப்பட்டுள்ளார் என்பதை அறிந்த ஜெய் மற்றும் வீரு, எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் கப்பர் சிங்கை உயிருடன் பிடிப்பதாக சத்தியம் செய்கிறார்கள்.
இருவரின் வீரத்தைப் பற்றி அறிந்த கப்பர் சிங், கிராம மக்களை அச்சுறுத்தி ஜெய் மற்றும் வீருவை அவனிடம் சரணடையச் செய்ய வேண்டி, கண்பார்வை அற்ற கிராம இமாம் ரஹீம் சாச்சாவின் மகன் அஹ்மதை மிகக் கொடூரமாக அவன் குதிரையில் வெளியூருக்கு வேலைக்குச் செல்கையில் கொல்கிறான்.
கிராம மக்கள் கொதித்து எழுந்து, அஹ்மத்தின் மரணத்திற்கு பழிவாங்க கப்பர் சிங்கின் சில அடியாட்களையேனும் கொல்லுமாறு இருவரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறார்கள்.
இந்த செய்தி கேட்டு கடும் கோபமடைந்த கப்பர் சிங் தனது ஆட்களைக் கொண்டு வீருவையும் பஸந்தியையும் பிடிக்கிறான்.
ஜெய் இவர்களைத் தேடி வந்து மறைவிட பள்ளத்தாக்கை ஒளிந்திருந்து தாக்குகிறான், அங்கே மூவரும் கப்பர் சிங்கின் மறைவிடத்திலிருந்து கொள்ளையர்கள் பின்னால் துரத்த, கடுமையாக ஓடித் தப்பிக்கிறார்கள்.
ஒரு பெரிய பாறைக்குப் பின்னால் இருந்து சுடும் ஜெய் மற்றும் வீருவிடம் வெடிமருந்துகள் தீர்ந்து விடுகின்றன.
துப்பாக்கிச் சண்டையில் ஜெய் காயமடைந்ததை அறியாமல், வீரு மேலும் வெடிமருந்துகளுக்காகவும், பஸந்தியை ஒரு பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிடவும் வேண்டி அகன்று செல்கிறான்.
ஜெய் தனது கடைசி தோட்டாவைப் பயன்படுத்தி, பாலத்தில் டைனமைட் குச்சிகளை மிக அருகிலிருந்து வெடிக்கச் செய்து, கப்பார் சிங்கின் ஆட்களை கொன்று தன் உயிரையுமே அந்த குண்டுவெடிப்பில் தியாகம் செய்கிறான்.
வீரு திரும்பி வரும்போது ஜெய் இறந்துவிடுகிறான், அதுமுதல் ராதாவையும் வீருவையும் கடும் சோகத்தில் ஆழ்த்துகிறான் ஜெய்.
ஆப்த நட்பின் இழப்பால. ஆத்திரமடைந்த வீரு, கப்பர் சிங்கின் குகையைத் தாக்கி, மீதமுள்ள அத்தனை ஆட்களையும் மிச்சமின்றி கொல்கிறான்.
கப்பர் சிங்கை சிறை பிடித்து, அவனை கிட்டத்தட்ட அடித்துக் கொல்கிறான் வீரு. பல்தேவ் சிங் வந்து, கப்பர் சிங்கை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்ற வீருவின் சபதத்தை அங்கே நினைவுபடுத்துகிறார்.
பல்தேவ் சிங் தனது கூர்மையான காலணிகளைப் கொண்டு கப்பார் சிங்கை கடுமையாக பாய்ந்து பாய்ந்து எத்தி விழுந்து காயப்படுத்துகிறார்.
பின்னர் போலீசார் சரியாக அங்கே வந்து கப்பர் சிங்கை கைது செய்கிறார்கள். ஜெய்யின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு, வீரு ராம்பூரை விட்டு வெளியேறுகிறான், பஸந்தி ரயிலில் அவருடன் பயணிக்க காத்திருக்கையில் ஷோலே நிறைகிறது.
ஷோலே (Sholay) என்ற இந்தி சொல்லுக்கு அர்த்தம் 'தீப்பொறிகள்' அல்லது 'கங்குகள்' என்பதாகும்.
