"கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ (Guillermo del Toro's Pinocchio)" கார்லோ கொலோடி 1883 ஆம் ஆண்டு எழுதிய இத்தாலிய நாவலை அடிப்படையாகக் கொண்டு 2022 ஆம் ஆண்டு வெளியான இருண்ட கற்பனை இசை படைப்பு .
புகழ்பெற்ற இயக்குநர் கியர்மோ டெல் டோரோ மற்றும் மார்க் குஸ்டாப்சன் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.
முதல் உலகப் போரில் தச்சன் கெபெட்டோ தன் மகன் கார்லோவை வான்வழித் தாக்குதலில் இழக்கிறான்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே துக்கத்தில் அவன் ஒரு மரப் பொம்மையைச் செய்ய அந்தப் பொம்மைக்கு உயிர் கிடைக்கிறது.
பாசிச இத்தாலியின் பின்னணியில் ஒரு மரப் பொம்மையின் வழியாக மனித வாழ்வின் ஆழமான தத்துவங்களை இத்திரைப்படம் பேசுகிறது.
உலக சினிமா வரலாற்றில் கியர்மோ டெல் டோரோவின் இந்த படைப்பு அனிமேஷன் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
1940 ஆம் ஆண்டு வெளியான டிஸ்னி பதிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பாசிச இத்தாலியின் அரசியல் சூழலை இது பிரதிபலிக்கிறது.
மெக்சிகோ மற்றும் அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான இது அனிமேஷன் என்பது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல அது ஒரு வலிமையான கலை ஊடகம் என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உரக்கச் சொன்னது.
உலக சினிமா விமர்சகர்கள் இந்தப் படத்தை டெல் டோரோவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதுகின்றனர்.
முந்தைய பதிப்புகளில் பினோச்சியோ ஒரு நிஜச் சிறுவனாக மாறுவதே குறிக்கோளாக இருக்கும் ஆனால் இதில் அவன் மரப் பொம்மையாகவே இருந்து மனிதத் தன்மையை வெளிப்படுத்துவது போற்றப்படுகிறது.
மரணம் மற்றும் அழிவற்ற தன்மை குறித்த ஆழமான விவாதங்களை முன்வைக்கும் விதம் இயக்குநரின் கலை மேதமையை பறைசாற்றுகிறது.
2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த படைப்பு நீண்ட கால இழுபறிக்குப் பிறகு நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தால் 2018 ஆம் ஆண்டு மீண்டும் துவக்கப்பட்டது.
கியர்மோ டெல் டோரோ மற்றும் பேட்ரிக் மெக்ஹேல் இணைந்து எழுதிய திரைக்கதை படத்தின் ஆன்மாவாக உள்ளது.
மார்க் குஸ்டாப்சன் அனிமேஷன் இயக்கத்தில் தனது முழுத் திறமையையும் காட்டியுள்ளார்.
இது அவர் 2024 இல் மறைவதற்கு முன் பணியாற்றிய கடைசித் திரைப்படமாகும்.
இத்திரைப்படம் ஸ்டாப் மோஷன் தொழில்நுட்பத்தில் 35 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவானது.
கிரிஸ் கிரிம்லியின் ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டு பினோக்கியோவின் உருவம் செதுக்கப்பட்டது.
இயந்திர தலைகள் மூலம் முகபாவனைகள் கொண்டு வரப்பட்டன குறிப்பாக பினோக்கியோ பாத்திரத்திற்கு மட்டும் 3000 மாற்றக்கூடிய முக அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன.
போர்ட்லேண்ட் மற்றும் மெக்சிகோவின் குவாடலஜாரா ஆகிய இடங்களில் இந்தப் படப்பிடிப்பு மிக நேர்த்தியாக நடைபெற்றது.
அக்டோபர் 15 2022 அன்று பிஎஃப்ஐ லண்டன் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் முதல்முறையாகத் திரையிடப்பட்டது.
பின்னர் நவம்பர் மாதத்தில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியாகி டிசம்பர் 9 ஆம் தேதி முதல் நெட்ஃபிக்ஸ் தளத்தில் உலகெங்கும் ஒளிபரப்பானது.
