ஒரு மனிதனுக்கு தனது வாழ்க்கை மிகக் குறுகியதாக இருக்கலாம் என்று தெரிந்துவிட்டால், அவன் உலகத்தைப் பார்ப்பது மாறுமா?
வாழ்க்கையின் அழகை உணர, அதன் முடிவை நினைவுபடுத்த வேண்டுமா? இந்தக் கேள்விகளைப் பெரிதாகப் பேசாமல், பார்வையாளரின் மனதுக்குள் மெதுவாக விதைக்கும் திரைப்படம்தான் அலெஹான்ட்ரோ கோன்சாலெஸ் இன்யாரிட்டு இயக்கிய பியூட்டிஃபுல் Biutiful.
பார்சிலோனாவின் வழக்கமான சுற்றுலா அழகைத் தவிர்த்து, அதன் விளிம்புகளில் வாழும் மனிதர்களின் உலகத்தை இப்படம் பார்க்கிறது.
நகரம் இங்கே ஒரு அழகிய பின்னணியாக மட்டும் இல்லை; வறுமை, குடியேற்றம், தனிமை, குடும்பப் பொறுப்பு, சட்டத்திற்குப் புறம்பான வாழ்வாதாரம், மரணம் போன்ற கடினமான மனித அனுபவங்கள் ஒன்றோடொன்று கலக்கும் இடமாக இருக்கிறது.
அதனால் தலைப்பில் இருக்கும் “Beautiful” என்ற சொல்லின் தவறான ஒலிப்பெயர்ப்பு கூட படத்தின் உலகைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய திறவுகோலாகத் தோன்றுகிறது—அழகு என்பது எப்போதும் அழகான காட்சிகளில் மட்டுமே இருப்பதில்லை.
இயக்குநரின் அணுகுமுறையின் மிகப் பெரிய பலம், மனிதர்களை நல்லவர்–கெட்டவர் என்று எளிதாகப் பிரிக்க மறுப்பதுதான். வாழ்க்கை அவர்களைச் சிக்கலான முடிவுகளுக்குள் தள்ளுகிறது;
அந்தச் சிக்கலை தீர்ப்பதற்குப் பதிலாக படம் அதை நமக்கு உணரச் செய்கிறது. இதனால் இது ஒரு தனிமனிதனின் துயரத்தைப் பற்றிய படம் என்ற எல்லையைத் தாண்டி, மனிதன் தனது பொறுப்புகளையும் குற்ற உணர்வுகளையும் அன்பையும் எவ்வாறு சுமக்கிறான் என்ற ஆழமான கேள்வியாக மாறுகிறது.
மையக் கதாபாத்திரமான உக்ஸ்பால் (ஹாவியர் பார்டெம்) திரைப்படத்தின் உணர்ச்சி மையம்.
இந்தக் கதாபாத்திரத்தை வெறும் பரிதாபத்திற்குரிய மனிதராக உருவாக்காமல், பல முரண்பாடுகளைக் கொண்ட ஒருவராக நடிப்பு உயிர்ப்பிக்கிறது.
பார்டெமின் நடிப்பில் அதிகப்படியான நாடகத்தன்மை இல்லை; முகபாவனைகள், உடல் மொழி, மௌனம், பார்வை ஆகியவையே பல நேரங்களில் உரையாடலைவிட அதிகமாகப் பேசுகின்றன.
அதனால்தான் அவருடைய நடிப்பு பார்வையாளரை கதாபாத்திரத்துக்கு வெளியே நிற்கவிடாமல், அவனுடைய மனநிலைக்கு மிக அருகில் அழைத்துச் செல்கிறது.
இந்த நடிப்புக்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதும், ஆஸ்கர் மற்றும் பாஃப்டா உள்ளிட்ட முக்கிய விருதுகளிலும் பரிந்துரையும் கிடைத்தது.
திரைக்கதையின் தனித்துவம் அதன் வெளிப்படையான விளக்கங்களில் இல்லை; வாழ்க்கையின் பல அடுக்குகளை ஒரே மனிதனின் அனுபவத்துக்குள் இணைப்பதில்தான் இருக்கிறது.
குடும்பம், பணம், குடியேற்றம், குற்றம், சமூக அநீதி, ஆன்மிக உணர்வு, மரணம் ஆகியவை தனித்தனி தலைப்புகளாகத் தெரியாமல் ஒரே மனித வாழ்க்கையின் இயல்பான பகுதிகளாகச் சந்திக்கின்றன.