இந்தத் தலைப்பு, திரைப்படத்தின் கதைக்களத்தில் உள்ள ஆவேசம், பழிவாங்கும் உணர்வு, மற்றும் கதாபாத்திரங்களின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் கோபம், வீரம், நட்பு போன்ற தீவிர உணர்வுகளை குறிப்பதாக அமைந்துள்ளது.
நடிகர்கள்:
தர்மேந்த்ரா – வீருவாக
சஞ்சீவ் குமார் – ஓய்வுபெற்ற காவல் அதிகாரி தாக்கூர் பல்தேவ் சிங்காக
ஹேமா மாலினி – பஸந்தியாக, வீருவின் காதலி
அமிதாப் பச்சன் – ஜெய் ஆக
ஜெயபாதுரி – ராதாவாக, தாக்கூரின் மருமகள் மற்றும் ஜெய்யின் காதலி
இஃப்தெகார் – இன்ஸ்பெக்டர் குரானாவாக
அம்ஜத் கான் – கப்பர் சிங்காக,
சத்யேன் கப்பு – ராம்லாலாக, தாக்கூரின் வேலைக்காரன்
ஏ.கே. ஹாங்கள் – ரஹீம் சாச்சாவாக, கிராமத்தின் இமாம்
சச்சின் பில்காங்குர் – அஹ்மதாக, இமாமின் மகன்
ஜகதீப் – சூர்மா போபாலியாக, ஒரு நகைச்சுவையான மர வியாபாரி
லீலா மிஸ்ரா – மௌசியாக, பஸந்தியின் தாய்வழி அத்தை
அஸ்ரானி – சிறை அதிகாரியாக, சார்லி சாப்ளினைப் பின்பற்றிய ஒரு நகைச்சுவைப் பாத்திரம்
கேஷ்டோ முகர்ஜி – ஹரிராம் ஆக, சிறை முடிதிருத்தும் தொழிலாளி மற்றும் சிறை அதிகாரியின் பக்கபலமாக
மேக் மோகன் – சாம்பாவாக, கப்பார் சிங்கின் கூட்டாளி
விஜி கோட் – காலியாவாக, கப்பார் சிங்கின் ஆட்களில் ஒருவன், ரஷ்யன் ரூலெட் விளையாட்டில் அவனால் வேடிக்கையாக கொல்லப்பட்டவனாக
விகாஸ் ஆனந்த் – சிறை அதிகாரியாக
மெஹ்பூபா மெஹ்பூபா பாடலில் ஹெலன் சிறப்புத் தோற்றத்தில்
மெஹ்பூபா மெஹ்பூபா பாடலில் ஜலால் ஆகா சிறப்புத் தோற்றத்தில்
ராஜ் கிஷோர் – சிறைக் கைதியாக
அர்விந்த் ஜோஷி – தாக்கூர் பல்டிவ் சிங்கின் மூத்த மகனாக
ஷரத் குமார் – தாக்கூர் பல்டிவ் சிங்கின் இளைய மகனாக
கீதா சித்தார்த் – கீதாவாக, தாக்கூர் பல்டிவ் சிங்கின் மருமகள்
ஓம் சிவ்புரி – கிராமத்தில் கப்பார் சிங்கின் தாக்குதலை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக.
'ஷோலே' எக்காலத்திலும் மிகச்சிறந்த மிகவும் செல்வாக்குமிக்க இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனத்தின் 2002 ஆம் ஆண்டு "டாப் 10 இந்தியத் திரைப்படங்கள்" பட்டியலில் இது முதலிடத்தைப் பிடித்தது.
2005 ஆம் ஆண்டில், 50வது ஃபிலிம்ஃபேர் விருதுகளின் நடுவர்கள் இதை 50 ஆண்டுகளின் சிறந்த படமாகத் தேர்வு செய்தனர்.
'ஷோலே' ஒரு மிகச்சிறந்த மசாலா திரைப்படத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட எடுத்துக்காட்டாக இன்றுவரை உள்ளது, இது பல பாணிகளை ஒரே படைப்பில் கலக்கிறது.
வன்முறையை மகிமைப்படுத்துதல், நிலப்பிரபுத்துவ நெறிமுறைகளுக்கு இணங்குதல், சமூக ஒழுங்குக்கும் அணிதிரட்டப்பட்ட அபகரிப்பாளர்களுக்கும் இடையிலான சண்டை, ஒத்த பாலின பிணைப்பு மற்றும் தேசிய உருவகமான திரைப்படத்தின் பங்கு போன்ற பல கருப்பொருள்களை ஒருங்கே கொண்டுள்ளது ஷோலே.