மெக்சிகோவில் திரையரங்கு சிக்கல்கள் எழுந்தபோது இயக்குநர் நேரடியாகத் தலையிட்டு சுயாதீன திரையரங்குகளில் படத்தை வெளியிட்டார்.
கிரிகோரி மேன் பினோக்கியோ மற்றும் கார்லோ என இரு வேடங்களுக்குக் குரல் கொடுத்துள்ளார்.
டேவிட் பிராட்லி கெபெட்டோவாகவும் இவான் மெக்ரிகர் செபாஸ்டியன் ஜே கிரிக்கெட் என்ற கதைசொல்லியாகவும் நடித்துள்ளனர்.
வில்லன் பாத்திரமான கவுண்ட் வோல்பேவிற்கு கிறிஸ்டோப் வால்ட்ஸ் குரல் கொடுத்துள்ளார்.
கேட் பிளான்செட் ஸ்பாசதுரா என்ற குரங்கு பாத்திரத்திற்கு வெறும் ஒலிகள் மூலம் உணர்வுகளை வழங்கியுள்ளார்.
டில்டா ஸ்விண்டன் வாழ்க்கை மற்றும் மரணத்தின் தேவதைகளாக இரு வேடங்களில் நடித்துள்ளார்.
அலெக்ஸாண்ட்ரே டெஸ்பிளாட் இப்படத்திற்கு மிகச்சிறந்த இசையை வழங்கியுள்ளார்.
ரூபன் காட்ஸ் பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ப 1930 களின் சூழலை இசை அப்படியே உள்வாங்கியுள்ளது.
தி ஷேப் ஆஃப் வாட்டர் படத்திற்குப் பிறகு டெஸ்பிளாட் மற்றும் டெல் டோரோ இணைந்த இரண்டாவது படம் இதுவாகும்.
இத்திரைப்படம் 95 வது ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்றது.
இதன் மூலம் ஆஸ்கார் வென்ற முதல் ஓடிடி தள அனிமேஷன் படம் என்ற பெருமையைப் பெற்றது.
இது தவிர கோல்டன் குளோப் பாஃப்டா மற்றும் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைக் குவித்துள்ளது.
இத்திரைப்படம் கீழ்ப்படிதல் , தனித்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான போராட்டத்தை அதன் அடிநாதமாகக் கொண்டுள்ளது.
வழக்கமான கதைகள் பினோச்சியோ ஒரு நல்ல சிறுவனாக மாற வேண்டுமெனில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று போதிக்கும்.
ஆனால் இந்தப் படம் ஒரு மரப்பொம்மை தனது சொந்த விருப்பத்தின்படி செயல்படுவதையும் தவறு செய்து கற்றுக் கொள்வதையுமே உண்மையான மனிதத்தன்மையாகச் சித்தரிக்கிறது.
அன்பு என்பது ஒருவரை அவர் இருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொள்வது என்பதைத் தந்தை கெபெட்டோ கதாபாத்திரம் மூலம் படம் உணர்த்துகிறது.
இறந்த மகனின் இடத்தைப் பினோக்கியோ நிரப்ப வேண்டும் என்று தொடக்கத்தில் நினைக்கும் தந்தை பின்னர் அவனது தனித்துவத்தை நேசிக்கத் தொடங்குகிறார்.
இது ஒரு தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான பிணைப்பை ஆழமாகப் பேசுகிறது.
மரணத்தின் அவசியமும் வாழ்வின் நிலையற்ற தன்மையும் படத்தின் மற்றொரு முக்கியக் கருப்பொருள் ஆகும்.
பினோச்சியோ மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் வரத்தைப் பெற்றிருந்தாலும் இறுதியில் தனது தந்தையைக் காப்பாற்ற அந்த அழியாத்தன்மையை அவன் தியாகம் செய்கிறான்.
ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் அழகானதாகவும் மாற்றுகிறது என்பதை இந்தப் படம் அழகாக விளக்குகிறது.