இதனால் படம் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பிரசங்கம் செய்வதில்லை; அந்தப் பிரச்சினைகளுக்குள் வாழும் மனிதர்களை நமக்கு அருகில் நிறுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ பிரீட்டோவின் கேமரா இந்த உலகத்தின் இருண்ட தன்மையை அலங்கரிக்க முயலவில்லை.
சிதைந்த நகரப்பகுதிகள், குறுகிய உட்புறங்கள், குளிர்ச்சியான சூழல்கள், இயல்பான மனித முகங்கள் ஆகியவை கதாபாத்திரங்களின் மனநிலையுடன் இணைகின்றன.
பார்சிலோனாவை ஒரு அஞ்சல் அட்டை ஓவியபடமாகக் காட்டாமல், அதன் மறைக்கப்பட்ட முகத்தைக் காண்பிப்பது படத்தின் காட்சிமொழிக்கு தனித்தன்மை அளிக்கிறது.
படத்தொகுப்பு கதையை வேகமாகத் தள்ளிச் செல்லும் கருவியாக இருப்பதற்குப் பதிலாக, கதாபாத்திரங்களின் மனநிலையை உணரச் செய்யும் இடைவெளிகளை உருவாக்குகிறது.
நீண்ட காட்சிகளும் அமைதியான தருணங்களும் பார்வையாளரை அவசரப்படுத்துவதில்லை. அதனால் 147 நிமிடங்களைக் கொண்ட இந்தப் படம் சாதாரண வணிகத் திரைப்படத்தின் வேகத்தில் நகராது; அதன் உணர்ச்சிகளுக்குள் பார்வையாளரை மெதுவாக இழுத்துச் செல்கிறது.
குஸ்டாவோ சாண்டஅலல்லாவின் இசையும் இந்த அனுபவத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது.
இசை காட்சிகளின் உணர்ச்சியை வலுக்கட்டாயமாகச் சொல்லாமல், அவற்றின் பின்னணியில் ஓடும் ஒரு மெல்லிய மனஒலியாக செயல்படுகிறது.
குறிப்பாக ராவலின் பியானோ கான்செர்டோவின் மெதுவான நடுப்பகுதி திரைப்படத்தின் இசை உலகில் குறிப்பிடத்தக்க இடம் பெறுகிறது. இசையும் அமைதியும் ஒன்றுக்கொன்று போட்டியிடாமல் இணைவது படத்தின் உணர்ச்சி ஆழத்தை அதிகரிக்கிறது.
கலை இயக்கம், ஆடை, இடத் தேர்வு ஆகியவை தனித்தனியாக கவனத்தை ஈர்க்க முயலவில்லை. அவை கதாபாத்திரங்கள் வாழும் சமூகச் சூழலை நம்பகமாக உருவாக்குகின்றன.
வறுமை அல்லது சிதைவு அழகுபடுத்தப்படுவதில்லை; அதே நேரத்தில் அவை வெறும் அதிர்ச்சிக்கான காட்சிகளாகவும் பயன்படுத்தப்படுவதில்லை. இதுவே படத்தின் மனிதநேயப் பார்வையை வலுப்படுத்துகிறது.
Biutiful குறிப்பாக குடியேற்ற வாழ்க்கை மற்றும் சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர்களைப் பார்க்கும் விதத்தில் முக்கியமானது.
ஒரு நாட்டின் சட்டங்கள், பொருளாதார அமைப்பு, வேலைவாய்ப்பு, வறுமை ஆகியவை தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாகப் பதிகின்றன என்பதை படம் சிந்திக்க வைக்கிறது.
ஆனால் எந்த ஒரு அரசியல் கருத்தையும் நேரடியாகத் திணிக்காமல், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் வழியே அந்தக் கேள்விகளை முன்வைக்கிறது.
இதே காரணத்தால் இந்தப் படம் அனைவருக்கும் எளிதான பார்வை அனுபவமாக இருக்காது.
அதன் உலகம் கனமானது; உணர்ச்சிகள் தீவிரமானவை; வாழ்க்கையின் கடினமான முகத்தை அது மறைக்கவில்லை. சில விமர்சகர்கள் படத்தின் இருண்ட தன்மை அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் கருதியதற்கும் இதுவே காரணம்.
அதே நேரத்தில், மற்ற விமர்சகர்கள் இதன் மனிதநேய ஆழத்தையும் பார்டெமின் நடிப்பையும் பெரிதும் பாராட்டினர்.