இப்படத்தில் ஆர்.டி. பர்மனின் இசை வெளியீடு விற்பனை புதிய சாதனைகளை படைத்தன. திரைப்படத்தின் வசன உரையாடல்கள் கதாபாத்திரங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தன, ஜனவரி 2014 இல், 'ஷோலே' 3D வடிவத்தில் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது.
திரைக்கதை எழுத்தாளர் இரட்டையரான சலீம் கான் மற்றும் ஜாவேத் அக்தர், 1973 ஆண்டில் நான்கு வரிக் குறிப்புகளாக 'ஷோலே'வுக்கான கருவை திரைப்பட தயாரிப்பாளர்களிடம் விவரிக்கத் தொடங்கினர்.
இந்த கரு சில இயக்குனர்களால் நிராகரிக்கப்பட்டது.
சஞ்சீர் (1973) வெளியான சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, சலீம்-ஜாவேத் ஜி.பி.சிப்பி அவரது மகன் ரமேஷ் சிப்பியைத் தொடர்பு கொண்டு, நான்கு வரிக் கருவைக் கூறினர்.
ரமேஷ் சிப்பி 'ஷோலே'வின் கருவை விரும்பி, அதை விஸ்தரித்து உருவாக்க அவர்களை பணித்தார். திரைப்படத்தின் கரு, தனது குடும்பத்தினர் படு கொலைக்கு பழிவாங்க இரண்டு முன்னாள் வீரர்களை நியமிக்க ஒரு இராணுவ அதிகாரி முடிவு செய்வதாக இருந்தது.
பின்னர் இராணுவ அதிகாரி ஒரு போலீஸ்காரராக மாற்றப்பட்டார். சலீம்-ஜாவேத் ஒரு மாதத்தில் திரைக்கதையை முடித்தனர், தங்கள் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் பெயர்களையும், ஆளுமைப் பண்புகளையும் இதில் இணைத்தனர்.
திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் உரையாடல்கள் இந்தியில் இருந்தன; ஆனால் சலீம்-ஜாவேத் உருது எழுத்துருவில் வசன உரையாடல்களை எழுதினர், ஒரு உதவியாளரால் தேவனகரி எழுத்துருவிற்கு மாற்றப்பட்டது, இதனால் இந்தி வாசகர்கள் உருது உரையாடல்களை படிக்க முடிந்தது.
திரைப்படத்தின் கதைக்களம் அகிரா குரோசாவாவின் 1954 ஆம் ஆண்டு வெளியான 'செவன் சமுராய்' படத்திலிருந்து உந்துதல் பெற்று உருவாக்கப்பட்டது.
'ஷோலே' ஒரு கொள்ளைக்கார மேற்கத்திய திரைப்பட வகையின் வரையறுக்கப்பட்ட சிறந்த எடுத்துக்காட்டாகும், இது இந்திய கொள்ளைக்கார திரைப்படங்களின் மரபுகளையும், மெஹபூப் கானின் 'மதர் இந்தியா' (1957) மற்றும் திலீப் குமார் , நிதின் போஸ் இயக்கிய 'கங்கா ஜம்னா' (1961) போன்ற படங்களையும், மேற்கத்திய படங்களின், குறிப்பாக செர்ஜியோ லியோனின் 'ஸ்பாகெட்டி வெஸ்டர்ன்ஸ்' ஆன 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் தி வெஸ்ட்' (1968) மற்றும் 'தி மேக்னிஃபிசென்ட் செவன்' (1960) போன்ற படங்களையும் ஒருங்கே நினைவுபடுத்துகிறது.
இது 'மேரா காவ்ன் மேரா தேஷ்' (1971) மற்றும் 'கோட்டே சிக்கே' (1973) போன்ற இந்திய திரைப்படங்களிலிருந்தும் சில கதைக்கள கூறுகளைப் பெற்றுள்ளது.
ஷோலேவில் ரயில் கொள்ளையை சித்தரிக்கும் ஒரு காட்சி 'கங்கா ஜம்னா' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியிலிருந்தே ஈர்க்கப்பட்டது.
