அழகே உன்னை ஆராதிக்கிறேன் [1979] வாணி ஜெயராமின் முத்தான நான்கு பாடல்கள்


அழகே உன்னை ஆராதிக்கிறேன் [1979] படம் பார்த்துவிட்டு , இயக்குனர் ஸ்ரீதர் வாணி ஜெயராமின் ரசிகராகத்தான் இருக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன், அந்த ரசிகரின் நேயர் விருப்பத்துக்கேற்ப   இசைஞானி  காலத்தால் அழியாத பாடல்களைத் தந்து பிரமிப்பூட்டியிருப்பார். அதில் வாணியம்மாவுக்கு நான்கு முக்கியமான பாடல்கள் உண்டு, அது தவிர படத்தில் நடிகை லதாவின் கதாபாத்திரத்தின் பெயரும் வாணி தான்.அப்போதைய லதாவுக்கும் வாணி ஜெயராமின் தோற்றத்துக்கும் நிறைய உருவ ஒற்றுமை உண்டு,முக்கியமாக பெரிய கண்கள்.


படத்தின் எல்லா பாடல்களையும் கவிஞர் வாலியே எழுதியிருக்கிறார்.

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்,[தனிப்பாடல்]
http://www.youtube.com/watch?v=DRkseznZXOo
நானே நானா, [தனிப்பாடல்]
http://www.youtube.com/watch?v=SD5fhs1JwbQ
தனிமையில் யாரிவள்? [தனிப்பாடல்]
http://www.youtube.com/watch?v=RIxJfCsDqcA
குறிஞ்சி மலரில் ,[எஸ்பிபி.வாணி ஜெயராம்]
http://www.youtube.com/watch?v=HNM-6p_Za00
என்று அமர்க்களம் செய்திருப்பார்,

இன்று  நவம்பர் 30 வாணி ஜெயராமின் 71 ஆம்  பிறந்த நாள்.பல்லாண்டுகாலம் வாழட்டும்,அவரின் இயற்பெயர் கலைவாணியாம்,எத்தனை கலைவாணி கடாட்சம் அவருக்கு வாய்த்திருக்கிறது பாருங்கள்.

நடிகை லதா ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் பேத்தியாவார்,இவரின் தம்பி ராஜ்குமார் சேதுபதியை மணந்ததால் நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு லதா நாத்தனார் ஆகிறார்.இந்த ராஜ்குமார் சேதுபதி 80களில் சொந்த காசில்  வதவதவென படங்கள் நடித்து சினிமா எடுத்து காணாமல் போய்விட்டார்.இப்போது தெலுங்கில் த்ருஷ்யம் படத்தை ஸ்ரீப்ரியா ரீமேக் செய்ய ,இவர் தயாரித்து இருக்கிறார்.வெங்கடேஷ் மீனா ஜோடி,படம் நல்ல வெற்றி பெற்றது,படத்தின் ரீமேக்கை 3மாதத்தில் முடித்து அதே வேகத்தில் வெளியிட்டு லாபம் பார்த்திருக்கிறார் முன்னாள் நடிகை ஸ்ரீப்ரியா.

இது ஒரு ஸ்டார் வேல்யூவும் இல்லாத தோல்விப்படம், ஸ்ரீதரிடமிருந்து மற்றுமொரு அழுகாச்சிக் காவியம்,இப்படத்தை அவர் பெங்களூரில் படம் பிடித்திருந்தார்,பிற்பாதி கோவாவில் படமாக்கியிருந்தார்.படத்தில் நாகேஷ்,வி,எஸ் ராகவன் போன்றோரும் உண்டு,இளம் ஜோடிகளாக பிரகாஷ் மற்றும் சுபாஷினி,அதன் பின்னர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை,

ஸ்ரீதர் படங்களில் நாயகியோ,நாயகனோ,உப பாத்திரங்களோ தலையில் கட்டுப் போட்டு வசனம் பேசி மகனையோ,மகளையோ,மனைவியயோ நிராதரவாக விட்டு செத்துப் போவார்கள் என்பது எழுதப்படாத விதி,

இதில் நாயகி லதாவின் அண்ணனான வி.கோபாலகிருஷ்ணனும் அவர் மனைவியும் விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் உயிர் விடுகின்றனர்,அதே போலவே கடைசி ரீலில் அண்ணன் மகளுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்து சிறை செல்லும் முன்பே லதா விஷம் குடித்து இறக்கிறார்.ஜெய்கணேஷ் இதில் பெண் பித்தர்,விஜயகுமார் லதாவின் மாடி வீட்டில் குடியிருப்பவர்,

லதாவை ரோஜாப்பூக்கள் நிரம்பிய பெரிய மலர் கொத்துகளில் அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்று பெயர் போடாமல் எழுதி அனுப்பி காதலிக்கிறார்,கடைசி ரீலில் லதாவின் சமாதிக்கு அனுதினம் பூங்கொத்துக்களுடன் சென்று ஆராதிக்கிறார்,படத்தின் பெயரிலேயே ஒரு பாடல் சோக வடிவத்தில் இசைஞானி மெட்டமைத்திருக்கிறார்,வெறும் பல்லவி மட்டுமே வரும்.

படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள் உண்டு,அதில் லதா வேலை செய்யும் அலுவலகத்தில் சக ஊழியரால் லதாவிடம் ஒரு ஜோக் அடிக்கப்படுகிறது.போனில் யார் உங்கள் பாய் ஃப்ரெண்டா?இல்லை எனக்கு பாய்ஃப்ரெண்டே கிடையாது,உடனே அந்த அசடு  Oh ... I didn't know you are a lesbian என்கிறார்.அந்த காலத்திலேயே லெஸ்பியன் என்னும் சொல்லை ஸ்ரீதர் துணிந்து பயன் படுத்தியிருக்கிறார்.என எண்ணி வியந்தேன்.

பி.வாசு இதில் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார்.

கண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே



கண்ணில் தெரியும் கதைகள் என்னும் திரைப்படம் 1980 ஆம் ஆண்டு தேவராஜ் மோகனின் இயக்கத்தில் வெளியானது, இதில் சரத்பாபு,ஸ்ரீப்ரியா,வடிவுக்கரசி நடித்திருப்பார்கள். படத்தின் கதை கிருஷ்ணா ஆலனஹல்லி என்னும் கன்னட நாவலாசிரியர். தேவராஜ் மோகனின் ரோசாப்பூ ரவிக்கைக்காரி,பூந்தளிர் உள்ளிட்ட நிறைய படங்களுக்கு இசைஞானி மகத்தான பங்களித்திருப்பார்.

இப்படத்திலும் அவர் அன்புக்கு கட்டுப்பட்டு ஐந்து இசையமைப்பாளர்களுள் ஒருவராக தன்னடக்கத்துடன் பங்களித்திருப்பார். இப்படம் இன்று யார் நினைவிலும் நில்லாமல் பெட்டிக்குள் சுருண்டாலும், இப்படத்தின் நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே என்னும் பாடல் ஒரு அற்புதமான ரேர் ஜெம். இன்றும் இசைஞானி ரசிகர்கள் அவரின் பரீட்சார்த்த முயற்சிகளுக்கு உதாரணமாக தவறாமல் இப்பாடலைக் குறிப்பிடுவர்,

இப்படத்தின்  ஐந்து இசை அமைப்பாளர்களில்.முறையே இசைஞானி இளையராஜா [நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரில் மற்றும் பின்னணி இசை,இப்பாடலை எழுதியவர் புலமைப் பித்தன். இப்பாடலைப் பாடியவர்கள் விஷயத்திலும் முக்கியத்துவம் பொருந்தியதாக உள்ளது, இளையராஜா இசையில் ஜானகி அம்மாவும் பி.சுசீலாம்மாவும் முதலும் கடைசியுமாய் இணைந்த பாடல் இது.,எஸ்.பி,பியும்  மிக அருமையாக ஈடுகொடுத்துப் பாடியிருப்பார், இசைஞானிக்கு பிடித்த மோஹன ராகத்தில் அமைந்த இப்பாடலை இங்கே பாருங்கள்
http://www.youtube.com/watch?v=BAZ7MJpv3nc


இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் [நான் உன்னை நினைச்சேன் நீ என்ன நினைச்சே!!!] பாடல் இயற்றியது கவிஞர் கண்ணதாசன். இப்பாடலை எஸ்.பி.பி.வாணி ஜெயராம்,மற்றும் ஜிக்கி பாடியிருப்பார்கள். இப்பாடலை இங்கே பாருங்கள்
http://www.youtube.com/watch?v=SAxFIp4gkJ8


இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் [நான் பார்த்த ரதி தேவி எங்கே?என்னும் பாடலுக்கு இசையமைத்திருந்தார்.தயாரிப்பாளரான ஏ.எல் ராகவன் பாடியிருந்தார்] ,[இசைஞானியின் முன்னாள் முதலாளியான ஜி.கே.வெங்கடேஷ் 1993 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இசைஞானியுடனே நிறைய திரைப்படங்களில் இணைந்து இசைப்பங்காற்றினார்.அவர் மெல்லத் திறந்தது கதவு படத்தில் மோகனின் இசைப்பள்ளி ஆசிரியர்/அப்பாவாகவும் தோன்றியிருப்பார்.]
http://www.youtube.com/watch?v=ihXQ-hLKAW8



இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன் [ என்ன பாடல் கண்டுபிடிக்க முடியவில்லை]  ,

இசையமைப்பாளர் அகத்தியர் aka டி.ஆர்.பாப்பா, [ என்ன பாடல் கண்டுபிடிக்க முடியவில்லை] அவர் ஏன் படத்தின் டைட்டில் கார்டில் அகத்தியர் என்ற பெயரில் இசை அமைத்தார் என்றும் விளங்கவில்லை.

படம் முழுக்க சகிப்புத்தன்மையுடன் பார்த்துவிட்டு மீதம் இருவர் இசையமைத்த பாடல் விபரங்களை எழுதலாம் என நினைத்தேன் ஆனால் முடியவில்லை,படம் அத்தனை திராபை.

படத்தில் இசைஞானிக்கு மிகவும் பிடித்த பாடகரான டி.எம்.சௌந்தரராஜனும் பாடியிருக்கிறார், [இதை 1995 சென்னை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவரின் உற்ற தோழர் /பாடகர் எஸ்.பி.பி கேள்வி கேட்க சிறிதும் யோசிக்காமல் தயங்காமல் அவர் பெயரைச் சொல்லியிருப்பார். இத்தனைக்கும் மலேசியா வாசுதேவன் அவர்களின் வரவுக்குப் பின்னர் டி.எம்.எஸ் அவர்களை இசைஞானி அதிகம் பாடல்களில் பயன்படுத்தியதில்லை. டி.எம்.எஸ் இசைஞானியின் அன்னக்கிளியில் முக்கிய பாடலான அன்னக்கிளி உன்னைத் தேடுதேவை பாடியிருப்பார்.1979,1980,1981 வரை இளையராஜாவின் கேள்விப்படாத படங்களில் டி.எம்.எஸ் அவர்கள் நிறைய பாடியுள்ளார்,அவற்றை தொகுக்கவேண்டும்.

இதே போல ஐந்துக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் மீண்டும் இணைந்து தமிழ் சினிமாவில் பணியாற்றியது வசந்தின் ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கே[2002] படத்தில் தான்.ஸ்ரீனிவாஸ், ராகவ்-ராஜா, முருகவேல், ரமேஷ் விநாயகம், அரவிந்த்-ஷங்கர்,சபேஷ் முரளி போன்றோர் ஒவ்வொரு பாடலுக்கும் இசையமைத்தனர்.

ரஷ்ய சினிமாவின் ஒப்பற்ற இயக்குனர் அலெக்ஸி பாலபனவ் நினைவு கூறல்


நான் கொஞ்சம் நாளாக அலெக்ஸி பாலபனவ்[Aleksei Balabanov] என்னும் ரஷ்ய சினிமா இயக்குனர் பற்றி தேடிப்படித்து அப்டேட் செய்யாமல் இருந்து விட்டேன்,அவரின் கடைசிப் படமான Me Too பார்த்தது, அது அத்தனை திருப்தியளிக்கவில்லை,தத்துவம் சித்தாந்தம்,பிறப்பு இறப்பு,சொர்க்கம் நரகம் என  அதீத மேதாவித்தனமாக அமைந்துவிட்டது, சரி அதற்குப் பின்னர் என்ன படம் செய்கிறார்? என்று இன்று தேடி, அவர் 2013 மே மாதம் மாரடைப்பால் காலமானார் என்று படித்தால் ஒரு தீவிர ரசிகனுக்கு எப்படி இருக்கும்?!!!

