எழுத்தாளன், கட்டிடக்கலைஞர் பின்னணியில் சென்னையில் பத்து வருடங்கள் அமீரகத்தில் பதினைந்து வருடங்கள் பணியில் இருந்தேன், தற்போது ஏழு வருடங்களாக சென்னையில் கட்டிடக்கலை வாஸ்து ஃபெங் ஷூய் வடிவமைப்பாளராக DFD Dial for Design என்ற online design சேவையைத் துவக்கி கட்டிடக்கலை வாஸ்து ஃபெங்ஷூய் குறித்த சிறப்பு ஆலோசனைகள் வரைபடங்கள் வழங்கி வருகிறேன் .
ஓய்வில் அரிய உலக சினிமாக்களையும், கலை, சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியம், வாஸ்து,கட்டுமானத்துறை கட்டிடக்கலை பற்றி அதிகம் எழுதுகிறேன்.
1989 ஆம் ஆண்டு முழுதும் தயாராகி வெளிவராத "சித்திரம் பேசுதடி" திரைப்படத்தின் LP cover பாருங்கள், இதன் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன் , இவர் அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தின் இசையமைப்பாளர் என்பதால் கண்டிப்பாக பரீட்சார்த்தம் வித்தியாசம் இருக்கும்.
இயக்குனர் பூவரசு அதன் பிறகு என்ன ஆனார் எனத் தெரியவில்லை, அவர் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பது LP உறை மூலம் தெரிகிறது.
பாடல்கள் விபரம்
1. தங்கநிலவு-THANGA NEELAVU S.P. பாலசுப்பிரமணியன் & P. சுசீலா
2. காசை போடு-KASAI PODU
S.P.பாலசுப்பிரமணியன்
3. ரவிகுல வேந்தனே-RAVI KULA VENTHANEE S.P.பாலகப்பிரமணியன் & P. சுசீலா
இந்த ரயில் தண்டவாளம் வேயப்பட்ட ஆலப்புழா கடல் பாலம் நூற்றாண்டு பழமையானது, கேரளத்தின் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்திற்கு மிகவும் புகழ்பெற்றது , 1990 களில் கடல் சீற்றம் மற்றும் அரிப்பில் முறையான பராமரிப்பின்றி இன்று சுத்தமாக அழிந்து போய்விட்டது, இணைப்பு படங்களைப் பாருங்கள். (இதே போல பாண்டிச்சேரி கடலிலும் இருந்த பாலமும் கடல் அரிப்பில் சுத்தமாக அழிந்து போய்விட்டது.)
ஒரு திரைப்படம் ஸ்டுடியோவிற்குள் செட் அமைத்து எடுக்காமல் பொதுவெளியில் இது போல அனுமதி வாங்கி படமாக்குகையில் அது கடந்தகாலத்தின் சாட்சியாகிறது, வரலாற்று ஆவணமாகிறது,இன்று இந்த கடல் பாலம் வெறும் நினைவுகள் மட்டுமே, இணைப்பில் உள்ள எல்லா படங்களையும் பார்த்தால் நான் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியும்.
ஆலப்புழா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள இந்த கடற்கரை மிகவும் புகழ்பெற்றது,இங்கு தினசரி கலாசார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன, திறந்தவெளி அரங்கம் மற்றும் கலைநயத்துடன் கூடிய நீண்ட நடைபாதை, பசும்புல்வெளிகள், செடிகள், மக்கள் அமர்ந்து காட்சி மற்றும் கடல் காற்றை ரசிக்க இருக்கைகள் உள்ளன, சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் ஆலப்புழா கடற்கரை .
இக்கடற்கரையில் வைத்து இயக்குனர் ஃபாஸிலின் பூவினு புதிய பூந்தென்னல் திரைப்படத்தின் இறுதி சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது, நாம் காணும் இந்த கடல் பாலம் கரையில் இருந்து 1000 அடி நீளமுள்ளது, சுமார் 137 ஆண்டுகள் பழமையானது. 1862 ஆம் ஆண்டில் Captain Hugh Crawford என்பவரால் கட்டப்பட்டது, இது பல தசாப்தங்களுக்கு முன்பு வர்த்தகம் வளரத் துவங்கி செழித்திருந்தபோது கப்பல்களில் பொருட்களை ஏற்றி இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
இப்போது பாலத்தின் தரையில் வேய்ந்திருந்த தரையில் இருந்த இரும்பு பட்டைகள் , கிராதிகள் குறுக்கு உத்திரங்கள் , தடுப்பு வேலிகள் , narrow கேஜ் ரயில் தண்டவாளம், ஸ்லீப்பர் கட்டைகள்,guard house, check post,விளக்கு கம்பம் என எதுவும் இல்லை.
இரும்புத் தூண்கள் மட்டும் துரு ஏறி பாழடைந்த நிலையில் நீரிலும் மணலிலும் காணலாம்,
கப்பல்கள் நடுக்கடலில் இரண்டு நாட்டிகல் மைல் தூரத்தில் தங்கிவிட அதில் இருந்து சரக்குகள் மசுலா படகுகளில் ஏற்றப்பட்டு இந்த கடல் பாலம் வந்தடையும், சரக்கு ரயில் பெட்டியில் ஏற்றப்பட்டு warehouse கொண்டு செல்லப்பட்டது வரலாறு. அன்று நடந்த வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக இருந்தது இந்த கடல் பாலம்.
இடிக்கப்பட காத்திருக்கும் செங்கல்பட்டு திருமலை டாக்கீஸை இன்று அவ்வழி கடக்கையில் ஓரம் கட்டி படம் எடுத்தேன், இத்திரையரங்கத்தின் துவக்கம் 1940 ஆம் ஆண்டு.70 வயதைக் கடந்த செங்கல்பட்டு வாசிகளின் ஆதர்சம் இந்த திருமலை டூரிங் டாக்கீஸ்.
முப்பது வருடங்களுக்கு முன்பு வரை திருச்சி மதுரை நகரங்களுக்குச் செல்லும் திருவள்ளுவர் பேருந்துகள் இந்த GST சாலை வழியே தான் செல்லும் , மதுரையில் இருந்து வருகையில் அதிகாலை இந்த திருமலை டாக்கீஸ் தான் முதலில் கண்விழிக்கையில் கண்ணில் படும், எனக்கு அப்படித்தான் இந்த டாக்கீஸ் மனதில் பதிந்தது.
எம்ஜியார் , சிவாஜி போன்ற உச்ச நட்சத்திரங்கள் தங்கள் புதுப்பட வெளியீட்டுக்கு வந்த திரையரங்கம் இது, சுதந்திரத்துக்கு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் டாக்கீஸ் இது, காஞ்சி முருகன் , சென்னை கெயிட்டி , செங்கல்பட்டு திருமலை’ என்பது அந்நாளில் பிரபலமான வாசகம் என்று என் மறைந்த அப்பா , சித்தப்பா என்னிடம் கண்கள் விரியப் பகிர்ந்ததுண்டு. அவர்கள் பால்யத்தில் பள்ளி வகுப்பை மட்டம் போட்டு பலதிரைப்படங்கள் பார்த்த டாக்கீஸ் இது என பகிர்ந்துள்ளனர்,
என் அப்பா அப்படி 8 ஆம் வகுப்பு தோல்வியடைய சிலகாலம் இந்த டாக்கீஸில் உதவி ஆபரேட்டராக வேலை பார்த்த பல கதைகளை சொல்லியிருக்கிறார், திரையில் திரைப்படம் ஓடுகையில். கார்பன் ராடுகள் சிரத்தையாக முறையாக மாற்றப்பட வேண்டும் இல்லை என்றால் திரையில் படம் ஒளி மங்கி கடும் விசில் பறக்கும் , ரசிகர்களின் வசவு கேட்கும்,ஒரு அசகாய வெள்ளை ஒளி ப்ரொஜக்டரில் இருந்து ஒளிர்ந்தபடி இருக்கும். அந்த ஒளிக்கு எரிபொருள் இந்த கார்பன் ராடுகளாம், ரீல்களுக்கு இடையில் எரிபொருளான இந்த கார்பன் ராடுகளை கவனமாக மாற்றுவாராம் என் அப்பா.
இந்த தியேட்டரை துவக்கிய திருமலை நாயுடு அவர்கள் , திரை உலகம் மற்றும் அரசியல் பிரபலங்களோடு நெருங்கிய நட்பில் இருந்தாராம், செங்கல்பட்டு நகராட்சியின் துணைத் தலைவர் உள்ளிட்ட ஏகப்பட்ட பொறுப்புகளை வகித்தாராம்.
1940 ஆம் ஆண்டில் அவரால் துவங்கப்பட்ட திருமலை டாக்கீஸ், அவரது மறைவுக்குப் பின் மூன்றாம் தலைமுறை வரை தொடர்ந்தது. துரதிருஷ்டவசமாக ஐம்பது வருடங்களை நெருங்க சில மாதங்கள் மீதம் இருந்த நிலையில் 1989-ம் ஆண்டு இறுதியில் தன் சேவையை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டது இத் திரை அரங்கம்.
1940-களில் சென்னையின் பிரபலமான தியேட்டர்களில் மூன்றே முக்கால் அணா நுழைவுச்சீட்டு என்றால் . அதே போன்ற நவீன வசதிகளைக் கொண்ட திருமலை டாக்கீஸில் இரண்டணாதான் நுழைவுச்சீட்டு வாங்கி என் தாத்தா இங்கு படங்கள் பார்த்துள்ளார்.
பி.யு.சின்னப்பாவின் 'மங்கையர்க்கரசி’, கே.பி.சுந்தரம்பாளின் 'ஒளவையார்’, எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி’, பொன்முடி, சபாபதி, மனோன்மணி என அக்கால வெற்றிப் படங்களை திரையிட்ட திரையரங்கம் இது.
இதன் CINEMECCANICA - VICTORIA IV-B ப்ரொஜக்டரை பிரத்யேகமாக இத்தாலியில் இருந்து வரவழைத்துள்ளார் , அதே போல வெண்மையான Perlux திரையை தெளிவான படத்திற்கு வேண்டி நிர்மானித்திருக்கிறார் உரிமையாளர் திருமலை நாயுடு.
தன் மகன்களில் ஒருவரான கிட்டப்பாவை சிறப்பான திரை அரங்கின் ஒலி அமைப்பிற்கு வேண்டி சவுண்ட் இன்ஜினீயரிங் படிக்கவைத்தாராம் இதன் உரிமையாளர் திருமலை நாயுடு அவர்கள் .
திருமலை டாக்கீஸின் இன்னொரு விசேஷம் சவுண்ட் சிஸ்டம் என என் அப்பா சொல்லி நிறைய கேட்டுள்ளேன்.
வீணை பாலசந்தரின் அந்த நாள் திரைப்படத்தை, இந்த சவுண்ட் சிஸ்டத்துக்காகவே 10 தடவைக்கு மேல் பார்த்தார்களாம் என் அப்பாவும் சித்தப்பாவும்.
மூத்த இயக்குநர் C.V.ஸ்ரீதர் மற்றும் மூத்த வசனகர்த்தா கோபு இருவரும் உரிமையாளர் மகன் கிட்டப்பாவின் வகுப்புத் தோழர்களாம்.