தாக்கூரின் குடும்ப படுகொலையைக் காட்டும் ஒரு காட்சி 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் தி வெஸ்ட்' திரைப்படத்தில் மெக்பைன் குடும்ப படுகொலையில் இருந்து உந்துதல் பெறப்பட்டது.
'ஷோலே' சாம் பெக்கின்பாஹ்வின் 'தி வைல்ட் பஞ்ச்' (1969)
'பாட் காரெட் அண்ட் பில்லி தி கிட்' (1973),
ஜார்ஜ் ராய் ஹில்லின் 'புட்ச் கேசிடி அண்ட் தி சண்டான்ஸ் கிட்' (1969) ஆகிய படங்களில் இருந்தும் உந்துதல் பெறப்பட்டது.
கப்பர் சிங் கதாபாத்திரம் 1950களில் குவாலியர் சுற்றியுள்ள கிராமங்களை அச்சுறுத்திய ஒரு உண்மையான கொள்ளைக்காரன் கப்பர் கூஜர் என்பவனை உதாரணமாகக் கொண்டது.
இந்த கற்பனை கப்பர் சிங், பாகிஸ்தானிய எழுத்தாளர் இப்ன்-இ-சஃபியின் உருது நாவல்களில் உள்ள கதாபாத்திரங்களாலும், திலீப் குமாரின் 'கங்கா ஜம்னா' திரைப்படத்தில் கலப்பு கரிபோலி பேசும் கொள்ளைக்காரன் கங்கா கதாபாத்திரத்தாலும்,
சர்ஜியோ லியோனின் திரைப்படங்களில் உள்ள வில்லன்களாலும் உந்துதல் பெறப்பட்டு உருவான கதாபாத்திரம்.
சமூகப் பிரச்சனைகள் காரணமாக ஒரு மனிதன் கொள்ளைக்காரனாக மாறுவது போன்ற வழமையான திரைப்படங்களில் உள்ள போதனையை அகற்ற சிப்பி விரும்பினார், மேலும் கப்பார் சிங் கொடும் தீமையின் அடையாளமாகவே இருப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்.
கப்பர் சிங் ஒரு புதிய வகை வில்லன் என்பதை நன்கு வலியுறுத்த, சிப்பி வழக்கமான கொள்ளையர்கள் வேட்டிகள் மற்றும் பகரி அணிந்து, திலகம் இட்டு, "மா பவானி"யை வழிபடும் மரபுகளை கவனமாகத் தவிர்த்தார், கப்பர் சிங் இதில் இராணுவ உடைகளை அணிவான். அஸ்ரானி நடித்த நகைச்சுவை சிறை அதிகாரி கதாபாத்திரம் அடோல்ஃப் ஹிட்லரால் ஈர்க்கப்பட்டது.
ஜாவேத் அக்தர் இரண்டாம் உலகப் போர் பற்றிய ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்தார், அதில் ஹிட்லரின் பல படங்கள் அவரது பொதுவான கதாபாத்திரத்தின் தோரணையைக் காட்டின. அஸ்ரானி தனது கதாபாத்திரத்தை சில யோசனைகளுடன் மெருகூட்டினார்.
முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களான ஜெய் மற்றும் வீரு, இந்தியில் "வெற்றி" மற்றும் "வீரம்" என்று பொருள்படும்.
கப்பர் சிங் கதாபாத்திரத்திற்காக டேனி டென்சோங்பா முதலில் பரிசீலிக்கப்பட்டார், ஆனால் ஃபெரோஸ் கானின் 'தர்மாத்மா' (1975) படப்பிடிப்பில் அவர் ஈடுபட்டிருந்ததால் அவரால் இக்கதாபாத்திரத்தை ஏற்க முடியவில்லை.
இரண்டாவது தேர்வாக இருந்த அம்ஜத் கான், சம்பல் கொள்ளையர்களின் கொள்ளைகளை பற்றிய புத்தகத்தைப் படித்து கதாபாத்திரத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.
சஞ்சீவ் குமாரும் கப்பர் சிங் வேடத்தில் நடிக்க விரும்பினார், ஆனால் சலீம்-ஜாவேத் "முன்பு அவர் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் பார்வையாளர்களின் உயரிய மரியாதையையும் அனுதாபத்தைப் பெற்றிருப்பதாக உணர்ந்தனர், கப்பர் சிங் முற்றிலும் வெறுக்கத்தக்கவராக இருக்க வேண்டும்" என்று கூறி தடுத்தனர்.