இந்த இரு விதமான எதிர்வினைகளும் படம் எவ்வளவு தீவிரமான அனுபவத்தை உருவாக்குகிறது என்பதையே காட்டுகின்றன.
2010 கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்ட Biutiful, ஹாவியர் பார்டெமுக்கு சிறந்த நடிகர் விருதைப் பெற்றுத் தந்தது.
2011 ஆஸ்கரில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
குறிப்பாக முழுக்க ஸ்பானிஷ் மொழியில் அமைந்த நடிப்புக்காக சிறந்த நடிகர் பிரிவில் கிடைத்த பார்டெமின் பரிந்துரை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அதன் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் மனிதநேய அணுகுமுறை குறித்து பல முக்கிய விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
இன்யாரிட்டுவின் Biutiful பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதற்குக் காரணம் அது ஒரு கதையை மட்டும் சொல்ல முயல்வதல்ல.
மனித வாழ்க்கையின் மதிப்பு, அன்பு, பொறுப்பு, குற்ற உணர்வு, வறுமை, மரணம் ஆகியவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்ற கேள்விகளை அது நம்மிடம் விட்டுச் செல்கிறது.
பதில்களைத் தயாராக வழங்காமல், சில உணர்வுகளை நம்முள் நீண்ட நேரம் உயிரோடு வைத்திருப்பதே இதன் உண்மையான வலிமை.
சில திரைப்படங்கள் முடிந்தவுடன் முடிந்துவிடுகின்றன; Biutiful அப்படியல்ல—முடிந்த பிறகும் மனித வாழ்க்கையைப் பற்றிய ஒரு கனமான சிந்தனையை நம்முடன் விட்டுச் செல்கிறது.
===============================
படத்தின் கதை:-
பார்சிலோனாவில் உக்ஸ்பால் (ஹாவியர் பார்டெம்) தனது இரண்டு சிறு குழந்தைகளான அனா (ஹானா பௌச்சைப்) மற்றும் மேடியோ (கில்லெர்மோ எஸ்ட்ரெயா) ஆகியோருடன் ஒரு மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்பில் வாழ்கிறான்.
குழந்தைகளின் தாயான மரம்ப்ரா (மரிசெல் ஆல்வரெஸ்) அவனிடமிருந்து பிரிந்து வாழ்கிறாள்.
அவளுக்கு மதுப்பழக்கமும் பைபோலார் டிஸார்டர் மனநல குறைபாடும் இருப்பதால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உக்ஸ்பாலிடமே பெரும்பாலும் இருக்கிறது.
மரம்ப்ரா மசாஜ் தொழில் செய்கிறாள். உக்ஸ்பாலுக்கு பெற்றோர் யாரும் இல்லை; அவன் சிறுவயதிலேயே அனாதையாக வளர்ந்தவன்.
அவனுக்கு நெருக்கமான குடும்ப உறவாக இருப்பவன் அவனுடைய சகோதரன் டிட்டோ (எட்வார்ட் பெர்னாண்டஸ்) மட்டுமே.
டிட்டோ கட்டுமானத் தொழிலில் வேலை செய்கிறான்; சில சமயங்களில் மரம்ப்ராவின் மசாஜ் சேவையையும் நாடுகிறான்.
உக்ஸ்பால் தனது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதோடு, சட்டத்துக்குப் புறம்பான பல வேலைகளிலும் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகிறான்.
சீனாவிலிருந்து பார்சிலோனாவுக்கு வந்துள்ள சட்டவிரோதக் குடியேறிகளுக்கு வேலை ஏற்பாடு செய்து தருகிறான்.
அவர்கள் போலியான புகழ்பெற்ற நிறுவனப் பொருட்களைத் தயாரிக்கிறார்கள்.
அந்தப் பொருட்களை ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தெருவோர விற்பனையாளர்கள் நகரத்தில் விற்பனை செய்கிறார்கள்.
இந்த வேலைகள் மூலம் உக்ஸ்பால் பணம் சம்பாதிக்கிறான். இதற்குப் பிறகும் அவனுக்கு இன்னொரு தனித்துவமான தொழில் இருக்கிறது.
இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் ஆவி மீடியமாக அவன் செயல்படுகிறான். இறந்தவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் இருக்கும் இறுதிச்சடங்கு மற்றும் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சிகளில், இறந்தவர்களிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் செய்திகளை அவர்களிடம் தெரிவிக்கிறான்.