ரஷ்யாவில் சினிமாக்கள் வருடத்துக்கு 10 படங்கள் வருவது அதிகம்.அதில் மிக முக்கியமான இயக்குனர்,என்ன ஒரு அபூர்வமான நெஞ்சுரம் கொண்டவர் இவர்?. இவர் ரஷ்ய மொழியில் மட்டுமே இயங்கியதால்,இவரது படைப்புகள் அதிகம் உலக கவனம் பெற முடியவில்லை,இவர் படைப்புகள் உலக சினிமா ஆர்வலர்கள் கண்டிப்பாக தேடிப்பார்க்க வேண்டியவை. டார்க் ஹ்யூமர்,அரசியல் ,சட்டம் ஒழுங்கைப் பற்றிய நக்கல் நையாண்டிகள் திறம்பட வெளிபட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரர்,பொதுமக்களை கும்பிபாகம் செய்த அரசியல் வல்லூறுகளை தன் படைப்புகள் மூலம் நார் நாராகக் கிழித்துத் தொங்கப்போட்டவர். இனி இது போல படம் எடுக்க யாராவது பிறந்து வந்தால் தான் உண்டு.

இவரது இரு படங்களுக்கு நான் எழுதிய பதிவுகள் இங்கே
கார்கோ 200 [Cargo 200 ][Груз 200] [2007][ரஷ்யா]
http://geethappriyan.blogspot.ae/2011/02/200-cargo-200-200-200718.html
மார்பின் Morphine (Морфий) (2008)[ரஷ்யா]
http://geethappriyan.blogspot.ae/2011/02/morphine-200818.html
அவரைப் பற்றிய விக்கி பக்கம்
http://en.wikipedia.org/wiki/Aleksei_Balabanov
அவரின் ஐஎம்டிபி பக்கம்

நல்லவனுக்கு நல்லவன் [1984] உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே பாடல்

நல்லவனுக்கு நல்லவன் படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் இந்த ப்ளேஸ்மெண்டைப் பார்த்ததும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவிட்டேன்,1984 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், கவிப் பேரரசு வைரமுத்துவின் பெயர் சீனியாரிட்டி பிரகாரம் எத்தனை கவிஞர்களுக்கு கீழே வருகிறது என்று பாருங்கள். 

வைரமுத்து இசைஞானியுடன் 1986ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படம் வரை தான் இணைந்து பணியாற்றியுள்ளார், அந்த 2 வருடங்களில் அவரது கேரியர் க்ராஃப் எத்தனை உச்சத்தை தொட்டிருக்கிறது? என எண்ணி வியக்கிறேன்.

வைரமுத்து உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே பாடலை இயற்ற தாசேட்டாவும், அறிமுகப் பாடகியான பெங்களூர் மஞ்சுளாவும் பாடியிருப்பார்கள் , அவர் கன்னடத்தில் மஞ்சுளா குருராஜ் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற பாடகியுமாவார், http://en.wikipedia.org/wiki/Manjula_Gururaj  

பாடலில் திருவிடந்தை கிராமத்தின் அரசு லைசென்ஸ் பெற்ற ஒரு கள்ளுக்கடையும் வரும் [உரிமையாளர் ராஜரத்தினம் என்று இருக்கும்] , முட்டுக்காடு படகுத்துறையின் நீர்நிலையில் பெரும்பான்மையான காட்சிகளையும், பக்கிங்காம் கால்வாயின் மதகின் மீது சில காட்சிகளையும் படமாக்கியிருப்பார்கள். முட்டுக்காடு படகுத்துறையில் தமிழ்நாடு டூரிசம் மோட்டார் போட்டின் விளிம்பில் அட்டகாசமாக ரஜினி,ராதிகா ஜோடி அமர்ந்து செல்லும் காட்சி ரம்மியமாக இருக்கும்,பாபுவின் ஒளிப்பதிவும் அட்டகாசமாக இருக்கும்,இயக்கம் எஸ்,பி.முத்துராமன்.ரவுடியை பணக்காரவீட்டுப் பெண் காதலித்து மணக்கும் கைங்கர்யத்தை தமிழ்சினிமாவில் இப்படம் தான் துவக்கி வைத்தது என்று நினைக்கிறேன்.

பாடலை இங்கே கேளுங்கள்  http://www.youtube.com/watch?v=YIdAyBJUgT4



இப்பாடலுக்கு தாசேட்டாவின் பேத்தோஸ் வெர்ஷனும் உண்டு.அது இங்கே
http://www.youtube.com/watch?v=791ASQ954ns


ஃபன்றி [Fandry ][फँड्री] [2014] [மராத்தி]



ஃபன்றி திரைப்படம் பற்றி முன்பே எழுத வேண்டும் என்று நினைத்தும், முடியவில்லை,ஃபன்றி திரைப்படம் நிறைய ஆச்சர்யங்களை என்னுள் விட்டுச் சென்றது. அதில் முதன்மையாக சிறுவன் ஜப்யா குடும்பத்தினர் பேசுகிற கைக்காடி மொழிக்கும் தமிழுக்கும் நிறைய சொற்களில் ஒற்றுமை இருந்தது, கைக்காடி மொழியிலும் திருவிழா என்றே திருவிழாவை சொல்லுகின்றனர். பின்னர் பன்றியை ஃபன்றி என்றே சொல்லுகின்றனர்.வாங்க,வாங்க என்றே வரவேற்கின்றனர்,இங்குட்டு அங்குட்டு என்று இடம் சுட்டுகின்றனர்.

கதை மஹாராஷ்ட்ராவின் அஹமத்நகரின் அருகே அமைந்துள்ள ஒரு குக்கிராமமான அகோல்நரில் நடக்கின்றது,அகோல்நார் தொழிநுட்ப வசதியிலும்,வாங்கும் திறனிலும் எத்தனை தான் வளர்ந்திருந்தாலும், ஊராருக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாத வினோத கிராமம்.ஊரார் அதிகாலை,பகல் என லஜ்ஜையேயின்றி வெட்டவெளியில் தான் மலம் கழிக்கின்றனர்,எல்லோர் கையிலும் அவரவர் வசதிக்கேற்ப பித்தளையிலோ, இரும்பிலோ, ப்ளாஸ்டிக்கிலோ கழுவ நீ அடங்கிய கோப்பையை எடுத்துச் செல்கின்றனர்,

ஊரில் வெட்ட வெளியில் கழிக்கப்படும் மலத்தை தின்பதற்கென்றே எங்கிருந்தோ வந்து குடியேறிய பன்றிகள்,இரண்டு நூறாகி பல்கிப் பெருகியிருக்கின்றன.ஊரார் மலத்தை உண்டு சுத்தம் செய்யும் பன்றிகளை, நன்றியுடன் பாராமல்,அதை அருவருத்து ஒதுக்குவது அங்கும் வழக்கத்தில் இருக்கும் செயல்,ஒருவர் மீது பன்றி பட்டுவிட்டால்,அவர் வீடு சென்று குளித்து பசுமாட்டின் கோமியம் தெளித்து சுத்தியாவது வரை அவரும் தீட்டுப்பட்டவர்கள் தாம் என்கின்றனர். ஊரில் திரியும் பன்றிகளால் ஊராரால் நிம்மதியாக சென்று மலம் கழிக்க முடிவதில்லை,அவைகள் புட்டத்துக்கு பின்னர் காத்திருப்பது ஊராருக்கு குருகுருவென்றிருக்கிறது.

இங்கே தான் ஊரே ஜப்யாவின் குடும்பத்தை நம்பியிருக்கிறது, அவர்களை ஊரார் வறட்டு அதிகாரத்துடன் ஹே பரையா என்றே அழைக்கின்றனர்,இந்தச் சொல் பெரியார் புண்ணியத்தில் தமிழகத்தில் அதிகம் வழக்கொழிந்து போனாலும் , மஹாராஷ்டிரம் உள்ளிட்ட ஏனைய மாநிலங்களில் இச்சொல் மிகவும் சர்வ சாதாரணமாக இன்றும் கையாளப்படுவது கண்கூடு.

ஜப்யா 12 வயது சிறுவன்,ஏழாம் வகுப்பு படிக்கிறான்,தாழ்த்தப்பட்ட மானே சமூகத்தைச் சேர்ந்தவன்,வாழாவெட்டி அக்கா கைக்குழந்தையுடன் வீட்டில் இருக்க, மற்றொரு அக்காவுக்கு வரன் பார்க்கிறார் ஜப்யாவின் அப்பா, ஜப்யாவின் அப்பாவுக்கு நிரந்தர தொழிலோ வருமானமோ கிடையாது, அவருக்கு ஊர் தலைவர் காலால் இடும் வேலையை தலையால் செய்யும் கட்டாயம் இருக்கிறது, ஊரில் சாதி வெறி அப்பட்டமாக தலைவிரித்தாடுவதைக் காண முடியும். ஜப்யாவுக்கு உயிர் தோழன் பிர்யா, அவனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்,அவன் பாடாவது தேவலாம்,

பிர்யா தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்தாலும் ஜப்யா போல ஏழ்மை நிலை இல்லை,வீட்டுக்கு ஒரே மகன். ஜப்யா பணிக்குச் செல்ல பள்ளிக்கு விடுப்பு எடுக்கிறான்,பிர்யா உடம்புக்கு ஜுரம் என்று விடுப்பு எடுக்கிறான்.நண்பன் பிர்யா ஜப்யாவுடனே திரிகிறான், ஜப்யாவுக்காக பொய்கள் சொல்கிறான், அவன் ஹீரொக்கணக்காக அழகாயிருப்பதாகவும், சக மாணவி ஷாலு அவனையே பார்ப்பதாகவும் ஜப்யாவின் காதல் பித்துக்கு கொம்பு சீவி விடுபவன், அவனும் கருங்குயிலின் இறகுக்கும்,அதன் சாம்பலுக்கும் ஜப்யாவின் கூடவே அலைகிறான்.கருங்குயிலின் இறகு வேறு ஒரு தனிக்கதை,மேலும் படியுங்கள்.

ஜப்யாவின் ஆதர்சமான சைக்கிள்கடை சாங்யா ஒருமுறை விளையாட்டாக சொன்னாரோ?வினையாகச் சொன்னாரோ? தெரியாது, என்னை எப்படி அந்த பணக்காரப் பெண் காதலித்து என்னுடன் ஓடி வந்தாள் என்கிறாய்?!!!எல்லாம் ராஜ வசியம் தான்,கருங்குயிலை எரித்து அதன் சாம்பலை அவள் மீது ஊதி விட,ராஜ வசியம் சித்திக்கும் என்று சொல்ல,

அன்று முதல் விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி என்று அந்த பீக்காட்டுக்குள்ளேயே திரிகின்றனர் ஜப்யாவும் பிர்யாவும்,இவன் பறவை பிடிக்கப் போகும் இடத்தில் நடக்கும் கூத்துக்கள் ஒன்றா இரண்டா?எத்தனை ஏச்சுப் பேச்சு,ஒரு கிழவி ஜப்யாவிடம்,நீ மரமேறி,பறவைக்குஞ்சுகளை தொடுவதை தாய்ப்பறவை பார்த்தால் அந்த உயர்ந்த சாதிப்பறவைகள் தீட்டுப்பட்ட தன் குஞ்சுகளை கூட்டில் சேர்க்காது விரட்டிவிடும் என்கிறாள் , புண்ணியவதி.

ஜப்யா வீட்டில் எல்லோரும் வேலை செய்தால் தான் மூன்று வேளை அடுப்பெரியக்கூடிய நிலை,ஜப்யாவின் 80 வயது தாத்தா கூட கூடை முடைகிறார், ஜப்யா பெற்றோரால் வலுக்கட்டாயமாக பள்ளிக்கு விடுப்பு எடுக்க வைக்கப்பட்டு கட்டிட வேலைக்கு கூட்டிச் செல்லப்படுகிறான்,சினிமா என்பது காட்சிகளின் மீடியம் என்னும் கூற்றுக்கேற்ப ஃபன்றி நம்மை அதன் நேர்த்தியான காட்சியமைப்புகளால் கட்டிப்போட்டு, நம்மை உள்ளே இழுத்து விடுகிறது. படத்தின் துவக்கமே இனிமையான கிடார் இசை ஒலிக்க, பெற்றோரால் பணிக்கு அனுப்பப்பட்ட சிறுவன் ஜப்யா அங்கே டிமிக்கி கொடுத்துவிட்டு ஒரு இரட்டை வால் கொண்ட கருங்குயிலின் பின்னே ஓடி அதைத் தம் உண்டிக்கோலால் வீழ்த்த எத்தனிக்கும் படலத்தில் தான் துவங்குகிறது.