சிப்பி ஷத்ருகன் சின்ஹாவை ஜெய் வேடத்தில் நடிக்க வைக்க விரும்பினார், அது கைகூடவில்லை, அப்போது அத்தனை பிரபலமாக இல்லாத அமிதாப் பச்சன், தனக்காக அந்தப் பாத்திரத்தைப் பெற வேண்டி கடினமாகப் போராடினார்.
1973 இல் சலீம்-ஜாவேத் அவரை 'ஷோலே'வுக்காக பரிந்துரைத்த பிறகு அவர் முழு தீர்மானமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான் பல்தேவ் சிங் வேடத்திற்குப் பரிசீலிக்கப்பட்டார், ஆனால் சஞ்சீவ் குமார் இதற்கு சிறந்த தேர்வு என்று சிப்பி நினைத்தார்.
ஆரம்பத்தில், சலீம்-ஜாவேத் திலீப் குமாரை தாக்கூரின் வேடத்தில் நடிக்க அணுகினர், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்தார், திலீப் குமார் தான் நிராகரித்த சில நல்ல படங்களில் இதுவும் ஒன்று என்று பின்னாளில் கூறினார்.
ஆரம்பத்தில், தர்மேந்திராவும் தாக்கூரின் வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தார். சஞ்சீவ் குமார் வீருவாக நடித்தால், ஹேமா மாலினியுடன் ஜோடி சேர்ந்துவிடுவார் என்று சிப்பி கூறியதும் அவர் அந்தப் கதாபாத்திரத்தை விட்டுவிட்டார், ஏனெனில் தர்மந்திரா ஹேமமாலினியை காதலித்து வந்தார்.
ஹேம மாலினி குதிரைவண்டியோட்டி வேடத்தில் நடிக்க தயங்கினார், ஆனால் சிப்பி அளித்த நம்பிக்கையின் காரணமாக அதை ஏற்றுக்கொண்டார்.
அமிதாப் பச்சன், படப்பிடிப்பு தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஜெயபாதுரியை மணந்தார். ஜெயபாதுரி கர்ப்பமாக இருந்ததால் படப்பிடிப்பில் தாமதங்கள் ஏற்பட்டன.
தர்மந்திரா தனது முந்தைய படமான 'சீதா அவுர் கீதா' (1972), (சிப்பி இயக்கம்) படத்தில் இருந்தே ஹேம மாலினியை காதலித்து வந்தார்.
'ஷோலே'வின் படப்பிடிப்பு தளத்தைப் பயன்படுத்தி தனது காதலை மேலும் தொடர்ந்தார்.
அவர்களின் காதல் காட்சிகளின் போது, தர்மந்திரா அடிக்கடி லைட் பாய்களுக்கு ஷாட்டை சொதப்புவதற்கு வேண்டி பணம் கொடுத்தாராம், இதனால் பல ரீடேக்குகள் ஏற்பட்டு ஹேமா மாலினியுடன் அதிக நேரம் செலவிட முடிந்ததாம். படம் வெளியான ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.
'ஷோலே'வின் பெரும்பகுதி கர்நாடகாவின் பெங்களூருக்கு அருகிலுள்ள ராமநகராவின் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பில் படமாக்கப்பட்டது.
படத் தயாரிப்பாளர்கள் எளிதாக படப்பிடிப்புத் தளங்களுக்குச் செல்ல அங்கே ஒரு சாலையையும் அமைக்க வேண்டியிருந்தது.
கலை இயக்குனர் அங்கு ஒரு கிராமத்தையே நிர்மாணித்தார்.
மும்பையில் ஒரு சிறைச்சாலை அரங்கும் அமைக்கப்பட்டது, ராமநகரின் ஒரு பகுதி சில காலம் "சிப்பி நகர்" என்று இயக்குனருக்கு நினைவுகூறும் வகையில் அழைக்கப்பட்டது.
படப்பிடிப்பு 1973 அக்டோபர் 3 அன்று தொடங்கியது. படப்பிடிப்பு மிகுந்த பொருட்செலவைக் கொண்டிருந்தது, இப்படம் உருவாக்க மொத்தம் இரண்டரை ஆண்டுகள் ஆனது, கிடுகிடுவென பட்ஜெட் எகிறியது. சிப்பி தனது விரும்பிய வண்ணம் காப்சிகளைப் பெற பல முறை காட்சிகளை மீண்டும் படமாக்கினார்.