சித்தாமூர் கிராமத்தில் இருந்து பள்ளிக்குப் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் கிட்டப்பா வீட்டில் தங்கித்தான் இயக்குனர் ஸ்ரீதர் படித்திருக்கிறார்.
1954 ஆம் ஆண்டு இயக்குனர் C.V. ஸ்ரீதர் கதை, வசனம் எழுதிய முதல் திரைபடமான ரத்தபாசம் படத்தை தந்தையிடம் வற்புறுத்தி இங்கு திரையிட்டாராம் கிட்டப்பா.
மாட்டுக்கார வேலன்’ படம் திரையிடுகையில் அருகே செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷன் வரை வரிசை டிக்கெட் வாங்க நின்றதாம். 'திருமால் பெருமை’ படத்தை ஒவ்வொரு நாளும் திருப்பாவை பாட வைத்து பூஜை செய்த பின்னர் தான் காலைக் காட்சியை துவங்கிவைப்பார் திருமலை நாயுடு என அப்பா கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்,
'திரையுலகில் என்.எஸ்.கே. முதல் எம்.ஜி.ஆர். வரை பலரும் திருமலை நாயுடு அவர்களுடன் நட்பில் இருந்தார்கள்.
நடிகர் நாகேஷ் எப்போது படம் பார்க்க வந்தாலும் 'சவுண்ட் சிஸ்டம் சென்னையை தூக்கி சாப்பிடுது.
என பாராட்டுவாராம்.
மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அவர்களும் அவரின் படங்களை இங்கே வெளியிட்டுருக்கும்போது படம் பார்க்க வருவாராம்,
எம்.ஜி.ஆர் மற்றும் இயக்குனர் ஸ்ரீதரின் எல்லாப் படங்களும் இங்கு வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஸ்ரீதர் திருமணம் திருமலை நாயுடு அவர்கள் தலைமையில்தான் நடந்துள்ளது.
தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே, பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், கே.ஆர்.விஜயா , வஹீதா ரெஹ்மான் என்று இங்கே வராத திரைப்பிரபலங்களே இல்லை எனலாம், பாலிவுட் பிரபலமான மூத்த நடிகை வஹீதா ரெஹ்மான் 1938 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தார், அவருடன் மூன்று சகோதரிகளும் பரதம் கற்றவர்கள், அவர் தந்தை முகமது அப்துல் ரஹ்மான் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை ஆணையர் , தன் மனைவி நான்கு மகள்களை இத்திரையரங்கிற்கு அழைத்து வருவதை வாடிக்கையாகவே வைத்திருந்தாராம்.
1979 ஆண்டு திருமலை நாயுடு அவர்களின் இறப்பிற்கு பிறகு இந்த திருமலை டாக்கீஸுக்கு இறங்கு முகமாகவே இருந்து, 1989 ஆம் ஆண்டு தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது, சிறிய ஊர் செங்கல்பட்டின் பழமையை பறைசாற்ற இன்று மிச்சமிருப்பது நான்கு தான், ஒன்று செயிண்ட் ஜோசப் பள்ளி , இரண்டு திருமலை டாக்கீஸ், மூன்று மணிக்கூண்டு, நான்கு ஆர்ட் டெகோ பாணியில் அமைந்த காண்டீபன் பஸ் சர்வீஸ் (1954) அலுவலகம் .
அமிதாப் பச்சன்,எம்ஜியார்,பழம்பெரும் பன்மொழி இயக்குனர் S.ராமநாதன் (அமிதாப் பச்சனுக்கு breakthrough படமான Bombay to goa (1972) பட இயக்குனர், இவருடன் அமிதாப் சபரிமலைக்கும் சென்று வந்துள்ளார், இன்றும் இவரைத் தன் குருவாக நினைவுகூர்வார்)
பெட்ரொமேக்ஸ் காமெடி வெளியாகி 38 வருடங்களாகிறது, மதுரை சென்ட்ரல் சினிமாவில் இந்த படம் பார்த்து கவுண்டமணி செந்தில் காட்சிகளுக்கு சிறுவனாக அத்தனை சிரித்திருக்கிறேன், இந்த பல வருடங்களில் பல வயதுகளில் இந்த படத்தின் நகைச்சுவை ட்ராக்கை மட்டும் தனியே பார்த்துள்ளேன், இன்றும் இந்த நகைச்சுவை அத்தனை தரமாக உள்ளது.
அழகு ராஜன் உள்ளூரில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போன்றவர்,சைக்கிள் கடை வைத்துள்ளார் உடன் பெட்ரோமேக்ஸ் வாடகைக்கு விடுகிறார், உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னிடம் தீர்வு உண்டு என நம்பும் மனிதர், அழகிய மனைவி தன் ஆசைக்கு ஒத்திசைந்து இவர் வாங்கித் தரும் காலே கால் கிலோ அல்வா , ஒரு முழம் மல்லிப்பூவிற்க்கு மகிழ்ந்து இவருடன் ஆற்றங்கரைக்கு மணல்வெளிக்கு அழைத்த போதெல்லாம் வருகிறார், இப்படி ஒரு ஒத்தாசையான மனைவி இருந்தாலும் அழகுராஜன் , ஊருக்குள் வாய் பேச முடியாத ஒரு ஐம்பது வயது பெண்ணை செட் அப் செய்து வைத்திருப்பதை அவர் கோமூட்டி தலையனுடன் பேசும் வசனங்களூடே நாம் அறிகிறோம்.,
கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியாக இருக்கனும், ஆலையில் நுழையும் கரும்பில் அடிக்கரும்பென்ன ? நுனிக்கரும்பென்ன என்று தன் EMA செய்கைக்கு நியாயம் கற்பிக்கிறார் அழகுராஜன்.
அழகுராஜன் நல்ல குணம் படைத்தவர் என்பதை ஊருக்குள் வேலை வேலை என கேட்டு வந்து பசியால் வாடிய இளைஞனை கோமூட்டி தலையன் தான் பண்ணையார் மகன் என பொய் சொல்லி தரையில் நீச்சல் அடிக்க கேட்டு சுற்றலில் விடுகையில் , அவனை சைக்கிளை மோதி துரத்தி விட்டு கிராம நிர்வாகியிடம் சிபாரிசு செய்து ரேஷன் கடையில் அளந்து போடும் ஊழியர் வேலைக்கு சேர்த்து விடுகையில் நாம் அறிவோம்.
இந்த பெட்ரோமேக்ஸ் காமெடி அத்தனை தரமானது, எத்தனை அவல நகைச்சுவைப் படங்களை நான் உலக சினிமாவில் பார்த்திருந்தாலும் இந்த நகைச்சுவையின் மாற்று குறையவேயில்லை.
மச்சான பாரடி மச்சமுள்ள ஆளடி என சன்னமாக பாடிய படி பெட்ரோமேக்ஸ் லைட்டை துடைத்து சுத்தம் செய்கிறார் அழகுராஜன்.
அண்ணே.
டேய் ரொம்பநாள் கழிச்சு இந்த பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்கு போகப்போகுது ,பத்து ருபா கிடைக்கும்,அதான் நான் தொடச்சிட்டிருக்கேன்.
என் சந்தேகத்த தீத்துவைய்யுங்கண்ணே
என்னடா
இந்த பெட்ரொமேக்ஸ் லைட் எப்படின்ணே எரியுது?
ஆங் அப்படி வா, இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா தேவைன்ட்றது.
அடேய் கோமுட்டித்தலையா,
இதுக்கு பேரு தான் கப்பு,
இதுக்கு மேல கோழி முட்ட மாதிரி இருக்குது பாரு இதுக்கு பேரு மேண்டில்,இதுல தான் பளீர்னு வெளிச்சம் வர்ரது.
அந்த பெண்மணி அங்கலாய்த்து அகன்றதும் அது வரை கையில் வைத்து பிடித்த மேண்டில் பொடிந்த கப்பை தூக்கி கீழே எறிகையில் அந்த நீண்ட காட்சி நிறையும்.
அது லைசன்ஸ்ராஜ் யுகம், எந்த உதிரி பாகத்துக்குமே தட்டுப்பாடு இருந்த காலம்,இந்த மேண்டில் ரேயான் என்ற செயற்கை இழையால் தயாரானது, அது உலோக உப்புகளான சீரியம் ,தோரியம் உப்பில் தோய்த்து
ஏறக்குறைய ஆணுறை போன்று சுருட்டி வைத்து உதிரி பாகமாக கிடைக்கும், அதை கப்பில் துருத்திய ஹோல்டரில் கவனமாக சுருக்கு போட்டு மெல்லிய கம்பியால் இறுக்கி கட்ட வேண்டும்.
இன்று ஒரு மேண்டில்
விலை 110 ₹ என்றால் அப்போது அதன் விலையைப் பாருங்கள், ஒரு முறை மேண்டில் மாற்றினால் அது தின உபயோகத்தில் இரண்டு வருடம் கூட உழைக்கும், நாட்பட்ட உபயோகத்தில் இந்த மேண்டில் தொட்டாலே மண் போல பொடிந்து கொட்டிவிடும், கோமூட்டி தலையன் அதைத்தான் அன்று செய்துவிட்டு ஓட்டமெடுத்தார்.
அழகுராஜன் அன்று பெறும் 10₹ வாடகையை அது கோரும், அந்த வயிற்றுப்பாட்டை அற்புதமாக அங்கே வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் கவுண்டமணி, இந்த மேண்டில் கதிர் வீச்சை வெளிப்படுத்தும் என்பது உபதகவல், நம் இந்தியாவில் பிரபாத் என்ற நிறுவனம் பெட்ரோமேக்ஸ் தயாரிப்பில் கோலோச்சி இருக்கின்றனர்,
பெட்ரோமாக்ஸ் விளக்கு 1910 இல் ஜெர்மனியில் மேக்ஸ் கிரீட்ஸ் என்பவரால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது, எனவே பாராஃபின் எண்ணைக்கு பெட்ரோ என்றும் கண்டுபிடிப்பாளருக்கு மேக்ஸ் என்றும் இணைத்து இன்றும் வழங்கப்படுகிறது.
இப்படத்தில் கவுண்டமணி செந்தில் ஜோடியின் நகைச்சுவை அத்தனை அபாரமாக இயல்பாக வெளிப்பட்டிருக்கும், immortal வகையறா, வசனகர்த்தா வீரப்பன் வசனங்களை கவுண்டமணி improve செய்து அத்தனை பிரமாதப்படுத்திவிட்டார் என்றால் மிகையில்லை,இசைஞானி பாடல்களுக்காகவும் அசத்தலான தனி நகைச்சுவைக்காகவும் வைதேகி காத்திருந்தாள் படமெடுத்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனுக்கு நன்றி.