இந்த வாழ்க்கைக்கிடையே உக்ஸ்பாலின் உடல்நிலை குறித்து அவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது.
அவனுக்கு விதைப்பையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. அது குணப்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், அவன் இன்னும் சில மாதங்களே உயிருடன் இருக்கக்கூடும் என்று தெரியவருகிறது.
இந்தச் செய்தி அவனுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றுகிறது. தனது மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், தான் இல்லாதபோது தனது இரண்டு குழந்தைகளின் நிலை என்னவாகும் என்ற கவலை அவனுக்குள் பெரிதாகிறது.
மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையாக உக்ஸ்பால் முதலில் கீமோதெரபி மேற்கொள்கிறான்.
ஆனால் அவன் நண்பரான பீயா மாற்று மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பவள். அவளுடைய ஆலோசனையின் பேரில் உக்ஸ்பால் கீமோதெரபியை நிறுத்துகிறான்.
பீயா அவனிடம் இரண்டு கருப்பு கற்களைக் கொடுத்து, அவற்றை அவன் இறப்பதற்கு முன்பு தனது குழந்தைகளிடம் கொடுக்குமாறு கூறுகிறாள்.
இதற்கிடையில், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதையும், தனது வாழ்க்கைக்கு அதிக காலம் இல்லை என்பதையும் உணரும் உக்ஸ்பால், தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படத் தொடங்குகிறான்.
உக்ஸ்பால் வேலை ஏற்பாடு செய்துகொடுத்துக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்கத் தெருவோர விற்பனையாளர்களுடன் காவல்துறைக்கு தொடர்ந்து பிரச்சினை இருக்கிறது.
உக்ஸ்பால் காவல்துறையினருக்கு வழக்கமாக லஞ்சம் கொடுத்து அவர்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறான்.
ஆனால் அந்தக் குழுவினர் போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டிருப்பதால், காவல்துறையினர் அவர்களை கைது செய்கிறார்கள்.
இதனால் உக்ஸ்பால் அவர்களைப் பாதுகாக்க முடியாமல் போகிறது. அவர்களில் ஒருவன் செனகலுக்கு நாடு கடத்தப்படுகிறான்.
அவனுடைய மனைவி இகே (டியாரியாத்து டாஃப்) மற்றும் அவர்களுடைய சிறு குழந்தை மகன் மட்டும் பார்சிலோனாவில் இருக்கிறார்கள்.
அவர்களின் நிலையைப் பார்த்த உக்ஸ்பால், இகேவும் அவளுடைய குழந்தையும் தன்னுடைய குடியிருப்பில் தங்குவதற்கு இடம் கொடுக்கிறான்.
இதற்கிடையில், உக்ஸ்பால் தனது முன்னாள் மனைவி மரம்ப்ராவுடன் மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்கிறான்.
குழந்தைகளுக்கு அவர்களுடைய தாய் தேவை என்பதால் இந்த சமரச முயற்சியை அவன் விரும்புகிறான்.
ஆனால் மரம்ப்ராவை நம்பி குழந்தைகளின் பொறுப்பை ஒப்படைக்க முடியாது என்பதை உக்ஸ்பால் உணர்கிறான்.
அவளுடைய மதுப்பழக்கமும் நிலையற்ற மனநிலையும் காரணமாக குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அவனுக்கு அச்சம் ஏற்படுகிறது.
இதனால் அவர்களுக்கிடையேயான மீண்டும் இணையும் முயற்சி வெற்றி பெறவில்லை.
மறுபுறம், உக்ஸ்பால் வேலை ஏற்பாடு செய்திருந்த சீனக் குடியேறிகளுக்கு வேலை இல்லாமல் போகிறது.
அவர்களுக்கான புதிய வேலை தேவைப்படுகிறது. உக்ஸ்பாலின் சகோதரன் டிட்டோ அவர்களுக்கு ஒரு கட்டுமானத் தளத்தில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறான்.
இதனால் சீனர்கள் அந்தக் கட்டுமானப் பணியில் சேர்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைத்தாலும், அவர்கள் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ற பாதுகாப்பான சூழல் இல்லை.
உக்ஸ்பால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறான்.
அவர்களுக்காக உக்ஸ்பால் மலிவான குளிர்காய உதவும் எரிவாயு அடுப்புகளை வாங்கிக் கொடுக்கிறான்.
பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் வாங்கிய அந்த மலிவான கருவிகள் பாதுகாப்பானவை அல்ல.
இரவு நேரத்தில் சீனத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடத்தில் அந்த எரிவாயு சாதனங்களிலிருந்து கார்பன் மோனாக்சைடு வெளியேறுகிறது.
அந்த நச்சு வாயுவை சுவாசித்ததால் கிட்டத்தட்ட அனைவரும் கொத்தாக இரவில் உயிரிழக்கிறார்கள்.
அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று எண்ணி உதவ முயன்ற உக்ஸ்பாலின் செயல் எதிர்பாராத விதமாக அவர்களின் மரணத்துடன் தொடர்புபடுகிறது.
இந்தப் பெரும் பிரச்சினையை மறைக்க முயலும் மனிதக் கடத்தல்காரன், இறந்தவர்களின் உடல்களை கடலில் வீசி மறைத்துவிட முயற்சி செய்கிறான்.
ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைகிறது. கடலில் வீசப்பட்ட உடல்கள் சிறிது நேரத்திலேயே மீண்டும் கரையில் ஒதுங்குகின்றன.
இதனால் சம்பவம் பொதுமக்களின் கவனத்துக்கும் ஊடகங்களின் கவனத்துக்கும் வருகிறது. உக்ஸ்பால் அந்த மரணங்களால் ஆழமாகப் பாதிக்கப்படுகிறான்.
ஏற்கெனவே ஆப்பிரிக்கர்களின் கைது மற்றும் நாடு கடத்தலுடன் தொடர்புடைய பொறுப்பு அவனைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.
இப்போது சீனத் தொழிலாளர்களின் மரணத்திற்கும் தான் காரணமாகிவிட்டதாக அவன் குற்ற உணர்வில் சிக்கிக்கொள்கிறான்.
இதற்கிடையில் உக்ஸ்பாலின் புற்றுநோய் மேலும் மோசமடைகிறது.
உடல் வலி மற்றும் நோயின் தாக்கத்தால் அவனுடைய உடல்நிலை தொடர்ந்து சீர்குலைகிறது.
தன்னுடைய மரணம் நெருங்கிவிட்டதை அவன் தெளிவாக உணர்கிறான். ஆனால் அவனுடைய மிகப்பெரிய கவலை தனது மரணம் அல்ல; தான் இல்லாதபோது அனாவையும் மேடியோவையும் யார் பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான்.
அவர்களுடைய தாய் மரம்ப்ராவை முழுமையாக நம்ப முடியாது என்பதையும் அவன் ஏற்கெனவே புரிந்துகொண்டிருக்கிறான்.
உக்ஸ்பாலின் தந்தை மெக்சிகோவில் இறந்தபின், அவரது உடல் பாதுகாக்கப்பட்ட நிலையில் ஸ்பெயினுக்கு கொண்டு வரப்பட்டு கல்லறையில் வைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கல்லறை இருக்கும் இடத்தில் ஒரு பெரிய வணிக வளாகம் கட்டப்படவிருப்பதால், அங்குள்ள கல்லறைகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக உக்ஸ்பாலும் அவனுடைய சகோதரன் டிட்டோவும் தந்தையின் உடலை கல்லறையிலிருந்து எடுத்துப் பெற்று, பின்னர் தகனம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். இதற்குப் பதிலாக கல்லறைக்காக அவர்களுக்கு வழங்கப்படும் பணத்தையும் பெற முடிகிறது.
உடலை அடையாளம் காணும் நேரத்தில், நீண்ட காலத்துக்கு முன்பு இறந்த தந்தையின் பதப்படுத்தப்பட்ட உடல் அவர்களுக்கு முன்பாகக் கொண்டுவரப்படுகிறது. அந்த உடலைப் பார்த்த டிட்டோ அதிர்ச்சியடைந்து பின்னால் விலகுகிறான்; ஆனால் உக்ஸ்பால் அவ்வாறு விலகாமல் உடலுக்கு அருகில் செல்கிறான். அவன் தந்தையின் அழுகிய முகத்தையும் உடலையும் நெருக்கமாகப் பார்க்கிறான்; தன் வாழ்நாளில் ஒருபோதும் நேரில் அறிந்திராத தந்தையை முதன்முறையாக உடலாகப் பார்க்கும் அந்தக் கணம் அவனை ஆழமாகத் தொட்டுச் செல்கிறது. அவன் தந்தையின் உடலைத் தொடுவதற்கும் அருகில் செல்வதற்கும் தயங்கவில்லை.