"யே தோஸ்தி", ஒரு 5 நிமிட பாடல் காட்சி, படமாக்க 21 நாட்கள் எடுத்தது, ராதா மாலையில் விளக்குகள் ஏற்றும் இரண்டு சிறு காட்சிகள் ஒளியமைப்பு பிரச்சனைகள் காரணமாக 20 நாட்கள் எடுத்தன, கப்பார் சிங் இமாமின் மகனைக் கொல்லும் காட்சி படமாக்க 19 நாட்கள் பிடித்தது.
ரயில் கொள்ளைக் காட்சி 7 வாரங்களுக்கும் மேலானது.
'ஷோலே', ஸ்டீரியோஃபோனிக் ஒலிப்பதிவு மற்றும் 70 மிமீ வைட்ஸ்கிரீன் வடிவம் கொண்ட முதல் இந்தியத் திரைப்படமாகும்.
அந்த காலகட்டத்தில் உண்மையான 70 மிமீ கேமராக்கள் விலை அதிகமாக இருந்ததால், படம் பாரம்பரிய 35 மிமீ படச்சுருளில் படமாக்கப்பட்டு, பின்னர் 70 மிமீ ஆக மாற்றப்பட்டது.
70 மிமீ பயன்பாடு, திரைப்பட போஸ்டர்களில் திரைப்படத்தின் பெயர் சினிமாஸ்கோப் லோகோவுடன் பொருந்தும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டது.
திரைப்பட போஸ்டர்களும் வித்தியாசமாக விளம்பரம் செய்தன .
"அனைத்து காலத்திலும் சிறந்த நட்சத்திர வரிசை , அனைத்து காலத்திலும் கூறப்பட்ட மிகச்சிறந்த கதை" என இருந்தது.
'ஷோலே'வின் டைரக்டர் கட் பதிப்பில் வேறுபட்ட முடிவு உள்ளது. இதில் தாக்கூர் கப்பர் சிங்கை கொல்லும் காட்சி இருந்தது.
ஆனால், இந்தியாவின் சென்சார் வாரியத்தால் இந்த காட்சிகள் நீக்கப்பட்டன, ஏனெனில் தனிநபர் பழிவாங்கும் வன்முறையானது பார்வையாளர்களை சட்டத்தை மீறத் தூண்டப்படலாம் என்று ஆட்சேபித்து அகற்றியது.
சிப்பி காட்சிகளைத் தக்கவைக்கப் போராடிய போதிலும், இறுதியில் அவர் திரைப்படத்தின் முடிவை மீண்டும் படமாக்க வேண்டியிருந்தது, தணிக்கை வாரியத்தின் உத்தரவின்படி, தாக்கூர் கப்பர் சிங்கை கொல்வதற்கு சற்று முன்பு போலீஸ் வரும்படி செய்ய வேண்டியிருந்தது.
இந்த தணிக்கை செய்யப்பட்ட திரையரங்குப் பதிப்பு முடிவே சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு பார்வையாளர்களுக்கு காணக்கிடைத்தது.
திரைப்படத்தின் அசல், அன்கட் பதிப்பு 1990 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் வெளியீட்டில் விஎச்எஸ் ஆக வெளிவந்தது.
ஆர்.டி. பர்மன் திரைப்படத்திற்கு இசை அமைத்தார், பாடல்களை ஆனந்த் பக்ஷி எழுதினார். கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் மற்றும் மன்னா டே ஆகியோர் முறையே தர்மேந்த்ரா, ஹேமமாலினி , அமிதாப் பச்சன் ஆகியோருக்காக பின்னணி பாடியுள்ளனர்.
"மெஹ்பூபா மெஹ்பூபா" என்ற பாடலை அதன் இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன் பாடினார், இந்த பாடல், கிரேக்க பாடகர் டெமிஸ் ரூஸோஸின் "சே யூ லவ் மீ" பாடலை அடிப்படையாகக் கொண்டது.