பாலச்சந்தரின் மரோ சரித்ரா படம் 1978ஆம் ஆண்டு வெளியானது,கமல்ஹாசனை ஆந்திராவில் வணிகரீதியாக பெரிய நாயகனாக உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டே இப்படத்தை தெலுங்கில் எடுத்தார் பாலச்சந்தர்,இப்படம் இரு வெவ்வேறு கலாச்சாரங்கள் கொண்ட குடும்பங்களில் நிகழும் உணர்ச்சிபூர்வமான காதல் கதை,இவ்வகைக் காதலுக்கு இதுவே ட்ரெண்ட் செட்டர் திரைப்படமாகவும் அமைந்து விட்டது. இதே மரோ சரித்ரா என்ற பெயரில் 2010ஆம் ஆண்டு மிகவும் திராபையாக வரிக்கு வரி,காட்சிக்கு காட்சி,ஃப்ரேம் பை ஃப்ரேம் ரீமேக் செய்து கொத்துக்கறி போட்டிருந்தார் ஒளிப்பதிவாளர் ரவியாதவ். கூகுளில் பழைய மரோசரித்ராவைத் தேடினால் அந்தக் கழிசடையும் கூடவே வரும்.இதனால் தான் கல்ட் ,க்ளாஸிக்குகளின் பெயர்களை மறு உபயோகம் செய்யக்கூடாது என்று சொல்லி வருகிறேன்.
மரோசரித்ராவில் கமல்ஹாசன் தன் குரலிலேயே தெலுங்கு பேசியிருப்பார்.அபிலாஷா என்னும் சரிதா தன் பதின்ம வயதினிலேயே கடப்பா வெங்கடசுப்பையா என்பவருடன் திருமணமாகி மணமுறிவு ஏற்பட்ட பின்னர் பாலச்சந்தரின் ஆடிஷனில் தேர்வாகி நடித்த படம் இது,கருமையான, பூசலான, பெரிய கண்கள் கொண்ட சரிதாவை தெலுங்கு பேசும் இளம் பெண்ணின் பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமானவராக இருப்பார் என்று துணிந்தே தேர்வு செய்தாராம் பாலச்சந்தர், மேலும் இப்படம் ஒரு காதல் காவியம் போல என்றைக்கும் பேசப்படவேண்டும் என்றே துணிந்து கருப்பு வெள்ளையிலும் உருவாக்கினாராம்,படத்தின் ஒளிப்பதிவு பி.எஸ்.லோகநாத், இவர் தான் ஏக் துஜே கேலியேவுக்கும் ஒளிப்பதிவு,சரிதா பாலச்சந்தரின் இயக்கத்தில் இதுவரை 22 திரைப்படங்களில் நடித்துள்ளாராம்.
மரோசரித்ராவில் கமல்ஹாசனும் சரிதாவும் சந்தித்துக்கொள்ளும் காட்சி கவிதையான ஒன்று,கமல் சரிதாவிடம் தான் ஊமையல்ல, அரவாடு என்பார்,அரவாடு என்பது மனவாடுகள் தமிழர்களுக்கு வைத்த பெயர்,அதாவது அரக்கர்கள் என்று அர்த்தம் தொனிக்கும் ஒரு இனவெறிச் சொல்.சரிதா இந்த அப்பாவி இளைஞன் தன்னையே அரவாடு என்று அழைத்துக்கொள்வதை பொருக்காதவர் நீங்கள் அரவாடு அல்ல தேவுடு [கடவுள்] என்பார்.
மரோசரித்ரா விசாகப்பட்டினத்தில் படமாக்கப்பட்டது, விசாகப்பட்டினம் பாலச்சந்தரின் மனம் கவர்ந்த கடற்கரையாகும்,அவரின் சிந்து பைரவி,டூயட் உள்ளிட்ட நிறைய படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருக்கும்.
மரோசரித்ராவில் தான் செய்த தவறுகளைத் திருத்தி அதன் செப்பனிட்ட வடிவமாக ஏக் துஜே கேலியே என்று 1981 ஆம் ஆண்டு இந்தியில் ரீமேக் செய்தார்.இதன் தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத் தெலுங்கில் மிகப்பெரிய இயக்குனர்/தயாரிப்பாளர் என்றாலும், படத்தின் வடிவத்தை தான் சிதைக்க விரும்பாமல் பாலச்சந்தரையே இயக்கித் தரும்படி கேட்டார்,
படம் வண்ணத்தில் தயாரானது,படம் பெரும்பாலும் கோவாவிலும்,ஹைதராபாதிலும் படமாக்கப்பட்டன, மரோசரித்ராவில் கமல்ஹாசனின் அப்பாவாக வந்த J. V. ரமணமூர்த்தி [சோமையாஜுலுவின் தம்பி] ,தமிழ் வசனங்களை மென்று துப்பியிருப்பார், இவர் மனைவி ஜெய விஜயாவும் தன் பங்குக்கு தமிழைக் கொலை செய்திருப்பார். .அந்த தவற்றை ஏக் துஜே கேலியேவில் பூர்ணம் விஸ்வநாதன் மூலம் நிவர்த்தி செய்திருப்பார் பாலச்சந்தர்,இவர் மனைவியாக ஆதிலட்சுமி என்னும் பழைய தமிழ் நடிகை நடித்திருப்பார். பூர்ணம் விஸ்வநாதன் பலகாலம் டெல்லியில் இருந்தவர் என்பதால் இந்தி வசனங்களையும் அருமையாக பேசியிருப்பார், ஆச்சாரமான பிராமண குடும்பத்தின் தமிழையும் நன்கு பேசி நடித்திருப்பார்.
படத்தின் எல்பி ரெகார்ட் கவர்
இதன் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத்தை பாலச்சந்தர் இப்படத்திலும் மிக அருமையாக பயன்படுத்தியிருப்பார், தொழில்நுட்பங்கள் மிகவும் வளர்ந்து கோலோச்சும் இன்றைய காலகட்டத்தில் கூட அத்தனை நேர்த்தியான கலையம்சத்துடன் கூடிய ஒளிப்பதிவு கிடைக்குமா ? என்பது ஐயம் தான். ஒவ்வொரு ஃப்ரேமையுமே பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார்கள் படக்குழுவினர், இப்படத்தில் கமலின் நடிப்பில் நல்ல மாற்றத்தை ஒருவர் கண்கூடாக உணரமுடியும்.கமல் வாசு என்னும் மதராஸி லவ்வர் பாயாகவே மாறிய படம்,பைக்கில் கோவா கடற்கரையில் அப்படி சாகசங்கள் புரிவார்,ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஆக்டிவான ஹீரோவாக இருப்பார். படத்தின் எல்லா ஃப்ரேம்களிலும் கமலும் ரத்தியும் நிறைந்திருந்து வாழ்வார்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் , இப்படம் மரிக்கவே மரிக்காது.படத்தின் பாடல்களை இங்கே இந்த ஜூக் பாக்ஸில் சென்று பாருங்கள்.1980களுக்குப் டை ம் மெஷினில் நிச்சயம் போய் வருவீர்கள். http://www.youtube.com/watch?v=moVxfltTU_E http://www.youtube.com/watch?v=moVxfltTU_E
மரோசரித்ரா போன்றே ஏக் துஜே கேலியே படத்தின் பாடல்களையும் கமல்ஹாசனுக்கு எஸ்பிபியே பாடினார், இப்படத்தின் மூலம் அவர் அகில இந்தியப் புகழும் பெற்றார், அவருடன் லதா மங்கேஷ்கர் இணைந்து எல்லா பாடல்களையும் உயிரோட்டத்துடன் பாடியிருப்பார். இந்தப் படத்தில் சிறப்பாகப் பாடியதற்காக ஜனாதிபதியின் தேசிய விருது பெற்றார் எஸ்பிபி, இது அவருக்கு சங்கராபரணத்துக்குப் பின் இரண்டாவது தேசிய விருதாக அமைந்தது. அத்தனை அருமையாக லஷ்மிகாந்த் பியாரிலால் இதற்கு இசையமைத்திருந்தார்.ஆனந்த் பக்ஷி பாடல்களை எழுதியிருந்தார். இந்தமுறை இந்தி சினிமாவுக்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்று பாரதிராஜாவின் புதியவார்ப்புகளில் நடித்த ரத்தி அக்னிஹோத்ரியை இப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். இப்படத்தின் மரோசரித்ராவில் கமலுக்கு தெலுங்கு கற்றுத்தந்த மாதவி இப்படத்தில் இந்தி கற்றுத் தரும் இளம் விதவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மரோசரித்ரா படம் வெளியான முதல் வாரம் திரையரங்குகளில் கூட்டமில்லை,இது தோல்விப் படம் என்று படக்குழுவினர் கருதிய நிலையில், திடிரென படத்துக்கு கிடைத்தது மகத்தான வரவேற்பு, பாலச்சந்தரின் திரையுலக வாழ்வில்,இப்படம் தான் நீண்ட நாட்கள் ஓடி வசூல் சாதனை செய்த படம் என்றால் மிகையில்லை, இப்படத்தை தமிழில் டப்பிங் செய்யாமலே மவுண்ட் ரோட் சஃபையர் தியேட்டரில் வெளியிட்டனர், அப்படம் பகல்காட்சிகள் 600 நாட்கள் ஓடியதாம், கோவை ராயலில் 450 நாட்கள், பெங்களூர் கல்பனாவில் 693 நாட்கள் என ஓடி நீண்ட வரலாற்று சாதனையை செய்த படம் இது.ஒரு பேட்டியில் பாலச்சந்தர் இப்படத்தை மீண்டும் தன்னால் எடுக்கமுடியுமா?என்பது சந்தேகம் தான் என்றார்,உண்மை தான் அற்புதங்கள் எப்போவாவது தானே நிகழும்.ஆதாரம்:-
இது 2007 ஆம் ஆண்டு Nancy Oliver கதையில் , Craig Gillespie இயக்கத்தில் , Adam Kimmel ஒளிப்பதிவில் , David Torn இசையில் வெளிவந்த அட்டகாசமான ட்ராமடி வகைத்திரைப்படம், படம் பார்ப்பவருக்கு ஒருசேர சிரிப்பு , அழுகை, அனுதாபம் ,போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய கதையும் கதாபாத்திரங்களும் அமையப்பெற்றது என்றால் மிகையாகாது. மெதுவாகச் சென்றாலும் இந்தப்படம் காண்போரை நிச்சயம் கவரும்.
தன் இருபதுகளில் இருக்கும் லார்ஸ் (Ryan Gosling ) கூச்சமும் , தாழ்வு மனப்பான்மையின் உச்சமும் கொண்டவன், பிறப்பிலேயே தாயை பறிகொடுத்தவன், தந்தையின் அரவணைப்பும் இன்றி வாழ்ந்தவன், பெண்ணுடன் பழகும் வாய்ப்பு இருந்தும் ஒதுங்கிப்போகிறான்.ஊரில் வயதான பெண்மணிகளிடம் மட்டும் கொஞ்சமாக பேசுகிறான். தன் அம்மாவின் உல்லன் சால்வையை எப்போதும் ஏக்கத்துடன் அணிகிறான்.பெண்ணின் ஸ்பரிசம் இல்லாமலே கனடாவின் குளிரிலும் வாழ்கிறான்.
பெண்ணின் ஸ்பரிசம் உடலுறவில் முடியும். அதன் மூலம் குழந்தை பெற்றால் துணையின் உயிருக்கே ஆபத்து என்னும் அபத்தமான பயத்தினை ஆழ்மனதில் கொண்டிருக்கிறான்.உடன் பணியாற்றும் மார்கோ (KelliGarner) இவனின் அன்புக்கு ஏங்க , இவன் ஒதுங்கிப்போகிறான்.அவள் மீது இவனுக்கு உள்மனதில் அன்பு இருந்தாலும் வெளிக்காட்டாமல் இருக்கிறான்.தன் மனம் போன போக்கில் நடக்கிறான்.