ஜப்யாவின் அப்பா சாராயம் குடித்தாலும் கூட சலம்புவதில்லை,அவர் போதையினூடாயேனும் சற்று சந்தோஷம் கொள்வதை ஊரின் சக குடிகாரர்கள் விரும்புவதில்லை, அருகே வரவழைத்தோ,அருகே சென்றோ ,வலிக்கும் வரை வார்த்தையால் குத்துகின்றனர், இதற்கு ஜப்யா,அவன் அம்மா,அக்காள்கள்,தாத்தா என யாரும் விதிவிலக்கல்ல, ஜப்யாவையேனும் படிக்க வைப்போம் என்று அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர்.ஆனால் அவனை ஒழுங்காக பள்ளிக்கு அனுப்பவாவது விடுகிறதா?வீட்டின் வருமை!!!
ஜப்யா தன் ஊரில் இருக்கும் ஒரே பள்ளியில் தன்னார்வத்துடன் படிக்கிறான்,பள்ளியில் அம்பேத்கர் படங்கள் விஸ்தாரமாக வரைந்து வைக்கப்பட்டிருந்தாலும், இரட்டைக்குவளை முறைக்கு ஈடான தீண்டாமை வகுப்புக்குள்ளே புழங்குவதைப் பார்க்கிறோம்,அங்கே ஒரு உயர் சாதி மாணவனின் அருகே அமர்ந்திருக்கும் மாணவன் பிர்யா,இவன் மீது நான் தொட்டாலோ பட்டாலோ இவன் என்னை திட்டுவான் அடிப்பான் என்று ஆசிரியரிடம்,சொல்லிவிட்டு,தம் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் அமர்ந்திருக்கும் பின் பெஞ்சில் சென்று அமர்வதை நாம் பார்க்கிறோம்.

 ஜப்யா வகுப்பில் சகமாணவி , உயர் குடியைச் சேர்ந்த ஷாலுவை நேசிக்கிறான், அவளோ இவனை ஒரு மார்க்கமாகத் தான் பார்க்கிறாள், இளப்பமாகத்தான் நினைக்கிறாள்,அவளுக்கு தன் வீட்டின் அண்டை வீட்டு ஊர் பெரியவரின் மகனான சக மாணவன் மீது தான் ஒரு கண் இருக்கிறது, ஜப்யா அதை பொருட்படுத்துவதில்லை, ஆனால் அந்த பணக்கார மாணவன் ஜப்யாவை பார்வையாலேயே உருட்டி மிரட்டுகிறான். தான் தன் டிஸ்கவர் பைக்கில் பள்ளிக்கு விரைகையில் எதிப்படும் ஜப்யாவை புழுவைப் பார்ப்பது போலப் பார்க்கிறான்.அவனை தாக்க தருணம் பார்க்கிறான்.

 ஜப்யாவுக்கு ஷாலுவின் மீது இருப்பது இளம் பருவத்தில் வரும் பிஞ்சுக்காதல் தான், தன் விடாப்பிடியான வறுமையின் வடிகாலாக அவன் காதலை நினைக்கத் துவங்கிவிட்டான், பெற்றோர் எத்தனை சொன்னாலும் அது அவன் செவிகளில் ஏறுவதில்லை, காதல் எந்த நேரத்தில் யாருக்கு யார் மேல் வரும் என்று சொல்ல முடியாது, எத்தனையோ விடலைப் பருவத்து காதல்களை நாம் திரையில் கண்டும், வாழ்வில் பல சமயங்களில் கண்டு கேட்டு இருந்தாலும் ஜப்யாவின் காதல் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது, அத்தனை நேர்த்தியாக படைக்கப்பட்டிருந்தது சிறுவன் ஜப்யாவின் கதாபாத்திரம்.

ஜப்யாவுக்கு சாதி அடக்குமுறைக்கு குனிந்து போகப் பிடிப்பதில்லை,அந்த உள்ளக் கிடக்கையே ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஷாலுவை தீவிரமாக காதலிக்கத் தூண்டுகிறது, அவளைப் பார்க்க தினசரி அவன் மனதுக்கு நெருக்கமான சாங்யா [நாகராஜ் மஞ்சுளே] அண்ணன் கடையில் சென்று அமருவதை வழக்கமாக வைத்திருக்கிறான், சாங்யா பற்றி சொல்ல நிறைய விஷயமுண்டு, சாங்யாவை நான் எங்கள் தெருவில் பார்த்திருக்கிறேன், நீங்கள் கூட உங்கள் தெருவில் ஒரு சைக்கிள் கடையிலோ,மளிகைக் கடையிலோ,தையல் கடையிலோ,அல்லது ஒரு ஃபேன்ஸி ஸ்டோரிலோ பார்த்திருக்க முடியும். இப்படித்தான் சாங்க்யா பாத்திரம் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.

நான் இருந்த பல்லாவரம் சாவடித் தெருவில் ஒரு ராமசாமி டெய்லர் இருந்தார்,பள்ளியில் எட்டிக்காய் போல கசக்கும் கணக்குப் பாடம்,வீட்டுப் பாடம் எழுதாமல் தண்டனை அடையும் கால இடைவேளைகளை நான் அங்கே தான் கழிப்பேன், அங்கே தான் எடுபிடி வேலை செய்து கொண்டு, இளையராஜா பாடல்களை அவரின் அசெம்பிள் செட்டில் அட்டகாசமான ஆம்ப்ளிஃபையரில் ,மண் பானை மீது அமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களுடன் கழித்திருக்கிறேன்,

அவரும் இதே நாகராஜ் மஞ்சுளே போன்ற பிச்சிக்கட்டி கருப்பு,ஆதிதிராவிடர் தான், ஆனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த, எதிர் வீட்டுப் பெண்ணை அட்டகாசமாக உஷார் செய்து , அப்பெண் ட்யூஷனுக்கு சென்றிருந்த போது கூட்டிப்போய் தாலி கட்டி சிதம்பரம் சேத்தியாதோப்புக்கு கூட்டிச் சென்று சிலமாதம் குடித்தனம் நடத்திவிட்டு,சண்டை சச்சரவுகள் போலீஸ் கேஸ், முழுக்க தீர்ந்தபின்னர் தான் இங்கே வந்தார், பெண்வீட்டாரை சமாதானம் செய்து இப்போது சமூகத்தில் மதிப்பும் மரியாதையுடன் இருக்கிறார்.

இது சென்னையில் நடக்கும், ஆனால் தர்மபுரியில் நடக்காது,பெருநகர சூழலில் சாதி பலசமயம் இப்படிக் குளிர்விட்டுப் போகிறது,ஆனால் ஃபன்றி படத்தின் சாங்யாவுக்கு அப்படி நிகழவில்லை, சாங்யா பக்கத்து சிற்றூரில் சைக்கிள் கடை வைத்திருந்தவர், ஆதிக்க சாதிப் பெண்ணை காதலித்து மணக்கிறார், அப்பெண்ணும் சாங்க்யாவின் மீது மிகுந்த நம்பிக்கையும், காதலுடனும் வாழ்ந்தால் இவருடன் தான் என்று பிடிவாதமாக வந்து வாழத்துவங்கியவளை,ஒரு இரவு பெரிய காட்டுக்கும்பல் ,கத்தி கடப்பாரையுடன் வந்து சாங்யாவை அடித்து குத்துயிராகக் கிடத்திவிட்டு அவளை மீட்டுச் சென்று விடுகிறது.
[இவை காட்சியாக வராது,ஆனால் சில நொடிகளில் கடக்கும் வசனமாக வரும்] அதிலிருந்தே ஊராருக்கு சாங்யா மீது ஒரு வெறுப்பு கலந்த பயம் இருக்கிறது,சாங்யாவின் கடையின் சூழலே ஒரு வித்தியாசமானது,அவர் கடையின் பெயர் லவ் சைக்கிள் மார்ட் அண்ட் கேரம் ஹவுஸ்,அங்கே பூஜை மாடத்தில் வசியத்துக்கு பெயர் போன பகவதி ,வாக்தேவி உள்ளிட்ட தெய்வங்களின் படங்களை நாம் பார்க்கிறோம், லோக்கல் மராட்டா கதாநாயகனின் போஸ்டரும் இருக்கிறது,பூஜை மாடத்தில் ஒரு கருப்பு பொம்மை தலை கீழாக ஒற்றைக்காலில் கட்டி தொங்கவிடப்பட்டு காற்றில் ஆடும் ஒரு வினோதமான சூழல்.

ஊரார் சாங்யாவை மறை கழன்ற கேஸ் என்றே ஒதுக்கியும் ஒதுங்கியும் இருக்கின்றனர். எதிர் வீட்டில் இருக்கும் ஷாலுவின் தகப்பனும் ஒரு ஊர் பெரிய மனிதன், ஒரு நாள் அவர்கள் வீட்டு நல்ல தண்ணீர் குழாய் தொட்டியில் ஒரு குட்டிப் பன்றி விழுந்து வெளியேற முடியாமல் தவிக்க, அவர் ஜப்யா சைக்கிள் கடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தவர் அதட்டி அழைத்து, பன்றியை வெளியேற்றச் சொல்கிறார்,ஜப்யா முடியாது என்று துணிவாக கூறிவிட்டு அகல்கிறான்,ஜப்யாவின் அப்பாவுக்கு விஷயம் போய் அவர் அங்கே அந்தக் குழிக்குள் இறங்கி பன்றிக்குட்டியை வெளியேற்றியவரைப் பார்த்து ஷாலுவின் தாய்,அந்த தொட்டியில் எஞ்சியுள்ள் நீர் தீட்டுப்பட்டுவிட்டது,அதையும் சுத்தம் செய்,என்கிறாள்,அவர் செய்துவிட்டு பன்றிக்குட்டியை வீட்டுக்கு எடுத்துச்சென்று அறுத்து கழுவி சமைக்கிறார்,
ஊரில் பன்றிகள் அட்டகாசம் அதிகமாகிவிட்டது,ஜப்யாவின் அப்பா ஊருக்குள் நடக்கையில் அவர் தான் பன்றிகளை வளர்த்து மேய விடுவது போல ஊரார் அவரை கேலி செய்து நோகடிக்கின்றனர்,அவருக்கோ பன்றியின் பின்னே ஓடிச் சென்று சுருக்கிட்டு பிடிக்கமுடியாத முதுமை,சிறிது காலமாக மூட்டு வலியும் வேறு சேர்ந்து கொண்டது,இந்நிலையில் தான் ஜப்யாவின் இளைய சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகிறது,அதற்கு அவர்கள் சாதி வரன் ஒருவர் ஐம்பதாயிரம் ரொக்கமும்,ஒரு சவரன் மோதிரமும் கேட்கிறான்,ஜப்யாவின் தந்தை கையைப் பிசைய,இருவருக்கும் பொதுவாக அமர்ந்திருக்கும் தரகர் மத்தியஸ்தம் செய்து,இருவரும் கொஞ்சம் இறங்கி வாருங்கள்,20ஆயிரம் ரொக்கம் ஒரு சவரன் மோதிரம் என்கிறார்,

அப்போதும் ஜப்யாவின் அப்பா சங்கடப்பட்டு என்னால் இருக்கும் வருமையில் அத்தனையெல்லாம் முடியவே முடியாது என கூசிக்குறுகிச் சொல்ல,சரிப்பா ஐயாயிரம் ரொக்கம் என்று அவரே நடுநாயகமாக பேசி முடிக்கிறார்,அக்காட்சி எத்தனை இயல்பாக எடுக்கப்பட்டிருக்கும்?இதை உலகசினிமா என்று சொல்லாமல் எதைச் சொல்வது?நிச்சயம் பேசியதும் குடிசை வீட்டின் உள்ளே இருந்து எவர்சில்வர் தட்டில் பல வடிவங்களில் அக்கம்பக்கத்து வீடுகளில் கடன் வாங்கப்பட்ட குட்டையான உயரமான,பூப்போட்ட பூப்போடாத பீங்கான் கோப்பைகளில் தேநீர் வரும்,அதைப் பல கைகள் எடுத்து தாகசாந்தி செய்து கொள்ளும் ஒரு அரிய காட்சி.அது இயக்குனர் நாகராஜ் மஞ்சுளேவைக் கொண்டாட வைக்கும்.