பாசிச ஆட்சிக்காலத்தில் அனைவரும் அதிகாரத்திற்கு அடிபணிந்து பொம்மைகளாக வாழும் சூழலில் உண்மையில் ஒரு மரப்பொம்மையான பினோச்சியோ மட்டும் சுதந்திரமான சிந்தனையுடன் இருப்பது முரண் நையாண்டியாகக் காட்டப்பட்டுள்ளது.
அதிகாரம் மற்றும் போரின் அர்த்தமற்ற தன்மையைச் சிறுவர் கதையின் வாயிலாகத் தத்துவார்த்தமாக இந்தப் படைப்பு முன்வைக்கிறது.
இயக்குநர் கில்லர்மோ டெல் டோரோவின் தந்தை இறந்த பிறகு இந்தப் படத்தின் பணிகள் வேகம் பெற்றன.
தனது தந்தைக்கும் தனக்கும் இருந்த உறவின் நிழலாகவே கெபெட்டோ மற்றும் பினோச்சியோ இடையிலான பிணைப்பை அவர் செதுக்கினார்.
வழக்கமான அனிமேஷன் படங்களில் கதாபாத்திரங்கள் மிகச் சரியாகச் செயல்படும். ஆனால் இதில் யதார்த்தத்தைக் கொண்டு வர பொம்மைகள் தும்முவது அல்லது தடுமாறுவது போன்ற சிறு பிழைகளையும் திட்டமிட்டே அனிமேஷன் செய்தனர்.
இப்படத்தில் ஸ்பாஸதுரா எனும் குரங்கு கதாபாத்திரத்திற்குப் பேசும் வசனங்கள் கிடையாது. சத்தங்களை மட்டுமே எழுப்பும் அந்தப் பாத்திரத்திற்குத் புகழ்பெற்ற நடிகை கேட் பிளான்செட் குரல் கொடுத்தார்.
அவர் இந்தப் படத்தில் ஏதேனும் ஒரு வாய்ப்பு வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டு விரும்பிப் பெற்ற வேடம் இதுவாகும்.
படத்தில் வரும் ஒவ்வொரு பொம்மையின் தலைக்குள்ளும் சிறிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டு அவற்றின் முக பாவனைகள் மிக நுணுக்கமாக மாற்றியமைக்கப்பட்டன.
பினோச்சியோவின் மூக்கு வளரும் காட்சிகளில் அது வெறும் மரக்கிளையாக மட்டும் வளராமல் அதன் நுனியில் சிறிய இலைகள் மற்றும் பூக்கள் தோன்றுவது போன்ற விவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினியின் உருவத்தைப் படத்தில் ஒரு கேலிச்சித்திரமாகப் பயன்படுத்தி அதிகாரத்தை எதிர்த்துப் பேசுவதே உண்மையான சுதந்திரம் என்பதை இயக்குநர் துணிச்சலாகக் காட்டியுள்ளார்.
முப்பரிமாண அச்சு முறையில் பினோச்சியோவிற்கு மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முகங்கள் உருவாக்கப்பட்டன.
இப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் உள்ள எல் டேலர் டெ சுச்சோ எனும் சிறிய அனிமேஷன் ஸ்டுடியோவில் ஒரு பெரும் பகுதி நடைபெற்றது.
இது லத்தீன் அமெரிக்க அனிமேஷன் கலைஞர்களுக்குப் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
இப்படத்தில் வரும் செபாஸ்டியன் கிரிக்கெட் கதாபாத்திரம் தங்குவதற்கு பினோக்கியோவின் இதயப் பகுதியில் ஒரு சிறிய அறையே வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த அறைக்குள் இருக்கும் சிறிய புத்தகங்கள் மற்றும் நாற்காலிகள் அனைத்தும் மிக நுணுக்கமான கைவேலைப்பாடுகளால் ஆனவை.
ஸ்டாப் மோஷன் முறையில் ஒரு வினாடி காட்சிக்கு இருபத்தி நான்கு தனித்தனி புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
ஒரு அனிமேஷன் கலைஞர் ஒரு வாரம் முழுவதும் உழைத்தால் வெறும் இரண்டு வினாடி காட்சிகளை மட்டுமே உருவாக்க முடிந்தது.