மிக அன்பான தன் அண்ணன் கஸ் (Paul Schneider ) மற்றும் அண்ணி காரெனிடம் (Emily Mortimer ) கூட அதிகம் பேசாமல்,பழகாமல் கேரேஜ் வீட்டில் போய் தங்குகிறான். சரி பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டாலோ , திருமணமானாலோ சரியாகிவிடும் என அண்ணனும் அண்ணியும் நினைத்திருக்க, இவன் வழிக்கு வருவதுபோல் தெரியவில்லை . அன்பான அண்ணி கர்ப்பமாகிறார், இதை கேள்விப்பட்ட இவனுக்கு இன்னும் ஏக்கம் அதிகமாகி,இனி அண்ணியின் ஆதரவோ, சாஃப்ட்கார்னரோ தனக்கு கிடைக்காது என எண்ணிய லார்ஸ் தன் அலுவலக சகாவின் உதவியுடன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு அனாடமி கரெக்டட் செக்ஸ் டாயை (பாலுணர்வு இச்சை தீர்க்கும் பொம்மை) ஆர்டர் செய்து தருவிக்கிறான். அது ஒரு 5’6” உயரமுள்ள அழகிய இளம் பெண்போல தோற்றமளிக்கிறது.அதனோடு நில்லாமல் கிளர்ச்சியூட்டும் அங்கங்களும்,பெண்ணுறுப்பும் கொண்டுள்ளது,
அதை வீட்டிற்கு தருவித்தவன் சும்மா இல்லாமல் உயிரற்ற அந்த பொம்மைக்கு பியங்கா என பெயரிடுகிறான் , அதை உயிருள்ள பெண்ணாகவே பாவித்து அண்ணியிடம் வெட்கத்துடன் அறிமுகப்படுத்துகிறான், அதை சக்கர நாற்காலியில் அமர்த்தி அவள் பிரேசில் நாட்டு பிரஜை, இண்டர்னெட்டில் பழகினோம் மேலும், பியங்காவிற்கு கால்கள் ஊனம் என்றும், அவளின் உடமைகளை ரயிலில் யாரோ திருடிவிட்டதால் அண்ணியின் உடைகளை,காலணிகளை தந்து உதவும்படியும் கேட்கிறான்,
மேலும் தாங்கள் இருவரும் நன்கு பழகும் வரை பியங்காவை மாடியிலிருக்கும் இறந்து போன தன் அம்மாவின் படுக்கை அறையிலேயே தங்க வைக்க அனுமதியும் கேட்டு வாங்குகிறான்.மூன்று வேளையும் அவளுக்கு உணவு தயாரிக்கும் வேலையும் அவளை குளிக்க வைத்து உடை மாற்றும் வேலையும் அண்ணிக்கு வாய்க்கிறது,லார்ஸின் அண்ணனுக்கு அவளை தூக்கிப்போய் படுக்கையில் , காரில் , வீல்சேரில் வைக்கும் வேலை வாய்க்கிறது.லார்ஸும் அவளுடனே உணவு மேசையில் அமர்ந்து அவளுக்கும் தட்டில் பரிமாறச் செய்து சாப்பிடுகிறான். லார்ஸின் அண்ணன் இந்த முட்டாள் தனத்தை கண்டு கோபமுற்றாலும் மனைவியின் வேண்டுகோளின் படி அடக்கி வாசிக்கிறான்.
அவர்கள் இவனுக்கு பிடித்துள்ள மன நோயை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தெளியவைக்க முடியும் என்கின்றனர்.ஊரில் உள்ள அனைவரிடமும் லார்ஸ் மிக அன்புடன் பழகியவன்,தாயில்லாப் பிள்ளை என்ற செல்லம் வேறு ,ஊரில் உள்ள அனைவரும் லார்ஸின் அண்ணன் அண்ணியின் வேண்டுகோளுக்கிணங்க அந்த பொம்மைப் பெண்ணை உயிருள்ள பெண்ணாகவே நடத்துகின்றனர்.
இதற்கிடையில் லார்ஸ் நன்கு படித்த பியங்கா வீணாக வீட்டில் இருக்கக்கூடாது என தொண்டு நிறுவனத்தின் பள்ளிக்கூடத்தில் கல்வி போதிக்க கொண்டுவிடுகிறான். இதற்கிடையில் ஒருநாள் லார்ஸ் பியங்கா மிகவும் சோர்வாக இருக்கிறாள் என முறையிட அவளை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்கின்றனர், இவர்களின் குடும்ப மருத்துவர் டாக்மரிடம் காட்ட, அவரும் இந்த நாடகத்தில் பங்கேற்று பியன்காவிற்கு குறைந்த ரத்தாழுத்தம் உள்ளது அவளை வாராவாரம் மருத்துவமனைக்குகூட்டி வரப் பணிக்கிறார். அவ்வேளைகளில் பியங்காவை வெளியில் அமரவைத்துவிட்டு இவனுக்கு கவுன்சிலிங் செய்கிறார். வெறும் கைகளுடன் அவனை தொட அவன் தொட்ட இடம் நெருப்பு போல எரிகிறது என்கிறான், அவனுக்கு படிப்படியாக டச் தெரபியும் தருகிறார். பெண் தீண்டினால் ஒன்றும் ஆகாது,ஸ்பரிசம் இனியது என புரியவைக்கிறார்.அவன் அலுவலகத்தில் மார்கோ வேறு நபருடன் டேட்டிங் செய்கிறாள், இப்போது இவனுக்கு அது மிகவும் உறுத்துகிறது.
*லார்ஸ் பியங்கா ஒரு பொம்மை என்பதை உணர்ந்தானா?
*மார்கோவை வாழ்க்கைத்துணையாக ஏற்றானா?
*அவன் அண்ணன் , அண்ணியுடன் இணைந்தானா?
போன்றவற்றை வேடிக்கையான விந்தையான நிகழ்வுகளை,உடனே டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ சில நாட்களில் லார்ஸ் பியங்கா தன்னுடன் நேரம் செலவிடமாட்டேன் என்கிறாள் என புகார் கூறுகிறான். அண்ணியைப் பார்த்து நீங்கள் பியங்காவை பார்த்துக் கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்,சுய நலமாய் இருக்கிறீர்கள் என கோபமாக பேச, அண்ணி கோபமாக அவனுக்கு பதிலடி கொடுக்கிறாள். அப்போதும் அவனின் மன நிலையை குத்திப்பேசவில்லை, அண்ணன் கஸ்ஸிற்கு பொறுமை எல்லை மீறி பியங்கா ஒரு காம இச்சை தீர்க்கும் பொம்மை. என்று முகத்தில் அடித்தாற்போல புரியவைக்கிறான். அப்போதும் இவன் திருந்தியபாடில்லை. இவன் அலுவலகத்தில் மார்கோவின் காதல் முறிந்துவிட இவன் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான், அவளுடன் பவுலிங் பாயிண்டிற்கு சென்று அவள் உற்சாகமாக பவுலிங் விளையாட வேடிக்கை பார்க்கிறான் . பின்னர் வீடு வரை நடக்கையில் அவள் அவனை விரும்புவதாய் சொல்ல , இவன் நாம் பியங்காவிற்கு துரோகம் செய்யக்கூடாது என அவளை விட்டு விலகுகிறான்.
அப்போது பிரிய முடிவெடுத்து, முதன்முறையாக கையுறைகளை கழற்றிவிட்டு ஒரு பெண்ணுடன் கைகுலுக்குகிறான்.அப்போது ஏற்ப்பட்ட இளம் பெண்ணின் ஸ்பரிசமும் உள்ளங்கைச்சூடும் அவனுக்கு என்னமோ செய்கிறது.இந்த உணர்வு பியங்காவிடம் பழகுகையில் ஏற்படவேயில்லை என்பதை புரிந்து கொள்கிறான்.இவன் உள்மனதில் நாடகம் இறுதிக்கட்டத்திற்கு நகர்கிறது.
வீட்டிற்கு போனதும் பியங்கா பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறாள் என கூறி அந்த பொம்மையை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனை கூட்டி செல்கிறான்.மருத்துவர் டாக்மர் பியங்கா கூடிய விரைவில் இற்ந்துவிடுவாள்,ஆகவே அவளின் கடைசி விருப்பம் ஏதேனும் இருந்தால் நிறைவேற்ற சொல்ல, இவன் அவளை கைதாங்கலாக அழைத்துபோய் வழக்கமாக அவளுடன் டேட்டிங் செல்லும் ஏரிக்கரைக்கு செல்கிறான். அங்கு அவளை முத்தமிட ,இவனுக்கு அந்த உற்சாகமோ கிளர்ச்சியோ எழவே இல்லை, என்ன இழவுடா இது ? வெறும் பொம்மை போல என உணர்ந்தவன்.
உடனே பியங்கா இறந்துவிட்டாள் என எல்லோரிடம் சொல்கிறான். அவளுக்கு நல்அடக்கமும் நடக்கிறது, இவ்வளவு காலமும் தன் மனதுள் போட்ட நாடகமும் நிறைவடைகிறது.இவன் பாட்டுக்கு நடனமாடிய ஊரார் அனைவரும் பியங்காவின் சவ அடக்கத்தில் கலந்து கொள்கின்றனர்.
அப்போது அங்கே வந்த மார்கோ பியங்காவின் கல்லறைக்கு மலர்கள் தூவ , லார்ஸ் அவளின் கையைப்பிடித்தபடி ஒரு வாக் போகலாமா? எனக் கேட்டு, கூட்டிபோகிறான்.அதோ அவன் முழு ஆண்மகனாய் ஆகியே விட்டான். அண்ணன் அண்ணிக்கும் ஊராருக்கும் ஆனந்தக்கண்ணீர்.அவர்கள் இனி நடிக்க வேண்டாம் பாருங்கள்.
இதில் லார்ஸாக வந்த ரயான் கோஸ்லிங் தத்ரூபமாக தன் நடிப்பை வெளிக்காட்டிய விதம் நிச்சயம் எல்லோரையும் கவரும். இவர் ஃப்ராக்சர் என்னும் படத்திலும் சர்.அந்தோனி ஹாப்கின்ஸுடன் போட்டியிட்டு நடித்திருப்பார்.இவர் படங்களில் நடிப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும்.
அண்ணன் கஸ்ஸாக வந்த பால் ச்னீடர் நடிப்பில் கலக்கியிருந்தார். இவர் ப்ராட்பிட்டுடன் இணைந்து அசாசினேஷன் ஆஃப் ஜெஸ்ஸி ஜேம்ஸிலும் கலக்கியிருப்பார்.
அண்ணியாக வந்த எமிலி மார்டைமர் படு பாந்தம். நல்ல நடிப்பு இவர் ஏற்கனவே பின்க் பாந்தர், ரெட்பெல்ட் போன்ற படங்களில் நடித்தவர்.