ஊரில் திருவிழாவும் நெருங்குகிறது,ஜப்யாவின் சகோதரிக்கும் திருமண முஹூர்த்த நாள் நெருங்குகிறது,பணம் தேர்த்த முடியவேயில்லை,முடைந்து வைத்த கூடைகளை விற்கின்றனர். ஜப்யாவின் அப்பா மராமத்து பணிக்கும்,வெள்ளையடிக்கும் வேலைக்கும்,அவர் குடும்பத்தார் குப்பை வாரும் வேலைக்கும் சென்று வந்தும் பணம் பெயரவில்லை.
இது இப்படி இருக்கையில் ஜப்யாவும் பிர்யாவும் ஒருவாரம் நடக்கும் திருவிழாவில் பெப்சிக்கோலா விற்கின்றனர்,அதற்கு சைக்கிளை ஜப்யாவுக்கு சாங்யா அண்ணனே வாடகைக்குத் தருகிறார்.அண்ணனிடம் திருவிழா முடிந்து சைக்கிள் வாடகையைத் தருவதாக சொல்கிறான் ஜப்யா.ஆனால் அவன் எதிர்பாராத அந்த சம்பவம் அன்று நடந்து விடுகிறது,அன்று வழக்கம் போல அஹமத் நகர் சென்று,பெப்சிக்கோலாவை தெர்மக்கோல் பெட்டியில் ஏற்றி கேரியரில் வைத்துக் கொண்டு விற்க விரைகையில், ஒரு அக்வாரியம் கூடிய ஃப்ளோரா ஃபன்னா கடையைப் பார்க்கிறார்கள் ஜப்யாவும் பிர்யாவும்,ஜப்யா தன் சைக்கிளை ஒரு சரக்கு லாரிக்குப் பின்னே அசட்டையாக நிறுத்திவிட்டு,அந்த பறவைகள் விற்கும் கடைக்குச் சென்று கருங்குயில் விற்பனைக்கு இருக்கிறதா? என ஆவலுடன் கேட்க,இல்லை இங்கே லவ் பேர்ட்ஸ் மற்றும்,கிளி மட்டும் இருக்கிறது,என்கிறார் கடைக்காரர்

அப்படி அவன் வாயடித்துக் கொண்டிருக்கும் போதே சரக்கு லாரி ரிவர்ஸில் வந்து ஜப்யாவின் சைக்கிளையும் ஐஸ் பெட்டி சரக்கையும் நசுக்கிவிட்டுச் சென்றுவிடுகிறது,இப்போது தான் ஐஸ் விற்று வாங்க நினைத்த கில்லர் ப்ராண்ட் ஜீன்ஸ் விற்கும் கடையை ஏக்கத்துடன் நசுங்கிய சைக்கிளை பிர்யாவின் சைக்கிளில் பின்னே சுமந்து கொண்டு செல்லுகிற வழியில் பார்க்கிறான் ஜப்யா.

பிர்யா தான் பெப்சி கோலா விற்ற காசையும் ஜப்யாவிடம் தர அதைக்கொண்டு சென்று பெப்ஸிக்கோலா கம்பெனியில் கொடுத்து,மீதம் உள்ள பணத்தை அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு வருகிறான் ஜப்யா.பின்னர் சாங்யா அண்ணாவிடம் சென்று சைக்கிளுக்கு வாடகை எத்தனை என்று கேட்க,அதைவிடுடா!!!150 ரூபாய் வரும், ஏன் அழுகிறாய்,என்று அவர் கேட்க,சைக்கிள் நசுங்கியதைச் சொல்கிறான்,சரி விடு,சந்தோஷமாயிரு,நாளை திருவிழாவில் நாம் கலக்க வேண்டும்,உன் பறை மேளத்தை நன்றாக தயார் செய் என்று ஊக்கமளித்து அனுப்புகிறார் சாங்யா.

மறுநாள் பகல் முழுக்க திருவிழாவில் பிர்யாவுடன் இன்பமாகக் கழிக்கிறான்,ஷாலுவை பல கோணங்களில் வெறிக்கிறான்,உடன் அலைவதைப் பார்த்த அந்த பணக்காரச் சிறுவன் ஜப்யாவை மிரட்டி விரட்டுகிறான். சாங்யாவின் அப்பாவிற்கோ ஜப்யாவுக்கு திருவிழாவின் போது புதுத்துணி வாங்கித்தரமுடியாத குற்ற உணர்வு பீரிட,அவனை அழைத்துப் போய் கடைக்காரன் கிண்டல் செய்வதையும் பொருட்படுத்தாமல் ஜப்யாவுக்கு 100 ரூபாயில் கடையிலேயே மிக மலிவான சட்டை எடுத்து அணிவிக்கிறார்,ஜப்யாவுக்கு ஆத்திரமும் அவமானமும் பீரிடுகிறது.

சாங்யா அண்ணனை திருவிழாவில் பார்த்தவன் பறையைக் கொண்டு போய் அடித்துக்காட்டுகிறான்,உற்சாகம் கொண்டவர்,இன்று இரவு நடக்கும் சாமி ஊர்வலத்தில் பட்டையைக் கிளப்புவோமடா,என்று முழங்கிவிட்டு, சாராயக்கடைக்குள் நுழைகிறார். சிறிது நேரம் கழித்து இரண்டு ஆள் பலத்துடன் வெளியே வந்த சாங்யா,திருவிழா ஊர்வலத்தில் அதீத உற்சாகத்துடன் ஜப்யா பறையடிக்க,சாங்யா குத்தாட்டம் ஆடுகிறார்,ஊரே மிகுந்த உற்சாகத்துடன் வேடிக்கைப் பார்க்கிறது, ஷாலுவும் மகிழ்ந்து ஜப்யாவைக் கண்விடுவதைக் கண்ட சாங்யா ,யாரும் எதிர்பாராத போது பறையடித்துக் கொண்டிருக்கும் ஜப்யாவை அலேக்காக தன் தலைக்கு மேல் தூக்கி தன் தோள் மீது அமர வைத்தபடி ஆடுகிறார்,இது ஜப்யாவின் அப்பாவுக்கு பயத்தையும் வெறுப்பையும் உண்டாக்குகிறது.

அங்கே உயரத்தில் ஆதிக்க சாதிகளின் தலைக்கும் மேலே மிஞ்சி விடுகிறான் ஜப்யா, அவன் பிறந்ததிலிருந்து என்றுமே இத்தனை மகிழ்ச்சி கொண்டதில்லை, அப்படி சுழன்று ஆடுகிறார் சாங்யா. எதிரே ஊர்மக்கள் இதைப் பொருக்காது, ஜப்யாவின் அப்பாவைக் கூப்பிட்டு பெட்ரோ மேக்ஸ் விளக்கை நன்கு தூக்கிப் பிடிக்குமாறு கட்டளை இட,அவர் இவனை திட்டி கீழே இறக்கியவர்,அவன் தலை மீது ஒரு பெட்ரோ மேக்ஸ் விளக்கும் தன் தலைமீது ஒரு பெட்ரோ மேக்ஸ் விளக்கையும் ஏற்றிய படி கூட்டத்துக்கு விளக்கு பிடிக்கிறார்.அப்போது கேதார்நாதரின் மூலவர் விக்ரஹம் பல்லக்கில் கொண்டு வரப்படுகிறது,எல்லோரும் ஆரத்தி எடுக்க,ஜப்யாவுக்கு அழுகை பீறிடுகிறது,பிஞ்சு உள்ளத்தின் தலையிலும் மனதிலும் பாரம். அப்போது கூட்டம் ஓலமிட,மின்சாரமும் தடைபடுகிறது, அங்கே அந்த பட்டாசுச் சத்தத்தில் மிரண்ட பன்றிகள் கூட்டத்துக்குள் புகுந்து பல்லக்கு சுமந்தவர்களின் மீது உரசிச் செல்ல,அவர்கள் பன்றி மேலே பட்டவுடன் பல்லக்கையே அந்தரத்தில் விட்டுவிட்டு ஓட,திருவிழா தடைபடுகிறது,

இரவே ஊர் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு ஜப்யாவின் அப்பா முன்நிறுத்தப்பட்டு கண்டிக்கப்படுகிறார்,இந்தா நீ கேட்ட பணம்,இதை வைத்துக்கொண்டு என்ன செய்வாயோ?நாளை பன்றிகளை இவ்வூரை விட்டு நீ அகற்றியிருக்க வேண்டும்,சின்ன பன்றிக்குட்டு கூட மிஞ்சக்கூடாது,கொல்லுவாயோ,பிடித்து விற்பாயோ தெரியாது,எத்தனை பேரை வேண்டுமானாலும் கூட்டிக்கொள்,ஆனால் காரியம் நடக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். ஊரார் சொல்லையும் தட்ட முடிவதில்லை.பன்றியை பிடிக்கும் சாமர்த்தியமும் இல்லை,என்ன செய்வது என்று திகைக்கிறார் ஜப்யாவின் தந்தை,

விடிகையில் மனைவி,மகள்கள்,ஜப்யா என எல்லோரையும் எழுப்பி கூட்டிச் சென்றவர்,பன்றி பிடிக்கும் படலத்தை துவக்குகிறார்,அதுவோ ஊரார் மலம் கழிக்கும் பிரம்ம முஹூர்த்த நேரம்,அத்தனை பேர் புட்டத்தையும் இவர்கள் பார்க்க வேண்டியிருக்கிறது,ஊராரில் சிலர் ஜப்யாவின் சகோதரிகளையும் தாயையும் கூட கிண்டல் செய்கின்றனர்,ஜப்யாவோ அப்பாவுக்கு உதவாமல் அவமானத்தால் தொலைவில் சென்று ஒளிந்து கொள்கிறான்,பள்ளி துவங்கும் நேரம் வருகிறது,இப்பொது பள்ளியில் கடவுள் வாழ்த்து பாடப்படுகிறது,கொஞ்சம் நிம்மதி அடைகிறான் ஜப்யா.
 
ஊரும் சக மாணவர்களும் கூடி இவர்கள் குடும்பம் பன்றிகளின் பின்னே ஓடுவதைப் பார்த்து கைகொட்டி சிரிக்கின்றனர்,ஜப்யாவின் அப்பாவுக்கோ மகன் எங்கோ அவமானம் கருதி ஒளிந்து கொண்டதைத் தாங்கமுடிவதில்லை, அவனை கற்களாலேயே அடித்து இழுத்து வந்து பன்றி பிடிக்க வைத்திருந்த சுருக்கை வலியத்திணிக்கிறார்,   கூசிக்குறுகியவன் உடைந்து அழுகிறான், ஆனாலும் ரோஷ ,அவமானத்தாலும் இளம் கன்று  ஆதலாலும்,ஒரு பெரிய தாய்ப் பன்றியையே சுருக்கு வீசிப் பிடித்தும் விடுகிறான்.அதற்குள் மதிய உணவு வேளையும் வந்து விடுகிறது,மீண்டும் மாணவர் படையெடுக்கின்றனர்.

ஊரே பன்றி பிடிப்பதை கூடி நின்று பார்த்து கோஷம் போட,இவன் நேசிக்கும் ஷாலுவும்,அதைக்கண்டு அப்படி இல்லாத மார்பு குலுங்க சிரிக்கிறாள்,இவனுக்கு வேதனை அதிகமாகிறது,ஊரின் அந்தப் பணக்காரச் சிறுவன் தன் புதிய ஸ்மார்ட் போனில் அதை வீடியோ எடுத்து யூட்யூபில் தரவேற்றியும் ,mms அனுப்பியும் தன் சக ஆதிக்க சாதி வெறியர்களிடம் காட்டிச் சிரிக்கிறான்.

இப்போது அந்தப் பன்றி சுமார் 100 கிலோ இருப்பதை ஒரு பெரிய கழியில் தலை கீழாக கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் இரு சகோதரிகளும் பின்னே சுமந்துச் வர, முன்னே ஜப்யா தூக்கிச் செல்கிறான்,அவர்கள் பின்னே நிழலாகத் தொடர்ந்த அந்த ஆதிக்க சாதி வெறியன் பலவாறு கிண்டல் செய்கிறான், அங்கே பொருத்தது போதும் என்று பொங்கி எழும் ஜப்யா ஒரு கருங்கல்லைப் பொருக்கி எடுத்து அந்த ஆதிக்க சாதி முட்டாளின் நெற்றியை நோக்கி எரிகிறான்,கல் குறி தவறாது அவனின் நெற்றியை பெயர்த்து உடைப்பதுடன் படம் முடிகிறது. நம் உள்ளம் துள்ளுகிறது,அந்த நொடியில் நாம் ஜப்யாவாகவே மாறி விடுகிறோம்.

  • அதன் பின்னர் ஜப்யா கொல்லப்பட்டிருக்கலாம்.
  • அதன் பின்னர் ஜப்யாவின் தாய் தமக்கைகள் ஊராரால் வன்புணர்வு செய்து பெண்டாளப்பட்டிருக்கலாம்.
  • அதன் பின்னர் ஜப்யாவின் அப்பாவின் வாயில் அந்த ஊர் தடியர்கள் சேர்ந்து மலக்கரைசலை ஊற்றியிருக்கலாம்.
  • அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காமல் அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம்
ஆனால் க்ளிஷேவான மேற்சொன்னவை  எதுவும் நிகழாத படி ஒரு தலித் வெற்றி சூடுவது போன்றும்,ஆதிக்க வெறி மண்ணில் வீழ்வது போன்றும் சினிமாவில் முதன் முதலில் அங்கே காட்டப்பட்டது மிகத்துணிச்சலான கட்டுடைத்தல் ஆகும்,இந்த ஆலம் விதை நாளை பெரிய மரமாகி வேர்விடும் என்ற நம்பிக்கை நம்முள் துளிர் விடுகிறது,இதற்குத்தான் நாம் நாகராஜ் மஞ்சுளேவைப் போற்றுகின்றோமே தவிர அவர் சில குசும்பு பிடித்த கட்டுரையாளர்கள் சொல்வது போல ஓவர் ரேட்டடாக புகழப்படவேயில்லை.