திரைக்கதையில் வரும் கடல் பூதம் அல்லது அந்த ராட்சத மீன் ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
அதன் தோலில் இருக்கும் ஒவ்வொரு செதில்களும் தனித்தனியாகச் செதுக்கப்பட்டன.
மேலும் இப்படத்தின் பின்னணி இசைக்காகப் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் அனைத்தும் படப்பிடிப்புத் தளத்திலேயே நடிகர்களால் பாடப்பட்டு பின்னர் அனிமேஷன் கலைஞர்கள் அந்தத் தாளத்திற்கு ஏற்ப பொம்மைகளை அசைத்தனர்.
பொதுவாக அனிமேஷன் படங்களில் கதாபாத்திரங்கள் பேசும்போது மட்டுமே வாய் அசையும்.
ஆனால் இதில் கதாபாத்திரங்கள் மற்றவர்கள் பேசுவதைக் கவனிக்கும்போதும் அல்லது யோசிக்கும்போதும் அவர்களின் கண்களில் ஏற்படும் சிறிய அசைவுகளைக் கூட படம்பிடித்தனர்.
இது பொம்மைகளுக்கு ஒரு உயிருள்ள மனிதனின் ஆன்மாவை வழங்கியது. இத்திரைப்படம் கில்லர்மோ டெல் டோரோவின் இருபது ஆண்டுகால உழைப்பிற்குப் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கெபெட்டோவின் தச்சுக்கூடம் மற்றும் தேவாலயம் போன்ற கட்டிடங்களின் உட்புறங்கள் அனைத்தும் மிகத் துல்லியமான அளவில் நிஜமான மரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.
சுவர்களில் தொங்கும் சிறிய கருவிகள் மற்றும் மேஜை மீதுள்ள மரத்தூள் வரை அனைத்தும் உண்மையான பொருட்களின் சிறிய வடிவங்களாகும்.
பொதுவாக அனிமேஷன் படங்களில் கதாபாத்திரங்கள் அழுக்குப்படாமல் தூய்மையாக இருக்கும். ஆனால் இப்படத்தில் கதாபாத்திரங்களின் உடைகளிலும் முகத்திலும் தேய்மானம் மற்றும் கறைகள் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டது.
திரைக்கதையின் ஒரு பகுதியில் வரும் கருப்பு முயல்கள் மரண தேவதையின் உதவியாளர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இவை கார்லோ கொலோடியின் அசல் புத்தகத்தில் வரும் ஒரு சிறிய பகுதியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை.
ஸ்டாப் மோஷன் பொம்மைகளுக்குப் போடும் உடைகளைத் தைப்பதற்காகவே பிரத்யேகமான சிறிய தையல் இயந்திரங்கள் மற்றும் மெல்லிய நூல்இழைகள் பயன்படுத்தப்பட்டன.
துணிகள் காற்றில் அசைவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க அந்த ஆடைகளுக்குள் மிக மெல்லிய கம்பிகள் கோர்க்கப்பட்டிருந்தன.
கடல் அலைகளின் காட்சிகளைப் படமாக்கும்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்குப் பதிலாக ஒளி ஊடுருவக்கூடிய பிளாஸ்டிக் தாள்கள் மற்றும் கண்ணாடிகளைப் பயன்படுத்தி அந்த அசைவுகளை உருவாக்கினர்.
இது படத்திற்கு ஒரு கைவினைப் பொருளின் அழகைத் தந்தது. படத்தின் இறுதியில் வரும் நீண்ட வரவுகளில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரின் பெயரும் மிகக் கவனமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இது அனிமேஷன் துறையில் உழைக்கும் திரைக்குப் பின்னால் இருக்கும் கலைஞர்களுக்கு இயக்குநர் அளித்த மிகப்பெரிய மரியாதையாகப் பார்க்கப்படுகிறது.