படத்தின் இயக்கம் க்ரெக் கிலெப்ஸி , அற்புதம் மெதுவாய் செல்லும் இப்படிப்பட்ட கதையினூடே இழையோடும் அன்பு, கருணை, நகைச்சுவை , மெல்லிய சோகம் என சரியான படைப்பு. முள்ளின் மேல் போட்ட துணியை பக்குவமாய் கையாண்டிருக்கிறார்.கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தால் காதில் பூசுற்றும் கதை,லூசுத்தனம் என்று தோன்றும் அபாயம் அதை திறம்பட வெற்றிகொண்டு சாதித்த குழுவுக்கு சபாஷ்.
பிண்ணனி இசையும் ஒளிப்பதிவும் மிக அருமை. உலக சினிமா ரசிகர்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் நிச்சயம். 106 நிமிடங்கள்= ஒர்த்திட்
படத்தில் வந்த கதாபாத்திரங்களையும் தொழில் நுட்ப கலைஞர்களையும் அறியஅழுத்தவும்
இந்த படம் த ரீடர் , படம் பார்ப்பவரை கரைத்து, மனதை நகர்த்தும் தன்மை கொண்டது, நான் லீனியர் உத்தியை கொண்ட இந்த ”ட்ராமா ,ரொமான்ஸ்” வகைப் படம் 1995ல் வெளியான பெர்னார்ட் ஷ்லின்க் என்பவர் எழுதிய “த ரீடர் ”என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு உன்னத படைப்பு.
எல்லோருக்கும் சிறுவயதில் காதல் வந்திருக்கும், சிலருக்கு தன்னைவிட சிறுவயதினர் மீது வரும், சிலருக்கு தன்னை விட பெரியவர்கள் மீது வரும். அதை காதல் என்று சொல்லுவதை விட இனக்கவர்ச்சி என்று சொல்வதே மிகச்சரியாக இருக்கும். இளம் பிராயத்தில் தோன்றியிருந்தாலும் பசுமரத்தாணி போல மனதில் வேறூன்றியிருக்கும் அந்த நினைவுகள் காலத்துக்கும் அழியாது.
இது போல திரைப்படங்கள் நம் நாட்டிலும் திறம்பட தயாரிக்க முடியும் தான் என்றாலும்? எந்த அளவுக்கு வணிக ரீதியாக வெற்றி பெறும் என்றே என்னால் கணிக்க முடியவில்லை, சரி வணிக ரீதியை விட்டு விடுங்கள், கலாச்சார தாலிபான்களை நினைத்தாலே இயக்குனருக்கு இது போல படம் மனதில் உதிக்கவே உதிக்காது. தவிர, அந்த வகைப் படங்களுக்கு குத்தப்படும் பிட்டுப் படம் என்னும் முத்திரை இருக்கிறதே!!! அதைச் சொல்லுங்கள்,
அதையும் மீறி 1978 ஆம் ஆண்டு பத்மராஜனின் கதையில் பரதன் இயக்கத்தில் வந்த ரதிநிர்வேதம் என்னும் மலையாள மொழிப்படம். அப்படம் 32 வருடங்களுக்கு முன்பான இந்திய பேரலல் சினிமாவுக்கு மாபெரும் தொலைநோக்கு என எண்ணி வியக்கிறேன். அதிலும் இதே போன்றே வயதில் மூத்த பெண்மணியின் மீது காதல் வயப்படும் விடலைப்பையனின் கதையை கவிதையாக செலுலாய்டில் வடித்திருப்பார் இயக்குனர் பரதன். அதன் பின் தமிழில் வெளிவந்த பாலுமகேந்திராவின் அழியாக்கோலங்கள். என இரண்டு படமும் எனக்கு இந்த படம் பார்த்த பின்னர் நினைவுக்கு வரத்தவறவில்லை.
====0000==== படத்தின் கதை:-வருடம்-1958, பெர்லினில் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டம். ஹென்னா ஒரு அழகிய 36 வயது முதிர்கன்னி,ட்ராம் (யு பார்ன்) வண்டி கண்டக்டர் , மிகப் புதிரானவள். தனியாக ஒரு மாடி வீட்டில் வசிக்கிறாள். மைக்கேல் 15வயது பள்ளி மாணவன், துறுதுறுப்பானவன், வசதியான ஜெர்மானியக் குடும்பம், பள்ளி சென்றவன் ஸ்கார்லெட் காய்ச்சல் வந்து நடக்கவே முடியாமல் அவள் வீட்டு வெளியே வாந்தி எடுத்துவிட்டு அமர்ந்திருக்க, இவள் அவனின் வாந்தியை கழுவி விட்டு அவனை வீடுவரை கொண்டு விடுகிறாள்,
ஒரு நன்றிக்காக தன் வீட்டினரின் அறிவுரையின் பேரில் பூங்கொத்துக்கள் வாங்கிக்கொண்டு அவன் 3மாதம் கழித்து அவளை பார்த்து, நன்றி கூற வருகிறான்,ஆரம்பத்தில் அவள் அவனிடம் அதிகம் கண்டிப்பு காட்டினாலும், அவன் தொடர்ந்து பூனைக்குட்டி போல அவள் வீடு வர ஆரம்பிக்க,அவன் உலக இலக்கியங்கள் படிப்பதை அறிகிறாள். தான் காலால் இட்ட வேலையை அவன் தலையால் செய்ய துடிப்பதையும் அறிந்தவள் கனிகிறாள்.
ஒருநாள் அவள் குளிர் காய உபயோகிக்கும் கரியை மைக்கேல் கீழே இருந்து இரும்பு வாளியில் நிரப்பிக்கொண்டு தூக்கமுடியாமல் படியேறி வர, அவனின் கரி படிந்த முகத்தையும் ஆடைகளையும் கண்டவள், அவனைப்பார்த்து அபூர்வமாக சிரிக்கிறாள். அவனை ஆடைகளை களைய பணித்தவள் ஒரு கைதேர்ந்த தாதியைப்போல தேய்த்தும் குளிப்பாட்டிவிடுகிறாள் , மேலும் முயல் பிடிக்கும் நாயை மூஞ்சியை பார்த்தே கண்டுபிடிக்கும் ஆள் நானடா, என்று அவனுக்கு உணர்சியை தூண்டி உடல்லுறவும் கொள்கிறாள், அவனுக்கு நாளடைவில் பாடம் மனதில் பதியவில்லை,
உணவும் பிடிக்கவில்லை, பள்ளி விட்டதும் அவள் வீடுதான், அவளுக்கு கதை அடுத்தவரை படிக்க சொல்லி கேட்பதில் ஆனந்தம், அனுதினமும் பால் உறவுக்கு முன் அவனை புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளான “த ஒடிசி,The Odyssey, த லேடி வித் த லிட்டில் டாக்,[The Lady with the Little Dog,] அட்வென்சர்ஸ் ஆப் ஹக்கிள் பரி ஃபின், [Adventures of Huckleberry Finn,] மற்றும் டின் டின் [Tintin] போன்ற புத்தகத்தில் இருந்து படிக்க சொல்லி கேட்டு பின்னர் உடல் உறவு, என தினமும் ஜமாய்கின்றனர். அவன் பள்ளியில் புதிதாய் வந்த மாணவி அவனை பார்க்க தொடங்க, அவனுடன் பழகத் துடிக்க, இவன் வெட்டிக்கொண்டு ஹென்னாவிடமே செல்கிறான், ஒரு சமயம் ஹென்னாவுடன் இரண்டு நாள் மிதி வண்டி பயணமும் செய்கிறான். அங்கே ஒரு உணவு விடுதியில் இவர்களின் ஜோடிப்பொருத்தத்தை உணவகப் பெண்மணி பார்வையாலேயே எள்ளி நகையாட இவளுக்கு குறுகுறுக்கிறது. அவளுக்கு தான் செய்வது ஒரு மிகபெரும் குற்றம் என விளங்காமல் இல்லை.இவனை கழற்றிவிட தருணம் பார்க்கிறாள்.
ஹெண்ணாவிற்கு அவள் ட்ராம் கம்பெனியில் பதவி உயர்வு கிடைக்க, இவன் பிறந்த நாள் அதுவுமாக சண்டை போட்டுவிட்டு, அவனை இப்படி பிடிவாதம் பிடிக்க்கிறாய்!!!! என கோபத்தில் அறைந்தவள், பின்னர், போருக்கு பின் அமைதி, என்னும் கணக்காய் அவனைத்தேற்றி சமாதானமாகி பின்னர் உறவு கொண்டதும், அவனை அவன் நண்பர்களுடன் செல்லுமாறு சொல்லி வழி அனுப்பிவிடுகிறாள், அப்படியே வீட்டை காலி செய்து விட்டு பறக்கிறாள்.. மைக்கேல் மிகவும் ஏமாந்து போகிறான், சிறு உள்ளத்தில் பெருங்காயம்...காதல் தோல்வியில் உழல்கிறான்.
7 வருடம் கழித்து:- 1966ம் வருடம் அவன் சட்டம் படித்துக்கொண்டிருக்கிறான், அவள் இன்னும் அவன் மனதில் நீங்காமல் இருக்கிறாள், சட்டம் படிக்கும் சக மாணவி அவனுக்கு வலிய நூல் விட இவன் நழுவுகிறான், திடீரென அவன் நேர்முக செமினார் வகுப்பில் முக்கிய வழக்கு நடக்கையில், ஜெர்மனிய நாஜி படையில் போலந்து நாட்டின் ஆஷ்விட்ஸ் என்னும் உலகபுகழ்பெற்ற இனப்படுகொலை களத்தில் மட்டும் , யூத மக்களும், இன்னும் பிற கைதிகளுமாக சுமார் 11 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்,
அதில் ஒரு கிளை வழக்காக டெத் மார்ச் என்னும் சாகும் வரை நடக்கும் சித்திரவதை என்னும் ஒரு வரலாற்று நிகழ்வின் போது, பெண்களும் சிறுமிகளும் அயராமல் சோறு தண்ணீர் உறக்கமின்றி வாட்டும் குளிரில் நடுங்கியபடி நடக்கும் போது, அமெரிக்க,ப்ரிட்டன் ஆகாய விமானங்கள் குண்டுகளை போட்டு தாக்கத் துவங்க. அப்போதும் கடமை தவறாத ஹென்னா தன் தலைமையில் இருந்த 300 பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டி,சர்ச் ஒன்றில் மந்தையாடுபோல அடைக்கிறாள்.
ஆகாய மார்க்க குண்டுவீச்சு தாக்குதலில் அந்த சர்ச்சும் தீக்கிறையாகிவிட யூதப் பெண்களும் குழந்தைகளும் வெளியில் பூட்டப்பட்ட கதவை திறக்கச்சொல்லி கண்ணீர் விட்டு கதறியும் பலனில்லை. ஹென்னாவின் கல்மனம் கதவின் பூட்டை திறந்தால் பெண்கள் தப்பிவிடுவார்கள் என்று நினைத்ததால் கதவை திறந்துவிடவேயில்லை. அவர்கள் கருகி இறந்தாலும் பரவாயில்லை தப்பிக்கக்கூடாது என்றிருக்கிறாள் . ஆக அன்று 300 பேர் தீக்கிரையாயினர்.