இப்படத்தை எல்லா பள்ளி கல்லூரிகளிலும் அரசு செலவிலேயே திரையிட்டு தீண்டாமையையும்,அடக்குமுறையையும் வேரறுக்கும் பணியை முன்னெடுக்க வேண்டும்.தீண்டாமை அறவே ஒழிகையில் தான் நாம் சுதந்திர தினமோ,குடியரசு தினமோ கொண்டாடுவதில் முழு அர்த்தம் இருக்கும்.

இப்படத்தினை விரிவாக எழுதுவதற்குக் காரணம் நான் இணையத்தில் படித்த கட்டுரைகளே, ஏனையவை, நிறைய தகவல் பிழைகளையும் கொண்டிருந்தது, ஒருவர் தி இந்துவில் ஜப்யா வீட்டாரே பன்றிகளை வளர்ப்பதாக எழுதியிருந்தார், விக்கியிலும் தமிழில் எழுதியவர் அப்படியே எழுதியிருந்தார். எல்லாவற்றுக்கும் காரணம் அவசரம் தான்,படத்தை கவனமாக அணுகி எழுதாத செயல் தான்.

ஃபன்றி திரைப்படம் யூட்யூபில் நல்ல தரத்துடன் சப்டைட்டிலுடன் பார்க்கக் கிடைக்கிறது.அவசியம் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=1a8VQa8gFYs


யாருக்கு இந்த அஞ்சலி? ஸ்ரீதருக்கா?அல்லது ருத்ரையாவுக்கா?


இது இயக்குனர் ருத்ரையாவுக்கு நேற்றைய நியூ இண்டியன் எக்ஸ்ப்ரெஸ் ஆங்கில தினசரியில் வந்த அஞ்சலி,இதை எழுதியது டெபுடி சப் எடிட்டராம்,அவர் பெயர் பாபு ஜெயக்குமார்,எத்தனை கொடுமை பாருங்கள்?
அவள் அப்படித்தான் படத்துக்கு பதில் இளமை ஊஞ்சலாடுகிறது படம், இயக்குனர் ருத்ரையா படத்துக்கு பதிலாக இயக்குனர் ஸ்ரீதரின் படம்.

ஒருவருக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்தால் என்னக் கொள்ளை?கவிதை எழுத முடியாதவன்,கவிதை எழுதுகிறேன் எனக் கிளம்புவதும்,கட்டுரை எழுத முடியாதவன் கட்டுரை எழுதுகிறேன் எனக் கிளம்புவதும்,கதை எழுதத் தெரியாதவன் கதை எழுதுகிறேன் எனக் கிளம்புவதும் என  இப்படி குரங்கைப் பிடித்து வைக்கின்றான்கள்.பூனைக்கு யார் மணி கட்டுவது.

இது போல சிண்டிகேட் அமைத்து திராபைகளை அழைத்து எழுத விடும் பத்திரிக்கைகளை என்ன செய்வது? ராண்டார் கை என்று ஒருவர் தரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும்,அவர் எழுத்துலக வாரிசுகள் எழுதும் கட்டுரையில் என்ன எதிர்பார்க்க முடியும்?

வெட்டிக்கு எழுதும் என் போன்ற சிலர் கூட தகவல்களை சரிபார்த்து வீடியோவை பலமுறை பார்த்துவிட்டு எழுதுகிறோம், பத்திரிக்கையில் எழுதுபவருக்கு அந்த பொருப்புணர்வு வேண்டாமா?
 
இளமை ஊஞ்சலாடுகிறது பற்றி படிக்க
அவள் அப்படித்தான் பற்றி படிக்க

இளமை ஊஞ்சலாடுகிறது [1978]



இன்று இளமை ஊஞ்சலாடுகிறது படம் பார்த்தேன்.படம் வெளியாகி 36 வருடங்களாகிறது, படத்தின் இயக்கம் ஸ்ரீதர். ஸ்ரீதரின் இன்ன பிற  படங்களின் க்ளிஷேவான கதையாக்கம் இதிலும் உண்டு. படத்தில் சில புதுமைகளையும் கவனித்தேன்,மீனவ நண்பன் படத்தைத் தொடர்ந்து இதையும் வண்ணப்படமாகவே எடுத்தார் ஸ்ரீதர்.இதன் ஒளிப்பதிவு 16 வயதினிலே ஒளிப்பதிவாளர் நிவாஸ்.அவருக்கு உதவி ஒளிப்பதிவாளராக பி.வாசு பணியாற்றியிருப்பார். இப்படம் இந்தியில்  Dil-E-Nadaan என்றும்  தெலுங்கில் Vayasu Pilichindi என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

படத்தின் முக்கிய கருவே நட்பும் தியாகமும் தான், ஆண் நண்பர்களில் ரஜினி தன் அப்பாவின் மறைந்த நண்பரின் மகன் கமல்ஹாசனுக்கு நல்ல நண்பனாகவும் , சகோதரனாகவும், தன் நிறுவனத்தில் மட்டும் முதலாளியாகவும் விளங்குகிறார்.

அதே போன்றே பெண் தோழிகளின் நட்புக்கு உதாரணமாக கல்லூரி மாணவியாக ஸ்ரீப்ரியா கதா பாத்திரமும், ஜெயசித்ரா கதாபாத்திரமும் இருக்கும், ஸ்ரீ ப்ரியாவின் தந்தையின் நண்பர் மகளான ஜெயசித்ரா ஒரு இளம் விதவை , அவர் ரஜினியின் நிறுவனத்தில் மேனேஜராக இருக்கும் கமல்ஹாசனுக்கு காரியதரிசியாக இருக்கிறார்,

சென்னையில் ஸ்ரீப்ரியாவின் வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்கியும் இருக்கிறார்.அவரின் அப்பா கிராமத்தில் வசிக்கிறார்.   ஒரு வகையில் கமல் மற்றும் ஸ்ரீப்ரியாவின் காதல் லீலைகளால் உந்தப்பட்டு சபலம் கொண்டு மருகும் கதாபாத்திரம் அவருடையது. அதனால் விளையும் திருப்பங்களும் , நண்பர்கள் செய்து கொள்ளும் தியாகங்களும்,சமரசங்களும் தான் படத்தின் கதை.

படத்தில் இயக்குனர் ஸ்ரீதர் கமல்ஹாசன் மற்றும் ரஜினி இருவருக்கும் சமமான வெயிட்டேஜில் திரைக்கதை அமைத்திருந்தாலும்,படத்தில் ரஜினிக்கு டூயட் கிடையாது, ஏன் பேத்தோஸ் பாடல் கூட கிடையாது, எல்லா அருமையான பாடல்களையும், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா  மூவருமே தட்டிக் கொண்டு போய் பாடி ஆடிவிட்டிருக்கின்றனர். ரஜினியோ அவர்  ரசிகர்கள் கோபித்துக் கொள்ளவில்லையா?!!! எனத் தெரியவில்லை. ஆனால் படம் 25 வாரம் ஓடிவெற்றிவிழாக் கண்ட படம்.

படத்தில் காமெடி ட்ராக்கே கிடையாது,[கே.எஸ் கோபாலகிருஷ்ணன் வந்து அறுக்கும் காட்சிகள் விதிவிலக்கு ] எனவே  ரஜினிகாந்த் கதாபாத்திரம் சற்று காமெடியாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது, அவர் நகைச்சுவை நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரம் போலவே இழுத்து இழுத்து வசனம் பேசி நம்மை திகைக்க வைக்கிறார், பின்னர் ஒரு கடினமான ஆங்கில டங் ட்விஸ்டரை குடி போதையில் சக நண்பருக்கு பேசிக்காட்டி திரும்ப பேசச் சொல்லுகிறார்.

இந்தப் படத்திலிருந்து தான் ரஜினி ஆங்கில வசனம் பேசுவது ஆரம்பித்தது என நினைக்கிறேன். அந்த டங் ட்விஸ்டர் இங்கே , வீடியோ யூட்யூபில் இருக்கிறது தேடிப்பாருங்கள்.
Betty Botter had some butter,
"But," she said, "this butter's bitter.
If I bake this bitter butter,
It would make my batter bitter.
But a bit of better butter,
That would make my batter better."
So she bought a bit of butter –
Better than her bitter butter –
And she baked it in her batter;
And the batter was not bitter.
So 'twas better Betty Botter
Bought a bit of better butter.



படத்தின் இசை இளையராஜா, பாடல்களை  இன்று கேட்கையிலும் அப்படி ஒரு ஃப்ரெஷ்னெஸ் இருக்கிறது, படத்தின் முக்கிய பாடல் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது என்னும் பாடல், இதை மிக அருமையாகப் பாடியவர்கள் எஸ்,பி பி மற்றும் வாணி ஜெயராம் .அது வரும் பிண்ணனி சுவையானது, கமலும், ஸ்ரீப்ரியாவும் காதலர்கள் அவர்கள் டின்னருக்கு ஆர்டர் செய்கையில் அது சென்னை வானொலியில் உங்கள் விருப்பத்தின் போது ஒலிபரப்பாகிறது, அனுபல்லவியில் அது  இருவரும் ஆடிப்பாடும் டூயட்டாக வடிவம் பெறுகிறது, படத்தின் பெயர் இளமை ஊஞ்சலாடுகிறது என்றே வானொலி வர்ணணையாளர் சொல்வார்.அது ஒரு ஆச்சரியமாக தோன்றும்.பாடலை இங்கே பாருங்கள் /கேளுங்கள் http://www.youtube.com/watch?v=th3LJyFDZzY

அடுத்த பாடலாக ஜெயசித்ரா கமலை எண்ணி விரகதாபத்தில் பாடும் கிண்ணத்தில் தேன் வடித்தால் பாடல் மிக முக்கியமான ரேர்ஜெம். தாசன்னாவும் ஜானகியும் பாடியது.பாடலை இங்கே பாருங்கள்/ கேளுங்கள்,இது முகலாய பாணி தீமில் அமைந்திருக்கும்.

அடுத்த பாடலாக நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா,இப்பாடல் மெரினா பீச்சில் கமலும் ஸ்ரீப்ரியாவும் காதல் செய்கையில் வரும் நம்பர். இப்பாடலும் ஒரு ரேர்ஜெம் தான்,இதைப் பாடியவர் வாணிஜெயராம். பாடலை இங்கே பாருங்கள்/ கேளுங்கள்,இப்பாடல் டப்பாங்குத்து பாணியில் அமைந்த நாயகி நாயகன் மீது கேலி செய்து பாடும் பாடல்.

அடுத்ததாக தண்ணி கருத்திருச்சு,தவளச்சத்தம் கேட்டிருச்சு என்னும் பாடல் இளம் விதவை ஜெயசித்ராவும், கமல்ஹாசனும் அறைக்குள்ளே உணர்ச்சி கொந்தளிப்பில் தவிக்க பிண்ணனியில் [ டான்ஸ் மாஸ்டர் சலீமும்,  விஜயலட்சுமியும் குத்தாட்டம் ஆடும் பாடல்] ,இப்பாடல் வரும் இடம் முக்கியமானது,விரகதாபம் கொண்டு மருகும் ஜெயசித்ராவிடம் வாகாக அவர் கிராமத்து வீட்டிலேயே சென்று கமல் தங்கும் படியான சூழல்,அப்போது கனமான திரைக்கதை திருப்பத்தை எளிதாக இப்பாடலை இடைச்செருகி சமாளித்துவிடுகிறார் இயக்குனர்,இப்பாடலைப் பாடியவர் மலேசியா வாசுதேவன்.

பாடலில் கமல் படிக்கும் முக்கியமான சரித்திர நிகழ்வு பற்றிய புத்தகத்தின் பெயர் 90 minutes at Entebbe ,    இது பின்னாளில் படமாகியுமுள்ளது. இதே புத்தகத்தை எழுத்தாளர் சுஜாதாவும் தன் நில்லுங்கள் ராஜாவே நாவலில் quote செய்திருப்பார், கமல்ஹாசன் உலக சரித்திரங்களை, நாவல்களை விரும்பிப் படித்து அவற்றை ரசிகர்களுக்கு தன் திரைப்படங்களில் சைக்கிள் கேப்பில் அறிமுகம் செய்து வைப்பார்,என்பது இப்பாடல் மூலம் ஒருவருக்கு விளங்கும்.