படத்தின் கதை:-
இத்தாலி நாட்டில் ஜெபெட்டோ (டேவிட் பிராட்லி) என்ற மரம் செதுக்கும் கலைஞர் வசித்தார்.
முதல் உலகப்போர் நடந்த சமயத்தில் ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரிய படைகள் வீசிய குண்டுகள் பட்டு, அவரது அருமை மகன் கார்லோ (கிரிகோரி மேன்) தேவாலயத்தின் உள்ளேயே உயிரிழந்தான்.
மகனை இழந்த துக்கத்தில் இருபது ஆண்டுகள் தவித்த ஜெபெட்டோ, ஒரு நாள் இரவு குடித்துவிட்டுத் தன் மகனின் கல்லறை அருகே இருந்த பைன் மரத்தை வெட்டினார்.
அந்த மரத்தைக் கொண்டு ஒரு பொம்மையைச் செய்துவிட்டுச் சோர்வில் உறங்கிப்போனார்.
அப்போது அங்கு வந்த வன தேவதை (டில்டா ஸ்விண்டன்), அந்தப் பொம்மைக்கு உயிர் கொடுத்து அதற்குப் பினோச்சியோ என்று பெயரிட்டாள்.
அந்த மரத்தின் பொந்துக்குள் வசித்து வந்த செபாஸ்டியன் (இவான் மெக்ரிகர்) என்ற தத்திடம், பினோச்சியோவிற்குச் சரியான நன்னெறிகளைப் போதிக்கும் பொறுப்பை ஒப்படைத்தாள்.
இதற்குப் பதிலாகச் செபாஸ்டியனுக்கு ஒரு வரம் தருவதாகவும் வாக்களித்தாள்.
மறுநாள் காலையில் கண் விழித்த ஜெபெட்டோ, பினோச்சியோ வீட்டைச் சுற்றி ஓடுவதையும் பொருட்களை உடைப்பதையும் கண்டு பயந்து போனார்.
பினோச்சியோவிற்குத் தன்னை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. இதனால் கோபமடைந்த ஜெபெட்டோ, அவனைப் பள்ளிக்கு அனுப்ப முடிவெடுத்துத் தனது மகனின் பழைய புத்தகத்தைக் கொடுத்தார்.
பள்ளிக்குச் செல்லும் வழியில் கவுண்ட் வோல்ப் (கிறிஸ்டோஃப் வால்ட்ஸ்) என்ற நரி குணம் கொண்ட சர்க்கஸ் முதலாளியும், அவனது குரங்கான ஸ்பாஸதுராவும் (கேட் பிளான்செட்) பினோச்சியோவை வழிமறித்துச் சர்க்கஸில் சேரச் சொல்லி ஆசை காட்டினர்.
அவனைத் தேடி வந்த ஜெபெட்டோவிற்கும் வோல்பிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாகப் பினோச்சியோ ஒரு லாரியில் மோதி உயிரிழந்தான்.
மரணத்திற்குப் பின் பினோச்சியோ மரண தேவதையைச் (டில்டா ஸ்விண்டன்) சந்தித்தான். அவன் ஒரு மரப்பொம்மை என்பதால் அவனுக்குச் சாவே கிடையாது என்றும், ஒரு மணற்கடிகாரம் காலியானதும் அவன் மீண்டும் பூமிக்குச் செல்லலாம் என்றும் அவள் கூறினாள்.
ஆனால் ஒவ்வொரு முறை அவன் இறக்கும்போதும் மேல் உலகில் கழிக்க வேண்டிய நேரம் அதிகமாகும் என்று எச்சரித்தாள்.
மீண்டும் உயிரோடு வந்த பினோச்சியோவைப் பார்த்த ஊர் அதிகாரி பொடெஸ்டா (ரோன் பெர்ல்மேன்), இவன் சாகாதவன் என்பதால் இவனை ஒரு சிறந்த ராணுவ வீரனாக மாற்றலாம் என்று நினைத்தார்.