இதற்குப் பின்னணியில், உக்ஸ்பாலின் தந்தை அவன் பிறப்பதற்கு முன்பே ஸ்பெயினிலிருந்து மெக்சிகோவுக்குத் தப்பிச் சென்றவர் என்பதும், அங்கேயே இறந்தவர் என்பதும் உள்ளது. எனவே, தந்தையைப் பற்றிய நேரடி நினைவுகள் உக்ஸ்பாலிடம் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையின் உடலை இப்படிப் பார்ப்பது, அவனுடைய சொந்த வாழ்க்கையிலும் மரணத்தை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கும் அவனுடைய மனநிலையிலும் ஒரு முக்கியமான தருணமாக அமைகிறது.
குழந்தைகளுக்கு நல்ல பாதுகாவலாளராக இருப்பாள் என இகே மீது மிகுந்த நம்பிக்கை வைக்கிறான். தனது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் மீதமிருக்கும் முழுப் பணத்தை இகேவிடம் ஒப்படைக்கிறான்.
தான் இறந்த பிறகு அனாவையும் மேடியோவையும் கவனித்துக்கொண்டு அவர்களுடன் தங்க வேண்டும் என்று அவளிடம் கேட்டுக்கொள்கிறான்.
இகே அவனுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறாள். குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒருவர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கை உக்ஸ்பாலுக்கு ஏற்படுகிறது.
ஆனால் இகேவின் சொந்த வாழ்க்கையும் நிலையானதல்ல. அவள் பின்னர் உக்ஸ்பால் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆப்பிரிக்காவுக்குத் திரும்ப முடிவு செய்கிறாள்.
இதனால் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய உக்ஸ்பாலின் கவலை மீண்டும் தீராத நிலையில் நிற்கிறது.
அவன் இல்லாதபோது அவர்களை யார் கவனிப்பார்கள் என்ற கேள்விக்கு உறுதியான பதில் கிடைக்கவில்லை.
உக்ஸ்பாலின் உடல்நிலை மிகவும் மோசமாகும் நிலையில், அவன் தனது குடியிருப்பில் இருக்கிறான்.
அப்போது குளியலறைக் கதவுக்குப் பின்னால் இகேவின் நிழல் இருப்பதைப் பார்க்கிறான். அவள் திரும்பி வந்துவிட்டதாகக் கூறும் அவளுடைய குரலும் அவனுக்குக் கேட்கிறது.
அந்தத் தருணத்தில் இகே உண்மையாகவே திரும்பி வந்திருக்கிறாளா, அல்லது உக்ஸ்பாலின் மனநிலையில் தோன்றும் ஒரு காட்சியா என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை.
அதன் பிறகு உக்ஸ்பால் தனது மகள் அனாவுக்கு அருகில் சென்று படுத்துக்கொள்கிறான்.
அவனுடைய தந்தை ஒருகாலத்தில் தனது தாய்க்குக் கொடுத்திருந்த வைர மோதிரம் அவனிடம் இருக்கிறது.
அதை அவன் அனாவிடம் கொடுக்கிறான். தனது குழந்தையுடன் அருகில் படுத்திருக்கும் அந்த நிலையிலேயே உக்ஸ்பால் மெல்ல இறக்கிறான்.
திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் கதை வேறொரு அமைதியான உலகுக்குச் செல்கிறது.
பனியால் மூடப்பட்ட குளிரான நிலப்பரப்பில் உக்ஸ்பால் தனது தந்தையைச் சந்திக்கிறான்.
உக்ஸ்பாலின் தந்தை அவன் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டவர்.
ஸ்பெயினில் ஃபிராங்கோவின் ஆட்சி நிலவிய காலத்தில் அவர் மெக்சிகோவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்;
அதன் பின்னரே உக்ஸ்பால் பிறந்திருந்தான். ஆகவே தன் வாழ்நாளில் தந்தையை கிஞ்சித்தும் அறிந்துகொள்ள முடியாத உக்ஸ்பால், அந்தப் பனிப்பரப்பில் இறந்த தனது தந்தையுடன் மீண்டும் இணைகிறான்.
இதுவே உக்ஸ்பாலின் வாழ்க்கைக் கதையின் இறுதிக் காட்சியாக படம் நிறைகிறது.
#கீதப்ப்ரியன்ஆஸ்கர்
#ஆஸ்கர்இரண்டாம்நூறு