"யே தோஸ்தி" இறுதி நட்பின் கீதமாக அழைக்கப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் வசன உரையாடல்கள் மட்டுமே கொண்ட எல்பி ரெக்கார்டுகளையும் கூட ஒலிசித்திரமாக வெளியிட்டனர்.
விற்பனை ஐந்து லட்சம் ரெகார்டுகளை எட்டி சாதனை செய்தது.
ஷோலே வெறும் ஒரு திரைப்படம் அல்ல; அது இந்தியத் திரையுலகின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த ஒரு காலப் பெட்டகம். 1975 ஆம் ஆண்டு திரைகளில் தீப்பொறியாய் வந்த இந்தப் படைப்பு, வெறும் சண்டைக் காட்சிகளாலும், அதிரடி வசனங்களாலும் மட்டும் அல்லாமல், மனித உறவுகளின் ஆழமான உணர்வுகளாலும், தியாகங்களாலும் நம் மனதை உருக வைத்தது.
ரமேஷ் சிப்பியின் இயக்கம்,த்வாரகா த்வேச்சாவின் ஒளிப்பதிவு, சலீம்-ஜாவேத் கூட்டணி தந்த அழுத்தமான திரைக்கதை, கப்பார் சிங், பல்தேவ் சிங், ஜெய், வீரு, ராதா, பஸந்தி என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் உள்ளத்தில் பதிந்தன.
ஆரம்பத்தில் வெறும் பணம் தேடி வந்த ஜெய் மற்றும் வீருவின் நட்பு, ராம்பூர் மண்ணில் ஊன்றி, ஆழமான பிணைப்பாய் மாறியது. ஒருவரை ஒருவர் கண்ணிமை காப்பது போல பார்த்துக்கொண்ட அந்த இருவரின் தோழமை, பலருக்கு வாழ்நாள் இலட்சியமாய் அமைந்தது.
ஆபத்து வந்த வேளையில், தம்மைக் காத்துக்கொள்ளும் வலுவுடனும், நகைச்சுவையுடனும் அவர்கள் வெளிப்படுத்திய பாசம், திரையைப் பார்த்தவர்களை உள்ளுக்குள் நெகிழவைத்தது.
குறிப்பாக, 'யே தோஸ்தி' (இந்த நட்பு) எனும் பாடல், பல்லாண்டுகள் கடந்தும், நட்பின் பெருமை பேசும் தேசிய கீதமாய் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு மோட்டார் சைக்கிளில் அவர்கள் பயணிக்கும் காட்சி, வெறும் சாகசமாகத் தோன்றாமல், அவர்களின் பிரிக்க முடியாத பிணைப்பைக் காட்டியது.
ஆனால், இந்தப் பிணைப்பு உச்சக்கட்ட சோகத்தில் உடைந்தது. கப்பார் சிங்கின் கொடூரமான சூழ்ச்சியால், ஜெய் மரணத்தின் விளிம்பில் நிற்கிறான். வீருவை, பஸந்தியைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லச் சொல்லி, தான் மட்டும் உயிர் தியாகம் செய்ய அவன் முடிவெடுக்கும் அந்தக் காட்சி, திரையில் கண்டோரின் கண்களைக் குளமாக்கியது.
வெடிமருந்துகளைக் கொண்டு பாலத்தை வெடிக்கச் செய்து, சத்தம் விண்ணைப் பிளக்க, ஜெய் சாய்ந்து விழும் தருணம், நட்பின் மேன்மையை உயிர் தியாகத்தால் உறுதிப்படுத்திய ஒரு பெரும் சோகம்.
பின்னர் வீரு திரும்பி வந்து, ஜெயின் உயிரற்ற உடலைப் பார்த்து அலறும் அந்தப் பேரிரைச்சல், நம் மனதின் அடி ஆழம் வரை சென்று, ஆறாத காயத்தை ஏற்படுத்தியது.
அந்தத் தியாகம், வெறும் கதைக்காக அல்லாமல், நட்பின் புனிதத்தை உணர்த்திய ஒரு மறக்க முடியாத உணர்வுபூர்வமான கணம்.
தாக்கூர் பல்தேவ் சிங்கின் மருமகளான ராதாவின் வாழ்க்கை, மௌனங்களால் நிரம்பியது. தன் குடும்பத்தை இழந்து, விதவையாக வாழ்ந்த அவளது வாழ்வில், ஜெய் ஒரு சிறு வெளிச்சக் கீற்றாய் நுழைகிறான். அவர்களின் காதல் வார்த்தைகளால் பேசப்படாமல், கண்களின் வழியே, மென்மையான புன்னகைகளின் வழியே பரிமாறப்பட்டது.