ஜெபெட்டோவோ அவனைப் பள்ளிக்கு அனுப்பத் துடித்தார். தந்தையின் கஷ்டத்தைப் பார்த்த பினோக்கியோ, சர்க்கஸில் நடித்துப் பணம் சம்பாதிக்க முடிவெடுத்தான்.
ஆனால் சர்க்கஸ் முதலாளி வோல்ப், பினோக்கியோ சம்பாதிக்கும் பணத்தைத் தந்தை ஜெபெட்டோவிற்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்தான்.
இதனை அறிந்த குரங்கு ஸ்பாஸதுரா உண்மையைச் சொல்ல, வோல்ப் அந்தக் குரங்கை அடித்துப் துன்புறுத்தினான்.
இதனால் கோபமடைந்த பினோச்சியோ, சர்வாதிகாரி முசோலினி (டாம் கென்னி) வந்திருந்த மேடையிலேயே அவரைத் திட்டிக் கேலி செய்து பாடினான்.
முசோலினி உடனே பினோச்சியோவைச் சுட்டுத் தள்ளச் சொன்னார்.
மீண்டும் உயிர்த்தெழுந்த பினோக்கியோவை அதிகாரி பொடெஸ்டா ஒரு ராணுவப் பயிற்சி முகாமிற்குத் தூக்கிச் சென்றார்.
அங்கே பொடெஸ்டாவின் மகன் கேண்டில்விக்கும் (ஃபின் வொல்ஃப்ஹார்ட்) பினோச்சியோவும் நண்பர்களானார்கள்.
ஒரு கட்டத்தில் தன் சொந்த மகனையே பினோச்சியோவைச் சுட்டுக் கொல்லச் சொன்னார் அதிகாரி.
கேண்டில்விக் மறுத்துத் தன் தந்தையை எதிர்த்தான். அப்போது நடந்த விமானக் குண்டுவீச்சில் அதிகாரி கொல்லப்பட்டார்.
அங்கிருந்து தப்பிய பினோச்சியோவை வோல்ப் பிடித்துக் கொண்டு போய்க் கொலை செய்ய முயன்றான்.
ஆனால் குரங்கு ஸ்பாஸதுரா பினோச்சியோவைக் காப்பாற்ற, வோல்ப் கடலுக்குள் விழுந்து இறந்தான்.
கடலில் தத்தளித்த பினோச்சியோவையும் குரங்கையும் ஒரு ராட்சதத் திமிங்கிலம் விழுங்கியது.
அதன் வயிற்றுக்குள் பினோச்சியோவைத் தேடி வந்த தந்தை ஜெபெட்டோவும், செபாஸ்டியனும் ஏற்கனவே சிக்கியிருந்தனர்.
அங்கிருந்து தப்பிக்க ஒரு வழி பிறந்தது. பினோக்கியோ பொய் சொல்லச் சொல்ல அவனது மூக்கு வளர்ந்து பெரிய கிளையாக மாறியது.
அதன் வழியாக அனைவரும் திமிங்கிலத்தின் மூச்சுத் துளை வழியாக வெளியேறினர்.
ஆனால் திமிங்கிலம் மீண்டும் அவர்களைத் துரத்த, பினோச்சியோ ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்து தன்னைத் தியாகம் செய்தான்.
மீண்டும் மரண தேவதையைச் சந்தித்த பினோச்சியோ, தன் தந்தை நீரில் மூழ்கிச் சாகக்கூடாது என்பதற்காகத் தனது சாகாவரத்தை ரத்து செய்யும்படி வேண்டினான்.
இதனால் அவன் ஒரு சாதாரண மனிதச் சிறுவனாக மாறிப் பூமிக்கு வந்தான். தந்தை பிழைத்தார், ஆனால் பினோச்சியோ இறந்து கிடந்தான்.
இதைக் கண்டு வன தேவதை மீண்டும் அங்கு வந்தாள். செபாஸ்டியன் தனக்குக் கிடைக்க வேண்டிய வரத்தைப் பயன்படுத்திப் பினோச்சியோவை மீண்டும் உயிர்ப்பிக்கச் சொன்னான்.