இதே போன்றே இந்தியன் படத்திலும் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்னும் படம் வந்திருக்கிறது ,என்பார்,இரண்டுமே யூத மக்களின் சரித்திரக் கதை தான்,காம்ரேட் கமல் யூத அனுதாபமும் கொண்டவர்.என்பது இதன் மூலம் விளங்குகிறது.பாடலை இங்கே பாருங்கள்/ கேளுங்கள்

படத்தில் கடைசியாக வரும் என்னடி மீனாட்சி பாடல் மிகவும் முக்கியமானது, படத்தில் தான் பணிபுரியும் நிறுவன ஆண்டுவிழாவில் கமல் பாடி ஆட மேடை ஏறியிருக்க,கீழே நண்பர்/முதலாளியுடன் தன் காதலி ஸ்ரீப்ரியாவைப் பார்த்து திகைக்கும் கமல் பாடும் பாடல்.பாடலை பாடியது எஸ் பி பி. இப்பாடல் அப்போதிருந்த டிஸ்கோ ட்ரெண்டை பிரதிபலித்து தத்துவமான வார்த்தைகளைப் போட்டு நன்கு நியாயம் பேசியிருக்கும். பாடலை இங்கே பாருங்கள்/ கேளுங்கள்,

இயக்குனர் ஸ்ரீதர் இப்படத்திலும் தீர்க்கமாக பெண்ணியம் பேசியிருக்கிறார், சந்தர்ப்பம் கிடைக்கும் வரைதான் யாரும் யோக்கியர்கள் , கற்பு நெறி, களங்கம்,பதிவிரதம் போன்றவை எப்போது வேண்டுமானாலும் எந்த சூழலிலும் மீறப்படுவது தவிர்க்க முடியாதது , புனிதம் இனிமேல் புதிதாய் கெட்டுத்தான் போகுமோ? என்றிருக்கிறார்.

 யாரோ இவரை தென்னகத்து வூடி ஆலன் என்று எழுதியதைப் படித்திருக்கிறேன்,ஸ்ரீதரின் இன்னொரு படமான ஒரு ஓடை நதியாகிறது கூட முக்கியமான படைப்பே. அதிலும் தனித்திருக்கும் பெண் ஒருத்தி அடையும் விரகதாபமும் சமுதாயத்துக்கு வேண்டி தன்னை வருத்திக் கடைபிடிக்கும் கொள்கைகளும் திறம்பட பேசப்பட்டிருக்கும்.அந்தப் படத்தில் வரும் அத்தனை பாடல்களுமே முத்தானவை,அதில் வரும் கனவு ஒன்று தோன்றுதே மார்வெல்லஸ் ஜெம்.ஜானகி பாடியது,பின்னர் தலையைக் குனியும் தாமரையேவும் , தென்றல் என்னை முத்தமிட்டதுவும் மிக அருமையான ஒரு பாடல்.

அப்போது 80,90களில் சென்னைக்கு முதன் முதலாக வந்த சூப்பர் மார்கெட் என்றால் ஃபைவ் ஸ்டார் தான்,இப்பொது அவை வழக்கொழிந்து விட்டன.ஸ்ரீதர் தன் ஏனைய படங்களில் அங்கே நாயகன் நாயகி சென்று ஏதாவது வாங்குவது போல காட்சி வைப்பார்.இதே 1978ஆம் ஆண்டு வெளியான அவள் அப்படித்தான் படத்திலும் ஃபைவ் ஸ்டார் சூப்பர் மார்க்கெட் ஒரு காட்சியில் வரும்.

கமல்ஹாசன் இந்தப்படத்தின் துவக்கத்தில் டைட்டில் ஸ்க்ரோலின் போது அவரின் சிகப்பு வண்ண மேட்ச்லெஸ் மோட்டார் சைக்கிளை பில்லியனில் ஸ்ரீப்ரியாவை வைத்து லாவகமாக ஓட்டிவருவார்,அது இன்றும் அவரது அலுவலகத்தில் நன்கு பராமரிக்கப்பட்டு கருப்பு வண்ணம் மாற்றப்பட்டு ஷோபீஸாக நிறுத்தப்பட்டிருக்கும், அந்த போட்டோ இதோ இங்கே.

அவள் அப்படித்தான் [Aval Appadithan][1978][தமிழ்] மீள் பதிவு


படத்தில் எல்பி ரெகார்ட் முன் அட்டைப்படம்[நன்றிilayaraja.forumms.net]

இயக்குனர் ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான் படம் வெளியாகி 35 வருடம் ஆகிறது , இன்று பார்க்கையிலும் அப்படி ஒரு புதுமையான படைப்பாக மிளிர்கிறது இதன் கதை,திரைக்கதை வசனத்தை புதுமையாக  வண்ண நிலவன், சோமசுந்தரேஸ்வரர், ருத்ரய்யா. ஆகிய மூவர் எழுத இயக்கம், தயாரிப்பு ருத்ரய்யா செய்திருந்தார். ஒளிப்பதிவு திரைப்படக்  கல்லூரியில் ஒளிப்பதிவு  முடித்து வெளிவந்த நல்லுசாமி மற்றும் ஞானராஜசேகரன். இவர்கள் யாரிடமும் பணி புரியாமல்,நேரடியாக களமிறங்கிய படைப்பு என்பது கூடுதல் சிறப்பு. கருப்பு வெள்ளையில் ஒரு ப்ரில்லியண்டான ஆக்கம் இது,கூடுமான வரை நிழல்களின் அழகை,இயற்கை ஒளி அமைப்பை, நிறைய ஜம்ப் கட்களை ,க்ளோஸ் அப் ஷாட்களை உபயோகித்து எடுக்கப்பட்ட தமிழின்  முதல் படம்,இந்த யுத்திகள் சத்யஜித் ரேவினால் 1970களிலேயே சீமாபத்தா என்னும் படத்தில் கையாளப்பட்டிருந்தாலும்,தமிழில் இதை பரிட்சிக்க யாரும் துணியாத சூழல் நிலவியது,அதை தகர்த்தவர் ஆறுமுகம் என்கிற ருத்ரையா,இவர் 1980ஆம் ஆண்டு கிராமத்து அத்தியாயம் என்னும் படமும் இயக்கியுள்ளார்.

கண்ட கருமத்தையும் ரீமேக் செய்கிறார்கள் , இந்தப் படத்தை மூல ஆக்கம் சிதையாமல் ரீமேக் செய்யலாம், அது கதையே இல்லாமல் படம் எடுக்கும் இன்றைய சூழலுக்கு நல்ல மாற்றாக அமையும் , அல்லது இதை  ரீ மாஸ்டர் செய்து செப்பனிட்டு வெள்ளித்திரையில் வெளியிடலாம் , மிக அற்புதமான படம் ,இதன் அருமையை உலக சினிமா ரசிகர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்,சில படங்களை அனுபவிக்க வேண்டும்,ஆராய்ந்து கொண்டிருக்கக் கூடாது,இது அது போன்ற ஒரு படம்.படம் கொண்டிருக்கும் நறுக்கு தெரித்தாற்போன்ற வசனங்கள்,அதில் சரி பாதி நுனிநாக்கு ஆங்கில அதுவும் பச்சையான வசனங்கள்,கொஞ்சமும் பாக்ஸ் ஆஃபீஸ் சமரசங்கள் இல்லாத தமிழின் முதல் சர்ரியாலிஸ்டிக் படம்.

ஆனால் ரீமேக் என்று வருகையில் ஒரு ஆபத்து உண்டு,தில்லு முல்லுவை கொத்து போட்டது போல அசிங்கம் செய்து விடுவார்கள்,இயக்குனர் ருத்ரையாவைப் போல இங்கே கொம்பன் யாருமில்லை, ரீமேக் செய்தால் ஒரிஜினாலிட்டி போய் பல் இளித்துவிடும்,க்ரைடீரியான் நிறுவனத்தார் போல யாராவது இதை ரீமாஸ்டர் செய்து மறுவெளியீடும் செய்ய வேண்டும்.அதுவே நல்ல கைங்கர்யம் ஆகும்.  இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு படம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லவும்,

பெண்களின் சுதந்திரம் என்று இயக்குனர் அருண் [கமல்] ஆவணப்படம் எடுக்க, பாடகி எஸ்.ஜானகியை சந்திக்க போவதாக சொல்லிவிட்டு, நடிகை குட்டி பத்மினியை போய் மஞ்சுவுடன் சந்திக்கின்றனர், அது என்ன முரணான காட்சி? காட்சியை கட் செய்து விட்டார்களா?!!! படத்தில் கடைசி வரை ஜானகியின் பேட்டி வரவேயில்லை, ஆனால் அந்த காரில் பேட்டி எடுக்க பயணிக்கையில் ,ஜானகியம்மா பாடும் “வாழ்க்கை ஓடம் செல்ல” என்னும் அருமையான பாடல் பேக்ட்ராப்பில் ஒலிக்கிறது,பாடல் முடிகையில் கமலும் மஞ்சுவும் உடையும் மாற்றியிருப்பார்கள், இதைப் பற்றி எதாவது மேல் விபரம் தெரியுமா?!!! மஞ்சுவாக ஸ்ரீப்ரியா தோன்றி அந்த கதாபாத்திரத்துக்கே நீதி செய்திருந்தார் என்றால் மிகையில்லை, அத்தனை தினவு,அத்தனை திமிர்,யாரிடமும் இயக்குனர் வாங்கியிருக்க முடியாது, இளம் வயது மஞ்சுவாக தோன்றியது நல்லெண்ணெய் சித்ரா. என்னால் முதலில் கிரகிக்க முடியவில்லை. யூட்யூபில் முழுப்படமும் கிடைக்கிறது,இது பத்தோடு பதினொன்று வகைப் படம் அல்ல,ஆகவே படத்தை அவசியம் நேரம் ஒதுக்கி அனுபவித்துப்  பாருங்கள்,  

இதில் ரஜினி ஆர்ட் டைரக்டர், நெற்றி நிறைய வீபுதியும்,கழுத்தில் ருத்திராட்சமும், கண்களில் காமாந்தக வக்கிரப் பார்வையுமான கதாபாத்திரம். ஸ்ரீப்ரியா அவர் விளம்பர நிறுவனத்தின் டிசைனர், படத்தில் ஒரிஜினாலிட்டி அப்படி காப்பாற்றப்பட்டுள்ளது, அதில் சம்பிரதாயமாக தொழில் முறை சார்ந்த காட்சிகளை படம் பிடிக்காமல் சத்யஜித் ரேவைப் போன்றே துறை சார்ந்த தீஸிஸ் செய்து ஸ்ரீப்ரியா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்பேன்,அத்தனை நேர்த்தி, அதில் ஆபீஸ் அசிஸ்டண்ட் ஒருவன் ஸ்ரீப்ரியாவிடம் உங்கள் டிசைனுக்கான ஐடியாக்கள் எங்கே கிடைக்கின்றன?!!! என வியந்து கேட்க,இரண்டு ஃபாரின் டிசைன் மேகசினை புரட்டினால் ஐடியாக்கள் கிடைக்கிறது இது என்ன பிரமாதம்? என டிசைனிங் செய்து கொண்டே சொல்வார் ,அது எத்தகைய யதார்த்தமான ஒன்று என பார்வையாளருக்கு புரியும், சர்காசிசம் ததும்பும் இயல்பான காட்சியது.

படத்தில் எல்பி ரெகார்ட் பின் அட்டைப்படம்[நன்றிilayaraja.forumms.net]
அபலை இல்லம் நடத்திவரும்  பரோபகாரிப் பெண்மணியை கமலும் ஸ்ரீப்ரியாவும் பேட்டி காணச் செல்லும் இடம் எல்லாம் அத்தனை அற்புதமானவை, ஆண்களால் வஞ்சிக்கபட்டு உங்கள் உங்கள் இல்லத்தில் தங்கி இருக்கும் இளம் பெண் ஒருத்திக்கு உங்கள் மகனைத்திருமணம் செய்து வைப்பீர்களா?!!! என்று ஆவணப் பட இயக்குனர் கமல் இயல்பாகக் கேட்டதால் அதிர்ச்சியடைந்த பரோபகாரி சமூக சேவகி  மிகவும் எரிச்சலடைந்து விருவிருவென பேட்டி முடியும் முன்பே வெளியேறுவார். அந்த இடத்தில் இருந்து மஞ்சு ஆண்களையே மதிக்காதவர், கமலை மதிக்கத் துவங்குவார்.

படத்தில் என்னைக் கவந்த பாடல் இது,அதன் சூழலை இங்கே தந்துள்ளேன்.
என்ன அருமையான பாடல் ?!!!என்ன அருமையான இசை? அவன் ஒரு கபட வேடதாரி, ஏற்கனவே வாழ்விலும் தோற்று, காதலிலும் தோற்றவளை வசீகரித்து அடைய தன் இசையால் மயக்கி அவளின் மனக்காயத்துக்கு மருந்து போடும் வரிகளை அவன் தேனாக குழைத்து பாடுகிறான்,அவள் மயங்கி தன்னிலை மறந்து,மீண்டும் ஏமாற எத்தனிக்கிறாள். 

உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே…

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்… வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…

ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே…

வாழ்வென்பதோ கீதம்..
வளர்;கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..