என்ன கொடுமை என்றால்? 300 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு, இப்போது விசாரனைக்கு வருகிறது. சம்பவம் முடிந்து 22வருடம் ஆகி, 2000 பேர் அங்கு பணி புரிந்தும் 6பேர் மட்டுமே மாட்டி, வழக்கு நடக்க, அதில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் இவர்களை அடையாளம் காட்டுகின்றனர், குறிப்பாக ஹென்னா ஒரு வினோதமான காவலாளி என்றும், அவள் இளம் யூத சிறுமிகளை முடிந்த வரை காஸ் சேம்பருக்கு அனுப்பாமல், வயது முதிர்ந்தவரை மட்டும் எப்பொழுதும் தேர்வு செய்து காஸ் சேம்பருக்கு அனுப்புவாள் என்றும்,
சிறுமிகளை,கதை புத்தகங்களை கொடுத்து,சத்தம் போட்டு படிக்க சொல்லி கேட்கும் வழக்கம் கொண்டவள் என்றும் சொல்ல, நீதிபதி அப்படியா? என கேட்க இவள் சிரத்தியாக,ஆமாம்,அப்போது தான் புதிதாய் வருபவருக்கு இடம் கிடைக்கும், முதியவரால் என்ன பயன் உண்டு? வாழ்ந்து முடித்தவரை தான் காஸ் சேம்பருக்கு அனுப்பியதில் எந்த தவறும் இல்லை என்றும் தீர்க்கமாக பதிலுறைக்க, கோர்டே அதிர்கிறது,அவளுக்கு மரணதண்டனை விதிக்க்க சொல்லிக்கேட்டு கூச்சலிடுகிறது.
அவள் 22 வருடம் கழித்தும் தன் தவறுக்கு வருந்தாத இவளைக் கண்டு அனைவரும் கொதிக்க, மைக்கேல் மிகவும் வேதனையும் அருவருப்பும் ஒருங்கே கொண்டு. நிறைய புகை பிடிக்கிறான், இது அவனின் ஆசிரியருக்கும் சக நண்பர்களுக்கும் சந்தேகமூட்டுகிறது, இன்னொரு நாள் விசாரனையில் மற்ற கைதிகள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு. இவளே அன்று டெத்மார்ச்சின் போது நடந்த எல்லா குற்றத்திற்க்கும் காரணம், என்றும், இவள் கைப்பட தயாரித்த வேலை நேர அறிக்கையும், அதில் மற்ற விபரங்களும் உள்ளது, என்று சொல்லி தப்பிவிட,
நீதிபதியோ நீ தான் இந்த டெத்மார்ச்சுக்கு கூட்டிச்செல்ல ஆட்களை தேர்வு செய்து அனுப்பிய பட்டியலை தயாரித்தாயா? என்று கேட்க, இவள், இல்லை, நாங்கள் எல்லோரும் சேர்ந்து தான் என்று வாதாடிச் சொல்ல,எதுவும் எடுபடவில்லை.
நம்பாத நீதிபதி கையெழுத்து பரிசோதனைக்கு, அவளை எழுதி காட்ட சொல்லி கேட்க, இவள் திகைத்து, சிறிது நேர அமைதிக்கு பின், கொடுக்கப்பட்ட பேப்பரையும் பேனாவையும் முன் புறம் தள்ளியவள், தானே நடந்த தீ விபத்து சம்பவத்திற்க்கு முழுப் பொறுப்பு என்கிறாள், மைக்கேல் அழுகிறான், அப்போது அவனுக்கு ஒன்று நன்றாய் விளங்குகின்றது, அவள் படிக்காதவள், படித்தவள் போன்று தன்னை காண்பித்துக்கொள்பவள் என்னும் உண்மைதான் அது, தீர்ப்பு வருகின்றது,
மற்றவர்களுக்கு 6 வருட சிறை தண்டனை, இவளின் முக்கியத் தன்மையை கருதி, ஆயுள் தண்டனை என்று. அவன் ஹென்னா பணிபுரிந்த ஆஷ்விட்ஸ் முகாமுக்குள் செல்கின்றான், அங்கு கண்ட காட்சி அவனை புரட்டி போடுகின்றது, ஹென்னா இங்கு வேலை பார்த்த குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல், எப்படி தன்னிடம் இப்படி உடலால் பழகியிருக்கிறாள்?. என கொதிக்கின்றான், இருந்தும் இவளைப் பார்க்க மனது துடிக்க, முன் அனுமதி பெற்று சிறைசாலைக்கு செல்கிறான், வாசல் வரை சென்று, அருவருப்பும் கோபமும் எழ விருட்டென வெளியேறுகிறான், ஹென்னா தன்னை காண வந்தது யாராயிருக்கும் ? எனக் குழம்பியவள் தன் அறைக்குள் செல்கிறாள்,
====0000====
இனி என்ன ஆகும்? டிவிடியில் பாருங்கள். முழுக்கதையும் படிக்க காணொளியை தாண்டி வந்து படியுங்கள்:-
திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
====0000==== அதன் பின்னர் நீண்ட நாளாய் அவனை ஒருதலைக்காதல் செய்து வந்த, சக மாணவியின் அறை சென்று இன்று உன் கூட தூங்கவா? என்று கேட்கிறான், அவள் உற்சாகமாக.. இருவரும் உடலுறவு கொள்கின்றனர். (அவளை அவன் மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டான் என்று குறிக்கிறது) காட்சி மாறி நடப்பு காலத்தில் பயணிக்கிறது.. மைகேல் பெரிய வழக்கறிங்கராகிறான் , மனைவியுடன் விவாகரத்தும் ஆகின்றது , (எல்லாம் அவள் நினைவினால் வாழ்ந்ததால் என்று நமக்கும் விளங்கிக்கொள்ள முடிகிறது ) தன் மகள் கல்லூரியில் சட்டம் படிக்க, விடுமுறையில் பெர்லின் வருகிறாள், அவள் தாய் வேறு ஊரில் , இவன் மகளிடம் அவ்வளவாக பேசியதில்லை, மகளும் நன்கு வளர்ந்து விட்டாள், இவனுக்கு எல்லாமே வியப்பளிக்கிறது, இவன் அவளை சிறு பெண்ணாகவே எண்ணி இருந்திருக்கிறான்.
ஆவலுடன் தன ஊரான Neustadt. ற்கு பல வருடங்கள் கழித்து செல்கிறான், அவள் ஞாபகம் வரும் என்பதால் அவன் அவ்வூருக்கு செல்வதையே நீண்ட காலம் தவிர்த்தும் வந்திருக்கிறான், அவன் தந்தை இறந்த போதும் கூட சவ அடக்கத்துக்கு செல்லவில்லை, வீட்டில் தன் அறையை சென்று பார்க்க, பழைய டைரிகளில் அவளின் நினைவுகள், அவளுக்கு படித்துக்காட்டிய புகழ்பெற்ற கதை புத்தகங்கள். என அவன் சிறுவயது நினைவலைகள் பீறிட்டு கிளம்ப , ஒரு பெட் டேப் ரிக்கார்டர் ,மைக், காசெட்டுகள் ,வாங்கி அந்த கதைகளை, ஒலிச்சித்திரம் போல உயிரோட்டமாக பதிவு செய்கிறான், அவளின் சிறை முகவரிக்கு அனுப்புகிறான், அவளுக்கு பேரானந்தம் பெட் டேப் காசெட்டுகளை வாங்கியவுடன் கடிதம் இருக்கிறதா? எனப் பார்க்கிறாள், அனால் இவன் அவளுக்கு கடிதம் எழுத விரும்பவில்லை, எழுத்தறிவிக்கவே விரும்புகிறான்,
அதை இவள் உணர்ந்து சிறை வளாகத்திலுள்ள நூலகம் சென்று இவன் அனுப்பிய "தி லேடி அண்ட் தி லிட்டில் டாக் "புத்தகம் எடுத்து வந்து , கேட்கிறாள். பாஸ் செய்கிறாள், அதற்க்கு பொருத்தமான வார்த்தையை யூகிக்கிறாள் , பொருத்திப் பார்க்கிறாள். அடிப்படை கற்காமல் கதை புத்தகங்கள் மூலமாகவும், காசெட்டுகள் மூலமாகவும் படிக்கவும் , பின் மிக அழகாக எழுதவும் கற்கிறாள். தொடர்ந்து இவன் காசெட்டுகள் அனுப்புகிறான், ஆனால் கடிதம் அனுப்பவில்லை.
1988 ஆம் வருடம் அவளின் தண்டனை முடியும் தருவாயில், இவனுக்கு தொலைபேசி அழைப்பு சிறையில் வார்டனிடமிருந்து வர, அவர் ஹென்னாவின் தண்டனை காலம் முடிந்து அவள் வெளியே வந்தால். நிச்சயம் அனாதை ஆவாள், ஆகவே அவளுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து, தங்குமிடம் தந்து கூட வைத்துக்கொள்ளும் படி மன்றாடிக் கேட்க. இவன் நீண்ட தயக்கத்துடன் சிறைக்கு சென்று அவளை சந்திக்கிறான், ஆனால் இவனால் சகஜமாக பேசமுடியவில்லை, ஒட்டவில்லை, எதுவோ? ஒன்று தடுக்கிறது,
ஆனால் அவளை விட்டுவிடவும் மனமில்லை. அடுத்த வாரம் அவள் தண்டனை முடிந்ததும் வந்து அழைத்துப்போய். அவன் ஊரிலேயே தங்கவைத்து அவளுக்கு ஒரு குழந்தைகளை கவனிக்கும் நர்செரியில் வேலைக்கு சேர்த்துவிடுவதாக சொல்கிறான். அவள் ஆமோதித்து அறைக்கு செல்கிறாள், ஆனால் அவளுக்கு இவனின் மாற்றம் கண்கூடாக உறுத்துகிறது, தான் எவ்வளவு பெரிய? தவற்றை இழைத்துள்ளோம் ,என மிகவும் வருந்துகிறாள்,
ஒரு முடிவுக்கு வந்தவளாய், அவளின் வாழ்நாள் சேமிப்பான 4000 பிரான்க்குகளை, தான் ஆஸ்விட்ஸ் முகாமில் காவலாளியாக இருந்தபோது, ஒரு யூத பெண்ணிடம் திருடிய டீ டின்னில் போட்டு வைத்து பாதுகாத்ததை , நாஜிப்படையின் ஆஸ்விட்ஸ் முகாமில் உயிர் பிழைத்த ஒரு யூதரின் கல்விக்கு தரச் சொல்லி, உயில் எழுதியவள் , தூக்கு மாட்டியும் இறக்கிறாள். மைக்கேலுக்கு இந்த விஷயம் கேட்டவுடனே துக்கம் தொண்டையை அடைத்தாலும், அவளின் இறுதி ஆசையை நிறைவேற்ற துடித்தவன் ஆஸ்விட்ஸ் காம்பில் இருந்து உயிர் தப்பி தற்போது வசதியாக, நியூயார்க்கில் வாழ்ந்து வரும் இலியானாவை நீண்ட பயணம் செய்து சந்திக்கிறான்,
இலியானா இந்த பாவப்பட்ட பணத்தை வாங்க மறுக்கிறாள், பின் மைக்கேல் மிகவும் மன்றாட, இவர்கள் இருவருக்கும் என்ன உறவு? என ஆவலுடன் கேட்கிறாள், மைக்கேல் நீண்ட அமைதிக்கு பின்னர் இவர்களின் இளம் வயது உடல் தொடர்பை கூறுகிறான். அவள் நீண்ட மௌனத்துக்குப்பின்னர். அந்த பணத்தை இருவருமே சென்று யூதர்களால் நடத்தப்படும், ஏழைக் யூத முதியோர் கல்வி உதவி நிறுவனத்திற்கு கொடுக்கலாம். என்று முடிவு செய்கின்றனர். இலியானா அந்த டீ டின்னை மட்டும் தான் வைத்துக்கொள்கிறாள்.