ராதா இரவு விளக்கு ஏற்றும்போதெல்லாம் ஜெய் அவளைப் பார்ப்பதும், அவளது மௌனமான துயரத்தைப் புரிந்துகொண்டு, அவளுக்கு ஆறுதலாய் இருப்பதுமான காட்சிகள், ஆழமான காதலை வெளிப்படுத்தின.
எந்தவித மிகைப்படுத்தலும் இன்றி, பாசத்தையும், ஒருவரையொருவர் புரிந்துகொள்வதையும் அவர்கள் வெளிப்படுத்திய விதம், அன்பின் மென்மையை அப்பட்டமாகப் பதிவு செய்தது. ஜெய்யின் மறைவு, ராதாவின் மௌனமான உலகத்தை மீண்டும் இருளில் ஆழ்த்தியது,அவளது கண்ணீர் பேச முடியாத கதையாக, திரையில் விழுந்த ஒவ்வொரு துளியிலும் பார்வையாளர்களின் உள்ளத்தைக் கனக்கச் செய்தது.
பல்தேவ் சிங்கின் கதாபாத்திரம், வெறும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையல்ல; அது ஆறாத வடுவின் வலியும், நீதிக்கான தாகமும் நிறைந்த ஒரு உணர்ச்சிப் பயணம். கப்பார் சிங்கால் தன் குடும்பத்தையும், தன் இரு கைகளையும் இழந்த பிறகும், அவனைக் கொல்லும் சக்தியிருந்தும், சட்டத்தின் காவலனாகத் தனது சபதத்தைக் காப்பாற்ற அவன் படும் பாடு, நம்மை சிந்திக்க வைத்தது. இறுதிப் போரில், கப்பர் சிங்கை வீரு கொன்றிருக்கக் கூடிய சந்தர்ப்பத்தில், "அவனை உயிருடன் பிடிப்பதாகச் சபதம் செய்தோம்!" என்று தாக்கூர் பல்தேவ் சிங் வீருவை தடுக்கும் காட்சி, கடமையின் மேன்மையையும், உணர்ச்சிகளை மீறிய உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டியது.
தன் கைகளில்லாத நிலையிலும், கூர்மையான காலணிகளைக் கொண்டு கப்பார் சிங்கை சித்திரவதை செய்யும் அந்தக் காட்சி, அவரது கோபத்தையும், அதே நேரத்தில் நீதியைப் பிறழாத அவரது மன உறுதியையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியது.
பஸந்தி – துணிச்சலின் மறுபெயர்:
பஸந்தியின் கலகலப்பான சுபாவமும், தன் பேச்சால் அனைவரையும் கவர்ந்த விதமும், 'ஷோலே'வின் இறுக்கமான காட்சிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. வீருவுடனான அவளது காதல், நகைச்சுவையுடனும், குறும்புத்தனத்துடனும் கலந்து, ரசிக்கத்தக்கதாக இருந்தது. கப்பர் சிங்கின் பிடியில் சிக்கி, 'டான்ஸ் பஸந்தி, டான்ஸ்!' என்று வற்புறுத்தப்படும்போது, அவள் தன் உயிருக்காகப் போராடி, அதேவேளை வீருவுக்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் அந்தக் காட்சி, அவளின் மனவலிமையையும், காதலையும், தியாக உணர்வையும் வெளிப்படுத்தியது.
அவளின் கண்ணீர், அவளது துணிச்சலை மேலும் மெருகூட்டியது.
ஷோலே இன்றும் மறக்க முடியாத ஒரு படைப்பாக இருப்பதற்கு, இந்த உணர்வுபூர்வமான தருணங்களும், கதாபாத்திரங்களின் ஆழமான சித்தரிப்புகளுமே காரணம்.
இது வெறும் ஒரு அதிரடிப் படம் மட்டுமல்ல, நட்பு, காதல், தியாகம், பழிவாங்குதல் மற்றும் நீதிக்கான போராட்டம் ஆகிய மனித உணர்வுகளின் ஒரு ஆழமான காவியமாகும்.