படத்தின் இன்னொரு முக்கியமான காட்சி எனக்கு மிகவும் பிடித்தமானது, ஆவணப்பட இயக்குனர் கமலின் உண்மையான அன்பை காலதாமதமாகவே உணர்கிறார் ஸ்ரீப்ரியா.வேளை கிடைக்கும் போதெல்லாம் தன் காதல் தோல்விகளை,தன்னை தண்டித்தவர்களுக்கு தரும் தண்டனையை கடும் வார்த்தைகளால் தேளின் கொடுக்கு போல கொட்டி கமலை காயப்படுத்தியே வந்திருக்கிறார் மஞ்சு,அதையும் மீறி கமல் ஒரு பொது உடைமைவாதி , பெண்ணடிமைத் தளையை வெறுப்பவர் போன்ற சிறப்புகள் அவரின் பால் மையல் கொள்ள வைக்கிறது, ஆனால் எல்லாமே ஒருநாள் கைமீறிப் போய்விடுகிறது,

மஞ்சுவை புரிந்து கொள்ள முயன்று தோற்றதால்,தன் தந்தை இவரிடம் கேட்ட முதலும் கடைசியுமான விருப்பத்தை நிறைவேற்ற தந்தை பார்த்த அடக்கம் ஒடுக்கமான பெண்ணையே திருமணம் முடித்து கூட்டி வருகிறார். [நடிகை சரிதா கௌரவ தோற்றத்தில் கமலுக்கு மனைவியாக வருகிறார்].அன்று கமலை நான் பார்த்தே ஆக வேண்டும் என ரஜினியிடம் அலௌவலகத்தில் சென்று கேட்கும் ஸ்ரீ ப்ரியாவை, குசும்பாக, இதோ கூட்டிப் போகிறேன் என எழும்பூர் ரயிலடிக்கு அழைத்துப் போகிறார் ரஜினி,

அங்கே போர்டிக்கோவில் கமல்   மனைவியின் கையைப் பற்றிய படி வெளியே வருகிறார்.படத்தில் அவர் காம்ரேட் ஆனதால் எளிமையாக லுங்கியையே அணிந்து வருகிறார், ஆனால் மனைவி பூவும் ஜார்ஜெட் புடவையும், கழுத்து நிறைய நகைகளுமாக காட்சியளிப்பார்.

 மஞ்சு கமலிடம் அடைந்த ஏமாற்றத்தை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை, அருணும் மஞ்சு பக்கம் தலையை திருப்பவேயில்லை, மனதுள் போராட்டம்.காருக்குள் அமைதி குடிகொண்டிருக்க,எந்த வித உணர்ச்சியுமின்றி ஒரு ட்ரைவர் காரை ஓட்டி வருவார்,ட்ரைவரின் அருகே அமர்ந்திருக்கும் ரஜினி கார் ஓடுகையிலேயே கதவை திறந்து வெற்றிலைச் சாரை துப்பி மூடுவார்.[பழமையும் புதுமையுமாய் என்ன ஒரு மேனரிசம்?]

அமைதியை கலைக்கும் விதமாய் மஞ்சு அருணை நோக்கி பெண்களிடம் நீங்கள் கேட்கும் வழக்கமான கேள்வியை உங்கள் மனைவியிடம் கேட்ட்டாயிற்றா? என்றவர், பதிலுக்கு காத்திராமல், நானே கேட்கிறேன்,What do you think about Women's Liberation?!!!சரிதா விழிக்க   பெண்கள் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? என தமிழில் கேட்க, அவர் விழிக்க, கமல் விளக்க,அவர் எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே,என்கிறார்,மஞ்சு ரொம்ப சேஃப் ஆன்ஸர் என்று நிறுத்துவார்.   எத்தனை அற்புதமான இடம் அது ,அந்த காட்சியை இங்கே பாருங்கள்.
What do you think about Women's Liberation?!!! முக்கியமான காட்சி


படத்தின்  டைட்டில் துவங்கி முடிவு வரை புதுமை தான் , டைட்டில் கமலின் குரலில் கதை விவாதத்தின் வாயஸ் ஓவர் பின்னணியில் துவங்குகிறது , படத்தின் முடிவும்  மெரினாவில் ஐஸ் ஹவுஸின் எதிரே காரை நிறுத்தி மஞ்சு இறங்கிக் கொண்டதும், கார் வேகமெடுக்க, மஞ்சு புள்ளியாய் தேய, கமலின் வாய்ஸ் ஓவரில் மஞ்சுவைப் பற்றிய அழகிய ஹைக்கூ கவிதையுடன் முடிகிறது,அந்த கவிதையை நான் இங்கே தருகிறேன்.

எரிந்து போன வீடு,
முறிந்து போன உறவுகள்,
கலைந்து போன கனவுகள்,
சுமக்க முடியாத சோகங்கள்,
மீண்டும் ஒரு முறை மஞ்சு இறந்து போனாள்,
இந்தச்சாவை சகித்துக்கொள்ள மஞ்சுவால் தான் முடியவில்லை,
ஹ்ம்,,,
அவள் பிறப்பாள்,
இறப்பாள்,
இறப்பாள்,
பிறப்பாள்,!!!

” அவள் அப்படித்தான்”

படம் பற்றி எழுத்தாளர் வண்ணநிலவன் சொல்வதை படியுங்கள்.
கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள். ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள். இருந்தும் ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.

தலைசிறந்த உலகத் திரைப்படங்களை
ப் பற்றிய ருத்ரய்யாவின் அறிவு அபாரமானது. உலகப்பட இயக்குநர்களைப் பற்றியும், அவர்களது படங்களைப் பற்றியும் அவருக்குச் சொந்தமான அபிப்பிராயங்கள் உண்டு. கமலுடனும் அனந்து சாருடனும் அவர் பல திரைப் படங்களைப் பற்றி விவாதிப்பார். சிற்பம் செதுக்குவது போல் ருத்ரய்யா படத்தைச் செதுக்கினார்.

இளையராஜாவும் கங்கை அமரனும் குமார் ஆர்ட்ஸ் அலுவலகத்துக்கு வந்துவிடுவார்கள். அடுக்கடுக்காக மெட்டுகளை அந்தக் காலத்திலேயே இளையராஜா ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டுவார். தீபாவளியன்று படம் திரையிடப்பட்டது. சென்னையில் காமதேனுவிலும் சபையர் வளாகத்தில் அமைந்துள்ள எமரால்டிலோ ப்ளூடைமண்டிலோ ஓடியது. காமதேனுவைவிட சபையர் வளாகத் தியேட்டரில் சற்றுக் கூடுதல் நாட்கள் ஓடியதாக ஞாபகம். பெரும்பாலும் பத்திரிகைகளில் பாராட்டியே விமர்சனங்கள் வெளிவந்தன. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுவிட்டது.
====0000====

 தமிழ் சினிமா அடித்தளத்தை உலுக்கியவர் ருத்ரய்யா: கமல்ஹாசனின் நினைவுப் பகிர்வுகள் ருத்ரையா பற்றி கமல்ஹாசனின் தி இந்து கட்டுரை
இயக்குநர் ருத்ரய்யாவுடன் நடிகர் கமல்ஹாசன் | கோப்புப் படம்
இயக்குநர் ருத்ரய்யாவுடன் நடிகர் கமல்ஹாசன் | கோப்புப் படம்
இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தில் நடித்ததோடு, அப்படம் உருவாக உறுதுணையாக இருந்த நடிகர் கமல்ஹாசன், 'அவள் அப்படித்தான்' குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். 

"சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம். 

சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.
நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே. 

எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும். 

நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'. 

கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன். அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது. 

அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது ஆனால் அப்படி ஆகவில்லை. 

பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது. 

கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார். 

படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. 

'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை. 

வணிகரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது. அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திந்ருதாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை. 

ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம். 

தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்துவைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. 

ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த ஆகச் சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார். 

தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா





சென்னை தரமணி திரைப்படக் கல்லூரி யில் எனக்கு சீனியராக இருந்தவர் ருத்ரய்யா. 1974-75-ல் அவரை நான் சந்தித்தேன். இடதுசாரி சிந்தனைகளும், சர்வதேச சினிமாக்கள் மீதான பிரியமும் எங்களை இணைத்தன. அந்தக் காலகட்டத்து சினிமா மாணவர்கள் எல்லோரையும் பிரெஞ்சு புதிய அலை சினிமா ஈர்த்திருந்தது. திரைப்படக் கல்லூரி என்பது வெறுமனே வணிகப் படங்களை உருவாக்குபவர்களுக்கான இடம் அல்ல. அது மாற்று சினிமாவுக்கான உத்வேகத்தைக் கொடுக்கும் தளம் என்ற அபிப்ராயம் எங்கள் இரண்டு பேருக்கும் இருந்தது.
ருத்ரய்யாவுக்கு அதற்கான வாய்ப்புகளும் அமைந்தன. இயக்குநர் அனந்து அவருக்குப் பக்கபலமாக இருந்தார். வணிக சினிமாவில் பணியாற்றினாலும், அனந்து சினிமா களஞ்சியமாக இருந்தார். திரைப்பட விழாக்களுக்குச் சென்று ஆர்வத்தோடு படங்களைப் பார்த்துவந்தவர் அவர். வெறுமனே ஒரு திரைக்கதையை விவாதிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கும் மேலான நிறைய உதவிகளைச் செய்பவராக இருந்தார். அதனால்தான், ‘அவள் அப்படித்தான்’ படத்தையே ருத்ரய்யா அனந்துவுக்குச் சமர்ப்பணம் செய்தார்.
ருத்ரய்யாவுக்கு முதலில் கதைகள் அமையவில்லை. நான் ஆவணப்பட, விளம்பரப்பட உலகில் இருந்தேன். அதன் பின்னணியிலிருந்து ‘அவள் அப்படித்தான்’கதைச் சுருக்கத்தை இரண்டு பக்கத்தில் எழுதிக்கொடுத்தேன். அனந்துவுக்கு எனது கதைச்சுருக்கம் பிடித்திருந்தது. ரஜினி என்ற நட்சத்திர பலத்துக்காகச் சில மாற்றங்களைச் செய்தார் அனந்து. கதாநாயகியின் ஃப்ளாஷ்பேக்கை வண்ணநிலவன் எழுதினார். ‘அவள் அப்படித்தான்’ டைட்டிலையும் அனந்துதான் வைத்தார்.
தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலைத் தான் ருத்ரய்யா முதலில் படமாக எடுக்கத் தீர்மானித்திருந்தார். கமல்ஹாசனும் அந்தக் கதையில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். முதலில் ஒரு கமர்ஷியல் படத்தை எடுத்துவிட்டு, இரண்டாவதாக ‘அம்மா வந்தாள்’ படம் என்று முடிவுசெய்தோம். ‘அவள் அப்படித்தான்’அறிவிப்புடன் சேர்ந்தே ‘அம்மா வந்தாள்’ படத்துக்கும் அறிவிப்பு கொடுத்தோம்.
ருத்ரய்யா - கோப்புப் படம்: அருண் மோ
கலைஞர்களின் ஒத்துழைப்பு
‘அவள் அப்படித்தான்’ படத்தில் நடிகராக மட்டும் அல்ல, தொழில்நுட்பக் கலைஞராகவும் கமல் எல்லாவிதமாகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். காஸ்டியூம் வரை கவனித்துக்கொண்டார். ரஜினியும் மிகவும் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு நடித் தார். வித்தியாசமான ஒரு அணி படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள்; அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எல்லோரும் ஒத்துழைத்தார்கள். நல்லுசாமி-ஞானசேகரன் ஒளிப்பதிவும் மிகவும் துணிச்சலானது. நிழலுருவக் காட்சிகளை (சில்ஹவுட்) குறைவான வெளிச்சத்தில் நிறையப் பரிட்சார்த்தம் செய்து எடுத்திருப்பார்கள். அந்த வருடத்தில் வெளியான படங்களில் பெரும்பாலானவை வண்ணப் படங்களே. பொருளாதாரச் சிக்கனத்துக்காகவே கருப்பு-வெள்ளையில் படம்பிடித்தோம். ஆனால், அதுவே அப்படத்தின் சிறப்பம்சமாக இப்போது உணரப்படுகிறது.
படத்தின் வசனங்களையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். யதார்த்தத்துக்கும் நாடகத் தன்மைக்கும் இடையில் தர்க்கவாதம்போல வசனங்கள் கூர்மையாக இருக்கும். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பட வெளியீட்டின்போது மிகப் பெரிய சோதனையை ‘அவள் அப்படித்தான்’ சந்தித்தது. வெளியான ஒரு வாரத்தில் அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் படப் பிரதி திரும்பி வந்துவிட்டது. ஆறு மாதம் கழித்து அந்தப் படத்தை சென்னை சஃபையரில் காலைக் காட்சியாக மட்டும் நான் வெளியிட்டேன். மிருணாள் சென் அந்தப் படத்தைப் பாராட்டியிருந்தார். தமிழில் இப்படியான படம் வந்தது ஆச்சரியம் என்று சொல்லியிருந்தார். பாரதிராஜாவும் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். “எந்த மாதிரியான வேட்கைகளுடன் தேடலுடன் நான் சினிமாவுக்கு வந்தேனோ அதைத் திரும்பிப் பார்க்க வைத்தது ‘அவள் அப்படித்தான்’ ” என்றார் அவர். பாரதிராஜா, மிருணாள் சென் இருவரது பேச்சையும் விளம்பரப்படுத்திப் படத்தை வெளியிட்டோம். நிறையப் பேர் வரத் தொடங்கினார்கள்.
உடலைச் சுட்ட படைப்பு
இந்தப் படத்தை எடுத்ததில் ருத்ரய்யா பொருளாதார விஷயத்தில் நிறையப் பாதிக்கப்பட்டார். ஒரு பத்திரிகை நேர்காணலில் அவரிடம் ‘‘ ‘அவள் அப்படித்தான்’ படத்தின் மூலம் கையைச் சுட்டுக் கொண்டீர்களா?” என்ற கேள்விக்கு, “உடலையே சுட்டுக்கொண்டேன்” என்று பதில் சொல்லியிருப்பார். ஆனாலும், ‘அவள் அப்படித்தான்’ படம் மூலம் அவருக்குத் திரையுலகில் ஆதரவுகளும் குவிந்தன. ஒரு படைப்பு உடனடியாக மக்களைக் கவரா விட்டாலும், பொருளாதாரரீதியாகப் படைப்பாளிக்கு லாபத்தைத் தராவிட்டாலும், அது நல்ல படைப்பாக இருந்தால், காலம் கடந்து ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு உதாரணம் ‘அவள் அப்படித்தான்’.
சுஜாதாவின் ‘24 ரூபாய் தீவு’ கதையில் நடிக்க கமல்ஹாசன் உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஒரு பாட்டுடன் நின்றுபோனது. அடுத்து ‘ராஜா என்னை மன்னித்துவிடு’. அதற்கும் நாயகன் கமல்ஹாசன்தான். அறிவிப்போடு நின்றுவிட்டது. அதற்குப் பிறகுதான் ‘கிராமத்து அத்தியாயம்’. இளையராஜா, பஞ்சு அருணாச்சலம் போன்றோரின் முழு ஒத்துழைப்பு இருந்தாலும், ருத்ரய்யாவிடம் எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் அந்தப் படம் வரவில்லை.
அதற்குப் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து 1983-84-ல் திரும்பவும் படம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, ரஜினியைக் கதாநாயகனாக மனதில் கொண்டு, கடலோரக் கிராமத்தை மையமாக வைத்து ஒரு கதையை எழுதினேன். ருத்ரய்யா நினைத்ததுபோல நட்சத்திரங்கள் கிடைக்கவில்லை. அந்தக் கதைதான் பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் ‘கடலோரக் கவிதைகள்’ படமாக வந்தது.
சிவாஜி கணேசனை பீஷ்மர் கதாபாத்திரமாக்கி 3-டி தொழில்நுட்பத்தில் மகாபாரதக் கதையை எடுக்க விரும்பினார். அதுவும் சாத்தியமாகவில்லை. ரகுவரனை வைத்து ‘டிஎஸ்பி 7’, சுஜாதா கதை - திரைக்கதை. அதுவும் பூஜையோடு நின்றுவிட்டது.
தோல்வி அடைந்த முயற்சிகள்
நீண்ட இடைவெளிக்குப்பின், ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் கதையைத் தற்காலச் சூழலில் மியூஸிக்கலான ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்று முடிவுசெய்தோம். ஏ.ஆர். ரஹ்மான்தான் இசை என்று முடிவுசெய்தோம். வைரமுத்துவிடமும் பேசினோம். ஒளிப்பதிவாளராக பி.சி. ஸ்ரீராமை முடிவுசெய்து, அவரைத் தொடர்புகொண்டோம். அவர் 6 மாதம் கழித்துச் செய்யலாம் என்றார். நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால், வணிகரீதியில் சிலரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதை ருத்ரய்யா விரும்பவில்லை. அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சினிமாவின் வணிகரீதியான நடைமுறைகளில் அவர் தொடர்ந்து முரண்பாடுடையவராக இருந்தார். அதனாலேயே நிறைய வாய்ப்புகளைத் தவறவிட்டார். ஒரு இடதுசாரி சினிமாக்காரராக சினிமாவை ஆயுதம் என்று நம்பியவர் அவர். அபூர்வமான மனிதர். தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய, நிறைய நல்ல படைப்புகளைத் தந்திருக்க வேண்டிய இயக்குநர் ருத்ரய்யா. அந்த வாய்ப்பைத் தமிழ் சினிமாவும் இழந்துவிட்டது; அவரும் இழந்துவிட்டார்.
- கே. ராஜேஸ்வர், ‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர்புஷ்பங்கள்’, ‘கடலோரக் கவிதைகள்’ போன்ற படங்களின் கதாசிரியர்; ‘அமரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’உள்ளிட்ட படங்களின் இயக்குநர்.
தொகுப்பு: ஷங்கர் | படம் உதவி: ஞானம் | ஓவியம்: சீனிவாசன் நடராஜன் 