மைக்கேலுக்கு இப்போது தான் ஒரு பெரும் பாரம் மனதை விட்டு இறங்குகிறது. பின்னொரு சமயம் தன் மகளை ஹன்னாவின் சமாதிக்கு அழைத்துச் சென்று. தன் இளம் பிராயத்து காதல் கதையை, முதல் முறையாய் ஒருவருடன் கூறுவது என்ற முடிவுடன் சொல்லத் தொடங்குகிறான்.
====0000====
இது நிஜமாகவே என்னை மிகவும் உலுக்கிய படம்,எவ்வளவு பெரிய அதி பயங்கரத்தை செய்து விட்டு குற்றுணர்வு கொஞ்சமும் இன்றி சாதுவான பூனை மாதிரி சிறுவனுடன் உறவு கொள்ளும் ஒரு பாத்திரம், யாரும் செய்ய தயங்கும் சவாலான பாத்திரம். தினமும் கதை கேட்டல் பின் புணர்தல், என்ன ஒரு வித்தியாசமான உறவு முறைகள் , அவளது கதை கேட்கும் ஆர்வம். எல்லாதிற்கும் மேல்அவளுக்கு கடைசியில் ஏற்ப்படும் குற்ற உணர்வு தற்கொலைக்கு தள்ளுகிறது.
தான் திருடிய டீ டின் டப்பாவிலே பணம் சேர்த்து வைப்பது, KID KID என அழைத்துக்கொண்டே சிறுவனுக்கு உடலுறவு சொல்லித் தருவது, அவனை தலை முதல் கால் வரை தேய்த்து குளிப்பாட்டுவது, என்று கேட் நடிப்பு அபாரம்.
கேட்டின் தற்போதைய வயதிர்க்கேற்ற பாத்திரம், வயதான கேட்டின் ஒப்பனையும் அற்புதம். கேட் தனது நடிப்பு திறமையை ஆணித்தரமாக இம்முறையும் நிரூபித்துள்ளார் என்றால் மிகையில்லை. எல்லா படங்களிலும் நிச்சயம் பிறந்த மேனியாக ஒரு காட்சியிலேனும் வருவார். பெரும்பாலான படங்களில் முதியவருடன் ஜோடி சேரும் இவர். இதில் சிறுவனுடன் ஜோடி போட்டுள்ளார்.
பல வித்தியாசமான கதாபாத்திரங்களை கேட் செய்துள்ளார். அதில் பல சர்ச்சைக்குரியதும் கூட. ஏற்கனவே கேட் உலக சினிமாக்களில் பெற்றுள்ள பெயர் ஈடு செய்ய முடியாதது. சில உதாரணங்கள்:-டைடானிக் (titanic), ஹோலீ ஸ்மோக் (holy smoke),தி குவில் (the quill), ஐரீஸ் (iris), எனிக்மா (enigma), ரேவல்யுஷனரி ரோட்ஸ் (revolutionary roads) த ரீடர் கேட் ரசிகர்களுக்கும் உண்மையான கலை ரசிகர்களுக்கும் ஒரு நல்ல தீனி என்பதில் ஐயமே இல்லை.
ரால்ப் பியென்ஸ் பற்றி சொல்லவில்லை என்றால் என் ஜென்மம் சாபல்யம் அடையாது.. ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தில் யூதர்களை கண்டமேனிக்கு சுட்டுத்தள்ளும்,அமான் கோத் என்னும் நாஜிபடையின் கொடுங்கோல் அதிகாரியாக வருவார். ஒரு பெண் யூத பொறியாளர் தனக்கு முன் சத்தமாக முகாமின் பார்ரக்ஸ் கட்டுமானம் பற்றிய உண்மையை சொல்லிவிட்டாள். என்று அவரை மண்டியிட வைத்து சுடுவார், பின்னர் அவள் சொன்ன படியே மாற்றியும் கட்டச் சொல்லுவார்.
அதில் தன் அழகிய வேலைகார யூதப்பெண்ணிடம் ஆசையும் இருக்கும், ஆனால் ஒரு யூத பெண்ணிடம் போய் தான் விழுவதா? என்ற அருவருப்பும் இருக்கும். கடைசியில் கூட அவளை மட்டும் ஷிண்ட்லேர் எவ்வளவு பணம் தந்தும் ஷிண்ட்லேரிடம் அனுப்ப மனமிருக்காது, (அவளை நான் செம்படையிடம் பிடிபடும் முன்னே காட்டுக்குள் அழைத்துப்போய் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவேன், அனால் உன்னிடம் அனுப்ப மாட்டேன்,என்பார்.அதையும் மீறி பெரும்பணம் கொடுத்து ஷிண்ட்லர் அவளை வாங்குவார்.)
அந்தப் படத்தில் ஷிண்ட்லேரின் மொத்த பணம், அரிய சேகரிப்புகள் என அனைத்தையும் விடாமல் கறந்த பிறகே 1100 யூதர்களை அவருக்கு கொடுப்பார். கடைசியில் இவரை தூக்கு கயிற்றில் ஏற்றிய பிறகு செம்படையினர் அந்த மர முக்காலியை உதைப்பார்கள் , ஆனால் அது கீழே விழாது, மண்ணில் புதைந்திருக்கும், அப்புறம் அதை உடைத்து தூக்கில்போடுவார். (கடவுளுக்கு கூட இவர் எளிதாக சாக கூடாது என்பது போல காட்சி வைக்கப்பட்டது போல இருக்கும்) தன் காட்டுமிராண்டித்தனத்தை கண் முன்னே கொண்டுவந்திருப்பார். இப்படத்தில் அதற்க்கு எதிர் மாறான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.அற்புதம்!!! ====0000====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
====0000==== இது என் செப்பனிடப்பட்ட மீள்பதிவு,வண்ணத்துப்பூச்சியாரின் த ரீடர் பட விமர்சனம்
என்னுள் இருந்த நினைவலைகளை கிளறிவிட்டுவிட,மீள்பதிவிடுகிறேன். நன்றி சூர்யா
விழித்திருக்கும் போதே கண்ணில் மண்ணை தூவிவிட்டு அலேக்காக அபேஸ் செய்து விட்டு பறக்கும் பகல் கொள்ளையர்களைப் பற்றியும் அவர்கள் திருடிய விதத்தையும் தினத்தந்தி போன்ற நாளிதழ்களில் விறுவிறுப்பான நடையில் படித்திருப்போம். ஆனால் அவர்களை நேரில் பார்த்திருப்போமா? !!! அதற்கு அவசியமேயில்லை , பாலிவுட்டின் முண்ணணி நடிகர்கள் , இந்திய ஐகான் அமிதாப் பச்சனையும் சேர்த்து அநேகம் பேர் பகல் கொள்ளையர்கள் தான்,
சரி, ஏன்? அடுத்தவர் படைப்பை திருடி அதிலிருந்து மறுபடைப்பை உருவாக்கக்கூடாது?!!!
1.ஆக்கம் மற்றும் அறிவுத்திருட்டு பெருகினால் படைப்பாளிகளுக்கு கற்பனை வறட்சி உருவாகும்,மக்கள் சலிப்படைவர். பல நல்ல படைப்புகள் தோற்றுபோகும், அசலான கற்பனை வளம் கொண்ட படைப்பாளிகள் கூட , சற்றும் யோசிக்காமல் படைப்பு திருடர்களாவர்.
2.போலியையே உண்மை என்று நினைக்கும் மாயையை மக்களிடம் அது தோற்றுவிக்கும், உண்மையான படைப்பாளிக்கு செல்லவேண்டிய நியாயமான கூலி[ராயல்டி],கௌரவம், சென்று சேராது, நிறைய படைப்பாளிகள் மனமுடைந்து தற்கொலையும் செய்துகொள்வர்.
3.உலக அரங்கில் சீனர்கள் என்றாலே இண்டஸ்ட்ரியல் டிசைன் & டெக்னாலஜி காபி கேட்ஸ். [தொழிற்நுட்பம் மற்றும் அறிவு சார்பு திருடர்கள்]. இந்தியர்கள் என்றாலே ப்ளேகாரிஸ்ட்ஸ் [ஆக்கம் மற்றும் அறிவு சார்பு திருடர்கள்] என்று பெயர் வாங்கியிருக்கிறோம். அந்த அவப்பெயர் நிரந்தரமாகிவிடும்.
4,எத்தனையோ நல்ல இயக்குனர், நடிகர்களின் பேரலல் சினிமா, ஆல்டர்நேட் சினிமாக்கள் என்று அழைக்கப்படும் மாற்று சினிமாக்கள் இந்த நீங்காத அவப்பெயரினால் வெளியே தெரியாமலோ , யாரும் பாராமலோ போக நேரிடும். மொத்தத்தில் புதுமை செத்துவிடும்.
5.தவிர படைப்பாளிகளுக்கு நிரந்தரமாக 9-00 டு 6 -00 பார்க்கும் வேலை இருப்பது இல்லை, இவ்வாறு ஒருவனின் படைப்பை அவனுக்கு தெரியாமல் மறுஆக்கம் செய்வதால். அவனது தொடர் வருமானம் நின்று போகிறது, மூன்றாவது திருடனும் உருவாவான்,எப்படி? இதோ இப்படித்தான்:-
டீரெய்ல்ட் என்று ஒரு ஹாலிவுட் படம், அதை இம்ரான் ஹஸ்மி என்னும் பலே திருடன் , திருடி த ட்ரெய்ன் என்னும் பெயரில் நடிப்பதை கேள்விப்பட்ட கௌதம் வாசுதேவ மேனன், விட்டேனா பார்?!!! என்று பச்சைகிளி முத்துச்சரம் படத்தை போட்டிபோட்டுக்கொண்டு மூன்றே மாதத்தில் திருடி எடுத்து அவர்களுக்கு மூன்று மாதம் முன்பே ரிலீஸ் செய்தார். இப்படித்தான் நமக்கு அவப்பெயர் உருவாகும்.
ஒரு அந்நிய படைப்பிற்கான கூலியை கொடுத்து உரிமை வாங்கி இந்திய மொழியில் எடுத்தாலும் மூலத்தின் படைப்பாளியின் பெயரை போடவேண்டியது அவசியமாகிறது. இல்லை என்றால், அதை மொழிபெயர்த்து, மறுஆக்கம் செய்தவரே அந்த படைப்பை உருவாக்கியதாக பிம்பம் உருவாகிவிடும். அதுவும் ஒருவகையில் திருட்டுதான்!!!.