கடைசியில் பினோச்சியோ, ஜெபெட்டோ, செபாஸ்டியன் மற்றும் ஸ்பாஸதுரா ஆகியோர் ஒரு குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
காலம் செல்லச் செல்ல ஜெபெட்டோவும் மற்றவர்களும் வயது முதிர்வால் இயற்கை எய்தினர்.
இறுதியில் பினோச்சியோ மட்டும் தனது பையை மாட்டிக்கொண்டு, இந்த உலகத்தின் புதிய இடங்களைத் தேடித் தனியாகப் பயணிக்கத் தொடங்குகையில் படம் நிறைகிறது.
கில்லர்மோ டெல் டோரோவின் இந்தப் படைப்பு வெறும் சிறுவர்களுக்கான கதையாக மட்டும் இல்லாமல், வாழ்வின் நிலையற்ற தன்மையையும் அன்பின் ஆழத்தையும் மிக நுணுக்கமாகப் பேசுகிறது.
முக்கியமாக, இந்தப் படம் ஒருவரை அவர் இருக்கும் நிலையிலேயே அப்படியே ஏற்றுக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
ஜெபெட்டோ தனது இறந்த மகன் கார்லோவின் பிம்பத்தை பினோச்சியோவிடம் தேடுகிறார்.
ஆனால் பினோச்சியோ ஒரு துறுதுறுப்பான, தனித்துவமான பொம்மை. நாம் நேசிக்கும் மனிதர்கள் நம் விருப்பப்படிதான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அன்பல்ல, அவர்களை அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களோடு ஏற்றுக்கொள்வதே உண்மையான பாசம் என்பதை ஜெபெட்டோவின் மனமாற்றம் மூலம் அறியலாம்.
அடுத்து, போர் மற்றும் சர்வாதிகாரத்தின் மீதான கடுமையான விமர்சனத்தை இந்தப் படம் முன்வைக்கிறது. போரில் குழந்தைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதும், அதிகாரம் படைத்தவர்கள் ஒரு உயிரின் மதிப்பை வெறும் போர் வீரனாக மட்டுமே பார்ப்பதும் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதைப் படம் தோலுரித்துக் காட்டுகிறது.
பினோச்சியோ சாகாவரம் பெற்றவன் என்பதால் அவனை ஒரு போர்க்கருவியாக மாற்றத் துடிக்கும் அதிகார வர்க்கம், அவனிடம் இருக்கும் மனிதநேயத்தைக் காணத் தவறுகிறது.
மரணம் என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தப் படம் ஒரு புதிய கோணத்தில் சொல்கிறது.
பினோச்சியோவிற்குச் சாவே கிடையாது என்ற நிலை இருக்கும் வரை, அவன் வாழ்வின் அருமையை உணர்வதில்லை.
ஆனால் தனது தந்தையைக் காப்பாற்ற அவன் தனது சாகாவரத்தைத் துறக்கும்போதுதான் அவன் முழுமையான ஒரு மனிதனாக மாறுகிறான்.
மரணம் இருப்பதால்தான் நாம் வாழும் காலமும், நாம் காட்டும் அன்பும் இவ்வளவு மதிப்புமிக்கதாக மாறுகிறது என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது.
கீழ்ப்படிதல் என்ற பெயரில் சுயமாகச் சிந்திக்காமல் இருப்பதை விட, எது நியாயம் என்று உணர்ந்து செயல்படுவதே மேலானது என்பதைப் பினோச்சியோவின் செயல்கள் காட்டுகின்றன.
அவன் ஆரம்பத்தில் முரட்டுத்தனமாகத் தெரிந்தாலும், இறுதியில் தியாகம் மற்றும் கருணையின் அடையாளமாக மாறுகிறான்.
மொத்தத்தில், வாழ்க்கை என்பது ஒரு குறுகிய பயணம் என்றும், அதில் நாம் மற்றவர்களுக்காகக் காட்டும் உண்மையான அன்பும் தியாகமுமே நம்மை வரலாற்றில் நிலைக்கச் செய்யும் என்பதே இத்திரைப்படம் சொல்லும் மிக உயரிய செய்தியாகும்.