தி இந்து தினசரி மறைந்த இயக்குனர் ருத்ரையாவுக்கு தக்க மரியாதையும் அஞ்சலியும் செய்து தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறது, அவற்றின் தமிழ் கட்டுரைகளை இந்த சுட்டிகளில் சென்று படிக்கலாம்.

தமிழ் சினிமா அடித்தளத்தை உலுக்கியவர் ருத்ரய்யா: கமல்ஹாசனின் நினைவுப் பகிர்வுகள்
http://tamil.thehindu.com/…/%E0%AE%A4%E0…/article6617950.ece
ருத்ரய்யா: என்றுமே அவர் அப்படித்தான்! இயக்குனர் ராஜேஸ்வர் கட்டுரை
http://tamil.thehindu.com/…/%E0%AE%B0%E0…/article6615697.ece
கடலில் கலந்த புதுப்புனல் எழுத்தாளர் வண்ண நிலவன் கட்டுரை
http://tamil.thehindu.com/…/%E0%AE%95%E0…/article6617314.ece
காதுள்ளவர்கள் கேட்பார்களாக... இயக்குனர் ருட்ரையா எழுதிய பழைய கட்டுரை http://tamil.thehindu.com/…/%E0%AE%95%E0…/article6617388.ece
வலைவாசம்: செய்திகளாகிவிட்ட அதிர்ச்சிகள் வா. மணிகண்டன் கட்டுரை
http://tamil.thehindu.com/…/%E0%AE%B5%E0…/article6418556.ece
கொங்கு மண்டலம்: தமிழ்த்திரையின் தாய்வீடு அ. தமிழன்பன் கட்டுரை
http://tamil.thehindu.com/…/%E0%AE%95%E0…/article5247130.ece
அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா காலமானார்
http://tamil.thehindu.com/…/%E0%AE%85%E0…/article6614016.ece
ருத்ரய்யா தனித்துவமான சினிமா படைப்பாளி: நடிகை ஸ்ரீப்ரியா புகழஞ்சலி
http://tamil.thehindu.com/…/%E0%AE%B0%E0…/article6617690.ece
 
  

இன்ஸ்பிரேஷனுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டான இஞ்சி இடுப்பழகி பாடல்

சினிமா ரசிகர்கள் இன்றைய சூழலில் இன்ஸ்பிரேஷன் என்னும் சொல்லுக்கு உண்மையான அர்த்தத்தை இனம் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.அதை தமிழ்படுத்துகையில் அகத்தூண்டுதல் என்பது சிறப்பான சொல்லாடலாக இருக்கும் என நினைக்கிறேன்.

தேவர் மகன் திரைப்படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடல், பிறந்த விதம் குறித்து கமல்ஹாசன் விளக்குவதை இங்கே பாருங்கள்,இயக்குனர் பரதன் பாடல் உருவாக்கத்துக்கு வராத சூழலில்,கதாசிரியர் கமல்ஹாசனே இசைஞானியை சென்று பாடல் உருவாக்கத்திற்கு உடன் அமருகிறார்,வழமையான ஒன்றை கட்டுடைத்து புதியதாக ஒன்றை படைக்க வேண்டும் எனத் தூண்டியவர்,பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன் இசையில் பாடகர் மொஹம்மத் ரஃபி அவர்களின் பாடிய முக்கியமான பாடலான Ishq Par Zor Nahin திரைப்படத்தில் வரும்  Yeh Dil Deewana Hai என்னும் அற்புதமான பாடலை இசைஞானிக்கு மேலோட்டமாக பாடி ஆலாபனை செய்து காட்டுகிறார்.[எஸ்.டி.பர்மன் இசைஞானியி ஆதர்சம் என்றும் கமல்ஹாசன் இங்கே குறிப்பிடுவதைப் பாருங்கள்]

இது போன்ற மேதமைத்தனமும் வெளிப்படவேண்டும்,அதே சமயம் யார் வேண்டுமானாலும் முனுமுனுக்கக் கூடிய ஒரு பாமரத்தனமும் பொருந்திய ஒரு பாடலாக இந்த முதலிரவுப் பாடல் அமைய வேண்டும் என அடிகோலிவிட்டு இசைஞானியிமிருந்து மெட்டுக்காக காத்திருக்க,அடுத்த சில வினாடிகளிலேயே இஞ்சி இடுப்பழகி மெட்டு கமல்ஹாசன் எதிர்பார்த்ததற்கும் மேலாக வந்து விழுகிறது,அதை விவரிக்கும் கமல்ஹாசனின் குரலில் உள்ள முடிவுறா ஆச்சர்யத்தையும்,உற்சாகத்தையும் இந்த பேட்டியில் அவசியம் பாருங்கள்.





இப்போது இந்த சுட்டியில் சென்று Ishq Par Zor Nahin திரைப்படத்தில் வரும்  Yeh Dil Deewana Hai என்னும் மகத்தான பாடலை பாருங்கள்,தேவர் மகன் வடிவம் இந்தப் படத்திலிருந்து துவக்கத்துக்கான பொறியை மட்டும் எடுத்துக்கொண்டு புதுமையாக புறப்பட்டிருப்பதை ஒப்பிட்டு உணருங்கள்.
http://www.youtube.com/watch?v=Udu4sbPqlIA


இப்போது தேவர் மகன் இஞ்சி இடுப்பழகி பாடலை இங்கே பாருங்கள், கேளுங்கள்.
இப்போது காப்பி என்னும் சொல்லுக்கு நகல் என்னும் சொல்லே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,அதற்கான பிரதானமான உதாரணம் தேவர்மகனின் ஹிந்தி வடிவமான விரசத்[Virasat (1997 film)] படத்தின் Payalein Chun Mun என்னும் பாடலில் காணலாம்,இந்தி வடிவத்தின் இசை அனுமாலிக்,இந்தப் பெயரிலேயே ஒருவருக்கு இப்பாடல் காப்பியா இன்ஸ்பிரேஷனா என விளங்கிவிடும், அப்படிப்பட்ட திருட்டு இசையமைப்பாளர்கள்,

மேலும் ஒரு விந்தை என்னவெனில் இப்பாடல் பாடியதற்கு பாடகி சித்ராவிற்கு தேசிய விருதும் கிடைத்தது,திருட்டு மாங்காய்க்கு உள்ள ருசியைப் பாருங்கள்.ஒருக்கால் ப்ரியதர்ஷன் மற்றும் அனுமாலிக் முறையாக மூல இசை வடிவம் என்று இசைஞானிக்கு க்ரெடிட் கொடுத்திருந்தால் அது முறையாக உரிமைவாங்கி மறுஆக்கம் செய்ததாக கணக்கில் வந்திருக்கும். அப்படிச் செய்யாமல் அப்படியே அதை நகலெடுத்ததால் அது காப்பி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தப் படத்தின் ஹிந்தி வடிவத்தை இயக்கியது ப்ரியதர்ஷன்,அவர் இசைஞானியுடன் சேர்ந்து சிறைச்சாலை போன்ற மகத்தான படங்களில் பணியாற்றியிருந்தும்,இந்த விரசத் படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் இசைஞானிக்கு எந்த விதமான க்ரெடிட்டும் கொடுக்காதது எத்தனை அயோக்கியத்தனம்? ,பாருங்கள்,படத்தில் மிக முக்கியமான இரண்டு பாடல்கள், இஞ்சி இடுப்பழகி, போற்றிப்பாடடி பெண்ணே,ஆகியவை அப்படியே காப்பியடித்து பயன்படுத்தப்பட்டிருப்பதை கீழ்கண்ட வீடியோவில் பாருங்கள், கேளுங்கள். முதலில் இஞ்சி  இடுப்பழகியின் காப்பியான Payalein Chunmun Chunmun பாடல் இங்கே http://www.youtube.com/watch?v=XqKC1jHnKgg
 
இரண்டாவதாக போற்றிப் பாடடி பெண்ணே பாடலின் நகலான Ek Tha Raja இங்கே http://www.youtube.com/watch?v=6xE1qFW-0Nw
இப்போதும் ஒருவருக்கு இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்கும் இடையேயான வித்தியாசம் விளங்கிக்கொள்ள முடியவில்லையென்றால் அவர்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குபவர் என்று பொருள்,விளக்கி பலனில்லை,வீண்வாதம் செய்பரிடமிருந்து விலகிவிடுவதே சிறந்தது.நட்பாவது மிஞ்சும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)