தவிர அகில உலக அரங்கில் ஹிந்திப்படங்கள் தான் இந்திய சினிமாக்கள் என நம்ப வைக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த பொருட்செலவிலும் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் ஹிந்தி அலுவல் மொழியாக உள்ள 11 மாநில மக்களாலும், இந்தியாவில் ஹிந்தி மொழி தெரியாத மாநில மக்களாலும் , அகில உலக அளவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபால், ஃபிஜி போன்ற நாட்டு மக்களாலும் பிரதானமாக விரும்பி பார்க்கப்படுகின்றன.
தவிர அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்தியகிழக்கு, ஆஃப்ரிக்கா, கிழக்கு, தெற்கு ஆசியாவில் குடியேறிய மக்களாலும் ஆரவார வரவேற்புடன் விரும்பி பார்க்கப்படுவதால், ஹிந்தி சினிமாவில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை, ஆகவே பாலிவுட்டில் படமெடுப்பது என்பது கொலைக்குத்து குடும்ப வியாபாரம்.
இருந்தும் இந்த பாலிவுட் பகல் கொள்ளையர்கள், காப்பிரைட் வாங்கியோ படைப்பாளிக்கு க்ரெடிட் கொடுத்தோ படம் எடுப்பதேயில்லை. உண்மையான படைப்பாளிக்கு மனச்சிதைவு, தாழ்வு மனப்பான்மை, சுயபச்சாதாபம் தருவதில் பாலிவுட்டை,நம் கோலிவுட் தோற்கடிக்க, ஏன் கிட்டத்தில் கூட நெருங்கவே முடியாது. அங்கு எடுக்கப்படும் அநேகம் படத்தின் கதை, இசை, பாடல் வரிகள், நாவல்கள், கேமரா கோணங்கள், எடிட்டிங்குகள். உடை, செட்கள் அப்படியே அகில உலக சினிமாக்களில் இருந்து திருடி மறுஆக்கம் செய்தவையே.
====0000====
அப்படி , பாலிவுட்டில் வெளிவந்த இப்போதைய சமீபத்திய பகல் கொள்ளை தான் நாக் அவுட். இது போன் பூத் என்னும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற படத்தின் அப்பட்டமான தழுவல் . போன் பூத் படத்தை HBO , ACTION மற்றும் ஏனைய தொலைக்காட்சிகளில் எத்தனை முறை ஒளிபரப்பியிருப்பார்கள்? என்ற கணக்கே இருக்காது. சிறு இந்திய நகரங்களில் வசிக்கும் மக்களுக்கும் அந்த படமும் அதில் கொலின் ஃபேரல், கீஃபர் சதர்லேண்ட் & ஃபாரஸ்ட் விடேகரின் அபாரமான நடிப்பும் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அதையே இந்த பலே திருடர்கள் 4 பாடல்கள் சேர்த்து துகிலுரிந்து விட்டனர்.இதில் திருட்டுக்கு உடந்தையாக பேரலல் சினிமாவின் தலைக்கல் என்று புகழப்படும் இர்ஃபான் கான் வேறு,வேதனை வெட்கம் அவமானம்.பற்றாததற்கு அருமையான நம்மூர் கேமராமேன் நட்ராஜ் சுப்ரமண்யம் வேறு உண்டு.
நாக் அவுட் படத்தின் முன்னோட்ட காணொளி.
====0000====
====0000====
படைப்பு கொள்ளையர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
இதே பாலிவுட் திருட்டு பயங்கரவாதி சஞ்சய்தத்தின் அதிமுக்கிய திருட்டான ஜிந்தா பற்றி அறிவீர்கள், அல்லது மாட்டீர்கள். அது ஓல்டு பாய் என்ற கொரிய நாட்டின் உலகசினிமா காவியத்தின் அப்பட்டமான திருட்டு மறு ஆக்கமாகும். மோனாலிசா ஓவியத்துக்கு மீசை வரைந்தது போல, லொல்லுசபாவில் வெற்றிப்படங்களை இமிடேட் செய்வது போல அந்த படத்தை வன்புணர்ந்திருந்தான் இந்த பாலிவுட் பயங்கரவாதி. நீங்கள் ஓல்டுபாய் என்னும் ஒரிஜினலையும் இந்த பாலிவுட் அசிங்கத்தையும் ஒரு சேரப் பார்த்திருந்தால் என் அடங்கா கோபத்துக்கான ஊற்றுக்கண் புரியும், மிக அருமையான யாராலும் யோசிக்க முடியாத ஒரு கதையை உருகுலைத்து, சிதைத்து, அதில் தேசி செண்டிமெண்ட்டையும் சேர்த்து, 4 பாடல்களை இடையில் புகுத்தி, மகா அற்பத்தனமாக நடித்தும் அப்படத்தை வீணடித்திருந்தனர்.
ஓல்டுபாய் ஒரிஜினல் இசை வடிவத்தின் அப்பட்டமான தழுவலை பின்னாளில் 2 ஆஸ்கர் விருதுகள் பெற்ற ரசுல் பூக்குட்டியே முன்னிருந்து திருடியுள்ளார். இசைப்புயலின் சைனாடவுனில் இருந்து ஒரு ட்ராக்கையும் உருவி ஸிந்தா குழுவினர் க்ளைமாக்ஸில் போட்டுவிட்டனர். எல்லாவற்றிற்கும் மேல் ஸிந்தா குழுவினர், ஒரு காமெடி செய்தனர். ALL COPYRIGHT’S RESERVED TO WHITE FEATHER FILMS, MUMBAI, INDIA. என்று டிஸ்க்லெய்மர் போட்டனரே பார்க்கனும்!!!!. இதைப்பார்த்த பின்னும் உயிரோடு இருக்கும் ஓல்ட் பாய் பட இயக்குனர் Chan-wook Park ஒரு இரும்பு மனிதர் தானே.!!!
அதில் என்ன ஒரு கொடுமை என்றால்?!!! இவர்கள் மீது அறிவுத் திருட்டு வழக்கு போட்டு, உலக அரங்கில் பாலிவுட்டினரை தலைகுனிய வைத்த Show East என்னும் கொரியப்பட கம்பெனி இதுபோல அறிவுத்திருடர்களின் சிபாரிசினாலும் எதிர்ப்புகளாலும் இழுத்தே மூடப்பட்டுவிட்டது!!!, ஆகவே அந்த ஆக்கம் மற்றும் அறிவுத்திருட்டு வழக்கிலிருந்து, ஸிந்தா கும்பல் வெண்ணையில் கத்தி வழுக்கிச் செல்வதைப்போல தப்பி விட்டனர்.
இதுவரையில் பாலிவுட் குற்றவாளிகள், எந்தவிதமான சட்டரீதியான நடவடிக்கைகளையும் சந்திக்கவேயில்லையே !!!! என்பது தான் என் ஆதங்கமாக இருக்கிறது, இப்போது தான் ஒன்று புரிகிறது இசைப்புயல் ஏன் தன்னுடைய ஒவ்வொரு படைப்புக்கான உரிமையையும் பேடண்ட் செய்கிறார்?!!!.காப்பிரைட் வாங்குகிறார் என்று.?!!! அவர் மட்டும் அப்படி செய்யா விட்டால் கூச்சமே இல்லாமல் இசைப்புயலின் பல இசைக்கோர்வைகளை இவர்கள் சூறையாடியிருப்பார்கள் என்பது திண்ணம்!!!.
பாங்காக் போய் எடுக்கப்படும் ஏனைய ஹிந்தி சினிமாக்கள் துகிலுரியப்பட்ட திருட்டுக்கதையை கொண்டிருக்கிறது.த ட்ரெய்ன் என்னும் படம்,அது டீரெய்ல்டின் திருட்டு மறுஆக்கம். மர்டர் என்னும் படம் அன்ஃபெய்த்ஃபுல் என்னும் ஹாலிவுட் படத்தின் திருட்டு மறு ஆக்கம். இதில் டயான் லேன் என்னும் நடிகையின் உடல்மொழி,அவரது உணர்ச்சிகள்,அவரது நடிப்பை அப்படியே ஈயடித்தான் காப்பி அடித்திருப்பார் உத்தமி மல்லிகா ஷெராவத்.மூன்று வருடம் முன்பு பெல்லி பட்டன் என்று யூட்யூபில் அடித்து தேடினால் மேற்கண்ட இரண்டு வீடியோக்கள் முண்டியடித்து வந்தன. அப்படி தேடிப்பிடித்து கண்டு நொந்தது இந்த படம்.
====0000====
அப்படியே ஒருவர். காண்டே என்னும் இந்தியன் ஐகான் அமிதாப் பச்சன் இதே பாலிவுட் திருட்டு பயங்கரவாதி சஞ்சய்தத்துடன் கூடி நடித்த படமும் பார்த்திருக்க வேண்டும், நான் மட்டும் குவெண்டின் டாரண்டினோவாக இருந்தால் இந்த திருடர்களை கழுவில் ஏற்றியிருப்பேன், அந்தப் படம் முதல் 20 நிமிடம் யூசுவல் ச்ஸ்பெக்ஸ் படத்தின் அப்பட்டமான தழுவலையும், அடுத்த 20 நிமிடம் ஹீட் என்னும் படத்தின் அப்பட்டமான தழுவலையும், அடுத்த முழுப்பாதியும் ரிசர்வாயர் டாக்ஸ் என்னும் உலகப்புகழ்பெற்ற படத்தின் தழுவலாகும். இறைவன் என ஒருவன் இருந்தால் இவர்களின் கொட்டத்தை அடக்கட்டும் என்று தான் படம் பார்த்த பின்னர் நினைக்கத்தோன்றியது, அப்படி ஒரு கிராதகர்கள். ஆனால் பேச்சு மட்டும் அகில உலகுக்கே சக்கரவர்த்தி போல பேசுவார்கள்.இதில் அந்த ஹெல்வீடிக்கா என்னும் எழுத்து வடிவத்தைக்கூட காப்பி அடித்துள்ளதை பாருங்கள்.என்னால் முடியவில்லை என்றாலும் கட்டுரை இன்னும் முடியவில்லை.
====0000====
நம்மில் ஏகம் பேர் 21 என்னும் கெவின்ஸ்பேசி நடித்த படத்தை பார்த்திருப்போம், இந்த நாரப்பாடைகள் அதை திருடி டீன் பட்டி [மூன்று திருட்டு நாய்கள்] என்னும் பெயரில் படம் எடுத்ததுமில்லாமல் , அதில் ரிச்சர்ட் அட்டன்பரோவின் படத்தில் காந்தியாகவே வாழ்ந்த பென் கிங்ஸ்லியையும், நம்மூர் நடிகர் மாதவனையும் கூட அந்த திருட்டுக்கு உடந்தையாக்கிவிட்டனர். ஆனால் படம் படு தோல்வி. இந்த படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். இதில் என்ன கொடுமை என்றால் அமெரிக்க படத்தையே திருடி எடுத்துவிட்டு,அதே அமெரிக்க இயக்குனருக்கு , அமெரிக்காவிலேயே சிறப்பு காட்சி போட்டுக்காட்டி கூடவே அம்ர்ந்து படம் பார்க்கும் சாமர்த்தியம் நம் இயக்குனருக்கு சுட்டுப் போட்டாலும் வரவே வராது!!! என்ன நண்பர்களே சரிதானே?!!!